ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து


பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.

குறிப்புரை :

அண்டப் பகுதிகளை எடுத்துக் கூறவே, முன் அதிகாரத்தில் அண்டத்தோடு ஒப்பிக்கப்பட்ட ஒப்புமை பற்றிப் பிண்ட வகைகளும் அடங்கின. அதனால், `பொற்றில்லைக் கூத்துத் தானே அண்டபிண்டம் அனைத்தையும் இயக்குகின்ற கூத்தாம்` எனக் கூறியவாறாயிற்று. இன்னும் ``பரஞ்சோதி`` என்றதனால், ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இல்லாத அந்தப் பரமசிவன்தானே பொற்றில்லையுள் உருவும், பெயரும், தொழிலும் கொண்டு ஆடுகின்றான்` என்பது தோற்றுவிக்கப்பட்டது.
தண்டு, `தெண்டு` என மருவிற்று. தண்டு - செங்கோல்` நீதி. அஃது உயிர்களை வினை நெறிக்கு உட்படுத்தி ஆளும் ஆளுகையைக் குறித்தது. ``தெண்டினினின்`` என இன்னுருபின் மேல் இன்சாரியை வந்தது சிறுபான்மை வழக்கு உகத்தல் - விரும்புதல். அது தன் காரியந்தோன்ற நின்றது.
கோயிலை, `நகர்` என்றல் பற்றி, `பதி` என்றார். அதனை ஐந்து ஆகாசமாகக் கூறினமையின், அஃது ஐந்து ஆவரணங்களை உடைத்தாதல் விளங்கிற்று. அனைத்தையும் அடக்கி நிற்றல் பற்றிக் கலைகள் `ஆகாசம்` எனப்பட்டன.
இதனால், `தில்லைத் திருக்கோயிலின்கண் உள்ள திருவம்பலத்தில் செய்யப்படும் திருக்கூத்தே பொற்றில்லைக் கூத்தாம்` என்பதும், அதன் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.

பொழிப்புரை :

குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`அதனைத் தவறாது சென்று கண்டு தொழுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
குரு + ஆனந்தம் = குரானந்தம். `ரேகை`, ஒளியின் சிறு கூறு. குரு உபதேசத்தில் சிவானந்தம் கேள்வியளவில் சிறிதே புலப் படுதலால் அதனை ``ரேகை`` என்றும், பின்னர்ச் சிந்தித்தல், தெளிதலால் பெருகி வருதலால் ``கூர்ந்த`` என்றும், அங்ஙனம் பெருகி எல்லையின்றி விளைகின்ற இன்பம் சிவனுக்கு ``வரம்பில் இன்பம்`` என்னும் குணமாய் இருத்தலின் ``குணமாம் சிரானந்தம்`` என்றும், அஃது அவனது நடனத்தில் பொங்கி வழிதலால் ``பூரித்து`` என்றும் கூறினார். ``தென்திை\\\\u2970?`` என்றது இங்குத் தில்லையை ஆதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. தில்லையை அவன் தேர்ந்து கொண்டது, `அதன் சிறப்பு நோக்கி` என்றே கொள்ளப்படும். ``மாதவம் செய்த தென்றிை\\\\u2970?``9 எனச் சேக்கிழாரும் குறித்தருளினார். புரம் - திருமேனி; வடிவம். `பூவையும் தானுமாம் ஆனந்த போக புரனாய்` என்க. ஆனந்தம், சிவானந்தம். போகம் - உலக இன்பம். அவன் போக வடிவினனாய் இருந்து தரும் போகம் சிவானந்தத்திற்குத் தடையாகாமை பற்றி, ``ஆனந்த போகம்`` என்றார், மொழியின் இனிமை பற்றி மகளிரைக் `கிளி, பூவை` என உவம ஆகுபெயராற் கூறுதல் இலக்கிய வழக்கு. `நிர்` என்னும் உபசர்க்கம் நிலை பேற்றையும் உணர்த்தும், நிர்த்தாரணம் நிர்ணயம்` முதலியவற்றிற் போல. இம்மந்திரத்திற்குப் `பரஞ்சோதி` என்னும் எழுவாயை முன் மந்திரத்திலிருந்து கொள்க.
இதனால், தில்லைக் கூத்தினைச் சிவன் மேற்கொண்ட வகை -யும், அது போகம், மோட்சம் இரண்டையும் தருதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

பொழிப்புரை :

சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பதாம். ``ஆதிபரம்`` என்பதன் பின் `தான்` என்பது வருவிக்க. கை முதல் மதியீறாகச் சொல்லப் பட்டன எல்லாம் அவனுடையனவே. ஓதும் சடை, பிறருக்கு உரித் தாகாது அவனுக்கு உரித்தாகச் சொல்லப்படுகின்ற சடை. எனவே, `முதல் இருடியாவான் சிவனே` என்பது விளங்கும். ``விஸ் வாதிகோ ருத்ரோ மகரிஷி;`` என வேதமும், ``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி``* எனத் திருமுறையும் கூறும். உன்மத்தம் சடையில் அணிந்த ஊமத்தை மலர். அனல், வினையைப் போக்குதலையும், சடை ஞானத்தைத் தருதலையும், ஊமத்தை ஆனந்தம் விளைத்தலையும், பிறை அருள் வழங்குதலையும், குறிப்பால் உணர்த்துவன. `பாரும், மீது அண்டமும் ஆட` என்க. இது அவன் ஆட, அனைத்தும் ஆடுதலைக் குறிக்கும். ``நாதமொடு`` என்பதில் நாதம் சிலம்பொலி. கந்திருவர் யாழொலி முதலிய இன்னொலிகள். நாதாந்தம் - முடிவில் உள்ள நாத தத்துவத்திற்கு அப்பால். `அங்குச் செய்யப்படுவதே ஆனந்த நடனம்` என்பது மேற் கூறப்பட்டது.8 `அந்த நடனத்தைச் சிவன் இந்நிலையில் செய்கின்றான்` என்றார்.

பண் :

பாடல் எண் : 4

கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

பொழிப்புரை :

அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.

குறிப்புரை :

``அம்பரன்`` என்பதை முதலிலும், `கும்பிட` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிலும் கூட்டி உரைக்க. அம்பலம், அதிகாரத்தால் இங்குத் தில்லையம்பலம் ஆயிற்று. கோ - தலைமை. `அகிலாண்டத்திற்கும் ஆடும் நட்டமாம்` என்க. செம்பொருள், கண்கூடாக அறியப்படும் பொருள். ஈண்டுள்ளாரால் அங்ஙனம் அறியப் படும் சிவலோகம் தில்லையம்பலம்` என்க. ``கும்பிடச் சேர்ந்துற்றால்`` என்றது, `கும்பிடுதற்கு முன்பே பயன் விளையும்` என விளைவு கூறிய வாறு. உம்பர்அம் எனப் பிரிக்க. உம்பர் - மேன்மை. அம் - அழகு; சிறப்பு` என்றபடி `மோனமாகிய அந்தம்` என இயையும், மௌன மாவது, தற்போதம் அற்ற நிலை. ``மோனம் என்பது ஞான வரம்பு``*\\\\`20என ஔவையாரும் அருளிச் செய்தார். ஞான அந்தத்தின் உண்மை - ஞானத் -தின் முடிநிலையால் விளையும் மெய்யான பேறு; பரமுத்தி. தில்லைத் திருநடம், கண்டு வணங்கினஆர்க்கு வீடுபேற்றைத் தரும்` என்றபடி.
இதனால் தில்லைக் கூத்தின் தலைமையும், பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.

பொழிப்புரை :

நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.

குறிப்புரை :

நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு, புவனங்களை நோக்கும் பொழுது தன்மாத்திரை, கன்மேந்திரியம், ஞானேந்திரியம், மனம். இவை அகங்காரத்தில் அடங்குதலைச் சிவஞான யோகிகளது இரண்டாம் சூத்திர மாபாடியத்துப் பிரதிட்டாகலை விளக்கத்தில் காண்க. வேதாந்த சித்தாந்த நூல்களே உண்மை ஞான நூல்களாதல் பற்றி அவைகளையே `சாதகம்` எனக்கொண்டு, அவற்றுள் வேதாந்த நூல்களையே சமய நூல்களாகச் சுட்டினார். `சமயம்` என்றது சமய நூல்களை. ஒடு, எண் ஒடு. அதன் இயல்பு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் இயைதல் ஆதலை அறிக. அந்தம், இங்கு எல்லை. முன் நின்ற அந்தம் மேதினி முதலிய பிறவற்றோடும் சென்றியையும். `மேதினி யந்தமொடு, மூவேழ் அந்தமொடு` என இவ்வாறு எண்ணி, ``நடனாந்தம்`` என்பதனோடு முடிக்க. ``பதம்`` என்றது முத்தியை, ``பாதி`` என்றது பாதியாய் இருப்பவனை.
இதனால், அனைத்தும் திருக்கூத்துள் அடங்குதல் பொது வகையால் கூறப்பட்டதாயினும், கருத்து வகையால் தில்லைக் கூத்துள் அடங்குதலே கூறப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 6

இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

பொழிப்புரை :

பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.

குறிப்புரை :

அஃதாவது, `உலகம் முழுவதையும்` இயக்குபவ னாவான்` என்பதாம்.
`கடவும் மூலம், கைகண்ட மூலம்` எனத் தனித்தனியாக இயைக்க. கடவுதல், யோகியர் பிராணனைச் செலுத்துதல். ``கடவும்`` என்னும் பெயரெச்சம், ``மூலம்`` என்னும் இடப்பெயர் கொண்டது. கைகண்ட - அனுபவம் பெற்ற. இஃது ஏதுப் பெயர் கொண்டு முடிந்தது. `அனுபவம் பெற்றோர் யோகியர்` என்க. ``மூலம்`` என்றது நடு நாடியை. படர்வு - நினைவு. ``பரம்`` என்றது, `முதற்பொருள்` என்றபடி. `அங்கு (தில்லையில்) நடிகும் பரமே பரமாம்` என முடிக்க.
இதனால், தில்லைத் திருத்தலத்தின் முதன்மை கூறும் முகத்தால், அதன்கண் திருக்கூத்து நிகழ்த்தும் இறைவனது முதன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

பொழிப்புரை :

பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.

குறிப்புரை :

காவிரியோடு உடன் வைத்து எண்ணத்தகும் வேறு ஒன்பது யாறுகள் `பொருநை, (தாமிரவருணி) வையை, மணிமுத்தம், நிலா, (வெள்ளாறு), கெடிலம், தென்பெண்ணை, பாலி, கம்பை, பொன் முகலி` என்பன. மிக்குள்ள ஏனைய வெற்புக்களினும் மேம்பட்டுள்ளன. `பிறத்தலால் என்பது பாடம் அன்று.
பரத கண்டத்தின் வடபகுதி யவனர்கள், முகமதியர்கள் முதலியோரால் பேரிடர்ப்பட்டுத் தனது நிலை திரிந்தது போலத் தென்பகுதி என்றும் நிலை திரிதல் இல்லாமை தோன்ற, ``மாறாத தென்திசை`` என்றார். `அசோக மன்னனும் பாலாற்றைக் கடந்து அப்பால் தெற்கே செல்ல இயலாமல் திரும்பி விட்டான்` என்பர்.
கங்கை, யமுனை, சரசுவதி, கோதாவரி முதலிய நதிகளாலும், இமயத் தொடராலும், காசி, கேதாரம் முதலிய தலங்களாலும் வடபகுதி இயற்கையில் சிறந்து நிற்பினும் அயலவர் நுழைவால் நிலை திரிந்தமை அறிக.
`வேதாகமங்கள் வடபகுதியில் தோன்றினவாகச் சொல்லப் படினும் அவைகளின் ஒழுக்கம் சிறந்து விளங்குதல் தென்பகுதியில் தான்` என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை ``சுத்தம்`` என்றது முத்தி நிலையை. சுத்தத்தைத் தருவதனை, ``சுத்தம்`` என்றார்.
சேக்கிழார் நாயனாரும் இவ்வாறே, `மாதவம் செய்த திசை தென்திசையே` எனக் கூறி, அதற்குக் காரணம் யாது` என முனிவர்கள் வினாவ, உபமன்னியர், `தில்லை, திருஆரூர், காஞ்சி, திருஐயாறு, சீகாழி முதலிய இறை தலங்களை மிகப்பெற்றிருத்தலே` என விடை யிறுத்து, பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை`` என வலியுறுத்திக் கூறினார் என அருளிச் செய்தார்.l இன்னும் அவர்,
``திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற`` எனவும்,
`அசைவில்செழுந் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல`3 எனவும் அருளிச்செய்தார்.இந்நாயனார்,
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே,``
``தங்கி மிகாமைவைத் தான்தமிழ் வேதம் ... ...
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்,``9
என்பவற்றால் தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தி, இங்குத் தமிழ் நிலத்தின் சிறப்பை உணர்த்தினஆர். இவற்றால் எல்லாம் தமிழ் மொழியும், தமிழ் நிலமுமே சிவனருள் பெறுதற்குச் சிறந்த வாயிலாதல் விளக்கியவாறாம்.
இதனால், தென்திசையே சுத்தமாகத் தில்லை சுத்தத்தில் சுத்தமாய் உள்ளது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

பொழிப்புரை :

சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,

குறிப்புரை :

(இதனை அடுத்துவரும் மந்திரத்தோடு கூட்டி முடிக்க.)

பண் :

பாடல் எண் : 9

தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

பொழிப்புரை :

கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.

குறிப்புரை :

``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் பலவும் எண்ணின்கண் வந்தன. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. ``நாதத்தில் ஆடி`` என்னும் மந்திரத்துள் `சிவன் உலகரால் அறியப் படாத பல இடங்களில் ஆடுபவன் என்பதைக் கூறி, ``தேவரொடாடி`` என்னும் மந்திரத்தில் `அத்தகையோன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவத் திருமேனி கொண்டு ஆடுகின்றான்` என்பதைக் கூறினார். `நாதம் முதலியவற்றில் ஆடுபவன் தில்லையில் தேவர் முதலியோர் சூழ அம்மைமுன் ஆடுகின்றான்` என ஒரு தொடரால் சுருங்கக் கூறிப் போகாமல், `ஆடி, ஆடி, ஆடி ... ... ... ஆடுகின்றான்` என பல தொடரால் விரியக் கூறினார் தில்லைக் கூத்தின் அருமையை வலியுறுத்தற்கு. யாண்டும் மந்திரங்களைக் குனகமாகச் செய்தார். இக்கூத்தின் பெருமை ஒரு செய்யுளில் அடங்காமை காட்டிச் சொல்லில் அடங்காமை தோற்றுவித்தற்குப் ``பராசத்தியில்`` என்பது `பரா சத்தி யிடத்தில்` என்னும் பொருட்டாய், `பரா சத்தி முன் னிலையில்` எனப் பொருள் தந்தது. `கோவிலுள் கூத்தப் பிரானாய்` என ஆக்கம் வருவித்து, ஆடிடும்` என முன்னே கூட்டி முடிக்க.
இவ் இருமந்திரங்களாலும், `தில்லைக் கூத்தின் பெருமை சொல்லில் அடங்காதது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`உச்சியில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கும் ஆக ஐந்து முகங்களையே உடையவனாய்ச் சிவபிரான் உலகத்தை ஐந்தொழிற்படுத்து நடத்துகின்றான் என்றே வேதாகமங்கள் கூறியபோதிலும், `அந்த ஐந்து திருமுகங்கள் வெளிப்படையாய் விளங்குவன` என்பதும், `கீழ்நோக்கிய ஒருமுகம் ஞானியரே உணரும் வண்ணம் மறைந்துள்ளது` என்பதும் வேதாகமத் துணிபுகள் என்பதை நாயனார் இரண்டாம் தந்திரத்து `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள் குறிப்பால் உணர்த்தினமை காண்க. ஐந்து முகங்களும் பொதுவாக ஐந்தொழிலை இயற்றினும், அவரவர் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்புத் தொழில்களை அதோமுகம் செய்யும் என்க. அது தேவர் வேண்டுகோளுக்கு இரங்கி முருகனை அளித்த வரலாற்றால் நன்கு விளங்கும்.
`தோற்றம் துடியதனில்` என்னும் உண்மை விளக்க வெண்பாவால் கூத்தப்பிரான் ஐம்முகம் செய்யும் ஐந்தொழில்களைச் செய்தல் விளங்கும். `வரைமகள்தான் காண்படியே`` எனவும், ``மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் - நாதனார்`` எனவும் பிற இடங்களிலும் ``பரா சத்தியில் ஆடி`` என முன் மந்திரத்திலும் கூறிய வாறு தேவியை உடன் கொண்டு, அவள் காண ஆடுதலே அதோமுகம் செய்யும் செயலைக் குறிக்கும். சமயங்கள் யாவும் அவற்றின் முதலாசிரியர்களாலே தோற்றுவிக்கப்படினும் அவர்களை அவ்வாறு தோற்றுவிக்கச் செய்தவனும் சிவனே யாதல் பற்றி, ``கூறு சமயக் குருபரன் தான்`` என்றார். அதுவும் அதோமுகச் செயல்களில் ஒன்றே என்க. வேறின்மை - நீங்குதல் இன்மை.
இதனால், தில்லைக் கூத்தபிரானே எல்லா மூர்த்திகலுமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

பொழிப்புரை :

எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.

