ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்


பண் :

பாடல் எண் : 1

மன சந்தியில் கண்ட மன்நன வாகும்
கனவுற ஆனந்தங் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழி வென்ப
இனமுறா னந்திஆ னந்தம் இரண்டே.

பொழிப்புரை :

மனம் புறக் கருவிகளோடு கூடிப் புறப்பொருளைப் பற்றும் நனவு நிலை (அவ்விடத்து இன்பமும் சிறிது உளதாயினும்) பொதுவாகத் துன்ப நிலையேயாதலும், அந்த மனம் புறத்திற் செல்லாது அகத்தே அடங்கிய கனவு, உறக்கம் முதலிய நிலைகள் இன்ப நிலையாலும் அனுபவமாக அறியப்படுவன. அந்த முறையை ஆராய்ந்து பார்த்தால், `இன்பமாவது, கருவி கரணங்களின் மேற் செல்லுதலை ஒழிதலே` என்பது விளங்கும். அவ்வொழிவினை எய்தியவன் அடையும் இன்பங்கள் இரண்டு. (உலகின்பம், வீட்டின்பம் என்பன.)

குறிப்புரை :

``கனவுற ஆனந்தம்`` எனப் பின்னர்க் கூறினமையால் முன்னர் `நனவு துன்பமாகும்` என்பது பெறப்பட்டது. வினவுதல் - ஆராய்தல். மீது - கருவி கரணங்களின் மீது. `மீது செல்லுதல்` என ஒருசொல் வருவிக்க. ஒழிவு - ஒழிதலையுடைய நிலை. பெத்த நிலையில் உளதாகும் இம்முறைமையை உவமையாகக் கொண்டு உணரும் உவம உணர்வால் `முத்தி நிலையின் இயல்பையும் உணரலாகும்` என்பார். ``இனம் உற்ற ஆனந்தி ஆனந்தம் இரண்டு`` என்றார். இனம், `ஆனந்தம்` என்னும் சாதி, ஆனந்தி ஆனந்தத்தை எய்தும் உயிர். `அஃது எய்தும் ஆனந்தம் இரண்டு என்க. முன்னர்க் கூறியவாற்றால் `அவ்விரண்டு இவை` என்பது விளங்கலின், வாளா, ``இரண்டு`` என்று போயினார். வீட்டிற்கு நேர் வாயிலாகிய `ஞானம் தோன்றுதல் கருவி கரணங்களினின்று நீங்குதல்` என்றபடி. உலகில் விழிப்புத் துன்பமாகவும், கனவும், உறக்கமும் இன்பமாகவும் உணரப்படுதல் வெளிப்படை. இது பற்றி ஏகான்ம வாதிகள் சகல சுழுத்தியையே, `பிரமானந்த நிலை` என்பர்.
இதனால், ஞானோதயத்தின் முதற்படி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கரியட்ட கையன் கபாலம்கை ஏந்தி

எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன்என்(று) ஆட்பட்ட தல்லால்
கரியன்கொள் சேயன்கொல் காண்கின்றிலேனே.

பொழிப்புரை :

சிவபெருமானை, மந்திரம் 337-இல் கூறியவாறு, `பிரமன் தலையைக் கிள்ளிக் கையில் ஏந்தியவன்` எனவும் மந்திரம் 340-இல் கூறியவாறு `யானையை உரித்தவன்` எனவும், `தக்கனுடைய சாபத்திற்கு அஞ்சி வந்து அடைக்கலம் புகுந்த சந்திரனைத் தலையில் அணிந்து காத்தவன்` எனவும் மற்றும் இவ்வாறு வரும் வரலாறுகள் பலவற்றால் உயர்ந்தோர் புகழ்ந்து கூறிய சொற்களால் அவனையே, `அரியவன்` என்றும், பெரியவன் என்றும் துணிந்து யான் அவனுக்கு ஆட்பட்டதல்லது, அவனை யான் நேரில் `கறுப்பன்` என்றோ, `சிவப்பன்` என்றே பார்த்து உணர்ந்ததில்லை.

