ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து


பண் :

பாடல் எண் : 1

குருஉரு அன்றிக் குனிக்கும் உருவம்
அருஉரு ஆவதும் அந்த உருவே
திரிபுரை யாகித் திகழ்தரு வாளும்
உருவரு வாளும் உமையவள் தானே.

பொழிப்புரை :

சிவபிரானது கூத்த வடிவமே சகல வருக்கத் -தினருக்குக் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் வடிவமும், திருக் கோயில்களில் மூலத் தானத்தில் எழுந்தருளியிருந்து வழிபாட்டினை ஏற்று அருள்புரியும் இலிங்க வடிவமும் ஆகும். இனி அவ்வடிவத்தின் பக்கத்தில் பெண்ணுருவாய் நிற்பவளும், மற்றும் சிவனுக்கு மூவகைத் திருமேனியாய் விளங்குபவளும் கூத்தப் பெருமானது சத்தியே.

குறிப்புரை :

`குனிக்கும் உருவமே குரு உரு; அன்றி, அரு உரு ஆவதும் அந்த உருவே` என இயைத்துக் கொள்க. புரம் - திருமேனி. புரை - திருமேனியாய் உள்ளவள். `உருவாய் வருவாளும்` என ஆக்கம் விரிக்க. ``உமையவள்`` என்றது, `சத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. இவ்வாறெல்லாம் கூறியது, கூத்தப் பெருமானை வணங்கும் வணக்கத்தின் பயனை நோக்கியாம்.
இதனால், `கூத்தப் பெருமான் வணக்கமே அனைத்துத் திருமேனிகளின் வணக்கமாம்` என அவனது சமட்டி நிலை அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

திருவழி யாவது சிற்றம் பலத்தே
குருவடி வுள்ளாக் குனிக்கும் உருவமே
உருஅரு ஆவதும் உற்றுணர்ந் தோர்க்கு
அருள்வழி யாவதும் அவ்வழி தானே.

பொழிப்புரை :

ஒருவனுக்கு வீட்டு நெறியாவது, அவனது உள்ளத்தில் அவனுக்குக் குருவாய் வந்து அருள் புரிந்தவர் நீங்காதிருக்க, வெளியில் சிற்றம்பலத்தில் அம்பலவாணர் ஆடுதலேயாகும். (உள்ளத்தில் குருவைத் தியானித்தலும், வெளியில் திருக்கூத்தைக் காணுதலுமேயாகும்` என்பதாம்.) உண்மையை ஊன்று உணர்ந் தோர்க்கு மூவகைத் திருமேனிகளும் ஞான நெறியும் அவையேயாம்.

குறிப்புரை :

`திரு` என்பது வீடாதலை, ``போகமும், திருவும் புணர்ப்பானை``3 என்பதனால் அறிக. `உன் குருவடிவு ஆக` என மாற்றி, ``திருவழியாவது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``குணக்கும் உருவே`` என்றாராயினும் `உருவாய்க் குனித்தலே` என்றலே கருத்தென்க. `குனித்தல்` என்றதும் அதனைக் காணுதலையே. உற்று உணர்ந்தோர்க்கு, உருவாவதும், அருவாவதும், அருள்வழி யாவதும் அவ்வழியே என இயைத்து முடிக்க. தான், அசை, வழி-வாயில். `உரு, அரு` என்பவற்றைக் கூறவே, உருவாருவமும் கொள்ளப்படும். தியானிக்கப்படுவதும் குனிப்பதும் உருவம் முதலியன ஆவனவும் வேறுவேறாய் இருக்க, அவற்றை, ``குனிக்கும் உருவே`` என, அஃது ஒன்றேயாகக் கூறியதுதான் இங்குக் குறிப்பிட்ட அற்புதம்.
``சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை
யுள்ளுக உறைவான்``
என்றவிடத்தும் இவ்வற்புதம் குறிக்கப்பட்டமை காண்க.
இதனால், மேற்கூறிய சமட்டி நிலையில் உள்ளவைகளில் தலையாயதாகிய ஞான நிலை, சிறப்புப் பற்றி வேறெடுத்துக் கூறப்பட்டது.
``மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற
வாணுதல் மான்விழி மங்கை யோடும்
பொய்ம் மொழி யாமறை யோர்கள் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே!
``எம்மிறையே` இமை யாத முக்கண்
ஈச!என் நேச!இ தென்கொல் சொல்லாய்;
மெய்ம்மொழி நான்மறை யோர் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே``
``அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ,
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்
செங்கய லார்புனற் செல்வம் மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி யீச்சரங் காமுறவே``1
``பாடக மெல்லடிப் பாவையோடும்
படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடகம் ஆடும்நள் ளாறுடைய
நம்பெரு மான்!இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தை மார்கள்
துணைவ ரொடுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாடம் நெருங்கு கூடல்
ஆலவ யின்கண் அமர்ந்தவாறே``
``பருமதில் மதுரைமன் அவையெதிரே
பதிகம் தெழுதிலை யவை யெதிரே
வருநதி யிடைமிசை வருகரனே``2
``... ... ... ... பேணு பெருந்துறையுட் கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்``3
என்றாற்போல ஏனை ஆசிரியர்களும் ஏகதேசியாய்க் காணப் படுபவன் எங்குமாய் நின்று அருள்புரிதலை வியந்தருளிச் செய்தல் காணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

பொழிப்புரை :

உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திரு வம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.

குறிப்புரை :

``நாடுமின்`` என எடுத்தோதியது, பொற்பதிக் கூத்து, பொற்றிலைக் கூத்து ஆகியவற்றில் காணப்படும் அம்பலங்களை இம்மீதான அம்பலமாக உணர்ந்து வணங்குதல் சிறப்பு` என்பது உணத்துதற் பொருட்டாம்.
ஆறு ஆதாரங்களில் மேல் உள்ளதாகிய ஆஞ்ஞைக்கு அப்பால் உச்சி வரை ஏழாந்தானம். அதற்கு மேல் பன்னிரண்டங்குலம் நிராதாரம்; அதைக் கடந்த பெருவெளி மீதானம். அதுவே பரவெளி. `துவாதசாந்தம்` என்று சொல்லப்படுவது.
பிராணன் ஏழாம் தானத்திற்கு அப்பால் செல்லுதல் இல்லை. வலிந்து செலுத்தினால் பின் திரும்பாதாக, உடம்பு வீழ்ந்துவிடும். ஆயினும் பிராசாத கலைகளால் பிராணன் நிராதாரத்தளவு செல் வதாகப் பாவித்து நிற்றல் பற்றி ``பன்னிரண்டங்குலம் உதித்திட`` என்றார். உதத்தல், இங்கு, செல்லுதல். `உதித்திட அப்பால் அம்பலந் தான்` என ஒருசொல் வருவித்து முடிக்க. தான் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது.
``ஓடும் உயிரெழுந்து ஓங்கி`` என்பதை முதலிலும், ``நாடுமின்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
இதனால், புற அம்பலங்கள் அக அம்பலங்களாகச் சிறந்து நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வளிமேகம் மின் வில்லு வாகை ஓசை
தெளிய விசும்பில் திகழ்தரு மாறுபோல்
களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய்
ஒளியுரு வாகி ஒளிந்துநின் றானே.

பொழிப்புரை :

[அம்பலங்கள் பலவற்றையும் உகந்து ஆடும் நம்பெருமான் வானத்தில் அடங்கியுள்ள காற்று, மேகம், மின்னல், வில், இடி, ஓசை என்பவைபோல,] நிவிர்த்தி முதலிய கலைகளில் அடங்கியுள்ள `தத்துவம், புவனம், வன்னம், பதம், மந்திரம்` என்னும் ஐந்தோடும், கலையையும் கூட்ட ஆறோடும் ஒன்றாய், வேறாய், உடனாய்க்கலந்து அறிவு வடிவாய் அவற்றினின்றும் பிரித்துக்காண வாராமல் மறைந்தே நிற்கின்றான்.

குறிப்புரை :

`அம்பலங்கள் பலவற்றிலும் காணப்படுகின்ற இவன், மேல் நுண்ணியவாய் மிகப்பெரிய அளவில் விரிந்து கிடக்கின்ற அவை அனைத்திலும் ஒளிந்து நிற்றல் வியப்பு` என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து என்பதாம். இம்மந்திரத்திற்கு எழுவாய் முன் மந்திரத்திலிருந்து வந்து இயைந்தது. காற்று வடிவம் உடைத் தாயினும், உருவம் இல்லது ஆகலின் அது காரண ரூபமான தத்துவங் கட்கும், மேகம் பல்வேறு வடிவங்களாய் வியப்புறத் தோன்றுவது ஆகலின் அது விசித்திரமான பல புவனங்கட்கும், மின்னல் விரையத் தோன்றி, விரையமறைவது ஆகலின், அது விரையத் தோன்றி விரைய மறையும் வன்னங்கட்கும், (எழுத்துக்களுக்கும்) வானவில் பல நிறங்களையுடையதாய், அழகிதாய் உள்ளத்தைக் கவர்தலின் அது பொருளுணர்ச்சியைத் தரும் பதங்கட்கும் இடியோசை பெருமுழக்கம் ஆதலின் அது நன்கு உச்சரிக்கப்படுகின்ற பாட்டாகிய மந்திரத்திற்கும், வானம் இவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்றலின் அஃது அத்து வாக்கள் ஆறில் ஏனை ஐந்தையும் தன்னுள் அடக்கி நிற்கும் கலைக்கும் உண்மையாயின. இனி, ``ஓை\\\\u2970?`` என்பதை, `ஆகாயத்தின் குணமாகிய ஓை\\\\u2970?` எனக் கொள்ளலும் ஆம். பிற ஓசைகளை நீக்குதற்கு ``வானக ஓை\\\\u2970?`` என்றார். களிஒளி - களிப்பைத் தருகின்ற ஒளி. ``ஒளி`` என்றது அறிவை. அறிவைத் தருவனவற்றை `அறிவு` என்றார். `அறிவைத் தருகின்ற ஆறு` எனவே, அவை அத்துவா ஆதல் விளங்கிற்று. `கலந்து - ஒன்றாய்க் கலந்து` என்க.
இதனால், பொற்பதிகளிலும், பொற்றில்லையிலும் ஆடும் பெருமான் அகண்ட வியாபகனாய் நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தீமுதல் ஐந்தும் திசைஎட்டும் கீழ்மேலும்
ஆயும் அறிவினுக் கப்புற ஆனந்தம்
மாயைமா மாயை கடந்துநின் றார்காண
நாயகன் நின்று நடம்செய்யு மாறே.

