ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து


பண் :

பாடல் எண் : 1

கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.

பொழிப்புரை :

தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `எங்கும் அகண்டாகாரமாய், அருவால் நின்று ஆடுதலேயன்றி, சில உயர் இடங்களில் அவற்றைத் தன்னுடையனவாக வரையறை செய்து கொண்டு அங்கு உருவத்திருமேனி கொண்டு ஆடுவதே பொற்பதிக்கூத்து` என்றதாயிற்று. `பொன்` என்றது தெய்வத்தன்மையை. பொற்பதி - தெய்வத் தன்மையுடைய தலங்கள்.
`கொடுகொட்டி, பாண்டரங்கம்` என்னும் கூத்துக்களை அசுரரை அழித்த காலத்தில் சிவபெருமான் ஆடினவாகச் சிலப்பதிகார உரை கூறிற்று.9 கலித்தொகைக் கடவுள் வாழ்த்தில், `சிவன் கொடு கொட்டி, பாண்டரங்கம், காபாலம் - என்னும் கூத்துக்களை ஆடும் பொழுது அக்கூத்திற்கு உமையம்மையே தாளம் தருவான்` எனக் கூறியதற்கு, ஆண்டுப் பிறர் இல்லையே`` என்ற நச்சினஆர்க்கினயரது விளக்கத்தால் அக்கூத்துக்கள் சங்காரத்தின் முடிவில் செய்யப்படுவன வாதல் விளங்கும். இனி, பிரம கபாலத்தை ஏந்தி ஆரும் கூத்தே காபாலக் கூத்து ஆதலின் அதுவே தாருகாவனத்தில் அம்முனிவர்தம் பத்தினியர் முன்பும், முனிவர் முன்பும் ஆடிய கூத்தாகும். இவை போன்ற எல்லா வகைக் கூத்துக்களையும் சிவன், மேல், ஆன நடம் ஐந்து``3 எனக் குறிக்கப்பட்ட ஐந்து மன்றங்களில் ஆடல் திருமேனி ஆடுகின்றான் என்பது, ``தாருவனத் தில்லை (வன), வடமாவன மன்னவன்`` என்றதனால் விளங்கிற்று. தாருகாவனம் ஒரு தலமாக விளங்கவில்லை. தில்லை வளமும், திருஆலவனமும் தலங்களாய் விளங்குதல் வெளிப்படை. இவற்றைக் கூறவே சிறப்பாக ஏனை மூன்றும், பிறவும் கொள்ளப்படும். கோடு, கிளை` என்னும் பொருட்டால், முதல் உறுப்பாய தலையைக் குறித்தது. `பாண்டரங்கம்` என்பது ஈறு குறைந்து, `பாண்டரம்` என நின்றது. ``கோடு`` என்பதன் பின் `ஆகிய சங்காரங்கள்` என மாற்றிக்கொள்க. `இவற்றைத் திடமாகக் கொண்டு எழும் மன்னவன்` என வினைமுடிபு செய்க. எழுதல் - முயலுதல்; அது நிகழ்த்துதலைக் குறித்தது.
இதனால், அனைத்து வகையான கூத்துக்களையும் சிவன் உருவத் திருமேனி கொண்டு தலங்களில் ஆடுவதே பொற்பதிக் கூத்தாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

பொழிப்புரை :

சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி உச்சி, கிழக்கு முதலிய பக்கங்கள் முன் பின்னாகக் கூறப்பட்டன. இந்த ஐந்து முகங்களும் முன் தந்திரத்தில், ``நடுவு கிழக்குத் தெற்குத் தரம்மேற்கு`` என்பது முதலிய மந்திரங்களிலும் கூறப்பட்டமை காண்க. இங்குக் கூறிய குறிப்புக்களால் சிவனது, `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியேசாதம்` என்னும் முகங்கள் ஐந்தும் சிவனது `உச்சி, முன்பக்கம், வலத்தோள், இடத்தோள், முதுகு` என்பவற்றின்மேல் உளவாகச் சிவன் எங்கும் கிழக்கு நோக்கியே அமர்ந்திருப்பவனாதல் விளங்கும்.
பக்கங்கள் பலவற்றிலும் முன்பக்கமே கொள்ளத்தக்கது ஆதலின், வழிபாடுகள் பலவும் தற்புருட முகத்திலே செய்யப் படுகின்றன. `தற்புருட முகத்தில் செய்யப்படுவது எதுவும் எல்லா முகத்திலும் செய்ததேயாம்` என்பது சிவாகமங்களில் சொல்லப்படுவது.
ஐந்து முகங்களும் ஐந்து சாதாக்கியங்களாகச் சொல்லப்படும். சத்தியோசாதம் அமூர்த்தி சாதாக்கியம், வாமதேவம் மூர்த்தி சாதாக்கியம். அகோரம் கர்த்திரு சாதாக்கியம். தற்புருடம் கரும சாதாக்கியம் முதலாக ஒவ்வொன்றும் அடுத்த சாதாக்கியத்தை முறையே சார்ந்து நிற்க, முடிவில் நான்கு சாதாக்கியமும் சிவ சாதாக்கியத்தைச் சார்ந்து நிற்கும் என்க.
1. `உச்சிமுகம் ஈசானம்; ஒளிதெளிஅப் பளிங்கே;
உத்தரபூ ருவத்திசையை நோக்கிஉறும் உகந்தே.
2. நிச்சயித்த முகத்தின்கீழ்ப் பூர்வதிசை நோக்கி
நிகழும்முகம் தற்புருடம்; கோங்கலர்போல் நிறமே.
3. அச்சுறுத்தும் அகோரமுகம் அறக்கரிது; கராளம்
அவிழ்தாடி; வலத்தோளில் தென்னோக்கி அமரும்.
4. செச்சைநிறத் தெரிவைமுகம்; இடத்தோள்மேல் வாமம்.
5. சிறுபுறத்தின் முகம் சத்தி யோசாதம் நிகழ்வால்.
என்னும் சிவதருமோத்தரச் செய்யுளாள் மேற்கூறியவை விளங்குதல் காண்க. உத்தர பூருவம் - வட கிழக்கு. பூர்வதிசை கிழக்குத் திசை. அறக் கரிது - மிகவும் கறுப்பானது.
அகோரமுகம் தோற்றத்தால் அச்சுறுத்தும் கோர வடிவாய் இருப்பினும் அது கோரத்திற்குக் கோரமாய்க்கொடிய வினைகளை அழித்தொழித்தலால் உண்மையில் அகோரமே - கோரம் இல்லாத - சாந்தமே. ``கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்`9 என்னும் சிவஞான சித்தியை நோக்குக. இதனானே அகோர மந்திரம் பிராயச்சித்த மந்திரமாய் உள்ளது. ``ஒப்பில் பேரின்பத்து`` என்பதனை, ``தனி நடம் செய்யும்`` என்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. பேரின்பத்து நடம், பேரின்பத்துக்கு ஏதுவாய நடம். ``உபயம்`` இரண்டில் முன்னது, `இரண்டாவதான உருவம்` என்றும், பின்னது, `அருவம், இருவம் இரண்டுமான அருவுருவம்` என்றும் பொருள் பயந்தன. மூன்றாம் அடி இனவெதுகை.
இதனால், ஐந்து முக மூர்த்தியாகிய சதாசிவ மூர்த்தியே நிலவுலகத் தலங்களில் உருவத் திருமேனி கொண்டு நடம் செய்தல் கூறப்பட்டது.
சிவாலயங்களில் கருவறையில் உள்ள இலிங்கம் சதாசிவ மூர்த்தமே. ஏனை உருவத் திருமேனிகள் மகேசுர மூர்த்தங்களாம்.

பண் :

பாடல் எண் : 3

அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

பொழிப்புரை :

பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.

குறிப்புரை :

``பொன்னம்பலத்தாடல் கண்டோர்`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. தலைமைபற்றிய இதனைக் கூறவே, மற்றவை தழுவப் பட்டன. மூன்றாம் அடியொழிந்த மற்றை மூன்றடிகளிலும் ``அடியார்`` என வந்தனவும், மூன்றாம் அடியில் ``அடியில்`` என்றதும் சொற்பொருட் பின்வருநிலையனி. ``அரன் அத்தன்`` என்றது இருபெயர் ஒட்டு.
இதனால், சிவாலய தரிசனத்தில் ஆடற்பெருமானது தரிசனத்தினஅ இன்றியாமையாச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.

பொழிப்புரை :

பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.