குறிப்புரை :

இது, நாயனாரது தொடக்க நிலையைக் கூறியது. ஏனெனில், சிவனை நிருவிகற்பமாக உணர்ந்ததையே கூறிற்று ஆதலின்,
``அன்றும திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்!
இன்றும் திருஉருவம் காண்கிலேன்-என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்,
எவ்வுருவோ நின்னுருவம் ஏது``3 என்ற அம்மை திருவாக்கு, `சிவன் உருவிலன்` என்பதை உணர்ந்திற்றாதலின் அஃது இதனின் வேறு என்க.
இதனால், `அனுபூதிமான்கள் அருளிச்செய்த திருமொழியை ஐயுறாது பற்றுதலே ஞானத் தோற்றத்தின் முதல் நிலை` என்பது கூறப்பட்டது. ஞான சம்பந்தரும்,
``ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி,
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே``l

பண் :

பாடல் எண் : 3

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

பொழிப்புரை :

ஆணவ இருளால் அறிவை இழந்த நின்ற உயிருக்கு அந்த ஆணவ இருளைச் சிறிதே நீக்கும் விளக்குப் போல்வன மாயா காரியங்களாகிய தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகள். அறிவை விளக்கி நிற்கும் கருவிகளாகிய அவைகளையே `அறிவாகிய தான்` என உயிர் மயங்குகின்றது. அம்மயக்கம் நீங்கி, அவ்வுடம்புகளைத் தனக்கு வேறாக நீக்கி, அறிவு விளக்காம் தன்னைத் தான் உணர்ந்து, பின் தன் அறிவிற்குள்ளே அறிவாய் விளங்கும் திருவருளை விளங்கச் செய்து, பின் அந்தத் திருவருளாகிய விளக்கினுள் தானாகிய விளக்கினை, வெயிலின்முன் உள்ள பகல் விளக்குப்போல அடங்கி விளங்கச் செய்யவல்லவர்க்கு அந்தத் திருவருளாகிய ஒளியை உடையவனாகிய சிவனது இன்பக்கடலைப் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``விளக்கு``ப் பலவற்றுள் முதலாவது, மாயா காரியமாகிய உடம்புகள். இரண்டாவதும், மூன்றாவதும், ஆறாவதும் உயிரினது அறிவு. ஏனையவை திருவருள். கழல் - திருவடி, அஃதே சத்தி; அஃது அறிவாயும் இன்பமாயும் இருக்கும். அறிவாய் இருத்தல் முன்பு ``விளக்க`` எனக் கூறப்பட்டமையால், இங்கு, ``கழல்`` என்றது இன்பத்தையாம்.
இதனால், ஆசிரியரது அருள்மொழி வழியே தத்துவ சுத்தி, ஆன்ம தரிசனம், சிவ தரிசனம், சிவ யோகம் என்பன முறையாக நிகழ்தலே ஞானோதயத்தின் வளர்ச்சியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

பொழிப்புரை :

பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்ந் தொழியாது, அவற்றின் மெய்ம்மையை உணர்ந்தவரிடத்தில்தான் மெய்ப்பொருளாய் உள்ள சிவனும் விளங்கியிருப்பான். மெய்ம்மையை உணராதவரிடத்தில் அவன் விளங்குதல் இல்லை. ஆகவே, மெய்யுணர்வி சிறப்பினை உணர்ந்து அதனை ஒருவன் பெற்றுவிட்டால், உடனே சிவன் அவனிடம் வந்து விளங்குவான்.

குறிப்புரை :