பொழிப்புரை :

இருளை ஓட்டுதலால் முதன்மை பெற்ற தீ முதலிய ஐம்பெரும் பூதங்களும், கிழக்கு முதலிய எட்டுத் திசைகளும், மற்றும் அவற்றோடு உடன் எண்ணப்படுகின்ற `கீழ், மேல்` என்னும் பக்கங்களும், இவற்றையெல்லாம் பற்றி ஆராய்ந்தறிவதாகிய உயிர்களின் அறிவும் ஆகிய இவையெல்லாவற்றிற்கும் அப்பால் உள்ளது உண்மையான இன்பம், அதனை அசுத்த மாயை, சுத்த மாயை ஆகிய இருமாயைகளையும் கடந்தவரே பெறுவர். அவர் அங்ஙனம் அதனைப் பெறுதற் பொருட்டே சிவன் நிலவுலகில் நின்று பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து இவற்றைச் செய்கின்றான்.

குறிப்புரை :

`நாயகன் நின்று நடம் செய்யும் ஆறு, தீ முதல் அப்புற ஆனந்தம் கடந்து நின்றார் காண` என இயைத்து முடிக்க. ``அறி வினுக்கு`` `அறிவும் ஆகிய இவற்றுக்கு` என விரிக்க இகர. உயிரும், யகர மெய்யும் மொழியீற்றின் உறழ்ந்து வரும் இயல்புடைமையால்9 ஈகாரம் ஒன்றே யகர எதுகையை நிரப்பிற்று? என்க.
இதனால், நிலவுலகக் கூத்து பரானந்தத்தைத் தருகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

பொழிப்புரை :

கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.

குறிப்புரை :

`ஞானமும், ஆனந்தமும் இறைவனுக்குக் குணங்கள் ஆதலின் அவை அவனது சத்தியேயாம்` என்பதும், `சத்தியின்றிப் பொருள் இல்லை ஆதலால், அவள் இன்றி அவன் ஆடுதல் இல்லை` என்பதும், `பொருளும், சத்தியும் வேறு வேறு ஆகாமையின், இருவரும் ஒரு கூத்தினையே உடையர்` என்பதும் கூறியவாறு. `வேறொரு கூத்தை ஆடியவன் காளி` என்க.
``கூத்ததின்மேலே`` என்பதற்கு, `ஒரு கூத்ததின்மேலே` என உரைக்க. அது பகுதிப் பொருள் விகுதி. `மேலே உள்ளனர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. கோது - துன்பமும், அறியாமையும். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், ஒரு நடனத்தை இருவர் இயற்றுதலும், அதனால் பிறவற்றில் பெறப்படாத பயன் விளைதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

பொழிப்புரை :

`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.

குறிப்புரை :

``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,
``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

சத்தி வடிவு சகலஆ னந்தமும்
ஒத்தஆ னந்தம் உமையவள் மேனியாம்
சத்தி வடிவு சகளத் தெழுந்திரண்(டு)
ஒத்தஆ னந்தம் ஒருநடம் ஆமே.

பொழிப்புரை :

எல்லா உயிர்கட்கும் ஏற்புடையதாகிய `இன்பம்` என்பது `சத்தி` என்னும் கூறே. அதனால், எந்த இன்பப் பொருளிலும் உள்ள எந்த இன்பமும் `சத்தி` என்னும் கூறே. (பொருள், `சிவம்` என்னும் கூறாம்) இனி எல்லாத் திருமேனி வகைகளும் சத்தியே. அந்நிலையில் பெருமானது சத்தியால் தோன்றி நிகழ்கின்ற ஒப்பற்ற நடனம், முத்தியின்பமாகிய பேரின்ப நடனமாகும்.

குறிப்புரை :

`திருக்கூத்துச் சத்தியால் உண்டாகி, ஆனந்தத்தைப் பொழியும்` என்றபடி. சகலம் - எல்லாம். உம்மை, முற்று. இனி, `சகலம் சகலநிலை` எனவும் உரைப்பர். அவர் உம்மையை இழிவு சிறப்பாகக் கொள்வர். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி உரைக்க. ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல் - உள்ளத்திற்கு ஒத்தல். `சகளத்து` என்பதில் `அத்து` அல்வழிக்கண் வந்த சாரியை. `சகளமாய் எழும்` என ஆக்கம் வருவிக்க. ``சகளம்`` என்பது, பொதுவாகத் `திருமேனி` என்னும் அளவாய் நின்றது. `எழுந்து ஒத்த ஒரு நடம் ஆனந்த நடனமாம்` எனக் கூட்டுக. இரண்டு - இருவினை `இரண்டும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `இரு வினை யொப்பு` என்பது உபலக்கணத்தால் மலபரி பாகம், சத்திநிபாதம், ஞான முதிர்ச்சி இவைகளைத் தழுவி `முத்தி` என்னும் பொருட்டாய் நின்றது. ஒத்த காலத்தில் நிகழ்வதை ``ஒத்த`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், திருக்கூத்து ஆனந்தக் கூத்தாதலாகிய அற்புதத்திற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையே யுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.

குறிப்புரை :

உற்று உற்றுப் பார்த்தலாவது, உளம் ஒருங்கித் தியானித்தல். எனவே, அது தியானித்திற்குரிய இடமாதல் பெறப் பட்டது. ஒளி - ஞானம். மந்திரம் - இருப்பிடம். மேல் துவாத சாந்தத்தை `அம்பலம்` என்றும், இருதயத்தை `அம்பலம்` என்றும் கூறி, இங்கும் புருவ நடுவை `அம்பலம்` என்றது என்னையெனின், அண்டத்தில் அம்பலங்கள் பலவாதல்போலப் பிண்டத்திலும் அம்பலங்கள் பலவாதல் பற்றியாம். இருதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது, புருவ நடு அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்குரியது, புருவ நடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்குரியது. துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது என்க. அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல் போலப் பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும். ``மந்திரம்`` என்பதனை, `பஞ்சாக்கர மந்திரம்` என்பாரும் உளர். அஃது இவ்விடத்திற்கு இயைபில்லதாம் என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால் ஓர் அம்பலம் உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் அம்பலமாய் உள்ள அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அண்டங்கள் தத்துவம் ஆதி சதாசிவம்
தண்டினில் சாத்தவி சாமபி ஆதனம்
தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே`
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை :

உலகங்கள் ஏழு, சாதாக்கியம் முதலாகக் கீழ் நோக்கியும், மேல் நோக்கியும் எண்ண வருகின்ற தத்துவங்கள் ஏழு, `தண்டு` எனப்படுகின்ற சுழுமுனை நாடியில் உள்ள, `சத்தம்` எனப்படுகின்ற வாக்கிற்கு முதல்வியாதல் பற்றி சாத்தவியாம் குண்டலி சத்திக்குரிய ஆதாரங்கள் ஏழு, அவற்றிற்குமேல் `வியாபினி, வியோம ரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை, சமனை, உன்மனை என்னும் சிவசத்திகளது இடங்கள் ஏழு, யாழ், குழல் முதலிய வற்றினின்றும் எழுகின்ற இசைகள் ஏழு ஆகியவற்றை எல்லாம் தனது இடமாகக் கொண்டு சிவன் நடம் புரிகின்றான்.

குறிப்புரை :

`இஃது அற்புதம்` என்பது குறிப்பெச்சம். ``ஏழும்`` என்பது இறுதி நிலை விளக்காய், ஏனை எல்லாவற்றோடும் சென் றியைந்தது. `சதாசிவம் ஆதி தத்துவம்` என இயைக்க. `சிவ தத்துவம் ஐந்து` என்பதே பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படினும் பரநாத பரவிந்துக்களைக் கூட்டி, `ஏழு` என்றும் சிறுபான்மை சில ஆகமங்களில் சொல்லப்பட்டது. ``ஆதனம்`` என்பதைச் ``சாத்தவி`` என்பதனோடும் கூட்டுக. `தண்டு` என்பது, ``தெண்டு`` என மருவி வந்தது. தண்டு - யாழ். உபலக்கணத்தால் குழலும் கொள்ளப்பட்டது. இறைவன் சொல்லும், பொருளும் ஆதலேயன்றி ஏழிசையாய், இசைப்பயனுமாய்8 நிற்றலும் நன்கறியப்பட்டது. ``சிவாசனம்`` என்பதில் `சிவன்` என்பது `தன்` என்னும் பொருட்டாய் நின்றது அன்றி, `மங்கலப் பொருட்டாய் நின்றது` என்றலும் ஆம்.
இதனால், திருக்கூத்தின் வியாபக அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

மன்று நிறைந்த விளக்கொளி மாமலர்
நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை
சென்றது தான்இரு பத்திரு நூறுள
நின்றது தான்நெடு மண்டல மாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாற்றால் அம்பலங்கள் தாம் அளவிலவாதல் பெறப்பட்டமையால், அவைகளில் விளக்கொளி போல விளங்கி ஆடும் மூர்த்திகளும் எண்ணிலர். இனி அந்த அம்பலங்கள் மலராக விளங்க, இருநூற்றிருபத்து நான்கு புவனங்கள் அவற்றின் இதழாக, நிலையின்றித் தோன்றியழிவன. ஆகவே, என்றும் நிலையாயுள்ள சத்தியே அவனுக்கு என்றும் உள்ளதாகிய அம்பலமாம். ஆகவே, இதுவே அவனுக்கு நன்றாய அம்பலமாகும்.

