ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்


பண் :

பாடல் எண் : 1

செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

பொழிப்புரை :

தங்கள் உடம்பைப் பிறர் செத்தினால் தான் என்ன? சீவினால்தான் என்ன? உச்சந் தலையிலே உளியை நாட்டி அடித்தால்தான் என்ன? இவ்வாறன்றி சிவந்த சந்தனத்தைக் குளிர்ச்சியாகப் பூசினால்தான் என்ன? மெய்யுணர்வு எய்தினோர் ஞானகுரு உபதேசித்த உபதேச வழியில் நிற்றல் அல்லது, அதனினின்றும் பிறழார்.

குறிப்புரை :

செத்துதல் - ஆழப் போழ்தல். சீவுதல் - மேற்போக்காப் போழ்தல். இவ்விரண்டிற்கும் வினைமுதலும் செயப்படுபொருளும் வருவிக்கப்பட்டன. மறித்தல் - அசையாதபடி தடுத்தல்; அஃது அறைதலைக் குறித்தது. மிகக் கொடிய துன்பங்கள் சிலவற்றைக் கூறும் முகத்தால் பல துன்பங்களையும் குறித்தவாறு. வித்தகம் - சதுரப்பாடு; அது ஞானம். தம் குருவாகிய நந்தி பெருமானைச் சுட்டினாராயினும், பொதுப்பட, `குரு` என்றலே கருத்து. விதி - நெறிமுறை. `நந்தி சொல்லிய நெறிமுறை` என்க. அஃது, `உனக்கு இப்பொழுது வரும் துன்ப இன்பங்கள் எல்லாம் நீ முன்பு எர் உடலில் நின்று செய்த வினை இவ்வுடலை வந்து பற்றுவனவே. ஆதலின் அவை பற்றி நீ கவலுதலோ` மகிழ்தலோ கூடாது` என்பது. இவ்விடத்தில்,
``ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக; ... ... ...
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்
நிரயம் சேரினும் சேர்க; உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி,
`நல்லன்` எனினும் என்க; அவரே
`அல்லன்` எனினும் என்க; நில்லாத்
திருவொடு திளைத்துப் பெருவளம் சிதையாது
இன்பத் தழுந்தினும் அழுந்துக; அல்லாத்
துன்பம் துதையினும் துதைக; ... ... ஒன்றினும்
வேண்டலும் இலனே; வெறுத்தலும் இலனே,
ஆண்டகைக் குரிசல்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும், நின் செய்யப்பொற் பாதமும்
அடையவும், அணுகவும் பெற்ற
கிடையாச் செல்வம் கிடைத்த லானே``3
என்னும் அனுபவ மொழியையும்,
``கேடும், ஆக்கமும் கெட்ட திருவினார்;
ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்``9
என அவ்வனுபவம் உடையாரது இயல்பை எடுத்து விளக்கிய திருமொழியையும் ஒப்பு நோக்கி உணர்க.

பண் :

பாடல் எண் : 2

தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

பொழிப்புரை :

ஒவ்வோர் உயிரும் தான் தான் முற்பிறப்பில் செய்த வினையின் பயனைத்தான் இப்பிறப்பில் அனுபவிக்கின்றதே தவிர, இப்பிறப்பில் சிலர் அவ்வுயிர்கட்கு நன்மை தீமைகளைப் புதியன வாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றார்கள் இல்லை. (ஆகவே, அவைகளைப் பிறர் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாகக் கருதி அவர்களை விரும்புதலோ, வெறுத்தலோ செய்தால் அச்செயல்களே அடுத்த பிறப்பிற்குக் காரணமான ஆகாமிய வினையாய்விடும். இதை உணர்ந்த நான் எனது முன் வினையின் பயனைக் கூட்டுகின்ற முதல்வன் என் தலையில் எழுதிய எழுத்துப்படியே இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் பொழுதெல்லாம் அவைகளை அவனது அருளாகவே கருதி அனுபவித்ததல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொண்டதில்லை. அவ்வாறு செய்த எனது செயல் எனது நன்மைக்குச் சிறந்ததொரு காரணமாயிற்று.

குறிப்புரை :

`எனது நண்மை` என்றது, வினைத் தொடர்ச்சி அறுபட்டதை, ``தான்`` என்றது உயிர்களைப் பொதுப்படச் சுட்டியது. விதி - வினை. ``வழி`` என்றது பயனை. `அனுபவித்தல் அல்லால்` என ஒரு சொல் வருவிக்க. ``வான்`` என்பது `வெளி` என்னும் பொருட்டாய்ப் புறத்துள்ளாரைக் குறித்தது. மாட்டு - தொடர்பு. `சென்னியில் குறித்த வழியே` என்க. சென்று - செல்லாநின்று; என்பது, `செல்லும் பொழுது` என்றபடி ``செய்தது`` எனப் பொதுப் படக் கூறினாராயினும், ``கோன் முன்னம் குறித்த வழியே சென்றேன்`` என்றதனால் அது அவன் அருள் வழி நின்றதையே குறித்தது. நிலம் - நிலைக்களம். அது, `சிறந்த காரணம்` எனப் பொருள் தந்தது. நாயனார் சாத்தனூரில் பாதுகாப்பில் வைத்த தம் மூலன் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் சிவன் அருளாகவே கருதி ஏற்றமை நினைக்கத்தக்கது.
இதனால், ஊழின் பயனை அனுபவிக்கும்பொழுது அதனை, அவன் அருள்` என்று அனுபவிக்கின் அஃது உடல் ஊழாய்க் கழிதலோடு, ஆகாமியமும் விளையாது` என்பது கூறப்பட்டது.
``சிவாய நமஎன்று சிந்தி திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லைனா;- உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியாய் மதிய்யா விடும்``*
என்ற ஔவையார் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வெண்பாவில் ``அபாயம்`` என்றது ஊழின் தாக்குதலும், அதனால் விளையும் ஆகாயமியமுமாம். ``விதியை மதியால் வெல்லலாம்`` என்னும் பழமொழியில் `மதி` எனப்பட்டது `சிவாயநம` எனச் சிந்திதிருப்பதே எனவும், அஃது அல்லாத வழியெல்லாம் அந்த ஊழ் உண்டாக்கும் மதியே` எனவும் ஔவையார் விளக்கியிருத்தல் அறியத்தக்கது. ஊழ்வினை நன்மையாகவோ, தீமையாகவோ வந்து விளையும்பொழுதெல்லாம் அதனைச் ``சிவாயநம`` என்று சொல்லி ஏற்க வேண்டும் என்கின்றார் ஔவையார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

பொழிப்புரை :

(ஆற்றில் மணல் சமப்பரப்பாய்ப் பரந்திருப்பின் அஃது அதற்கு ஒரு சுமையாய் இராது. ஆனால் ஆறு சமமாய் இல்லாமையால், அதில் வெள்ளம் வரும்பொழுது பள்ளம் மேடுகள் மாறி மாறி அமைய சில இடங்கள் பெரிய மேடுகள் ஆகிவிடுகின்றன.) அந்த மேடுகளை அந்த ஆறு தான் சுமக்க வேண்டுமேயன்றி, அவைகளைப் பங்கு செய்து எடுத்துக் கொண்டு போய்ச் சுமப்பார் ஒருவரும் இல்லை. (அதுபோல, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமன்றி அனுபவிப்பவர் வேறுயாரும் இலர். இதனை நன்குணர்ந்த எனது உள்ளம்) சிவனைப் பெறற்கரிய பேறாக உணர்ந்து அவனைத் தவிர வேறொன்றைப் பற்றுதலை ஒழிந்தது;

குறிப்புரை :

`அதனால், ஊழும் என்னைத் தாக்கவில்லை. அத் தாக்குதலால் தோன்றக் கூடிய ஆகாமியமும் தோன்றவில்லை` என்பது குறிப்பெச்சம். ``நீறிட்ட மேனி`` என்றது, `அவன் தன் அடியார்களது வினையைப் பொடியாக்குபவன்` என்னும் குறிப்பையும், ``நிமிர் சடை`` என்றது, உலகப் பற்றநைீக்கு பவன்` என்னும் குறிப்பையும் உடையன. பேறிட்டு - பேறாதலையிட்டு. `இட்டு` என்பது காரணத்தை உணர்த்தி வருதல் நாட்டு வழக்கு. முன் இரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையால், அதற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. ஆறு - உயிர். அது சமம் இன்மை உயிர் சமபுத்தி உடையதாகாமை. வெள்ளம் - ஊழ். மேடு பள்ளங்கள் - ஊழால் விளையும் ஆகாமிய வினைகள். ``சமவாதே`` என்னும் ஏகாரம், அசை.
இதனால், அவரவர் வினை அவரவருக்கே பயனாதல் உவமை முகத்தால் விளக்கப்பட்டது. சித்திற்குச் சட்டம் உவமை யாதலும் உவமத்திற்கு ஏற்புடையதே. அதிகாரப் பொருளை வலியுறுத் -தற்கு அதனை வெல்லுமாறும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

பொழிப்புரை :

இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

குறிப்புரை :

`இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட
உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்
றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்
அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்;
திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான்
கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.
இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.

பொழிப்புரை :

குருவருள் வாய்க்கப்ப பெற்றவர்கட்கு, `ஓர் உயிரின் உடம்பு அழிந்துவிட்டால், மற்றோர் உடம்பை அவைகட்குப் படைத்துக் கொடுக்க ஒருவன் இருக்கின்றான்` என்பது தெளிவாம். ஆதலால், `இறப்பு` என்பது அவர்கள் உள்ளத்திற்கு. `உயிர்கள் அழிந்துபோவதன்று; மற்று, ஒருநாடு எவையேனும் காரணத்தால் அழிவுறுமாயின், அதில் உள்ளவர்கள் வேறு நாட்டில் சென்று வாழ்தல் போல்வதும், ஓர் இல்லம் இடிந்து பாழாயின், அதில் வாழ்ந்தவர்கள் வேறோர் இல்லத்தில் குடிபுகுதல் போல்வதுமேயாகும்.

குறிப்புரை :

ஆகவே அவர்கள், உயிர்கள் எடுத்த பிறப்பில் அனுபவிக்கும் இன்பத் துன்பங்கள் அவை முற்பிறப்புக்களில் செய்த வினையின் பயனே` எனத் தெளிந்து, அனைத்துயிர்கட்கும் அவற்றின் வினைப் பயனை ஊட்டுவிக்கின்ற முதல்வன் திருவருளை உணர்ந்து நிற்குமாற்றால் தங்கள் ஊழினை வென்றிருப்பார்கள் என்பது கருத்து. ``நந்தி பரிசறிவார்க்கு`` என்பதை முதலிற் கூட்டி, ``உளன்`` என்பதன்பின் `ஆம்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, ``ஒக்கும்`` என்பதை, ``இல்லை`` என்பதனோடும் இயைத்து, `பாடு இல்லை ஒக்கும்` என முடிக்க. ``இல்லை`` என்பது பண்பு; முற்றன்று. பாடு - இறப்பு. அது, பகுதிப்பொருள் விகுதி.
இதனால், `முன் மந்திரத்தில் ஊழை வெல்லுதற்குத் தாம் செய்யும் செயலையே ஞானிகள் செய்து ஊழை வெல்வர்` என்பது குறிப்பால் உணர்த்தி முடிக்கப்பட்டது. ஆகவே மேற்கூறியபடி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் இதன்கண் அமைந்ததாம்.
சிற்பி