``தத்துவம்`` என்றது மெய்ம்மையை; பொருள்களின் பொதுமையை மட்டும் உணர்தலாவது. வானவில் தோன்றினஆல், `இது மிக அழகிதுய பல நிறங்களைக் கொண்டு விளங்குகின்றது இஃது எங்கிருந்து வந்தது? அதிசயம்! அதிசயம்! என்று இவ்வளவில் உணர்தல் போல்வது. மெய்ம்மையை உணர்தலாவது, வானவில்லைக் கண்டபொழுது, இஃது ஓர் உண்மையான வில் அன்று. பெருவட்டமாகிய சூரியனது வடிவில் ஒரு பாதியின் பிரதிபலனம். நமக்குப் பின்னால் ஓரிடத்தில் மழை பெய்கின்றது. அதற்கு அப்பால் சூரியன் பிரகாசிக்கின்றான். அவனிடத்தில் உள்ள பல நிறக் கதிர்களும் மழைத்துளிகளின் இடையே ஊடுருவி, நமக்கு முன்னால் பிரதிபலித்தலால் இந்தப் பலநிற அரைவட்டம் நமக்கு வில்போலத் தோன்றுகின்றது. இஃது உண்மையில் வில் அன்று. பின்னால் பெய்கினஅற மழை நின்றால் இந்தப் பிரதிபலனமும் மறைந்து விடும் என இவ்வாறு அதன் உண்மையை உணர்தல் போல்வது. இந்த உண்மை உணர்வே மெய்யுணர்வே - தத்துவ ஞானம். பொது உணர்வும், ஐய உணர்வும், திரிபுணர்வும் `ஞானம்` எனப்படா. `அஞ்ஞானம்` என்றே சொல்லப்படும். ஆகவே, அந்த அஞ்ஞானம் உள்ள இடத்தில் சிவன் விளங்கமாட்டான். `கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்``* என்னும் ஞானசம்பந்தர் திருமொழியில், ``கல்லா நெஞ்சு`` என்பது, `ஞானத்தைக் கல்லாத நெஞ்சு` என்றும், `கற்றாலும் கல்லுப்போல நின்று உருகாத (கல் ஆம் நெஞ்சு) நெஞ்சு` என்றும் இருபொருளையும் தருவது. ``கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை``* என்னும் திருவாசகத் தொடரில் ``கல்லா மனம்`` என்பதும் அத்தகையது. மூன்றாம் அடியில் வந்த `அறிதல்,` அதன் காரியத்தை உணர்த்தி நின்றது. தத்துவத்தை உணரும் முறையே முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், ஞானமாவது `தத்துவ ஞானமே` என்பதும், அதன் இன்றியமையாச் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

விசும்பொன்றத் தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பினின் நூறும் ஆரமு தாகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

பொழிப்புரை :

பசிய பொன்போல விளங்கும் தனது விரிந்த சடையின்கண் குசும்ப மலரின் வாசனை கமழ நிற்கின்ற சிவன் ஆகாயத்தைப்போல எல்லாப் பொருளையும் தன்னுள் அடங்கக் கொண்டிருக்கின்ற உண்மை ஞானத்திலிருந்து கசிந்து ஊறுகின்ற அரிய அமுதமாவான்.

குறிப்புரை :

என்றது, `உதயமான ஞானம் பின் முறுகி வளரச் சிவானந்தம் பெருகும்` என்றவாறு. மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. ``ஒன்ற`` என்பது உவம உருபு. `சிவஞானம் ஆகாசம் போன்றது` என்பது முன் அதிகாரத்தில் விளக்கப்பட்டது. அசும்பின் - அசும்பாக. அசும்பு - கசிவு. குசும்ப மலர். `செந்துருக்க மலர்` என்பர்.
இதனால், தத்துவ ஞானத்தின் சிறப்பும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
தொத்துப் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்
ஒத்துயர் அண்டத்தி னுள்ளமார் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

பொழிப்புரை :

முத்து, வைரம், பவளம், கட்டியான பசும்பொன், மாணிக்கம் ஆகியவற்றில் உள்ள ஒளிகளைப் போல அண்டங்களால் வேறறக் கலந்து நிற்கின்ற ஞான ஒளியை நீவிர் அவற்றினின்றும் வேறுபடுத்திப் பெறுவீர்? சொல்லுமின்.

குறிப்புரை :

`அதனை அவ்வாறு அவ்அண்டங்களில் வைத் துணர்தலே அதனைப் பெறுதலாகும்` என்றபடி. அவ்வாறு உணர்தலைச் ``சுத்த பராயோகம்`` எனத் துகளறு போதம் கூறும்.8 இவ்வுணர்வின் நிலையையே, ``மரத்தை மறைத்தது மாமத யானை`` என்னும் மந்திரத்தில், ``மரத்தில் மறைந்தது மாமத யானை`` என்றும், ``பரத்தில் மறைந்தன பார்முதல் பூதம்`` என்றும் கூறினார். கட்டியை, ``தொத்து`` என்றார். `மாணிக்கத்தின் தூவொளி ஒத்து` என மாறிக் கூட்டுக.
இதனால், ஞானக் காட்சியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்
நானென்று தானென் றிரண்டில்லை என்பது
நானென்ற ஞான முதல்வனே நல்கினான்
நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.