குறிப்புரை :

`மன்று நிறைந்த விளக்கொளி நூறு; அவை மாமலராக, இதழ் தான் நாலொடு இருபத்து இருநூறு உள; சென்றது; நின்றதுதான் நெடு மண்டலம்; இதுதான் நன்று` என இயைத்துப் பொருள் கொள்க.
இதனுள் ``நூறு`` என்றது அளவின்மையைக் குறித்தது. `மலராக` என உவமம் குறித்த ஆக்கச்சொல் வருவிக்க. ``சென்றது`` என்றது பன்மையொருமை மயக்கம். `செல்வது` என எதிர்காலத்தாற் கூறற்பாலது, விரைவு பற்றி ``சென்றது`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. `நிற்பது` என்பதும் தெளிவு பற்றி ``நின்றது`` எனப்பட்டது. காலத்தின் நெடுமை அதில் உள்ள மண்டலத்தின்மேல் ஏற்றப்பட்டது. அம்பலத்தை, `மண்டலம்` என்றார்.
இதனால், அம்பலங்கள் பலவாயினும் உண்மை அம்பலம் சத்தியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
அண்டன் நடம்செயும் ஆலயந் தானே.

பொழிப்புரை :

அளவின்றி உள்ள அண்டங்கள், பிண்டங்கள், (உடல்கள்) பிருதிவி அண்டங்கள் தோறும் உள்ள அளவற்ற எழுவகைக் கடல்கள், அவைகளால் சூழப்பட்ட எழுவகைத் தீவுகள், எல்லாத் திசைகளிலும் நிறைந்துள்ள அளவற்ற மூர்த்தங்கள் இவை அனைத்தும் சிதாகாச வெளியில் உள்ள சிவன் நடனம் புரியும் இடங்களாம்.

குறிப்புரை :

``எழுகோடி`` என்றது அளவின்மையைக் குறித்தபடி. ``திை\\\\u2970?`` என்பது `இடம்` என்னும் பொருட்டாய்த் தீவுகளைக் குறித்தது.
இதனால், அளவிலா, எல்லா இடங்களிலும் திருக்கூத்து நிகழும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

பொழிப்புரை :

ஆகாயம் ஒன்றேயாய் எங்கும் வியாபித்துள்ளது. ஆயினும் செயற்கையால் வரையறுக்கப்பட்டு, `மடாகாயம், கோயில் ஆகாயம், மன்ற ஆகாயம்` முதலாகப் பலவாறு வழங்கப்படுகின்றன. அவையெல்லாம் சிறு ஆகாயங்களாக, இயற்கை ஆகாயம் `மகாகாயம்` எனப்படும். சிறு ஆகாயங்களில் பல உருவங்களில் நடனம் செய்கின்ற சிவன் மகாகாயத்தையே அம்பலமாக ஒன்றேயான விசுவ ரூபத்தை உடையவனாயும் நடனம் புரிகின்றான். அந்நிலையில் அவனுக்கு ஆகாயமே உடல்; உயிர்களின் ஆணவ மலமே முயலகன்; போர்வை போலச் சுற்றியுள்ள எட்டுத் திசைகளே எட்டுக் கைகள்; சூரியன், சந்தரன், அக்கினி என்னும் முச்சுடர்களே விரும்பத்தக்க மூன்று கண்கள் என இவ்வாறு அமையும்.

குறிப்புரை :

`ஆங்காரம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து, ``ஆங்கார்`` என நின்றது. அஃது அதற்குக் காரணம் ஆணவ மலத்தைக் குறித்தது. `மோகமார்` என்பதும், அவ்வாறு, `மோகார்` என நின்றது. மோகம் - விருப்பம். ``மாகாயம்`` என்பதில் காயம் - ஆகாயம்.
இதனால் அகண்டமாய் உள்ள விசுவரூப நடன அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அம்பல மாவ அகில சராசரம்
அம்பல மாவன ஆதிப் பிரானடி
அம்பல மாவன அப்புத்தீ மண்டலம்
அம்பல மாவன அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்தியற்றுதற்குரிய அம்பலமாய் நிற்பன, நீர், தீ (இனம் பற்றி, நிலம், வளி, வான்) இவற்றின் அண்டங்களும், அனைத்து இயங்கு திணை நிலைத்திணை உயிர்களும், திருவைந்தெழுத்தும், அவனது வட இடத்திருவடிகளும் ஆகும்.

குறிப்புரை :

இவை தூல சூக்கும வகையில் ஒன்றைவிட ஒன்று சூக்கும மாகிய அம்பலம் இவை செய்யுள் பற்றி ஏற்ற பெற்றியில் கூறப் பட்டன. அஞ்செழுத்து அருட்சத்தி, திரோதான சத்தி, உயிர் என்பவை களாய் நிற்றலின் அவையும், பிரானது வலத்திருவடி திரோதான சத்தியும், இடத்திருவடி அருட்சத்தியும் ஆதலின் அவையும் அம்பலமாயின.
இதனால், திருக்கூத்து அனைத்த தூல சூக்கும அதிசூக்கும அம்பலங்களில் நடைபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

கூடிய திண்முழ வம்குழல் `ஓம்`என்ன
ஆடிய மானுடர் ஆதிப் பிரான்என்ன
நாடிய நற்கணம் ஆரும்பல் பூதங்கள்
பாடிய வாறொரு பாண்டரங் காமே.

பொழிப்புரை :

சிவனது பலவகைக் கூத்தில் `பாண்டரங்கம்` என்னும் கூத்து (திரிபுரத்தை எரித்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட ஆதலின்,) ஒன்றோடு ஒன்று இயைந்து ஒலிக்கும் மத்தளமும், குழலும் `ஓம்` என்று ஒலிக்கவும், அந்நடனத்தின் குறிப்பை ஆராய்ந்து நோக்கிய பதினெண் கணங்களும் நிறைந்த பூதப்படைகளும் பல பாடல்களைப் பாடவும், அவர்களோடு மக்களும் கண்டு, `இவனே முதற்கடவுள்` என உணர்ந்து களி நடம்புரியவும் நிகழ்ந்தது.

குறிப்புரை :

``பூதங்கள் பாடியவாறு`` - என்றாராயினும், `பூதங்கள் பாட மானுடர் ... ... ... ஆடியவாறு` எனக் கூட்டி, `நிகழ்ந்தது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இதில், மானுடர் கண்டு தெரிந்து ஆடினமை சிறப்பாகக் குறிக்கப்பட்டது.
``தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி யாடிய வியன்பாண்ட ரங்கமும்``3
என்பதற்கு,
``வானோராகிய தேரில், நான்மரைக் கடும்பரி பூட்டி நெடும் புறம் மறைத்து, வார்துகில் முடித்துக் கூர்முட்பிடித்துத் தேர்முன்னின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாய இறைவன் வெண்ணீற்றை அணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்``
என்ற அடியார்க்கு நல்லார் உரையைக் காண்க. `பாண்டரங்கம்` என்பது கடைக் குறைந்து நின்றது.
இதனால், திருக்கூத்து வகைகளில் ஒன்றன் அற்புதம் எடுத்தோதி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள்
தெண்டிரை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள்
புண்பரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக்
கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே.

பொழிப்புரை :

வானம் அண்டங்களுக்கு உள்ளேயும் உள்ளது; வெளியேயும் உள்ளது. அதுபோல, நிலத்திற்கு அண்மையிலேயும் உள்ளது. சேய்மையிலேயும் உள்ளது. அதனால் அந்த இடங்களில் எல்லாம், வானவராகிய தேவர்களும் இந்த இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தில்லைப் பொன்னம்பலத்தில் கூத்தப் பெருமான் தாமரை மலர்போலும் திருவடிகளைப் பெயர்த்து ஆடும் திருக்கூத்தினைக் கண்டு வணங்கி நற்கதியை அடைகின்றார்கள்.

குறிப்புரை :

`தேவர்களைக் கூறவே, மக்களைக் கூறவேண்டா` என்பது கருத்து.
இதனால், மண்ணுலகத் திருக்கூத்தினை விண்ணவர்களும் கண்டு வணங்கி நற்கதிபெறும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

பொழிப்புரை :

புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.

குறிப்புரை :

அம்மெய்ப்பாடுகள் கண்ணீரரும்புதல் ஒன்றை மட்டும் தோற்றுவாயாகச் சுட்டினார். மயிர் சிலிர்த்தல், உடல் கம்பித்தல், நாத்தழுதழுத்தல் முதலியன பிறவாம். களிக்கும் திருக்கூத்து - களித்தற்கு ஏதுவாய திருக்கூத்து. ``துளிக்கும் கண்ணீர் சேரா`` என்றது, `முன்பு அரும்பிப் பின்பு தாரையாய் ஒழுக` என்றபடி. `அக்கூத்து நெஞ்சை உருக்கும்` என்க. ஒளி - சிவம். அதனுள் ஆனந்தமாவது, அதில் தோய்ந்து பெறும் ஆனந்தம்.
`பெறத் தக்க பொருள்களைப் பெற்ற வழியே இன்பம் உண்டாதல் எங்ஙனம்` என்னும் ஐயத்தை உவம வாயிலாக நீக்கினார்.
``உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று``*
எனக் கூறிய அவ்வின்பத் தன்மை இவ்வின்பத்திற்கும் உண்டென்க. காமத்திற்கு உரியரல்லார்க்கு மேற்கூறிய காமத்திற்கு ஏதுவான காட்சி மகிழ்செய்யாதவாறு போல, இறையின்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் கூத்துக்காட்சி இன்பம் செய்யாதாகலின், அவர், யாம், அக்கூத்தினைக் கண்டபொழுது எமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே ஏன்? என நாயனாரைக் கடாவலாகாமையறிக. ``புளிக் கண்டவர்க்கு`` என்பதில் சகர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. புளி சுவைக்கப்பட்டு பொருளாகலின், `நாவில்` என்பது கூற வேண்டாவாயிற்று. `சோர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். ``ஆனந்தக்கூத்து`` என்பதில் அது, அல்வழிக்கண் வந்த சாரியை.
இதனால், திருக்கூத்துக் கண்ட அளவிலே ஆனந்தம் விளைக்கும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

பொழிப்புரை :

சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியன வாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திரு வம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். (எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கே யன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச் சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.