குறிப்புரை :

``என்னை`` இரண்டில் முன்னது, `எனது போதத்தை` என்றபடி. ``அடங்காத என்னை அடக்கி`` என்பதனோடு, ``மலம் சாய அமுக்கி``* என்பதையும், ``இடம் காண் அடி வைத்து என்னைப் பரானந்தத்து இட்டு`` என்பதனோடு, ``அருள்தான் எடுத்து - நேயத்தால் - ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்`` என்பதையும் ஒப்பீடுக.
மூன்றாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ``நடந்தான்`` என்பதில் `தான்`, அசை. ஞானக்கூத்தை வகுத்தரைப்பதே ``மாயை தனை உதறி``* எனத் தொடங்கும், ஞானக்கூத்து ஞானியர் பொருட்டச் செய்வதாகலின், ஈற்றடியிற்கூறியது யோகியர்க்காயிற்று. ஞானியரும், யோகியரும் அல்லாத பிறர்க்கெல்லாம் சிவன் ஊன நடனத்தைச் செய்வான் என்க. அது, ``தோற்றம் துடியதனில்``* என்னும் வெண்பாவில் சொல்லப்பட்டது.
இதனால், பொற்பதிக் கூத்துள் ஞான நடனம் உயிர்கட்குத் தரும் பயன் கூறும் முகத்தால், அதன் தரிசனச் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

பொழிப்புரை :

நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. ``கூத்தன்`` என வந்தன பலவும் ஒருபொருள்மேல் வந்த பல பெயர். கூத்தின் சிறப்பை அதனை உடையானோடு பலவகையில் சேர்த்துக் கூறினார்.
``கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்``8
என்பதனால், காளியோடு ஆடி, `அவளை வென்ற அந்த நடனமே தில்லையில் செய்யப்படுகின்றது` என ஆளுடைய அடிகள் அருளிச் செய்தவாறே இவரும் பொன்மன்றுட் கூத்தினைச் ``சேவகக்கூத்து`` என்றார். சேவகம் - வீரம், வெற்றி. கோயிற் புராணமும் இவ்வாறே கூறுதல் காண்க.
``சம்பந்தம்`` என்றது, இங்கு அத்துவித சம்பந்தத்தை. அதனைச் சித்தாந்த நூல்கள் இனிது விளக்கும்.
``நாடி வைத்தேன்`` என்றதனால், அதன் பயன் எண்ணியது எண்ணியவாறே கிடைத்தமை பெறப்பட்டது. அதனை இங்குக் கூறியதனால், `நீவிரும் அதனை அவ்வாறு வைத்தால் இன்புறுவீர்கள்` என்பது குறிப்பெச்சமாயிற்று.
``சித்தமும் செல்லாச் சேட்சியன காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!``J
``ஆர்காண வல்லார் அரனவனை? அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோர் மறைத்து``l
``அழலார் வண்ணத்து அம்மானை
அன்பில் அணைத்து வைத்தேனே``3
எனப் பிற திருமுறைகளிலும் வந்தவாறு இங்கும் நாயனார், ``அன்பில் வைத்தேன்`` என்று அருளிச்செய்தார். அதனால், வேதங்களாலும் அறியவாராது `அது` எனச் சேய்மைச் சுட்டாகப் பொதுவிலே சுட்டப் படுகின்ற பரம்பொருள் அன்பர்தம் அன்பிற்குள்ளே வந்து அகப் படுதல் தெளிவாகும். பொற்பதிப் கூத்துப் பல வகைக் கூத்தும் ஆதல் தோன்றுதற்கு. இடையே ``சொம்பொன் திருமன்றுட் கூத்து`` என்றார்.
இதனால், பொற்பதிக் கூத்தின் தரிசனம் பலவகைக் கூத்தின் தரிசனமுமாய் வீடு பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

பொழிப்புரை :

சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.

குறிப்புரை :

`ஒருவரும் இல்லை` என்பதாம். பூணுதல் - வெள்ளி முதலியவற்றைத் தாமதமாகக் கொள்ளும். ``சடைக் கூத்து`` என்பதைச் `சடைபோலும் கூத்து` என உவமத் தொகையாக்கி, `சிவனது சடை ஒன்றாய் இல்லாது பலவாய் விரிதல் போலப் பலவாய் விரியும் கூத்து` எனத் தொழிலுமாம் ஆக்குக. ஆணிப்பொன் - பிற பொன்னின் மாற்றுக்களையெல்லாம் அளந்து காட்டித் தான் வேறொன்றால் அளக்கப்படாத பொன். இதனை `உரையாணி` என்பர். ஆணிப்பொன் போலும் கூத்து, பிற கூத்தின் தகுதிகளைத் தான் அளந்து, பிறிதொரு கூத்தினால் தன் தன்மை அளக்கப்படாத கூத்து.
``யார் அறிவாரே`` என்றது, `பொற்பதிகளில் சென்று காணின் அக்கூத்துக்களின் வகையை ஒருவாறு உணர்ந்துரைத்தல் கூடும்` என்றபடி.
இதனால், பொற்பதிக் கூத்து அவனது கூத்து வகை பலவற்றையும் காட்டுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.