பொழிப்புரை :

(`நான்` என்று உணர்கின்ற என்னையன்றி, எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இல்லை என்று இறுமாந்திருந்த எனக்கு, `தான் என்று ஒருவன் இருக்கின்றான்`` என்று ஞான குரு உணர்த்த, அவர் உணர்த்திய முறையில்,) `நான்` என்கின்ற எனக்கு வேறாய், `தான்` என்று ஒருவன் இருத்தலை முறையான ஆய்வினால் ஆராய்ந்து உணர்ந்தேன். அங்ஙனம் அவனது இருப்பை, மட்டும் உணர்ந்த யான், எனது இயல் பிற்கு வேறாக அவன்தான் கொண்டிருக்கின்ற இயல்பு யாது` என ஆராயும் பொழுது அவன் என்னின் வேறாய் இல்லாது, என்னில் யானாகவே கலந்து நிற்றலையும், முதற்கண், `நான் அன்றித் `தான்` என்று ஒருவன் இல்லை` என யான் உணர்ந்திருந்த அந்த உணர்வையும், பின்னர், `என்னின் வேறாய், `தான்` என்று ஒருவன் இருக்கின்றான்` என்று உணர்ந்த உணர்வையும், இது பொழுது `என் இயல்பு யாது, அவன் இயல்பு யாது` என ஆராயும் ஆராய்ச்சி உணர்வையும், அந்த ஆராய்ச் சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற் கின்றான்` என உணர்ந்த உணர்வையும், அந்த ஆராய்ச்சியில், `அவன் வேறாய் இல்லாமல், யானாகவே என்னிற் கலந்து நிற்கின்றான்` என உணர்ந்த உணர்வையும் `தந்தவன் அவனே` என்னும் உணர்வையும் அவனே அருளினான். அதனஆல், நான், `நான்` என என்னை உணர்தலை அறவே ஒழித்து, அவனை மட்டுமே உணர்ந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