குறிப்புரை :

`திண்டாடுதல்` என்பது நிலையாகாமல் தளர்ந்து வீழ்தலைக் குறிக்கும் நாட்டுப்புற வழக்கு. ``சிவானந்தம்`` என்பது அதனால் உண்டாகும் மெய்ப்பாட்டினைக் குறித்த ஆகுபெயர். பின் மூன்று அடிகள் வேற்றுமையணி பெற்றன. `இன்பம் பயத்தலால் இனிய உணவும், திருக்கூத்தும் ஒக்குமாயினும், இனிய உணவினும், திருக்கூத்துத் தனித்ததொரு சிறப்புடையது` என்பதாம். மேற்காட்டிய, ``உண்டார்கண் அல்லது`` என்னும் திருக்குறளும் அவ்வணியை உடையதே - `மகிழ்ச்சி கண்டவர்க்கு மட்டுமன்று; கேட்டவர்க்கும் உளதாம்` என்பதை இம்மந்திரம் கூறிற்று. `கண்டார்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. ``குணம்`` என்றது நிகழ்ச்சிகளை.
இதனால், மேற்கூறிய அற்புதத்தினும் அற்புதம் ஒன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.

குறிப்புரை :

நீல மலர் கரிய நிறத்தை உடையதாய் இரவில் முகிழ்த் திருந்து, கதிரவன் தோன்ற மலர்வது ஆதலின், அஃது ஆணவத்தில் அறியாமை எய்திக்கிடந்து, திருவருள் தோன்ற அது நீங்கி அறிவு நிகழ்தலைக் குறிப்பால் உணர்த்தும். இதனை நாயனார் எடுத் தோதவே, ஏனையவை பற்றிய குறிப்புக்களும் உணரப்படும். அவை நெருப்பு அழித்தல் தொழிலையும், வினையை எரித்தல் தொழிலையும், உடுக்கை ஒலியைப் பிறப்பித்துப் படைத்தல் தொழிலையும், மாயையை உதறித் தள்ளுதலையும், அக்கமாலை ஞானோபதேசம் செய்தலாகிய அருளல் தொழிலையும், குலம் இச்சா ஞானக்கிரியா சத்திகளுடன் கூடி அனைத்தையும் நடத்துதலையும், பிரம கபாலம் தனது நித்தியத் தன்மையையும் குறிக்கும். தேவி திருவருளைக் குறித்தல் வெளிப்படை. பயம் - பயன். `சிவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்துக்கொள்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் கூத்துக்கோல வருணிப்பில்,
``ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய், கேளினி``
என எட்டுக் கையே கூறப்பட்டது.
இதனால், ஒருவகை நடனக்கோலம் வகுத்துணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆடல் பதினொன் றுறுப்பும் அடைவாகக்
கூடிய பாதச் சிலம்புகைக் கொள்துடி
நீடிய நாதம் பராற்பர தேயத்தே
ஆடிய நந்தி புறம்அகத் தானே.

பொழிப்புரை :

கூத்துப் பதினொன்றின் உறுப்புக்கள் எல்லாம் முறையாகக் கூடிய பாதத்தில் அணியப்பட்டுள்ள சிலம்பும், கையில் கொண்டுள்ள உடுக்கையும் ஒலியை எப்பொழுதும் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறாக, மேலானவற்றிற்கெல்லாம் மேலான இடத்தில் ஆடுபவனாகிய சிவன் எல்லா உலகிலும் உள்ள உயிர்களின் அகத்தும், புறத்தும் ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஆடல் பதினொன்றாவன, `அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்` என்னும் நின்றாடல் ஆறும், `துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை` என்னும் வீழ்ந்தாடல் ஐந்துமாம். இவற்றிற்கு உரிய உறுப்புக்கள் முறையே ஆறு, நான்கு, நான்கு, ஐந்து, ஆறு, ஐந்து, ஐந்து, ஆறு, நான்கு, நான்கு, நான்கு, இரண்டு. இவற்றின் இயல்பெல்லாம் ஆடல் நூலுள் (பரத சாத்திரத்தில்) சொல்லப்படும். சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக்காதை உரைகளில் சிறிது காண்க. `எல்லா ஆடலும் எல்லாரும் வல்லராகார்; சிலர் சிலர் சில சிலவே வல்லவராவர்; சிவன் எல்லா ஆடலும் வல்லன்` என்பதும் `ஆயினும் அவ்வாடல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் ஆவன்` என்பது கூறியவாறு `நாதம் நீடிய` என மாறுக. நீடிய - நீடின. நேயம் - விருப்பம். அது விரும்பப்படும் இடத்தைக் குறித்தது.
இதனால், `சிவன் ஒருவனே ஆடல் வல்லான்` ஆகும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.

குறிப்புரை :

நில உலகத்தைச் சிறப்பாகக் கூறினமையால், கூத்து முன் அதிகாரத்திற்போந்த தில்லைக் கூத்தாயிற்று. சிவ பேதங்கள் ஒன்பதாவன, நவந்தரு பேதங்கள். அவை ஆடுதலாவன, தாம் கருதி யவற்றை நிகழ்த்துதல், `பிராசாத கலைகள்` என்றது அவற்றின் அதி தேவர்களையும் `சமயங்கள்` என்றது அவற்றை மேற்கொண்டவர்களை -யுமாம். ஒன்பது முதலிய மூன்றும் ஞான வாயிலாதல் பற்றி அவற்றை முன்னர்க் கூறினார். ``அன்பனும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், தில்லையில் உள்ள ஒருவன் ஆட, அனைத்தும் ஆடுதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஏழினில் ஏழாய் இயைந்தெழுத் தேழாதாய்
ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாய
ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி
ஏழினை நாடகத் தேஇசைந் தானே.

பொழிப்புரை :

ஏழ் நரம்புகளில் ஏழு வகையாய்த் தோன்றி, அவற்றிற்குப் பொருந்திய ஏழ் எழுத்துக்களால் குறிக்கப்பட்டு, அந்த ஏழ் எழுத்துக்களில் ஒன்றே ஏற்றத்தின் தொடக்கமும், இறக்கத்தின் முடிவுமாய் நிற்க அமையும் ஏழு பண்களினாலும் பாடப்படுகின்ற நன்னெறியை எங்கள் சிவபெருமான் ஏழிசைகளோடு கூடிய தனது கூத்திலே பொருந்தி ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஏவு வகைகளாவன, `குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்` என்பன. இவற்றிற்குப் பொருந்திய எழுத்துக்களாவன முறையே `ஆ` முதல், `ஔ` ஈறான நெட்டெழுத்து ஏழுமாம். இவற்றை,
``களையறு குரலே துத்தம்,
கைக்கிளை உழையி னோடே,
இளியொடு, விளரி, தாரம்
என்ப ஏழிசையின் நாமம்``. ``ஆங்குள ஆ,ஈ ஊ,ஏ,
ஐ,ஓ,ஔ என்னும் ஏழும்
தீங்கிலா அக்க ரங்கள்
செப்பும்ஏ ழிசைக்குந் தானே``9 என்னும் சூடாமணி நிகண்டாலும் உணர்க. முற்காலத்தில் இருந்த யாழின் முன்னேற்றமாக வீணை தோன்றினாற்போல, முற்காலத்தில் இருந்த இசையின் பெயர்கள், இசையின் எழுத்துக்களின் முன்னேற் -றமே, ``சட்சம் இடபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நீடாதம்` என்னும் பெயர்களும், `ச,ரி,க,ம,ப,த,நி` என்னும் எழுத்துக் களும் என்க. எழுத்துக்களில் முதலாவதினின்று இசை மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடையும்பொழுது அந்த எழுத்தே சொல்லப் பட்டு, மீண்டும் அதினின்றும் மெல்ல மெல்ல இறங்கி முடிவடையும் பொழுதும் அந்த எழுத்தே சொல்லப்படுதல் பற்றி, ``ஏழினில் ஒன்று ஆய், இழிந்தமைந்து ஒன்றாய்`` என்றார். ஆதல் - மேன்மேல் உயர்தல். பண்கள் ஏழாவன, கோடிப்பாலை, செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, மேற்செம்பாலை, விளரிப்பாலை` என்னும் ஆதாரப் பண்கள். `இவற்றினின்றும் பிறக்கும் பிறவிப் பண்கள் நூற்று மூன்று` எனவும் `மற்றும் திறங்கள்` எனவும், `திறத்திறம்` எனவும் கூறுவர். இவையெல்லாம் இசைத் தமிழ் நூல்களில் சொல்லப்பட்டன. அந்நூல்கள் பலவும் இறந்து போயின. சிலப்பதிகார உரைகளில் சிறிது காணப்படுகின்றன.
நமது சிவநெறிப்பொருள்கள் இயற்றமிழ்ச் செய்யுட் -களிலன்றியும், இசைத்தமிழ்ப் பாட்டுக்களிலும் இனிமை பெறச் சொல்லப்பட்டமையை, ``ஏழினிற் சன்மார்க்கம்`` என்றும், அப் பொருள்களெல்லாம் பெருமான் தனது கூத்தில் குறிப்பினால் தோன்ற ஆடுதலை, ``ஏழிசை நாடகத்தே இசைந்தானே`` என்றும் கூறினார்.
`இயைந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஏழது` என்பதில் `அது` பகுதிப்பொருள் விகுதி. அவ்விடத்து, ``எழுத்து`` என்றது சாதியொருமை. கூத்தின் வினையாகிய இசைதல் அதனைச் செய்வான் மேல் ஏற்றப்பட்டது.
இதனால், இசைத்தமிழ்ப் பாடல்களால் இனிமை பெற விளக்கப்படும் பொருள்கள் எல்லாம் திருக்கூத்தில் விளங்குதலாகிய அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மூன்றினில் அஞ்சாகி முந்நூற் றறுபதாய்
மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய்
மூன்றினில் அக்கம் முடிவாக முந்தியே
மூன்றினில் ஆடினான் மோகாந்தக் கூத்தே.