பொழிப்புரை :

பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பின், ``மெய்`` என்பதை ``விம்மும்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``தம்மையும்`` என்னும் உம்மை சிறப்பு. சதுர் - பெருமை. திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர்க்கு இம்மெய்ப்பாடுகள் உளவாதலைத் திருநாவுக்கரசரது வரலாற்றில் சேக்கிழார்,
``கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழும்;முன் பெழுதரும்;
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்``
எனக் கூறியவாற்றானும் அறிக.
இன்னும்,
``விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்;
தம்மாண் பிலராய்த் தரியார்; தலையால் முட்டுவார்;
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்``
என்றதையும் காண்க. நேர்மை - மலக்கோண் நீங்கிய திருவருள் நேர்மை.
இதனால், பொற்பதிக் கூத்தினைத் தரிசிப்பார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.

பொழிப்புரை :

காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.

குறிப்புரை :

``ஆனந்த நாட்டம்`` என்பது முதலாகத் தொடங்கி, `சிந்தை தேட்டறும்` என மாற்றி, ``திகைப்பறும், பிண்டத்துள் வாட்டறும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தேடுதல் - ஆராய்தல். தேடு, தேட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். `காலால், புந்தியாகி வரும் புலன்மேல் (மனம்) ஓட்டறும்; திகைப்பறும்` என உருபு விரித்து, `மனம்` என்பது வருவிக்க. மனம் பொறிவழிச் சென்று கவர்கின்ற புலன்கள் முடிவில் புத்தியின்கண் வந்து முடிதலின், ``புந்தியாகி வரும் புலன்`` என்றார். `புலன்மேல்` என, `மேல்` என்பது விரிக்க. பிண்டம் - உடல். `வாட்டம்` என்பதில் அம்முக் குறைந்து நின்றது.
இதனால், பொற்பதிக் கூத்துக் காண்பவர்க்கு அக்கட்சியே முத்திப் பேரின்பமாதற் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.

பொழிப்புரை :

சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

`அவ்வருமை யறிந்து அப்பதிகளில் சென்று அந்த நடனத்தை வணங்குதல் மானிடர்க்குக் கடன்` என்பது குறிப்பெச்சம்.
`காளி, தாருகன்` என்னும் அசுரனை அழித்து அவனது குருதியைக் குடித்த காரணத்தால், அவனைப் போலவே உலகை அழிக்கத் தொடங்கியபொழுது சிவன் அவளோடு நடனப்போர் செய்து அவளது சினத்தை அடக்கினான்` என்பது புராண வரலாறு.
``நீடுயர் மண்ணும் விண்ணும் நெடுவேலை குன்றொடு
உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதிஓதி நின்று தொழலும் ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்தும்
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம்
அவையாம் நமக்கொர் சரணே`` என்னும் அப்பர் திருமொழிக் குறிப்பைக் காண்க. தாருகன் - ஆணவ மலம். அவனை அழித்த காளி - மாயை. சிவன் அவனது கோபத்தை அடக்கியது. மாயையின் மயக்கத்தை நீக்கியது. எனவே, உயிர்களைக் கேவல சகலங்களின் நீக்கிச் சுத்தத்தை அடையச் செய்தலே சிவன் செய்யும் திருக்கூத்து` என்பது விளங்கும். காளியோடு நடனம் ஆடிய ஐதிகத்தைக் குறிப்பதே திருவாலங்காட்டுத் தலம். எனவே, அவ்விடத்து நடனமே பழைய நடனம் ஆதல் விளங்கும்.
தேவர்கள் காண மேருமலையில் ஆடியதை இம்மந்திரத்தால் அறிகின்றோம்.
சிவன் சருவ சங்காரத்தின் பின் உடல்அற்ற உயிர்களோடு கூடி நடனம் ஆடுதல் அறியாதார் உலகத்தில் பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் ஆடுவதாக எண்ணுவர். அவர்தம் மனப்பான்மை பற்றி அதனையும் சிவன் உடன்பட்டுக் கொள்கின்றான். `குவலயத்தக் கூளியோடு ஆடி` என ஒரு தொடராக ஓதற்பாலதனை இரண்டு தொடராகப் பிரித்து ஓதினார். சிவனது செயல்கள் எல்லாம் அவனது திருக்கூத்தாகவே கூறப்படுதல் பற்றி. அவன் பஞ்ச பூதங்களைச் செயற்படுத்தி நிற்றலையும் அவனது திருக்கூத்தாகக் கூறினார். `எத்துணைப் பெரியோன் எத்துனை எளியனாய் வந்து பொற்பதிகளில் ஆடுகின்றான்` என்பதை விளக்குதற்கு அவனது பெருநடனங்கள் பலவற்றையும் எடுத்தோதினார். மூன்றாம் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால், பொற்பதிக் கூத்தின் அருமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