தூல, சூக்கும, அதிசூக்கும உடம்புகளையே `நான்` என உணர்தல் பாச ஞானம். அஃது இங்குக் குறிக்கப்படவில்லை. பின்னர், `அவ்வுடம்புகள் அனைத்தும் சடம் ஆதலின் அவை சித்தாகிய நானல்ல` எனத் தன்னை உணரும்பொழுது, பாசத்தினும் மேம்பட்ட தனது மேம்பாடு விளங்குகின்ற நிலையில், `நானே பரம்பொருள்; எனக்கு மேலாய் ஒரு பரம்பொருள் இல்லை` என உணர்தல் பசு ஞானம். `அதுவும் அஞ்ஞானமே` எனவும், `உன்னின் வேறாய், உனக்கு மேலாய், இதற்குமுன் உனக்கு உண்டான பாச ஞானத்தையும், இப்பொழுது உண்டாகிய பசு ஞானத்தையும் உள் உணர்வினுள் உணர்வாய் இருந்து நல்கியவன் அவனே` என ஞானகுரு உணர்த்த, அதனால், பாசங் களையோ, எனது உணர்வையோ கண்ணாகக் கொள்ளாமல், அவனது உணர்வையே எனது உணர்விற்குக் கண்ணாகக் கொண்டு நோக்கிய பொழுது `நான்` என என்னை உணர்கின்ற உணர்வு தலைக்காட்டாமல், `அவன்` என்னும் உணர்வே மேலோங்கி நிற்பது பதிஞானம். அந்தப் பதிஞானத்தையே இங்கு உணர்த்தும் முக்ததால் பசுஞானம் விலகும் முறையும் உணர்த்தப்பட்டது. நாடுதல் - ஆராய்தல்.
``ஞான முதல்வன்`` என்பதில் ஞானம்,உயிரினது உணர்வு. அவ்வுணர்விற்கு முதல்வனாதலாவது, உயிரின் உணர்வு கேவலப் பட்டு மூடமாய்க் கிடந்ததனை முதற்கண் கருவி கரணங்களோடு கூடி பாச ஞானமாய் நிகழச் செய்து, பின்பு ஆராய்ச்சியால் அதனைப் பசு ஞானமாய் நிகழப் பண்ணி, முடிவில் பதி ஞானமாய் நிகழச் செய்தல். இவற்றுள் முன்னை இரண்டும் பெத்த நிலையும். பின்னது முத்தி நிலையுமாகும். பெத்த நிலையைத் திரோதான சத்தியாலும், முத்தி நிலையை அருட்சத்தியாலும், சிவன் செய்கின்றான். `நானும் நானென்று நினைத்தலை ஒழிந்தேன் என மாற்றியுரைக்க.
பாச ஞானம் உள்ளபொழுது அதற்குப் பசுவும், பதியும் புலன் ஆதல் இல்லை. பசுஞானம் உள்ளபொழுது பாசமும் பசுவும் புலன் ஆதல் இல்லை. பதிஞானம் வந்தபின் பாசமும், பசுவும் புலன் ஆதல் இல்லை. ஒவ்வொரு நிலையில் சிற்சில பொருள்கள் புலனாகாமை பற்றி, `அவைகள் அறவே இல்லை என வாதிடுதல் அறியாமையின் பாலதாம். ஆகவே, பாரமார்க்கத்தில் (உண்மை நிலையில்) பசு பாசங்கள் புலனாகாமை பற்றி, `பதி ஒன்றே உளது; ஏனைய இரண்டும் இல்லை. அவை பொய்` என்றல் உண்மையாமாறில்லை.
``வேதசாத் திரம்,மிருதி, புராணகலை ஞானம்,
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானஎலாம் பாச ஞானம்;
நணுகி ஆன்மா இவை கீழ் நாட லாலே
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசுஞானம்``
-சுபக்கம், சூ-9,2.
என்னும் சிவஞான சித்திச் செய்யுளால் இவ்வியல்புகளையெல்லாம் தெற்றென உணர்க.
இதனால், ஞானங்களின் வகைகளை உணர்த்தும் முகத்தால், `உண்மை ஞானம் இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஞானத்தின் நன்னெறி நாதந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நான்அறி வென்றோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நன்மோனம் நாதாந்த வேதமே.

பொழிப்புரை :

ஞானமாகிய உயர்நெறியில் முதற் கண்ணதாகிய ஞானத்திற் கிரியையாவது, நிலம் முதல் நாதம் ஈறாய்ச்சுட்டி அறியப் படுகின்ற அனைத்தையும் `சடம்` எனவும், அவற்றில் அவையேயாய்க் கலந்து ஒன்றி நிற்கின்ற உயிரை, `சித்து` (அறிவு) எனவும் இவ்வாறு இரண்டன் தன்மைகளும் வேறு வேறாதலை ஆராய்ச்சியால் உணர்ந்து, அங்ஙனம் உணர்கின்ற உயிர் அவை யனைத்தையும் தள்ளித் தன்னை அவற்றின் வேறாக உணர்தலாம்.அப்பால் ஞானத்தில் யோகமாவது, தான் சடத்தின் வேறாதலை யுணர்ந்தபின் மீட்டும் அவற் றின்கண் வீழ்ந்து தன்னை அவையாக மயங்காமல், உயர்நிலையில் நிற்றலாம். (உயிர் எப்பொழுதும் தனித்து நில்லாது ஆகையால் தனக்குத் தாரகமாகிய திருவருளில் நிற்றலே சடத்தில் வீழாது நன்னிலைக்கண் நிற்றலாகும் என்பது கருத்து. `நன்மை` என்றது திரு வருளையேயாம்.) இனி ஞானத்தில் ஞானமாகிய முடிநிலையாவது, நாதத்தின் துணையில்லாமலே பொருள்களை நன்குணரும் நிலையாம்.