பொழிப்புரை :

(காலம், கதிர், மதி, சேய், மால், பொன், வெள்ளி காரி` என்னும் ஏழு கோள்களின் இயக்கம் பற்றிப் பலவகையாகப் பகுக்கப்படும். அவற்றுள் கதிரியக்க அளவில் அதற்கும், மதிக்கும் இடையேயுள்ள வழியளவு பதினைந்தாகப் பகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு பகுதியும் `திதி` (ஸ்திதி-நிலை) எனப்படுகின்றது. மதி கதிருக்கு முன்னாக அகன்று செல்லும் நிலை பதினைந்தும் `முற்பக்கம் பூர்வ பட்சம் - மதியது ஒளி மிகுந்து வருதலால் சுக்கில பட்சம்` என்றும், மதி கதிரை அணுகிப் பின்னாக வருதலால் `அபர பட்சம்` என்றும், மதியது ஒளி குறைந்து வருதலால் கிருட்டினபட்சம் என்றும் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு பட்சத்திலும் உள்ள திதிகள் மூன்று வட்டங்களாக வகுக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஐந்து திதிகளும் முறையே `நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை` எனப்பெயர் சொல்லப்படும். எனவே, ஒன்று, ஆறு, பதினொன்றாம் திதிகள் நந்தையும் இரண்டு, ஏழு, பன்னிரண்டாம் திதிகள் பத்திரையும், மூன்று, எட்டு, பதின்மூன்றாந் திதிகள் சயையும் நான்கு, ஒன்பது, பதினான்காம் திதிகள், இரித்தையும், ஐந்து, பத்து, பதினைந்தாம் திதிகள் பூரணையும் ஆகின்றன. இவ்வாறு.) பதினைந்து திதிகளும் ஐந்தாகத் தொக்கு நின்று பயன் தருதலையே ``மூன்றினில் அஞ்சாதி`` என்றார். மூன்று - மூன்று. வட்டம். அஞ்சு - நந்தை முதலிய ஐந்து சிறப்பு நிலை. இவையெல்லாம் கணி நூல்களில் (சோதிட சாத்திரங்களில்) காணப்படும்.

குறிப்புரை :

முந்நூற்றறுபது - ஓர் ஆண்டில் உள்ள நாள்கள். ஒரு திங்களுக்கு முப்பது நாள்களாகப் பன்னிரண்டு திங்களுக்கு 30X12=360. (சிறிதே ஏறிப் பெரும்பான்மையாக நாள்கள் முந்நூற் -றறுபத்தைந்தும் ஒரோவோர் ஆண்டில் முந்நூற்று அறுபத்தாறும் ஆகின்ற அவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆண்டிற்கு முந்நூற் றறுபது நாள்` என்றல் பொது வழக்கு.) இந்த நாள்கள் முந்நூற்றறுபதும் பன்னிரண்டு அடிநிலைப் பகுதிகளாய்த் தொக்கு நிற்கும். அவையே பன்னிரு திங்கள்களாம். அவற்றையே ``முதற் பன்னீர் மூலமாய்`` என்றார். முதல் - `முந்நூற்று அறுபது` என் எண் பெறுதற்கு முன்பு. `மூலம் பன்னிரண்டாய்` என மாற்றிக் கொள்க.
பன்னிரு திங்களும் `கார், பனி, வேனில்` எனப் பெரும் பான்மை மூன்றாகிப் பின் அவற்றுள் ஒவ்வொன்று இரண்டாகப் பருவங்கள் ஆறாகும். அவற்றையே ``மூன்றினில் ஆறாய்`` என்றார். இவற்றை ஆவணி முதலாக நந்நான்காகக் கொள்க. கார்ப்பருவத்தின் பின் இரு திங்களும் `கூதிர்ப் பருவம்` (பெருமழையின்றிச் சிறு தூற்றலும், துளியும் மிகுந்து தொல்லை தரும் பருவம்.) பனிப் பருவத்தின் முன் இருதிங்கள் முன்பனிப் பருவமும், பின் இரு திங்களும் பின்பனிப் பருவமும் ஆகும். முன் பனியில் குளிர் மிகுந்தும், பின்பனியில் குளிர் குறைந்தும் இருக்கும். `முன்பனி, பின்பனி` என்பன, பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகைகள். வேனிற் பருவத்தின் முன் இரு திங்களும் `இளவேனில் (வேனில் இளமையுடைத்தாய் வெப்பத்தை மிகத் தரும் பருவம்) எனவும், பின் இருதிங்கள் `முதுவேனில்` (வேனில் முதுமையை எய்தி வெப்பத்தை மிகத் தரமாட்டாத பருவம்) எனவும் சொல்லப்படும்.
அக்கம் - கண்; சிவனது கண்கள் மூன்று `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்கள். `மூன்று, அக்கத்தில் முடிய` என மாற்றுக. முடிதல் - அடங்குதல். பெரும்பாலும் முச்சுடர்களாலே காலம் பல வகை நிலையை அடைந்து பல விளைவுகளை உண்டாக்குதலை அறிக.
மூன்றிலும் ஆடினான் - ஏதேனும் ஒருகாலத்தில் உள்ளார்க்கு அக்காலத்தோடு, அதற்கு முன்னும், பின்னும் ஆகிய காலங்களிலும் ஆடினான். எதிர்காலம் பற்றி நோக்குங்கால் ``ஆடினான்`` என்பதைத் தெளிவு பற்றி வந்த வழுவமைதியாகக் கொள்க.
மோகம் மயக்கம்; திரிபுணர்ச்சி. இஃது ஆணவ மலத்தின் காரியம். அந்தக் கூத்து - அந்தத்தை உண்டாக்கும் கூத்து. எனவே, `உயிர்களின் ஆணவ மலத்தை நீக்குதற்கே இவ்வாறு சிவன் அனவரத தாண்டவத்தைச் செய்கின்றான்` என்பதாம். ``ஆகி, ஆய், ஆய், ஆய், ஆக`` என்பவற்றிற்கு, `காலம்` என்னும் எழுவாயும், ``ஆடினால்`` என்பதற்கு, `சிவன்` என்னும் எழுவாயும் வருவிக்க. முந்தியே - அனாதி தொட்டே.
மேல் இட வரையின்றி எங்கும் ஆடும் அற்புதம் கூறப்பட்டாற்போல, இதனால், கால வரையின்றி என்றும், எப்பொழுதும் ஆடும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தாமுடி வானவர் தம்முடி மேல்உறை
மாமணி ஈசன் மலரடித் தாளிணை
யாமணி யன்புடை யார்மனத் துள்ளெழும்
காமணி ஞாலம் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

கற்பக மலர் மாலையை அணிந்த முடியை உடைய தேவர்களது தலைமேல் இருப்பனவாகிய, மாணிக்கம்போலும் சிவபெருமானது இருபாதங்களும், தகுதி வாய்ந்த அணியாகிய அன்பை உடையவர்களது உள்ளத்திலே விளங்கும் கற்பகத் தருவும், சிந்தாமணியும் ஆகும். ஆயினஉம் அவன் உலகத்தைக் கடந்தே யிருக்கின்றான்.

குறிப்புரை :

`கற்பகத்தரு இரந்தவற்றைக் கொடுக்கும்; சிந்தாமணி பெற நினைத்தவற்றைக் கொடுக்கும். உலகத்தைக் கடந்து நிற்கின்றவன் அன்பர்கள் உள்ளத்தில் கற்பகத் தருவும், சிந்தாமணியும் போல இருத்தல் கருணையினாலேயாகலின், அவன் மேற்கூறியவாறு எங்கும், எஞ்ஞான்றும் ஆடுதல் கருணையினாலே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
`தாமமூடி` என்பது, ``தாமுடி`` எனக் குறைந்து நின்றது. அதனால் தேவர்களது தலையினது உயர்வு குறிக்கப்பட்டது. `உறை தாளிணை` என இயையும். `உறை மாமணி` என இயைத்தலும் ஆம். ``தாள்`` என்பது, கால் முழுவதையும் குறிக்க ``அடித் தாள்`` என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகையாய், பாதத்தைத் குறித்தது.
இங்கு ``அணி`` என்றதை, ``ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி``* என்பதிற்போலக் கொள்க. ``கடந்து நின்றான்`` என்பதற்கு, `அவன்` என்னும் சுட்டு வருவிக்க.
இதனால், ஞானம் கடந்து நின்றவன் சிலரது உள்ளங்களிலே விளங்கி, எண்ணியவற்றை எண்ணியாங்கு முடிக்கும் அற்புதம் கூறும் முகத்தால் அவனது கூத்து அற்புதமும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

பொழிப்புரை :

அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.

குறிப்புரை :

``புரிந்தவன், தெரிந்தவன்`` என்பன வினை யாலணையும் பெயர்கள். `அவன் புரிந்து ஆடில்` எனவும், `அவன் எரிந்து ஆடல்` எனவும் மாற்றி வைத்துரைக்க. `சிந்தையும்` ஆடும் என, இறந்தது தழுவிய எச்ச உம்மையும் அதனை முடிக்கும் சொல்லும் வருவிக்க. எரிதல் - ஒளி வீசுதல். `யாம் இன்புற்றவாறு ஆடல் கண்டு` என எடுத்து முடிக்க. ``இன்புற்றவாறு`` என்பதிலும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால் திருக்கூத்தினால் அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் அனைத்தும் செயற்படும் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார் களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.

குறிப்புரை :

`ஆராயினும்` என்பது, `ஆரும்` எனத் தொகுத்தல் பெற்று நின்றது. `அறிந்தால்` என்பது, ``அறிந்த பின்`` எனத்திரிந்து நின்றது. குணத்தை, ``சத்தி`` என்றார். `அருட் சத்தி ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. செய்கையின் உண்மையை, ``செய்கை`` என்றும் சத்தியின் விளைவ ``சத்தி`` என்றும் உபசரித்தார். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், சிவனது திருக்கூத்துச் சிறிதும் தன்பொருட்டாகாது, பிறர் பொருட்டேயாகின்ற அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.