பொழிப்புரை :

(`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.

குறிப்புரை :

`நடு நாடி மேரு வாய் உறும்; இடை இலங்கையாய் உறும், பிங்கலை குறியாய் உறும்; மலயத்தூடு ஏறும் சுழுனை தில்லை வனத்துச் சாரும் ஆகவே, இவைகளையுடைய பிண்டம் வெளியே இனிது விளங்குகின்ற நிலம் போல சிவபூமி என இயைத்துக் கொள்க.
குறி - எல்லை. அது வட எல்லையைக் குறித்தது. முன்னர்க் கூறிய உருவக முறையால், ``மலயம், தில்லைவனம்`` என்பன மணி பூரகத்தையும் இருதயத்தையும் குறிப்பவாயின. ``வான்`` என்றது அதன்கண் அடங்கி விளங்கும் நிலத்தை. இன், உவம உருபு. `இலங்கை, குறி` என்பவற்றை, இடைபிங்கலைகளோடு நிரல் நிறையாக இயைக்க. `ஆய் உறும்` என ஆக்கம் விரித்து எல்லா வற்றோடும் கூட்டுக. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. ``இவை`` என்பது தானியாகு பெயராய் இவைகளையுடைய உடம்பைக் குறித்தது.
இதனால், அண்டத்தில் பொற்பதிகள் இருத்தல் போலப் பிண்டத்திலும் பொற்பதிகள் இருத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொழிப்புரை :

[முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]
மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.

குறிப்புரை :

`அண்டம், பிண்டம் என்பவற்றுள் பிண்டத்தை அண்டத்தோடு ஒப்பித்தலே மரபு போலும்` என மலையாமைப் பொருட்டு, `அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்பித்தலும் மரபே` என்றற்கு இது கூறினார். இதனால், அண்டம் பிண்டம் இரண்டும் தம்முட் சமம் ஆதல் விளங்கிற்று. கோயிற் புராணத்திலும்,
``அலைந்திடும் பிண்டம், அண்டம்
அவைசமம் ஆத லாலே,
இலங்கைநேர் இடைபோம்; மற்றை
இலங்குபின் கலையாம் நாடி
நலங்கிளர் இமய நேர்போம்;
நடுவுபோம் சுழுனை நாடி``
என்றும்,
``நாடரு நடுவின் நாடி
நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடும்``*
என்றும் இவ்வாறே கூறப்பட்டது.
`புறத்து ஆனது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. ``இடை பிங்கலை`` என்பவற்றை முன் மந்திரத்திற்கு இணங்க, `புறத்து ஆனது, தெக்கணம்` என்பவற்றோடு எதிர்நிரல் நிறையாக இயைக்க. ``தெக்கணம்`` என்றது. தென் கோடியாகிய இலங்கையை, `நட்டம் பயில்` எனப் பயிலுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துக் கொள்க. நில உருண்டைதான் பல பகுதிகளை உடைத்தாயினும், அவற்றுட் சிறந்தது, `சுரும பூமி` எனப்படுகின்ற பரத கண்டமே இவ்வாறான பல சிறப்புக்களை உடையது என்க.
இதனால், பிண்டத்தைப் போல அண்டமும் நாடி முதலியவற்றை உடைத்தாதல் கூறப்பட்டது.
`அண்டம், பிண்டம் இரண்டும் சிவன் நடம்புரியும் பொற்பதிகளை உடையன` என்றற்கு இவ்விரு மந்திரங்களும் இவ்வதிகரத்தில் அருளிச்செய்யப்பட்டன.
சிற்பி