குறிப்புரை :

இங்குச் சரியை கிரியையுள் அடக்கப்பட்டது. `சரியையே யன்றி யோகமும் சில இடங்களில் கிரியையில் அடக்கப் -படும்` என்பது, `கிரியையென மருவும் அவையாவும் ஞானம் கிடைத் -தற்கு நிமித்தம்``8 என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம்.
``கேட்டலுடன், சிந்தித்தல், தெளிதல், நிட்டை
கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்``3
யோகம், ஞானத்தில் ஞானம்` எனப்படும். இங்கு ``மோனம்`` என்பதும் ஞானத்தோடு ஒருபொருட் சொல்லாய் வந்தது. கேட்கவும், சிந்திக்கவும், தெளியவும் படுவது குருமொழி. ``அந்தம்`` இரண்டில், முன்னது `முடிவு` என்றும், பின்னது நீங்கிய நிலை` என்றும் பொருள் தந்தன. `நான் அறிவு என்று ஓர்தல்` என மாற்றியுரைக்க. ``பின்னர் அறிவு என்று ஓர்தல்` என்றதனால், முன்னர், `நாதாந்தம் சடம் என்னும் நன்னெறி` என்பது பெறப்பட்டது. ஓர்தல் - ஆராய்தல்; சிந்தித்தல். சரியையைக் கிரியையுள் அடக்கினாராகலின், அதற்கேற்பக் கேட்டலைச் சிந்திதலுள் அடக்கி, ஓர்தலையே கூறினார்.
கேட்டல் முதலிய நான்குமே `தசகாரியம்` எனப் பத்தாக விரித்துணர்த்தப்படும். `எத்தகையோர்க்கும் நாதம் இல்லையேல் பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகாது` என்பதை `நாதம் இல்லாமலே பொருளுணர்வு திட்டவட்டமாக உண்டாகுமாயின் அதுவே முத்தி நிலையாம்` என்பதையும்,
``மூவகை அணுக்க ளுக்கும்
முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாகில்
விளங்கிய ஞானம் இன்றாம்;
ஓவிட விந்து ஞானம்
உதிப்பதோர் ஞானம் உண்டேல்,
சேவுயர் கொடியி னான்றன்
சேவடி சேர லாமே`` -சுபக்கம் - சூ, 1.26.
என்னும் சிவஞான சித்தியால் அறிக. நன்னெறிக்கு வாயிலாதல் பற்றி கிரியையே இங்கு ``நன்னெறி`` எனப்பட்டது. `அறிதற் கருவி` என்னும் பொருளதாகிய `வேதம்` என்பது, இங்கு `அறிவு` என்றே பொருள் தந்தது.
இதனால், ஞானத்தின் படிநிலைகள் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

உய்யவல் லார்கட் குயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட் குயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட் கொடுக்கும் பிரணவம்
உய்யவல் லார்உள் ளறிவறி வாரே.

பொழிப்புரை :

பிறவித் துன்பத்தினின்றும் தப்ப வல்லவர்கட்கு அவர்தம் உயிர்போலச் சிறந்த நிற்பன சிவஞானமும், அதனால் அறியப்படுகின்ற சிவமாகிய கடவுளுமாம். அவர்கள் புறத்தே பரந்து சென்று அலையாமல் அகத்தே ஒடுங்கி அமைதியுறுதற்குத் துணை யாவது பிரணவ மந்திரம். அம்மந்திரத்தின் வழியாக அவர் அகத்தே ஒடுங்கி, அறிவினுள் அறிவாய் நிற்கும் சிவத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

பிரணவ யோகத்தாலே அறிவு, அறிவினுள் அறிவை அறிந்து அடங்குதல், மேல் `பிரணவ சமாதி` முதலிய அதிகாரங்கலில் விளக்கப்பட்டது. அங்ஙனம் அடங்கினவர்களே சிவஞானமாகிய கண்ணைப் பெற்றுச் சிவனை நேரே கண்டு அடைவார்கள். `சிவன் பிறப்பிலியாதலின், அவனையடைந்தோரும் பிறவியிலராவர்` என்பது கருத்து. ``முக்குணங்கள்வாய் மூடா ஊடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்``9 என்பதனாலும் இதனை அறியலாம். ``ஒடுக்கம்`` என்பது அதற்காம் கருவியை உணர்த்திற்று.
இதனால், சிவஞானமே ஞானமும், சிவமே பரமும் ஆதலை வலியுறுத்தி, `உய்தி வேண்டுவார் அந்த ஞானத்தால், அந்தப் பொருளை அடைதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

காணவல் லார்க்கவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் னமுதொக்கும்
பேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணம்வல் லார்க்கே அவன்துணை யாமே.