பொழிப்புரை :

தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடை யனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப் படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.

குறிப்புரை :

என்றது, `உயிர்கட்கு `பிறப்பு, வீடு` என்னும் இருநிலைகளையும் `தருதற்காக ஆடுகின்றான்` என்றபடி. வீடு சிறந்தமை பற்றி முற்கூறப்பட்டது. வீட்டைத் தருவது ஞான நடனம். பிறப்பைத் தருவது ஊன நடனம். `ஒன்பதும் ஒன்பதும் ஆம் கோணம்` எனவும், `இருபதத்து உற்ற கோணம்` எனவும் தனித்தனி இயைக்க. அவற்றுள் முன்னையது பதியையும், பசுவையும் தனித்தனி நவகோண சக்கரமாக உருவகம் செய்ததாம். பதியின் ஒன்பது பகுதிகள் நவந்தரு பேதம். பசுவின் ஒன்பது பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றில் ஒவ்வொன்றிலும் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மும்மூன்று உட்பிரிவுகளாம். அவையெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. அன்புறுதல், ஒன்றையொன்று நேசித்தல். `அசி` பதம் சீவன் சிவன் ஆதலைக் குறிப்பது என்பதும் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. ``ஒன்பதொ டொன்பது`` என்பதில் உள்ள ஒடு எண் ஒடு. ``ஆடிட, ஆட`` என்னும் எச்சங்களும் எண்ணின்கண் வந்தன.
இதனால், உயிர்களின் பல நிலைகளும் நிகழ்தற்பொருட்டுச் சிவனும் பல நிலைகளில் நின்று ஆடுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

தத்துவம் ஆடச் சதாசிவன் தான்ஆடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தான்ஆட
வைத்த சராசரம் ஆட மறைஆட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறியபடி பசு பல நிலைகளில் செயற்படும்படி சத்தி ஆடுதலால், சிவனும் அதற்கு இயையப் பல நிலைகளில் நின்று ஆடுகின்றான்.

குறிப்புரை :

ஐந்தொழிற்கும் முதல்வன் சதாசிவன் ஆதல்பற்றி அவனை வேறு பிரித்துக் கூறினார். சித்தம் - உயிர்களின் அறிவு. சராசரம் - பிறப்பு வகைகள். ``சிவசத்தி தான் ஆட`` என்பதை மூன்றாம் அடியின் ஈற்றில் வைத்து, `அவள் ஆட, அத்தனும் ஆனந்தக்கூத்து ஆடினான்` என முடிக்க. காரியப்பொருளில் வந்த ஏனை, `ஆட` என்னும் எச்சங்கள். `சிவசத்தி தான் ஆட` என்பதனோடு முடிந்தன. `தான்` இரண்டும் அசைகள். சத்தி, இங்கு ஆதி சத்தி.
இதனால், திருக்கூத்துக்கள் யாவும் சத்தியின் நிலைகட்கு ஏற்ப நிகழ்த்தப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

இருவரும் காண எழில்அம் பலத்தே
உருவோ டருவோ டுருவரு ரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தன் ஆனந்தன்
அருளுரு வாகநின் றாடலுற் றானே.

பொழிப்புரை :

உண்மையில் அருட்சத்திக்கு உள்ளே சென்று அடையப்படுபவனாய் ஆனந்தத்தைப் பொழியும் சிவன் இவ்வுலகில் `பதஞ்சலி, வியாக்கிரபாதர்` என்னும் முனிவர் இருவர் எப்பொழுதும் கண்டு களிக்கும்படி, உருவம் `அருவம், உருஅருவம்` என்னும் மூன்று திருமேனிகளில், அத்திருமேனிகள் அருளேயாய் நிற்க நின்று ஆடுதலை மேற்கொண்டுள்ளான்.

குறிப்புரை :

``இருவரும் காண்`` என்றதனால், இங்குக் கூறிய அம்பல தில்லை அம்பலம் ஆயிற்று. அங்கு உருவம், கூத்துக் கோலம். அருவம், ஆகாசத்தைச் சுட்டும் இரகசியம். உருஅருவம், `திருச்சிற்றம்பலம் உடையார்` என்னும் இலிங்கத் திருமேனி. சித்தன் - அடையப்படுபவன். மூன்றாம் அடியை முதலில் வைத்து உரைக்க.
இதனால் தில்லைம்பலக் கூத்தின் அற்புதம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சிவம்ஆடச் சத்தியும் ஆடச் சகத்தின்
அவம் ஆட ஆடாத அம்பர ஆட
நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச்
சிவம்ஆடும் வேதாந்த சித்தாந்தத் துள்ளே.

பொழிப்புரை :

சிவ முதற்பொருள், தான் செய்வோனாய் நின்று சங்கற்பிக்க, அச்சங்கற்பந்தானே சத்தியாகிப் பலவகையில் நிற்க, அதனால் உலகத்தில் தீயனயாயும் நிலைகெட்டு நீங்கும் நிலையை எய்த, உலகில் அசைவற்றதாக எண்ணப்படுகின்ற ஆகாயமும் ஒலி அலைகளைத் தோற்றுவித்துச் செயற்பட, புதிது புதிதாய்த் தோன்றி யமைகின்ற தத்துவங்கள் நிலம் முதல் நாதம் ஈறாக நின்று செயற்பட எப்பொழுதும் ஆடும் இவ்வுண்மை வேதாந்தத்திலும், சித்தாந்தத் திலுமே காணப்படும்.

குறிப்புரை :

`பிறவற்றில் காணப்படாது` என்றதாம். அஃதாவது, `புறச் சமயிகள் இதனை உணரார்` என்றதாம். ஈற்றில் உள்ள ``சிவம்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. முதற்கண் உள்ள `சிவம் என்பது செய்வோன்` என்னும் பொருட்டாய் நின்றது. அதன்கண், `சிவமாய்` என ஆக்கம் வருவிக்க. ``சிவம் ஆட`` என்பதில் ஆடுதல், சங்கற் பித்தல், ``நாதாந்தம்`` என அந்தம் கூறவே, நிலமாகிய ஆதியும் பெறப் பட்டது. ``வேதாந்த சித்தாந்தம்`` என்பது உம்மைத் தொகை. `உள்ளது` என்பதில் இறுதிநிலை தொகுக்கப்பட்டு, ``உள்`` என நின்றது.
இதனால், திருக்கூத்தின் அற்புத நிலை வேதாந்த சித்தாந்தங்களிலே விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

பொழிப்புரை :

உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.

குறிப்புரை :

``அந்தம்`` என்பன கடந்த நிலையைக் குறித்தன. தாது - மூலம். ஐந்தொழில்களில் இறுதியான அருளலைச் செய்வோன் சதா சிவன் ஆதலை நினைக. ``மெய்ச் சிவம்`` என்பதில் சிவம், சிவத்தைத் தரும் சிவாகமம். சத்தப் பிரம வாதிகள் சடமாகிய நாதத்தையே `நாதப் பிரமம்` என்பர். அது பொருந்தாது; நாதத்தை அதிட்டித்து நிற்கும் சிவனே நாதப்பிரமம் என்பார் `நாதப் பிரம சிவன்` என்றார். இந்தச் சிவன் அநாதி சிவனாகிய பரம் சிவத்தினின்றும் தோன்றிய ஆதி சிவன் ஆதலையறிக. நடத்தின் பயனை, ``நடம்`` என உபசரித்தார்.
இதனால், சுத்தாவத்தை பராவத்தைகள் யாவும் திருக்கூத்தின் விளைவாதல் கூறப்பட்டது. இவ் அவத்தைகள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்
தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்
தவமாம் புரன்எங்குந் தானாகி ஆடும்
தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே.

பொழிப்புரை :

சரியை முதலிய இறப்பில் தவங்களை நிரம்பச் செய்த உயிரைப் பாசங்கள் அப்பொழுதே விட்டு நீங்குதலால், அவ்வுயிர் சிவன் முதலிய ஐவரால் உண்டாகும் அலமரல் நீங்கும்படி, தவத்தின் வடிவாய் விளங்கும் சிவன் எங்கும் தானாய்த் திருக்கூத் தியற்றுவன். அக்கூத்துத் தவத்தால் விளைந்த ஞானத்தின் பயனாக அதற்கு உரியோர் பொருட்டுச் செய்யப்படுவதாகும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து `பசுவினின்றும்` என உருபு விரிக்க தனித்து. தனித்தலால், எங்கும் தான் ஆக-தனது வியாபக நிலை தோன்றும்படி. அஃதாவது, `எங்கும் சிவமாய்த் தோன்றும்படி` என்பதாம். `அது ஞானக் கூத்து` எனச் சுட்டு வருவித்து தவமாம் சிவானந்தத்தோர்க்கு` என உருபு விரித்து முடிக்க.
சிவமாதி ஐவர், சிவ தத்துவம் முதலிய சுத்த தத்துவம் ஐந்திலும் நிற்கும் முதல்வர்கள். இவர்கள் பந்தத்தில் உள்ள உயிர்களை அவற்றி னின்றும் நீங்குதற்கு ஆவன செய்வாராயினும், அச்செயல் நோயாளிக்கு மருத்துவன் செய்யும் செயல் அப்பொழுது துன்பமாய் தோன்றுதல்போல அலமரலை விளைக்குமாகலின், அந்நோய் நீக்கத்தை, அவரால் விளையும் திண்டாட்டம் நீங்குதலாகக் கூறினார். `திண்டாட்டம்` என்னும் நாட்டுப்புற வழக்கு, 2736 ஆம் மந்திரத்திலும் வந்தது.
இதனால், திருக்கூத்து வகைகளுள் ஞானக்கூத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

பொழிப்புரை :

`தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மையுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.