குறிப்புரை :

`உப்பாம்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. உகரச் சுட்டு மேலிடத்தை உணர்த்திற்று. ``பரமாம் என்பதன்பின், `அவை` என்னும் சுட்டு வருவித்து, ``நின்று`` என்பதனை, `நிற்க` எனத் திரிக்க. `இவ்வாற்றால் யாது சொல்லப்பட்டது` எனின், தில்லைப் பெருமான் திருக்கூத்தினின்றே பரநாத பர விந்துக்கள் தோன்றி, சிவம், சத்தி முதலிய சிவதத்துவம் ஐந்திலும் அவற்றிற்கு ஏற்ற வகையில் பொருந்தி நின்று உயிர்களுக்கு அறிவை உண்டாக்குகின்றன` என்பது சொல்லப்பட்டதாம். இவ்வாறு அறிவைத் தருகின்ற நடனம், `அதி சூக்கும நடனம்` என்றும், `பர நடனம்` என்றும், `அது புருவ நடுவில் நிகழும்` என்றும் சொல்லப்படுகின்றது.
``நாதத்து ரேகை`` என்பதில் நாதம், பரநாதம், அதனைக் கூறவே பரவிந்துவும் உடன் கொள்ளப்பட்டது. ரேகை - கதிர், என்றது கூற்றினை. சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்த, உயிர்களுக்கு அறிவு பொதுவகையான் நிகழும். பின்பு வித்தியா தத்துவங்கள் அந்தக் கரணங்களைச் செலுத்த அறிவு அவ்வப் பொருள்கள் மேல் சிறப்பு வகையால் நிகழும் `இவ்வாற்றால் இறைவன் உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கின்றான்` என்பதும், `அவ்வாறு பிறப்பித்தலே அவனது பர நடனம்` என்பதும் சைவ தத்துவங்களாதலை நாயனார் இம்மந்திரத்தால் உணர்த்தியருளினார்.
இதனால், தில்லைத் திருக்கூத்தே உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கும் கூத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை :

ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.

குறிப்புரை :

``குரு பரன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `குருபரனாய் வந்து செய்கின்ற அருளையே கூத்தனாய் நின்று செய் கின்றான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. கூத்தனாய் என ஒரு சொல்லாற் சொல்லியொழியாது, அக்கோலத்தை வகுத்துக் கூறினார், அதனை உள்ளத்தே கண்டவாறெல்லாம் இனிது விளங்குதற்கு. கண்டது, `உள்ளே` என்றதனால், தேடியது `வேளியே` என்பது போந்தது. `பிறவி யறுதலை எண்ணாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர்` என்பதும், `பிறவியற வேண்டுபவர் அதனை எஞ் -ஞான்றும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்` என்பதும் கூறியவாறு. கண்டமைக்கும், அற்றமைக்கும் `யான்` என்னும் எழுவாயும், `அற்றவாறு அறியத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. கூத்தப் பிரான் ஒருகாலிற் சிலம்பும், ஒரு காலிற் கழலும் அணிந்திருத்தல் அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்பட்டது.
இதனால், `கூத்துக்கோலம், போகியர்க்கு போகவடிவாதலே யன்றி, யோகியர்க்கு யோக வடிவுமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

(`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். `அஃது எதுபோலும்` எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.

குறிப்புரை :

`இச்சிறப்புப் பற்றியே அந்த மன்று மணிமன்றாய் உள்ளது` என்க. அது திருஆலங்காட்டு மன்றமாம். அவ்விடத்துக் கூத்து, காலை உயர்த்தி ஆடும் கூத்து (ஊர்த்துவ நடனம்) ஆதலும், ``எண்டோள் வீசிநின்று ஆடும் ஆடல்``33திருமுறை - 4.9.2. ஆதலும் எண்ணத் தக்கன.
``இன்னும் வேண்டும், நான் மகிழ்ந்து பாடி
அறவா, நீ ஆடும்போது `உன் அடியின்கீழ் இருக்க``*
என வேண்டிய அம்மைக்கு. இறைவன் ஆலங்காட்டு நடனத்திலே அவ்வாறு இருக்க அருள்புரிந்தமையும் கருதத் தக்கது. முன் அதிகாரத்தில் நாயனார் சிவன் ஆடும் இடங்களை எல்லாம் கட்டியதில், கனகா சலத்தில் ஆடுதலுக்கும் முன்னே காயோடு ஆடிய ஆலங்காட்டு நடனத்தையே முதலாவதாகக் குறித்தார். இது உலகம் காளியால் அழிந்தொழியாதவாறு காத்த நடனமாகச் சொல்லப்படுதலும் நோக்கத்தக்கது.
``தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெலாம்
ஊன்புக்க வேற்காளிக்(கு) ஊட்டாங்காண் சாழலே``*
சிற்பி