பொழிப்புரை :

(பிறபொருள்களை அறிதல்போல அறிவால் அறியாது, அறிவிறந்தே அவனை அறிதல் வேண்டும்.) அவ்வாறு அறிவார்க்கு அவன் அவர்தம் அறிவினுள் அறிவாய் விளங்கி, தேவர்கள் கடலைக் கடைந்து வருந்திப்பெற்ற அமுதம்போல வருந்தாது பெறப்பட்ட அமுதமாய்ப் பேரின்பத்தை விளைப்பான். அங்ஙனமாயின், (பெற்றதைச் சிறிதாயும், பெறாததைப் பெரிதாயும் கருதும் பழைய பழக்கத்தின்படி அவனைப் பேணாதொழிவார்க்கு அவன் முன்போல அயலவனாய் விடுவான். ஆதலால், அவ்வாறின்றிப்) பின்னும், பின்னும் பேணி ஒழுகுவாரை விட்டு அவன் நீங்குதல் இல்லை. ஆனந்த வடிவினன் ஆதல் பற்றி, `நந்தி` எனப்பெயர் சொல்லப்படுகின்ற அவன் அன்புடையார்க்கே அவ்வாறு உடனாய் நிற்பன்.

குறிப்புரை :

காணுதல், இங்கு அறிதல். ஆகவே, ``கண்ணின் மணி`` என்றதும், அறிவினுள் அறிவாயிற்று.
``நாணாமை, நாடாமை, நாரின்மை, யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்``3
என்றபடி, பெற்றதைப் பேணாதிழத்தல் பேதையார் செயலாதலின் ``பேண வல்லார்க்குப் பிழைப்பிலன்`` என்றார். பிழைத்தல் - தவறுதல். ஆணம் - ஆன்பு. ``ஆணம் இல் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக் - காண மிலாதார் கடுவணையர்``l என்றது காண்க.
`ஆணம் பெய்ய` என ஒரு சொல் வருவிக்க.
இதனால், தலைப்படுதலேயன்றிப் பேணுதலும், அன்பு செய்தலும் ஞானத்தினஅ பயனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்
மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மான்அடி
ஆய்நின்ற தேவர் அகம்படி யாமே.

பொழிப்புரை :

``ஓம்`` என்று எழும் இசையோசையின் உள்ளீடாய் நிற்கும் எழுத்தோசையாகிய நாதம் போல, சுத்த மாயா உலகத்தில் வாழும் ஞான ஒளியினர் உயிர்க்குயிரான பரம்பொருளாக என்றும் விரும்பப்படுபவன் எங்கள் சிவபெருமான். அவனது அருள் சத்தி நிபாதர் அல்லார்க்கு ஞானம் இல்லாமையால் சேயனவாயினும் சத்திநிபாதராய் ஞானத்தைப் பெற்றவர்க்கு அவர்தம் அகத்தே விளங்குவனவாம்.

குறிப்புரை :

``மேல் நின்ற தேவர்`` என விதந்தோதினமையால் அதற்கு இதுவே பொருளாகும். `விழுப்பொருளாகிய எம்பெருமான் அடி` என இயைக்க. ஆய்நின்ற - ஆய்வின்கண் நின்ற ஆய்வு, இங்கு ஞானம். முன்னிரண்டடிகள் இன எதுகையும் பின்னிரண்டடிகள் ஆசெதுகையும் பெற்றன.
இதனால், `ஞானியரே சிவனை இம்மையிலும் பெற்று விளங்குவர்` என்பது உடன்பாட்டிலும், எதிர்மறையிலும் வைத்துக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி