ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்


பண் :

பாடல் எண் : 1

ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொழிப்புரை :

நூல்களில் சொல்லப்பட்ட முத்தி, வரிசைப்பட்ட `துரியம், துரியாதீதம்` என இரண்டாகும். அவற்றுள் துரிய முத்தியாவது, ஆதியாய், ஆயினும் பரத்தோடு வேற்றுமையில்லாத சிவத்தை அடைந்து நிற்றலும், துரியாதீத முத்தியாவது, அநாதியாகிய பரத்தை அடைந்து நிற்றலும் ஆம் பரத்தை அடைந்த உயிர் பின் எவ்வாற்றானும் மீளா நிலையே அனைத்தும் நீங்கிய முடிநிலை முத்தியாகும்.

குறிப்புரை :

அடைவு - வரிசை. ``அடைவே`` எனக் கூறியதனால் துரியம் முன்னதும், துரியாதீதம் பின்னதும் ஆதல் விளங்கிற்று. `பரம், சிவம்` என்பன ஒன்றேயாயினும் தடத்த சிவத்தை, `சிவம்` என்றும், சொரூப சிவத்தை, `பரம்` என்றும் நாயனார் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றார். அதனானே சகலத்திற் சுத்தாவத்தயை, `சிவாவத்தை` என வைத்து தனிச் சுத்தாவத்தையை, `பராவத்தை` என்றார். பரத்தை ``அநாதி`` என்றமையால், சிவம் ஆதியாதல் விளங்கிற்று.
`பரம், சிவம் வேறல்ல` என்றற்கு ``பரத்தொடு பேதம் இலாச் சிவம்`` `பரத்தொடு` எனவும் `சிவத்தை` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவத்தை எய்தும் துரியம்`` என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், `துரியமாவது சிவத்தை எய்துதல்` என்பது பெறப் பட்டது. சிவ நிலையிலும் அதீத நிலை உளதாயினும், அது நிலை பெறாது துரியமே மேற்பட்டு நிகழ்தலால், சிவ நிலையை, ``துரியம்`` என்றே கூறினார். இந்நிலை `சீவன் முத்தி` என்னும் முதல் முத்தியாம். ``சொரூபம்`` என்றது, சொரூபத்தை அடைந்த நிலையைக் குறித்தது. ``ஏதம் இலா நிருவாணம்`` என்றதனால், சொரூபத்தை அடைந்த நிலையை அனைத்துக் குற்றங்களும் பற்றற நீங்கிய `முழுத் தூய நிலை` என்றதாயிற்று. இது பரமுத்தி - முடிநிலை முத்தி. இதனை அடைந்த பின் மீட்சியில்லை. நிருவாணம் - முழு நீக்கம். `கரும நிருவாணம்` எனப்பட்டதும் அது.
`பராவத்தையிலும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள் உள` என்பது மேற்காட்டப்பட்டமையின் அதனுள்ளும் அதீத நிலையை எய்தினோர்க்கே மீட்சியில்லை ஏனையோர்க்குச் சிவனது சங்கற்பத்தால் சிறுபான்மை மீட்சி உண்டாதலும் உண்டு.
இதனால், `முத்தி பேதம் இரு வகைத்து` என்பதும் `அவற்றுட் பின்னதே முடிநிலை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொழிப்புரை :

பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந் தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.

குறிப்புரை :

எனவே, `ஏனையோர் பயிற்சி வயத்தால் ஒரோ ஒருகால் அச்செயல்களைத் தம் இழப்பில் நின்று செய்யினும் செய்வர்` என்பதாம். ``அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை``3 என அப்பர் குறிப்பு மொழி -யால் அருளிச்செய்தது பரத்தை எய்தினோர் நிலையையே ஆகும்.
பரத்தின் சிறப்பை இதனுட் பலவாறாக எடுத்தோதினார். பரத்தை, ``பரம்பொருள்`` என்றார், ``கண்ணுதல், சோதி`` எனக் குறித்ததும் அதனையே. இவை பொருட் பின்வருநிலையணி. கற்றல், இங்கு ஆசிரியர்பாற் கேட்டல். கருதுதல், சிந்தித்தல். ``சுற்றம் அற்றவர்`` என்பதில் `சுற்றம்` என்பது அம்முக்குறைந்து நின்றது. அவர் முற்றத் துறந்தோராவர் இங்ஙனம் கூறியது தெளிவெய்தினோரை. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, ``உற்றவர்கள்`` என்பதனோடு கூட்டியுரைக்க.
இதனால், பரமுத்தியின் சிறப்பு வகுத்தோதி முடிக்கப்பட்டது.
சிற்பி