குறிப்புரை :

கூடுதல், தன் பயனைத் தோற்றுகின்றது. ``தேவர்கள்`` என்பதை, ``கூட`` என்பதனோடும் கூட்டுக. `வீடவும்` என்னும் சிற்பபும்மை தொகுத்தலாயிற்று. விகிர்தன் - வேறுபட்டவன். மூன்றொளிகள் ஆடுதல் கூறினமையால் அவன் ஆடுதல் பெறப்பட்டது. `வியப்பிற்குரியது` என்பது சொல்லெச்சம்.
இதனால் ஆடல் வல்லானது அற்புத நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றொடு நீதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே.

பொழிப்புரை :

வேதாந்தத்திலே விளங்குகின்ற நம் சிவன், நாத தத்துவத்தையும் கடந்த முதல்வன். அவனை இந்தப் பூமியிலே இங் குள்ளவர்கள் தெளிவாகக் கண்டு ஆனந்தத்தை அடைகின்றார்கள். அது பற்றி அவன் அவர்களிடத்து வைத்த கருணையும், நடுவு நிலைமையும் முரணாகிவிடவில்லை; நேரொன்றியே நிற்கின்றன. அவ்வாறு உள்ளது அவன் இப்பூமியில் இயைந்து நிற்கின்ற நிலை.

குறிப்புரை :

`நாத தத்துவம்` என்பது கடைக்குறைந்து `நாதத்துவம்` என நின்றது. இனி `நாதத்தின்மை` எனக்கொண்டு `சுத்த மாயை` எனினும் ஆம். சிறப்பும்மையும்; `கடந்த` என்பதன் ஈற்று அகரமும் தொகுத்தலாயின. ``மறை`` என்றது அதன் முடிவை. `மறை நம்பி நாதத்துவமும் கடந்த ஆதி` என்க. இதனை அனுவதித்து ஓதினார், அவன் மிகக் கீழ்த் தத்துவத்தின்கண் விளங்கிநிற்கும் எளிமை யுணர்த்தற்கு. பூ - பூமி. `பூத் தத்துவம்` என ஒற்று மிகாமை வடநூல் முடிவு. பொலிந்து, `பொலிய` என்பதன் திரிபு. இன்பம் எய்துதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. `நேசத்துவம்` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது. நேசம் இறைவனுடையது இன்பம் எய்துவார் பலராகலின், அவர்மேல் வைத்த நேசமும் பலவாகச் சொல்லப்பட்டது. நீதி, ``மோகம் அறுத்தவர்க்கே முத்தி கொடுப்பம்`` எனச் சொல்லி வைத்த நீதி. அது பேதப்பட்டாமை, அவனது காட்சியாலே மோகம் அற்றமையினாலாம். ஆகவே, அவரது நிலைமை அவ்வாறாகும்படி அவன் இவ்வுலகில் இயைந்து நிற்கின்றான்` என்பதாம். இனி, `நேதியும்` என்பதே பாடமாகக் கொண்டு ஏற்குமாறு உரைப்பர்.
``பின்னி நின்றான்`` எனப் பொதுப்படக் கூறினாரேனும் இங்குச் சிறப்பாகக் கூத்தனாய் நிற்றலைக் கூறுதலே கருத்தென்க. இன்பம் எய்துதல் அதனானே சிறக்க நிகழ்தலின்.
இதனால், திருக்கூத்தினால் சிவநெறி உண்மை அற்புதமாக விளைதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

ஆனந்தம் ஆனந்தம்` என்பர் அறிவிலார்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்தம் மாநடம் ஆரும் அறிந்தபின்
ஆனந்தம் அற்றிட ஆனந்தம் ஆமே.

பொழிப்புரை :

``பேரின்பத்தை அடைய வேண்டும், அடைய வேண்டும் என்று, அஃது இருக்குமிடத்தை அறியாத பலர் அதனைத் தேடி அலைகின்றனர், ஆயினும் பேரின்பம் இவ்வுலகில் சிவன் செய்யும் திருக்கூத்திலே இருத்தலை யாரும் அறிதல் இல்லை. அறிவார்களாயின், அக்கூத்து, உலக இன்பம் அனைத்தும் கெடும்படி பேரின்பமாய் நிகழும்.

குறிப்புரை :

``ஆனந்தம்`` பலவற்றில் ஈற்றடியின் முதலில் நின்ற ஒன்று தவிர ஏனைய யாவும் சிறப்புப் பற்றிப் பேரின்பத்தையே குறித்தன. அடுக்கு, இடைவிடாமை பற்றி வந்தது. `வேண்டும்` என்பது சொல்லெச்சம். ஆனந்தத்தைத் தருதல் பற்றி நடனத்தையே ``ஆனந்தம்`` என உபசரித்துக் கூறினார். `அறுதல் விடயானந்தம் - ஐம்புல இன்பம்` என்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய அற்புதத்தை அறிய மாட்டாதாரது நிலை இரக்கத்திற்குரியதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

திருந்தநற் `சீ` என் றுதறிய கையும்
அருந்தவ `வா` என் றணைத்தபொற் கையும்
பொருந்தில் அமைப்பில் இயஎன்பொற் கையும்
திருந்தத் தீ ஆகும் திருநிலை மவ்வே.

பொழிப்புரை :

சிவனது திருக்கூத்தினைக் காணுங்கால். அதில் உதறிய கையை, மாயையை, `சீ` என்று உதறும் கையாகவும், வீசி அணைத்த கையை, அடியவனை, `வா` என்று அழைத்து அருள் வழங்கும் கையாகவும், சார்ந்தவிடத்து, `அஞ்சற்க` என அமைந்த கையை, `இனிதிருக்க` எனத்தேற்றம் தரும் கையாகவும், தீ ஏந்திய கையை, வினைகள் கெடத் திருவருள் வழி நிற்கச் செய்யும் கையாகவும், ஊன்றிய திருவடியை மலத்தை மிதித்து நிற்கும் திருவடியாகவும் காணுதல் வேண்டும்.

குறிப்புரை :

திருவைந்தெழுத்தில் உள்ள எழுத்துக்களின் சிலேடை தோன்ற உண்மை யுணர்த்தியவாறு. உதறுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. இங்குக் கூறியவற்றில் அமைந்துள்ள எழுத்துக்களை வருகின்ற மந்திரத்துள் ``உதறிய கை, அணைத்த கை, `இய` என்ற கை`` - என உடம்பொடு புணர்த்து ஓதப்பட்ட பொருள்கள் இனிது விளங்க வெளிப்படையாக உரைக்கப்பட்டன. ``தீ, நிலை`` என்பன ஆகுபெயர்களால் அவற்றையுடைய கையையும், அடியையும் குறித்தன. ``ம்`` என்றது, மலத்தை அதன் முதலெழுத்துக் குறிப்பாற் கூறினார். `மவ்வை மிதித்தல்` என ஒரு சொல் வருவிக்க. வேண்டும் இடங்களில் எல்லாம் `ஆக` என்பது வருவித்து, அவற்றை ``ஆகும்`` என்பதனோடு முடிக்க. ``திருந்து அத் தீ ஆகும்`` என்பதை, `அத் தீ திருந்து ஆகும்` என மாற்றி உரைக்க. திருந்து - திருந்துதல்; அஃதாவது, தற்போதத்தால் வினைகளைச் செய்யாது திருவருள் வழி நிற்றல். முதனிலைத் தொழிற்பெயர் ``இய`` என்றது, `இயல்` என ஏவியதனைக் குறித்தது. ``ஆகும்`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், திருக்கூத்தினை உண்மையில் தரிசிக்கும் முறைகளுள் ஒரு வகை முறை கூறப்பட்டது.
``மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி,அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனன்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தை யார்பரதந் தான்``.* என்னும் உண்மை விளக்க வெண்பாவை இங்கு ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 37

மருவும் துடியுடன் மன்னிய வீச்சு
மருவு மமைப்பு அனலுடைக் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமஎன ஓதே.

பொழிப்புரை :

கூத்தப் பிரான் திருவுருவத்தில் உடுக்கை வீச்சு, அமைப்பு, நெருப்பு இவைகளையுடைய நான்கு கைகளையும், ஊன்றிய திருவடியையும் முறையே `சி, வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களாகக் கண்டு துதித்து வணங்குக.

குறிப்புரை :

``சேர்க்கும் துடிசிகரம்; சிக்கெனவா வீசுகரம்;
ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி நகரம்; அடிக்கீழ் முயலகனார்
தங்கு மகரமது தான்``* என்னும் உண்மை விளக்க வெண்பாவினைக் காண்க. திருவைந் தெழுத்து இவ்வாறு சிகாரம் முதலாக அமைவது சூக்கும பஞ்சாக்கரம் ஆகும் என்பதனை நினைவூட்டுதற் பொருட்டு, ``உரு இல் சிவாயநம`` என்றார். உரு இன்மை அருவம்; சூக்குமம். இனி நகாரம் முதலாக அமையும் தூல பஞ்சாக்கர வடிவத்தை அந்நூல்,
``ஆடும் படிகேள்; நல் அம்பலத்தான்; ஐயனே,
நாடும் திருவடியி லேநகரம் - கூடும்
மகரம் உதரம்; வளர்தோள் சிகரம்;
பகருமுகம் வா;முடிய; பார்``9
என்பதனால் விளக்கிற்று. அதனை நாயனார் இங்குக் குறித்திலர். அஃது உலகப் பயனையே விளைத்தலின். கரு, ஆகுபெயராய் உடம்பைக் குறித்தது. உடம்பு, முயலகனது. அன்றி, அம்மந்திரம் கிடைத்திலது என்றலும் ஆம். `கருவின்கண்` என `மேல்` என்னும் பொருட்டாகிய ஏழாவது விரிக்க.
இதனால், முன் மந்திரத்தில் சிலேடை வகையான் குறித்த சூக் கும பஞ்சாக்கர முறை வெளிப்படையாக இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 38

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.

பொழிப்புரை :

கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.

குறிப்புரை :

மேல், ``திருந்த நற் `சீ` என்றுதறிய கையும்`` என்றதில் உணர்த்தப்பட்ட குறிப்பு முத்தர்கட்கான ஞான நடனக் குறிப்பு` எனவும், இது, பெத்தர்கட்கான `ஊன நடனக் குறிப்பு` எனவும் உணர்க. இதனையும்,
``தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே; நாடு``3 என உண்மை விளக்க நூல் கூறுதல் காண்க. `ஊன்று` என்னும் முதனிலை வலித்தல் பெற்று, ஈற்றில் `அம்` ஏற்று, `ஊற்றம்` என வந்தது. ஊற்றமா - உறுதியாக. இஃது இம்மந்திரத்தில் ஆக்கம் இன்றி வந்தது. அணைத்தல் - (முயலகன் முதுகில்) சேர்த்தல். ``அரன்`` என்றது. இங்குக் கூத்தப் பெருமானையே. அப்பெயர் சொற்பொருட் பின்வருநிலையாய்ப் பின்னரும் வந்தது. ``ஊற்ற அணைப்பு`` என ஊன்றிய திருவடியைக் கூறினமையால், பின் வந்த ``அடி`` தூக்கிய திருவடியாயிற்று.
இது பெத்தர்க்கான குறிப்பாயினும், ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணமாதல் சிறப்பு நோக்கியும், இறுதியில் அருளல் அமைந்திருத்தலாலும் இதனையும் இங்கு நாயனார் கூறினார் என்க. ``அறையின்`` என்பதை முதலிற் கொள்க.
இதனால், கூத்தப் பெருமானது வேறொரு வகைக் கூத்தின் குறிப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

நீத்திரட் சோதி திகழொளி யுள்ஒளிக்
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினன்
மூர்த்திகள் மூவர் முதல்வ னிடைச் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே.

பொழிப்புரை :

அக்கரங்கள் ஐம்பதைக் குறிக்கும் சுடர்கள் மேல் எல்லாம் விளங்குகின்ற, முதல் ஒளியாகிய ஓங்காரமாம் திருவாசியுள், அவ்வோங்காரத்தின் உள்ளொளியாய் விளங்கும் கூத்தப் பெருமானது கூத்தினை எப்பொழுதும் காண்கின்ற அழகிய கண்களை யுடைய சிவகாமியம்மை அந்தக் கண்களினாலே மூவர் மூர்த்திகளும் பெருமானது மூன்று கண்களினின்றும் தோன்றும் வண்ணம் பார்த்தாள். (உடனே அவர்கள் தோன்றினார். பின்பு அவர்களுக்கு வழிகாட்டுதற் பொருட்டுப்) பல வேதங்களையும் பாடி உணர்த்தினாள்.

குறிப்புரை :

`அதனால் உலகம் நடைபெற்று வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``9
என்னும் உண்மை விளக்கப் பகுதியை இங்கு ஒப்பிடுக. `படைப்புக் காலத்தில் சிவன் தன்னிடத்தினின்றும் சத்தியை, `இலலிதா` என்னும் பெயருடன் தோற்றுவிக்க, அவள் தனது மூன்று கண்களினின்றும் மும்மூர்த்திகளைத் தோற்றுவித்து, அவர்களை முத்தொழில் புரியுமாறு அருளினாள்` என்பது படைப்பு முறைகள் பலவற்றில் ஒருமுறையாகச் சொல்லப்படுகின்றது.8 அம்முறை இங்கு ஒருவாறு குறிக்கப்பட்டது. கூத்தப் பெருமான் உலகத்தை நடத்தும் முறையைக் கூறியவாறு. `உள்ளொளியாகிய கூத்தன்` என்க. ``இடை`` என்பதைப் பெயராக வைத்து, முதல்வனிடையினின்றும் செல்லப் பார்த்தனன்` என்க. செல்லுதல் - தோன்றிச் செயல்புரிதல்.
இதனால், `மும்மூர்த்திகளும் கூத்தப் பெருமான் தனது சத்தியால் தோற்றுவித்து நிறுத்தி, ஒடுக்கப்படுபவர்களே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

பொழிப்புரை :

மேல், ``சுந்தரக் கூத்து`` எனக் கூறப்பட்ட கூத்தினைச் செய்யும் சிவன் இங்குள்ளவர்களுக்கு `ஓம்` என்னும் அந்த ஒரு மந்திரத்திலும், அதற்கு மேலாய திருவைந்தெழுத்து மந்திரத்திலும் நிறைந்து நின்று அருள்புரிகின்றான் என்றாலும், உண்மையில் அவன் அவற்றைக் கடந்து, எல்லா அண்டங்களுக்கும் அப்பாற்பட்டே யிருக்கின்றான். ஆகையால், `அவன் இன்ன தன்மையன்தான்` என்று யார் வரை செய்து கூற இயலும்!.

குறிப்புரை :

`நந்தி` என்பது சிவன் பெயர்கள் பலவற்றில் ஒன்று. அது முதலாக வந்த மூன்றும் சுந்தரக் கூத்தனையே குறித்தமை வெளிப் படை. மந்திரம் ஒன்று, பொது நோக்கில் பிரணவமும், சிறப்பு நோக்கில் திருவைந்தெழுத்துமாம். கூத்தப் பெருமான் அவற்றின் வடிவாய் நிற்றல் இங்கு விளக்கப்பட்டது. `மருவியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``ஓர் ஊரன் அல்லன் ... ... ... இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டொ ணாத னாகிய``9 அவன், இங்கு மந்திரவடிவாய் நின்று ஆடல் புரியும் அருட் பெருமையை அறிந்து, அன்பு செய்து உய்தல் மக்கட்குக் கடன் என்பது கருத்து.
இதனால் திருக்கூத்தின் அருமை அறிந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

பொழிப்புரை :

ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.

குறிப்புரை :

சீயம் - சிங்கம். இது தலைமை பற்றி வந்த உவமை. நந்தி ஆய் உறு மேனி என்க. ஆதல் - பொருந்துதல். மீட்டும் வந்த ``ஆய் உறு மேனி`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்று, ஆகுபெயரால் அதன் தன்மையைக் குறித்தது. ``ஆரும் அறிகிலர்`` என்றதனால், ஆய்ந்துணரற்பாலதாதல் பெறப்பட்டது. `தீ வெளுப்போடு செம்மை உறும் அத்தன்மை` என இயைக்க. தீயைப் பார்ப்போர் அனைவரும்` அது சிவப்பானது` என்றும் கருதுகின்றனர். `ஆயினும் தீ உண்மையில் வெளுப்பானதே` என நியாய நூலார் நிலை நாட்டுவர். இன்றைய அறிவியலாரும் `ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்மை` என்பர். கூத்தப் பெருமானது சத்தி, `திரோதான சத்தி, அருட் சத்தி` என இரண்டாதல் பற்றி `சத்தி வடிவான அவனது மேனி இரு தன்மையுடையது` எனஅறார். திரோதான சத்தியால் பெத்தத்தையும், அருட்சத்தியால் முத்தியையும் உயிர்கட்கு அவன் அருளுகின்றான்; அவ்வருட்செயல் திருக்கூத்தினால் நிகழ்கின்றது என்க. ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து` என எச்சப்பொருள் தந்தன.
இதனால் திருக்கூத்து இரு சத்திகளால் இருவேறாகச் செய்யப் பட்டு, இருவகைப் பயனை விளைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

தானான சத்தியும் தற்பரமாய் நிற்கும்
தானாம் பரற்கும் உயிருக்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

பொழிப்புரை :

சத்தி சிவனின் வேறன்று ஆதலால், சிவன் உயிர்களைக் கடந்து `நிற்றல் போலவே சத்தியும் உயிர்களைக் கடந்து நிற்கும் (`இந்நிலையில் சிவன், `பரமசிவன்` என்றும், சத்தி, `பராசத்தி` என்றும் சொல்லப்படுவர். எனினும் அந்தச் சத்தி) பரமசிவனுக்கும், அவனுக்குக் கீழே உள்ள உயிர்கட்கும் முறையே ஐந்தொழில் செய்தலிலும், போக மோட்சங்களை அடைதலிலும் இச்சையையும், அவற்றிற்கு ஆவனவற்றை அறியும் அறிவையும், அறிந்தவாறே ஆற்றும் செயலையும் தந்து, உலகத்தை நடத்தும். நடத்துமிடத்து அஃது `ஆதி சத்தி` எனப் பெயர் பெறும். (`திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.) இவ்வாறு உயிர்களை நடத்துதலே திருக்கூத்து இயற்றுதல் ஆதலின் அக்கூத்தின் பயனாக உயிர்கள் திருவருளைப் பெறும் தன்மையை எய்துமாயின், அந்த ஆதி சத்தியே அருட்சத்தியாய் அவைகட்கு இறைவனுடைய திருவடியில் அன்பைப் பெருக்கும்.

குறிப்புரை :

எனவே, `இதுவே திருக்கூத்தின் முடிந்த பயன்` என்ற தாயிற்று. ``தான்`` இரண்டும் சிவன். இரண்டாவதில், `தானே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தானேயாதலாவது பிறி தொன்றையும் பற்றாது தனித்து நிற்றல். தற் பரை - தனக்கு மேலாய் நிற்பவள். ``தன்`` என்றது உயிரை. இச்சை ஞானங்களைக் கூறவே, இனம் பற்றிச் செயலும் கொள்ளப்பட்டது. `ஞான இச்ை\\\\u2970?` என்னும் உம்மைத் தொகை செய்யுள் நோக்கி பின்முன்னாய் நின்றது. `ஆதியாய்ப் பேதங்களை நடத்தும், அங்ஙனம் நடத்துதலாகிய நாடகத்தை நடித்து நேயத்தது ஆம்` என முடிக்க. தனது உண்மை யியல்பில் மாற்றம் எய்தாமையைக் குறிக்க இவற்றை, `நாடகம்` என்றார். நேயத்தது - நேயத்தைப் பெருக்குவது. உயிர்களது உள்ளத்தின் செயலை அவற்றின்மேல் வைத்து, ``அருள் ஆனால்`` என்றார்.
இதனால், திருக்கூத்தின் செயல் வகைகளையும், பயன் வகைகளையும் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி