ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி


பண் :

பாடல் எண் : 1

ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இருநிலத் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில் அஃது ஆலயம் ஆமே.

பொழிப்புரை :

புற உலகத்தை நோக்குமிடத்து நிலமும், வானமும் ஆகிய இரண்டிடங்களில் நிலத்தில் அதனைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களும், நிலத்தைத் தாங்குகின்ற எட்டு உயர் மலைகளுமாகியும், வானத்தில் நெருப்பு மயமாய் உள்ள ஞாயிறும், பிற மீன்களும், மேகமும், காற்றும் ஆகியும் வியப்பூட்டுவதாய் என்றும் அழியாது நிலைத்திருப்பது போலக் காணப்படுகின்றது. இப்படியிருத்தலைக் கண்டு இந்த மண்ணுலகத்தைப் பொருளாகக் கருதி இல்லை நீடு வாழ நினைத்தால், உண்மையில் இதன் தன்மையோ, இவ்விரிவுகள் எல்லாம் ஒன்றும் இன்றி அடங்கி ஒடுங்கிப் போவதாய் உள்ளது.

குறிப்புரை :

`ஆகவே, அறிவுடையோர் இதில் வாழ நினையாது, நிலைத்த வேறொரு நிலையில் வாழவே முயல்வர்` என்பது குறிப் பெச்சம். நிலைத்த நிலை, வீட்டு நிலை தாழ்தல் - தங்குதல். அது, பகுதிப் பொருள் விகுதி. லயம் - ஒடுக்கம். ஆலயம் - ஒடுக்கத்தை அடைவது.
இதனால், மோன சமாதிக்கு வாயிலாக உலகத்தின் நிலையாமை உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.

பொழிப்புரை :

உலகத்தில் ஒருவனும், ஒருத்தியும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுமாற்றால் `அவளது வயிற்றிற்றானே அங்குள்ள தீயால் வெந்து உருவாகி நிலைப்பதாகிய மண் பாண்டத்தைக் கருவிலே அமைத்து, அதற்கு எந்தத் தன்னுரிமையும் இல்லாமற் செய்து விடுகின்றார்கள். பின்பு அது வெளியில் வந்த பிறகு அதற்கு வளர்ச்சி முறை அமைகின்றது. அப்பொழுது கிணற்றுப் பறவைகள் போல் வெளியுலகைப் பற்றி யாதும் அறியாத மக்கள் அந்தப் பாண்டத்திற்கு அமைத்து வைக்கும் நெறி, முன்பே பலமுறை அமைந்துகிடந்த மயக்க நெறியே யன்றிப் புதிய தெளிவு நெறி யாதுமன்று.

குறிப்புரை :

அந்நெறியாவது, உருவாவதும், உடைந்து போவதும் - பின்னும் உருவாவதும், உடைந்து போவதுந்தான். `செய்து, அமைத்து, கவிர்த்தனர்` என்பவற்றிற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. ``அகம்`` என்றது வயிற்றை. ``சுட`` என்றதனால் அதற்குரிய `தீ` என்பது வருவிக்கப்பட்டது. அஃதாவது உடல் வெப்பம். சூல் - கருப்பம். அத்து, வேண்டா வழிச் சாரியையாய் வந்து, ஏழாவதன் பொருளைத் தோற்றுவித்தது. சால் - மண் பாண்டம்; என்றது உடம்பையேயாதல் வெளிப்படை. உடம்பை மண்பாண்டமாக வருணித்தல் சித்தர் பாடல்களில் பல இடங்களில் காணலாம். உடம்பில் உயிர் உள்ளதேனும் அது தன்னியல்பை இழந்து, உடம்பின் இயல்பாயே நிற்றலின் அதனைக் குறியாது உடம்பையே குறித்தார். தலைமை தன்னுரிமை. அஃதாவது, உள்ளே முடங்கிக் கிடவாது வெளி வர விரும்பினும் அது மாட்டாமை. ``தலைமை தவிர்த்தனர்`` என்பது `அடைத்து வைத்தார்கள்` என்றவாறு. கோல், ஒழுங்கு. வெளியுலகம், வீட்டு நெறி. மால் மயக்கம், `மால் வழியே` என இயையும். ``முன்பின்`` என்பதில், `இன்`, சாரியை. `முன்பு உள்ள நெறியே` என்க. அது பிறந்தும், இறந்தும் மீளப் பிறந்தும், இறந்து வருதலாம். எனவே, முன் மந்திரத்திற் கூறியவாறு. `இவ்வுலகிற்றானே நீடு வாழ நினைவாரது நிலைமையெல்லாம் இவ்வாறே முடியும்` என்பதாம்.
இதனால், முன் மந்திரத்தில், `ஆலயம் ஆமே` எனப் பொதுவாகச் சுட்டிய நிலையாமை இனிது விளங்க உணர்த்தப்பட்டது. ஆகவே, இவ்விரு மந்திரங்கலாலும், `உலக வாழ்க்கையை விடுத்து, மோன சமாதியையே பெரியோர் அடைவர்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 3

நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

பொழிப்புரை :

உலகில் பலர் மறைகின்ற காலத்தில், ``நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேள் அலறச் சென்றான்``8 என்னும் சொல் நிகழும்படியாக, காளையராய்ப்பின் மூத்து ஒடுங்கிப் பின் பிணியுற்று கிடந்தே மறைகின்றனர். அவ்வாறின்றி, ஊர்ப் பயணம் புறப்படுவது போல இவ்வுலகை விட்டு நல்ல உணர்வோடு மறைகின்றவர்களது உணர்வு உற்றிருந்த நிலைமையே `மோன சமாதி` எனப்படுகின்றது. அந்த நிலை பலரும் சென்று அடையத்தக்க மன்றம் போன்றதுதான். மன்றம் ஆயினும் அங்கு மறைந்து நிற்கும் பொருள். அஃதாவது, அறி -வினுள் அறிவாய் நிற்கும் பொருள் ஒன்று உண்டு. அதை அடைந்தவர் அடைந்த முறையே முறை. `பிற எல்லாம் முறையல்ல` என்பதாம்.

குறிப்புரை :

``இல்லா`` என்பது, துவ்வீறு கெட்ட எதிர்மறை வினை யெச்சக் குறிப்பு. ``சித்தம்`` என்றது உணர்வை. அஃது ஆகுபெயராய், அதன் நிலைமையைக் குறித்தது. `அதனை அடைதற்கு எவர்க்கும் தடையில்லை` என்பது உணர்த்துதற்கு, அதனை, `மன்றுபோல்வது` என்றார். ஏயும், உவம உருபு. `ஆங்குச் சென்று அணைந்தவர்` என மாறிக் கூட்டுக. `சேர்கின்ற ஆறே ஆறு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ஆறு - முறைமை.
இதனால், மோன சமாதியாவது இன்னது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

பொழிப்புரை :

காட்டு - எடுத்துக்காட்டு. குறி - ஏது. நேரே காண வாராத பொருளை அதனை விட்டு நீங்காததாய்க் காணப்படும் ஏதுவாலும், அதனோடொத்த உவமத்தாலும் கருதியுணரலாம். ``ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா``9 என்று அருளிச் செய்தபடி, முன் மந்திரத்தில் ``மறைபொருள்`` எனப் பட்ட அந்த மெய்ப்பொருளை விட்டு நீங்காது அதனை அறிவிக்கும் ஏதுவாய் நமக்குக் காணப்படுவதும் ஒன்றில்லை. இனி, தனக்குவமை யில்லாதான்``3 என்றபடி, அப்பொருளோடு ஒத்ததாய், அதற்கு உவமையாவதும் ஒன்றில்லை. அது பற்றி அப்பொருளை, ``காட்டும் குறியும் கடந்த அக்காரணம்`` என்றார். அப்பொருளே எல்லா வற்றிற்கும் முதலாய் நிற்றலின், ``காரணம்`` எனப்பட்டது. `காரணம், முதல்` என்பன ஒரு பொருட் சொற்கள். இங்ஙனம் காட்சி கருதல்கட்கு எய்தாத அப்பொருளை உணர்த்துவன உரைத்திட்சிகளேயாம். ஆயினும் அவ்வுரைப் பொருள்களை அனுபவமாகப் பயிலாது, உரைகளை ஏட்டின் புறத்திலே எழுதி வைத்தால், அதனால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது. இனி அப்பொருளை அனுபவமாகப் பற்ற அதனோடு சேர்ப்பிக்கின்றவர் சிவ குருவே. அவர் சேர்ப்பித்தால் மேற்குறித்த உரைப் பொருள்கள் எல்லாம் அனுபவமாகப் பயன்படும். இல்லாவிடில் ஏட்டில் எழுதி வைத்தன எல்லாம் ஆட்டின் கழுத்தில் மடிக் காம்புபோல்வன தூங்குகின்ற அத்தன்மையனவேயாம்.

குறிப்புரை :

`எழுதி மட்டும் படிப்பின், தமக்கும், பிறர்க்கும் அவை யாதொரு பயநையும் செய்யா` என்பதாம். இஃதே பற்றி, ``நூலறிவு பேசி நுழைவி லாதார் திரிக``* அம்மைத் திருவந்தாதி - 33.என்னும் அனுபவ மொழியும்,
``ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால், ஒன்றோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை; ஒவ்வாத்
தவமிக்கோ ரேஇதற்குச் சான்று``9
என்னும் சாத்திரத் திருமொழியும் எழுந்தன.
கு-ரை: ``காரணம்`` என்றது, காரணமாய் உள்ள இயல்பையும், அதனை அடையும் வழியையும் கூறும் உரைகளைக் குறித்தது என்னை? எழுதப்படுவன உரைகளேயாதலால், ``நந்தி`` என்றது, `சிவ குரு` என்னும் குறிப்பினது. `அவர் கூட்டினல்லது` என எடுத்துக் கொண்டுரைக்க. ``அல்லதை`` என்பது ஐயிற்றிடைக் குற்றுகரம்.
இதனால், `ஒரோ ஒருகால் பிற கல்விகள் எல்லாம் ஆசிரியன் இன்றியும் பயன்படும்; மோன சமாதியைப் பற்றிய கல்வி, ஆசிரியன் இன்றிப் பயன்படாது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. (இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, ``சம்பிரதாயம்`` அதிகாரத்தில் வந்தது.

பண் :

பாடல் எண் : 5

மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.

பொழிப்புரை :

தன்னை மறப்பதையே தனது தொழிலாகக் கொண்ட, வஞ்சக நாட்டில் வாழும் ஒருவன் (பெத்தான்மா) அம் மறதியால் அடைவது பிறவித் துன்பமே. அத்துன்பத்தை, அவன் தன்னை என்றும் மறவா நிலையை அடைவிக்கும் முகத்தால் நீங்கி யருளிய பெருங்கருணையாளன், எவ்வாற்றானும் பிறப்பை எய்தாத சிறப்புடையவன். (சிவன்) அவன், பிறவித் துன்பத்தின் நீங்கிய அவன் (முத்தான்மா) முன்போலத் தன்னை மறப்பதாகிய அந்த உறக்கம் அல்லாத வேறு உறக்க இன்பத்தில் இருக்கும்பொழுது, தானும் தன் தேவியுடன் அந்த உறக்கத்தில் பங்கு பற்றியிருப்பான்.

குறிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளில் கேவல நிலையே மறப்பும். சகலம் நினைப்புமாயினும் அந்நினைப்பு நிலையிலும் சிவனை நினைத்தல் இல்லையாகலின், பெத்தான்மாவை ``மறப்பே வடிவமாய் நின்றவன்`` என்றார். அது, பகுதிப் பொருள் விகுதி.
``நின்னை எப்போதும் நினைய லொட்டாய் நீ;
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு
உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு
வாழி இறைவனே``3
என்னும் அப்பர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. மாயம் - வஞ்சனையும், நிலையாமையும். அவற்றை உடைய மாயா காரியங்களாகிய தத்துவங்கள். மறதியைத் தருதல் பற்றி வஞ்சனையையே இங்குப் பொருளாகக் கொள்க. அவை உயிர்க்கு இடமாதல் பற்றி, `நாடு` என்றும், கேவலத்தை நீக்குதல் பற்றி `நன்று` என்றுங் கூறினார். சுத்த நிலையே சிவனை மறவா நிலையும், அதனால் பிறவியற்றிருக்கும் நிலையுமாகும். `நாடனது` என ஆறாவது விரிக்க. சிவபோக நிலை, சிவனை மறந்து துயிலும் கேவல சகல அதீதங்கள் போலாது சிவனை நினைந்தே துயிலும் சுத்த அதீதம் ஆகலின் அதனை, ``உறக்கம் இல் போகம்`` என்றும், `அந்நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்றற்கு. ``திருமங்கையும் தானுமாய் (அப்போகத்தில்) தான் உறங்கிடும்`` என்றும் கூறினார். `சிவ போக நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்பதைச் சிவஞான போதப் பதினொன்றாம் சூத்திரத்து நுண்பொருள் பற்றி உணர்க.
ஈற்றில் நின்ற ``தான்`` என்பதை, ``சிறப்புடையான்` என்பதன் பின்னர்க்கூட்டி, `மங்கையும், தானுமாய்` என ஆக்கம் விரித்துரைக்க.
இதனால், `சுத்த துரியாதீதமே மோன சமாதி நிலை` என்பதும், `அந்நிலையும் சிவனது அருளாலே பயன்படும்` என்பதும் உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

பொழிப்புரை :

சிவன், `கேவல துரியம், சகல துரியம், யோக துரியம்` என்னும் இம்மூன்று துரியங்களையும் கடந்து நிற்கும் ஒளியாய் உள்ளவர். (இத்துரியங்கள் முன் தந்திரத்தில் விளக்கப் பட்டன. இம்மூன்றையும் கடந்தது அரிய துரியம். அது நின்மல துரியம். (இதுவும் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.) அதன்கண் உள்ள மூன்றாவன, ஞாதிரு, ஞானம், ஞேயம் (அறிபவன் அறிவு, அறியப்படும் பொருள்.) `இவை தோன்றி நிற்றல் விரிவு` எனவும், தோன்றாது மறைதல் குவிவு` எனவும் உணர்க. துரிய நிலையில் விரிவும், அதனையும் கடந்த அதீத நிலையில் குவிவும் உண்டாகும். ஆகவே, `விரிவை விழுங்கிக் குவிவை உமிழ்ந்தது` என நிரல் நிறையாகக் கொள்க. குவிந்த நிலையே பேசா அனுபூதி, அல்லது, மோன சமாதி ஆதலின், ``உரைஇல் அனுபூதிகத்து உள்ளான்`` என்றார். `சோதி, விழுங்கி, உமிழ்ந்து உள்ளான்` என முடிக்க. ``மீது`` என்பது ஏழன் உருபாயும், `மேல்` என்னும் பொருட்டாயும் நின்றது. ``ஆய்`` என்னும் வினையெச்சம், ``விரிவு`` என்னும் தொழிற்பெயர் கொண்டது.

குறிப்புரை :

இதனால், மோன சமாதி முத்துரியங்களையும் கடந்த அதீத நிலையாதல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உருவிலி ஊன்இலி ஊனம்ஒன் றில்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்தென் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் சிவனது தனிச் சிறப்பான இயல்புகளையே விரிக்கின்றது.)

குறிப்புரை :

உரு இலி - தன் இயல்பில் உருவம் இல்லாதவன். ஈன் இலி - பிறர் பொருட்டாக உருவம் கொள்ளுமிடத்தும் அவ்வுருவில் புலால் இல்லாதவன்; (`மாயா சரீரியல்லன்; சத்தி சரீரி` என்றபடி. ``அரிதரு கண்ணியாளை ஒருபாகமாக அருள் காரணத்தின் வருவார்``3 என்னும் திருமுறையையும், காயமோ மாயையன்று; காண்பது சத்தி தன்னால்``l சாத்திரத்தையும் ஊன்றி யுணர்தல் வேண்டும்.)
ஊனம் - குறை. தனக்கு இயல்பாய் உள்ள ஆற்றல் குறைவு படுதற்குரிய காரணம். அது பாசம். அதனை இயல்பாகவே இல்லாதவன். பாசங்கள் பல ஆதலின், `அவற்றுள் ஒன்றும் இல்லாதவன்` என்க. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
திருஇலி - திருவை இல்லாளாக உடையவன். திரு - அருள். இல்லாள் - தேவி.
``தீதிலி`` என்றதே பற்றி, `நன்றிலி` என்பதும் கொண்டு, `உலகில் வரும் தீமை நன்மைகளில் ஒன்றினாலும் தாக்குண்ணாதவன்` என்க.
மருவு இலி - புதிதாக வந்து பொருந்துதல் இன்றி, அனாதியே அத்துவிதமாய்க் கலந்து நிற்பவன். அத்தகையோனைப் ``புகுந்தான்`` என்றது, புதியோன்போல விளங்கி நின்றமை பற்றி, ``மனம்`` என்றது அறிவை.
ஏனைய வெளி. பல பெயர்களும் ஒரு பொருள் மேலவாய், ``வந்து என் உளம் புகுந்தான்`` என்பதனோடு முடிக்க.
இதனால், `எத்துணையும் அரியன் மோன சமாதியில் எளியனாய் நிற்றல் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

பொழிப்புரை :

சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற் குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்``3 அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.

குறிப்புரை :

``நந்தியை`` என்பது முதலாகத் தொடங்கி, `காயத்தில் கண்டறிவார் இல்லை`` என மாற்றி; அதனை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டியுரைக்க.
காயம் - தூய உடம்பு. அதன் உள்ளிடமாகச் சொல்லப்படுவது இருதயம். அதனைப் பூசாத்தானமாகக் கொண்டு செய்யும் அகப் பூசையே சிறப்புடைப் பூசையாகும். இஃது `அந்தரி யாகம்` எனப்படும். ``அந்தரியா கந்தன்னை முத்தி சாதனமாய் அறைந்திடுவர்; அதுதானும் ஆன்ம சுத்தி யாகும்``l என்றது சிவஞான சித்தி. இது கிரியா பூசை.
ஞான நிலையில், `சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்` என்னும் முறையில் அறிவுக்கறிவாய் அறிவினுள்ளே வைத்துச் சிவன் உணர்ந்து வழிபடப்படுவான். அது ஞான பூசை. இவை ஒன்றின் ஒன்று மேம்பட்டன. இந்த மூவகை நிலையும், `காயத்தின் உள்` என்பதாகக் கொள்ளப்படுதலின், இவற்றுட் செல்லாது புறத்தில் மட்டும் வைத்து வழிபடுவாரை நாயனார், `நந்தியைக் காயத்தின் உள்ளே கண்டறிவார் இல்லை` என்றார். காயத்தின் உள்ளே என்பதில் சாரியை நிற்க, உருபு மறைந்தது.
``எந்தையே ஈசா, உடல்இடம் கொண்டாய்;
யான்இதற் கிலன் ஒர்கைம் மாறே``*
``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான் உன்னை விடுவே னல்லேன்``*
என்றாற்போல வரும் திருமொழிகளும் இவற்றையே குறிக்குமாற்றை ஓர்ந்துணர்ந்துகொள்க. இனி இவற்றிற்கெல்லாம் இவ்வுண்மைப் பொருளைக் கொள்ளாது, தூல உடம்பில் தரிக்கப்படும் சின்னங்களையே இவை குறிப்பனவாகக் கொண்டமை வாரும் உளர்.
``அண்டம் கடந்த பொருள்
அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்``8
``... ... பேரா, ஒழியாப், பிரிவில்லா,
மறவா நினையா, அளவிலா,
மாளா இன்ப மாகடலே``9
என்னும் திருமொழிகளை இதன் மூன்றாம் அடியோடு ஒப்பிட்டு உணர்க. நுகரும் பகுதியை முகக்கும் துறையாக உருவகித்தவர். முழு நிலையையும் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
இதனால், சிவனை அகத்தில் வழிபடுதலே மோன சமாதியைப் பயத்தல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்திற்கு முன் மந்திரத்திற் போந்த, ``நந்தி`` என்பதை எழுவாயாக வருவிக்க.)
சிவன், மோன சமாதியை அடைந்தவர்கட்கு, அதற்கு முன் பெல்லாம் அவர்கள் பாவித்த பாவனைகளில் தோன்றியது போலத் தோன்றாமல், அவர்களது பாவனைகளில் ஒன்றற்கும் உட்படாத வேறோர் அதிசயப் பொருளாய், அநுபவப் பொருளாய் விளங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`சிவன் ஒருவன் உளன்` என, வேதாகமங்கல் பற்றுக் கோடாகப் பொதுவகையான் உணர்ந்த நிலையில் அவன்,
``தேவராயும், அசுர ராயும், சித்தர், செழுமறையேர்
நாவராயும், நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்
மேவ ராய விரைமலரோன், செங்கண்மால் ஈசன் என்னும்
மூவ ராயும்``3
இங்ஙனம் பல திறப்பட்டுக் காணப்படுகின்ற உயிர் வகைகளையும், ஐம்பூதம் முதலிய உயிரல்பொருள் வகைகளையும் வைத்து, `சிவன் இவை அனைத்திற்கும் மேலாய் உளன்` என்று உணர்ந்த அளவில், அவன் உண்மை மாத்திரையாக நிருவிகற்பமாகவே தோன்றினான். தற்பரம் - தனக்கு மேலானது. தான் உயிர். உயிர்களாகிய அறிவுடை உலகத்தைக் கூறவே, இனம்பற்றி, உயிரல்லாத அறிவிலா உலகமும் கொள்ளப்படும். இந்த நிருவிகற்ப உணர்வும் பாவனையே யாதல் அறிக. இவ்வாறும் அவன் இப்பொழுது இல்லை.
இனி, `உளன்` எனப் பொதுவாக உணரப்பட்ட சிவன் ஏழ்வியல்பினன்? என ஆராயுமிடத்து, `அவன் தன் பொருட்டாக யாதொரு தொழிலையும் வேண்டாதவனாயினும், உயிர்களின் பொருட்டாக ஐந்தொழில்களைச் செய்கின்றான்` என ஆசிரியர், வேதாகமங்களின்வழி அறிவிக்குமிடத்து, `அவ்வைந்தொழில் - அதி சூக்குமம், சூக்குமம், தூலம் என மூவகைப்படும்` எனவும், அதி சூக்கும ஐந்தொழிலை அருவத் திருமேனியை யுடையனாயும், சூக்கும ஐந்தொழிலை அருவுருவத் திருமேனியை யுடையனாயும், தூல ஐந்தொழிலை உருவத் திரமேனியை யுடையனாயும் நின்று செய்வன்` எனவும் அறிவிக்க. அவ்வாறே அறியுமிடத்து, அத்திருமேனிகள் ஏனைப் பொருள்கள்போலக் கட்புலனாகாமையால் ஆசிரியர் அறிவித்தவாறே பாவித்து வழிபடும் வழிபாட்டுப் பொருள்களாயின. அவற்றுள் உருவம் சரியை நிலையிலும், அருவுருவம் கிரியை நிலை யிலும், அருவம் யோக நிலையிலும் வழிபடும் பொருள்களாயின. அந்தப் பாவனைப் பொருள்களாகவும் அவன் இப்பொழுது இல்லை. இங்ஙனம் இவை எல்லாம் அல்லவாம் நிலைகளையே முதல் இரண்டடிகளில் எடுத்தோதினார். சதாசிவன் - அருவுருவத் திரு மேனியன். நிட்களம் - அருவத்திருமேனி. அது, `சிவம், சத்தி` என இருவகைத்து. சகளம் - உருவத் திருமேனி. இது, `மகேசுரன், வித்தை` என இருவகைத்து.
இவையெல்லாம் ஐந்தொழில் செய்தற்பொருட்டுக் கொள்ளப் பட்ட தடத்த வடிவங்களே யாதலாலும், தடத்தம் பெத்தான்மாக்களுக்கே உரியதாக, முத்தான்மாக்களுக்கு அவையனைத்தினும் வேறாய், வாக்கு மனோதீதமாய் உள்ள சொரூப நிலையே உரித்தாகலும் மோன சமாதியை அடைந்தோராகிய முத்தர்களுக்கு சிவன் `சதாசிவன்` முதலாகச் சொல்லப்படும் நிலையினன் அல்லன் என்றார். இந்நிலையைத் திருஞான சம்பந்தரும், ``கறையணி வேலிலர் போலும்``* எனத் தொடங்கும் திருப்பதிகம் முழுவதிலும் பலவாக விரித்தருளிச் செய்தார்.
தடத்த மெல்லாம் பாவனை யளவினவாய் நிற்றலாலும், சொரூபம் எவ்வகையும் பாவிக்க வாராது பாவனையால் கண்டு வந்த அவற்றினும் வேறாய் அநுபவத்தில் உணரப்படுவது ஆகலானும், ``அற்புதமாய்க் கற்பனையின்றி, அனுபோகக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார்.
காம இன்பமும், `கற்பனை இன்பமும், அனுபவ இன்பமும்` என இருவகைத்து. காதலனும், காதலியும் மெய்யுறு புணர்ச்சியின்றி, உள்ளப் புணர்ச்சி மட்டுமே வாய்த்த நிலையில் அவர்களது உள்ளத்தில் தோன்றுகின்ற இன்பம் கற்பனை இன்பம். மெய்யுறு புணர்ச்சி வாய்த்த காலத்தில் அவர்கள் அடையும் இன்பம் அனுபவ இன்பம். `அவ்வாறே குரு உபதேசத்தைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களால் விளையும் சிவானந்தம் கற்பனை ஆனந்தமாக, நிட்டையாகிய மோன சமாதியில் விளையும் சிவானந்தமே அனுபவ ஆனந்தமாய்` என்றற்கு, ``கற்பனையின்றி அனுபவக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார். ``மருவி யிருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்;* என்றது போல இதுவே மோன சமாதி அனுபூதி என்க. இதனுள் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சொரூப அனுபவமே மோன சமாதியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதற்கண் கூட்டி, ஈற்றில் தொக்கு நின்ற `அச்சுகம், மகள் தன் மணாளனோடு ஆடிக் காணத்தக்கதே` என்னும் இசையெச்சத்தை விரித்து, `ஆனந்தம் சுகத்தில் கண்கொண்டு காண்பதே` என மாற்றியுரைத்து முடிக்க. முதல் அடி, இடைப்பிற வரலாய் வந்தது. இஃது எடுத்துக்காட்டுவமை.
காண்பதே - காணப்படுவதே. ஆனந்தம், ஏற்புழிக் கோடலால் இங்குச் சிவானந்தமே யாதல் தெளிவு. முகத்தினிற் கண்ணை `ஊனக் கண்` என்றும், அகத்தினிற் கண்ணை, `ஞானக் கண்` என்றும் வழங்குப. `தசையைக் குறிப்பதாகிய `ஊ` என்னும் பெயர், புணர்ச்சிக்கண் னகரச் சாரியை பெற்று, ஊன என வரும்` என்பது தொல்காப்பியம்.8 பிற்காலத்தி அஃது, `ஊன்` என னகர ஈறேயாய்ச் சில இடங்களில் அகரச் சாரியை பெற்று வருவதாயிற்று. அகக் கண்ணால் காண வேண்டுவதை முகக் கண்ணால் காண முயலுதலும், அகக்கண்ணிற்கு அஃது அகப்படாமை பற்றி, `அஃது இல்லை` என முரணி நிற்றலும் உடைமை பற்றி அத்தன்மையுடையாரை ``மூடர்காள்`` என விளித்தருளினால். இம்மந்திரத்துட் கூறப் பட்ட பொருளையே திருவுந்தியார்,
``இங்ஙன் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``3
என்றும், திருக்களிற்றுப்படியார்,
``அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை,
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அவ்வா றிருந்த தது``l
என்றும் கூறின.
இதனால், சிவானந்த அனுபவம் மோன (மௌன) சமாதி நிலையேயன்றி, மனோ வாக்குக்களின் செயற்பாட்டு நிலையன்று` என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேரபர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும்அவ் வாறே.

பொழிப்புரை :

செப்பு பராபரம் - குரு மொழியும், வேதாகமங் -களும் சொல்லுகின்ற மெய்ப்பொருள். `பராற் பரம்` என்பது, `பராபரம்` என மருவிற்று. `மேலானதற்கும் மேலானது` என்பது அதன் பொருள்.

குறிப்புரை :

சேர்பரம் - முன்பு பரமாய் இல்லாது பராபரத்தைச் சேர்ந்ததனால் `பரம்` எனச் சொல்லப்படுவது. அஃது ஆன்மா.
இவ்விரண்டையும் விடுதலாவது, சீவான்மா இது, பரமான்மா இது` எனப் பகுத்துக்காணும் நிலையை விடுவது. அஃதாவது, ஆன்மா `யான், எனது` என்னும் பகுத்துணர்வின், நீங்கியநிலை. `கப்புறுதல்` எனப்பட்டதும் அதுவே. கப்புறுதல் - கவர்த்தல்; இரண்டு படுதல்.
கப்பு உறு சொல் பதம் மாள - பகுத்துச் சொல்லும் சொல் நிலை நீங்க. கலந்தமை - சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுபட்ட நிலை.
`அப்பினில் உப்பென, அத்தென ஆன்மா அணைந்திட்டுக் கலந்தமை` என்க. `கலந்த நிலை எப்படி எனில; அஃது இப்படி - என இலக்கண வகையாற் கூறு வாராது - அப்படி எனப் பொதுவகையால் சுட்டும் தன்மையினதேயாம்` என்பது ஈற்றடியின் பொருள். இதன் முதல் மூன்றடிகளில் கூறப்பட்ட பொருளே சிவஞான போதத்துள்,
``நசித்து மலம் - அப்பணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாம்;
கப்பின்றாம் ஈசன் கழல்``9
எனக் கூறப்பட்டமை காண்க.
இதனுள் பாடம் பெரிதும் திரிபுற்றது.
இதனால், `மோன சமாதியின்பம் அனுபவத்தால் அறியப் படுமன்றி, அயலவர் உரையால் அறிய வாராது` என்பது உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

பொழிப்புரை :

எட்டி மரத்தின் பழம் பார்ப்பவர்கண்கட்கு மிக அழகிதாய்த் தோன்றும். ஆயினும் அதனைத் தின்றாலோ, சுவை கைப்பாதலுடன், தின்றவரையும் கொல்லும் தன்மையுடையது. (அதனால், அறிவுடையோர் ஒருபோதும் அப்பழத்தைத் தின்னார்.)
இனிப் பெண்ணொருத்தி பெண்மை நிரம்பி, `பெண்டு` என்பதற்குத் தகுதியடைந்த பின்பே அவளைக் கொண்டவன் அவளோடு தனிமையிற் பழகி, அவளுடைய குணங்கள் பல வற்றையும் உள்ளவாறு உணர்ந்து அவளது குணங்கட்கு ஏற்ப ஒழுகி இன்புறுத்துவான். (அவள் பெண்மை நிரம்பாதபொழுது கொண்டவன் அவ்வாறு செய்யான்.)

குறிப்புரை :

மோன சமாதி அல்லாதவற்றை மோன சமாதியாகச் சொல்லிச் சொற்சாலம் செய்யும் நூல்களும், உரைகளும் உள. ஆயினும் அவற்றின்வழி நின்றோர் அவற்றால் ஏமாற்றமே எய்தி, வாழ்நாள் வீணாளாயினமை அறிந்து இரங்குவர்.
``இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே``*
என்னும் அப்பர் திருமொழியே இதற்குப் போதிய சான்று.
சிவன் எல்லா உயிர்கட்கும் உய்யும் நெறி காட்டி உய்விப்பவனே யாயினும் பக்குவம் எய்திய உயிர்கட்கே அவன் முன் வந்து அதனைச் செய்வான். (பக்குவம் எய்தாத உயிர்கட்கு அவன் அதனைச் செய்யான்.)
இவ்விரு பொருள்களையே இம்மந்திரம் முன், பின் இரு பகுதிகளாலும் உணர்த்தி நிற்றலின், இது பிறிதுமொழிதல் அணியைப் பெற்றதாம்.
பேதை, பெதுமைப் பருவத்திலேயும் மகளிரை மணம் செய்து கொடுத்தல் அக்காலத்து வழக்காதலைப் பற்றி இதன் பிற்பகுதியிற் போந்த உவமை வந்தது. `மடவியள் ஆனாலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அறிதல், அறிந்து ஒழுகுதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. இதன் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சற்குரவன் கிடையாமை பற்றிப் பொறுமையிழந்து, அசற்குரவரை அடைந்து அல்லல் உறல் கூடாது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
``இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்``
எனவும்,
``நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பரவி, நயனம் நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா,
வணங்கா, மனத்தால் நினைந் துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி``*
எனவும் அருளிச் செய்தவாறு `அடங்கியிருத்தல் வேண்டும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 13

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

பொழிப்புரை :

சிவன் நடுத் தெருவிலே வெளிப்படையாகத்தான் இருக்கின்றான். (ஆயினும், இருள் மூடியிருப்பதால் அவனைக் காண இயலவில்லை.) பின்பு அந்த நடுத் தெருவின் முதலில் எரிகின்ற ஒரு விளக்கை எனது அறிவுக் கூர்மையாற் கண்டு பற்றிச் சென்றேன்; சிவனைக் கண்டு கொண்டேன். அப்பொழுது மேற்குறித்த அந்த விளக் -கின்றிச் செய்யும் சந்தியானுட்டானங்களும், அவ்வனுட்டானத்தில் செய்யப்படும் தியானங்களும் என்னையறியாமலேயே நீங்கிவிட்டன.

குறிப்புரை :

நடுவுத் தெரு, ஆறு ஆதாரங்களுள் மேலதான ஆஞ்ஞை. அங்குச் சிவன் தியானப் பொருளாய் விளங்கியே நிற்றலால், ``நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே`` என்றார்.
யோகக் காட்சியைத் தருவது குண்டலினி சத்தியே. ஆகவே, குண்டலினி யோகத்தை மேற்கொள்ளாத நிலையை இருள் நிலையாக வைத்து, குண்டலினியை, ``சோதி`` என்கின்றவர், அது மூலாதாரத்தில் உள்ளபொழுது எழாது துயில் கொள்வதாய், மூலாக்கினியால் எழுப்பப்பட்ட பொழுது எழுந்து சுவாதிட்டானத்தைக் கடந்து, மணி பூரகத்தை அடைந்த பொழுதே விளக்கத்தைத் தருதலால் அவ் விடத்தில் விளங்குவதாக, ``உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியை`` என்றார். சோதி, இங்கு விளக்கு. அந்த விளக்குப் புறத்தே உள்ள கையால் பற்றப்பட்டது. அகத்தே அறிவால் பற்றப்படுவது ஆதலின், ``புந்தியினுள்ளே புணர்ந்து`` என்றும், விளக்குக் கிடைத்தலின் வெளியில் உள்ள பொருளை அடைதற்குத் தடையில்லாமை பற்றி, ``கொண்டேன்`` என்றார். கொள்ளுதல், கைப்பற்றுதல்.
யோகத் தியான சமாதிகளில் இருப்பவர்பால் கிரியானுட் டானங்களும், தியானங்களும் நிகழாதுபோதல் இயல்பேயன்றோ? அதனையே, ``சத்தி சமாதிகள் தாமே ஒழிந்தன`` என்றார். இதனுள் ``நான் ஒழிந்தேன்`` என்னாது, ``தாமே ஒழிந்தன`` என அருளிச் செய்ததை ஊன்றி உணர்தல் வேண்டும். யோக சித்தர்களும், ``நட்ட கல்லை தெய்வம் என்று`` என்னும் பாடல்போன்ற பல பாடல்களில் கிரியைகளை விலக்குதல் போலக் கூறியனயாவும், `கிரியையோடே நில்லாது யோகத்திற் செல்க` என அறிவுறுத்தியனவேயாம். அஃது அறியாதார், `கிரியைகள் பயன் இல் செயல்கள்` எனச் சித்தர்கள் கடிந்தொத்தினார்கள்` எனத்தாம் அறிந்தவாறே கூறித் தாமும் பயனை இழந்து, பிறரையும், இழப்பிப்பர்.
இதனால், `யோகத்தில் குண்டலினி யோகம் சிவனை விளக்கி நிற்கும், என்பது கூறப்பட்டது. அது `பிரணவ யோகம்` அல்லது `பிராசாத யோகம்` ஆம். ஹடயோகம் அதனைச் செய்யாது` என்பது கருத்து. எனவே, மோன சமாதிக்கு வாயிலாகிய யோகம் குண்டலினி யோகம்` என்னும் கருத்தினால் இம்மந்திரம் இவ்வதிகாரத்ததாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

விதறு படாவண்ணம் வேறிருந் தாயந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :

விதறு படுதல் - சோர்வு உண்டாதல். `வேறு ஆய்ந்து, இருந்து ஆய்ந்து` எனத் தனித்தனி இயையும். வேறு - முன் மந்திரத்திற்கூறிய அதற்கு வேறாக. இருந்து - மனம் ஒதுங்கியிருந்து. பதறு படுதல் - பதற்றம் உண்டாதல். ``பதறு படாதே`` என்றதும் ``இருந்து`` என்றதை வலியுறுத்தியதேயாம். மறை - மந்திரம். ``பழ மறை`` என்றது, `முதல் மந்திரம்` என்றபடி. அது திருவைந்தெழுத்தே.

குறிப்புரை :

``ஆதி மந்திரம் அஞ்செழுத்து``8
எனச் சேக்கிழாரும் அருளிச்செய்தார். பார்த்தல் - பொருளை ஊன்றி உணர்தல். பார்த்து - பார்த்தலால். `பார்த்தலால், கடந்து ஒடுங்கு கின்றேன்` என்க. ``பாழ்`` என்பது, `பயனற்றது` என்னும் பொருட்டாய், உலகியலைக் குறித்தது. கதறுதல் - துன்புறுதல் கூடாததனைக் கூடுவதுபோல் மனத்தாற் கருதிக்கொள்ளும் இன்பம் இல்லாத உலகியலை, `இதில் இன்பம் விளையும், விளையும்` என்று கருதி, விடாது பற்றி நிற்றல் பற்றி, அதனை, ``அந்தக் கற்பனை`` எனச் சுட்டிக் கூறினார். உலகியலை உதறிய பாழாவது, மாயையின் தொடர்பு சிறிதும் திருவருள் வியாபகம். `அதில் நான் முன்பு போல இன்றி ஒடுங்குகின்றேன்` என்க.
இதனால், குண்டலி யோகத்தால் பக்குவம் எய்திய உணர்வினால் திருவைந்தெழுத்தின் பொருளை உணர உணரத் திருவருள் வியாபகத்தில் ஒடுங்கியிருக்கும் மோன சமாதி கூடும்` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. `மேற் கூறியது யோக நிலை` எனவும், `இது ஞான நிலை` எனவும் உணர்க.

பண் :

பாடல் எண் : 15

வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.

பொழிப்புரை :

தேவர்கள் இருவினைகளும் நல்வினையால் விளைந்த இன்பத்திலே மூழ்கிக் கிடத்தலால் அவர்கள் சிவனது திருவடியின்பத்தை நாடுதல் இல்லை. அவ்வாறே பெருமை நிறைந்த உள்ளக் கமலத்தில் ஒளிரும் ஒளி விளக்காகிய சிவனை அடைந்து, அவன் அருளால் தானே விளையும் அமுதத்தை உண்ணவும் அவர்கள் விரும்புதல் இல்லை. (ஆயினும் தாங்கள் அமுதத்தை உண்டு வாழ்வதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.) அவர்கள் உண்ணும் அமுதம் அமுதமாகமோ? (ஆகாது.)

குறிப்புரை :

`அமிர்தம்` என்பதற்கு `மிருத்யுவை (மரணத்தை) ஒழிப்பது` என்பது பொருள். அதனால் அமிர்தத்தை உண்பவர்கள் `அமரர்` (`மரித்தல் இல்லாதவர்`) எனப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் என்றுமே இறப்பதில்லையோ? தங்கள் நல்வினை முடிந்த வுடன் மாறி, வேறு பிறப்பை அடைவர். ஆதலால், அவர்கள் உண்ணும் உணவை `அமிர்தம்` என்றலும், அதனை உண்ணும் அவர்களை `அமரர்` என்றலும் உபசார வார்த்தைகளேயன்றி உண்மையாவன அல்ல. இதனை,

``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமனே யானபோல்``3
என்னும் கந்த புராணச் செய்யுளாலும் அறியலாம். இக்கருத்து பற்றியே` `தேவர் உண்ணும் அமுதம் அமுதமோ` என்றார். ``அமுதமே`` என்னும் ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாகிய வினாப்பொருட்டு. `அவர் உண்ணும் அமுதம்` என்னும் இசையும்.
சிவனை அடைந்தோரே இறப்பின் நீங்கினோர் ஆவர் ஆதலால், அவனது திருவடியின்பமே உண்மை அமுதமாகும். அஃது உள்ளத்துள்ளே இயல்பாக என்றும் உள்ளதேயாதல் பற்றி அதனை ``நாடா (தேட வேண்டாத) என்றார். `சென்று உற நாடார்` என இயைக்க. உறுதல் - பொருந்துதல். சேடு - பெருமை.
கற்பக மலர்க்கு வாட்டம் இன்மையால், ``வாடா மலர் புனை வானவர்`` என்றார். `இத்தகைய மலரைச் சூடுதல் பற்றியும் அவர்க்கு ஒரு செருக்கு உள்ளது` என்பதைக் குறித்தபடி. ``சேவடி`` என்பதை, இரண்டாம் அடியின் முதற்கண் வைத்து, `வானவர், அறப் பயனாம் இன்பம் நாள்தோறும் உறுதலால் சேவடி நாடார்` என்க. ``நெறி`` என்றது முன்னர் அதனின் நின்ற ஒழுக்கத்தையும், பின்பு அதன் பயனையும் குறித்து நின்றது. `அறப் பயன் இன்பம் சுவர்க்க இன்பமே` என்பதும், `அது நிலையற்றதாகலின் இன்பம் ஆகாது என்பதும்` கூறியவாறு. ``கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே``1 என்றார் ஆளுடைய பிள்ளையார்,
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``2
என்பது சிவஞான போதம், `சுவர்க்க இன்ப மயக்கத்தால் தேவர் சிவனை நாடுதல் இல்லை` என்றருளிச்செய்த இக்கருத்தே, பற்றி
``தேவர் கனாவிலும் கண்டறியாச்செம்மலர்ப் பாதங்கள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார்.
தேவர்களது செருக்கைக் கூறிய இதனால், மக்கள் செருக்குச் சிவனை நாட ஒட்டாகையை உணர்த்தி, `உலகியல் மயக்கம் அற்றோர்க்கே மோன சமாதி கூடும்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

பொழிப்புரை :

காமக் கலவிக்கு உரியராய் அமைந்த இருவர் (ஒருவனும் ஒருத்தியும்) அது பற்றித் தம்முட் குறிப்புச் சொற்களால் உரையாடுதலை எதிர்பாராத வகையில் கேள்வியளவிற் கேட்டாலும் அவரோடு ஒத்த பருவத்தினர்க்கு அடங்கியிருந்த காமக்குறிப்புச் சடக்கென அவர் உள்ளத்தில் எழுந்து அவரைத் தன் வயப்படுத்துதல் போல, மோன சமாதிக்கு உரியராய் உலகரோடு சேராது தனித் திருக்கும் ஞானியரை எதிர்பாராத வகையில் கண்ணாற் கண்டாலும் அவரோடு ஒத்த ஞானியர்க்கு, அடங்கியிருந்த மோன சமாதி அப்பொழுதே சடக்கெனமிக்கெழுந்து, அவரைத் தன்வயப் படுத்தும்.

குறிப்புரை :

``அதுக்கு`` `அதற்கு` என்பதன் மரூஉ. பின்வரும் ``காமம்`` என்பதைச் சுட்டுகின்ற அது என்னும் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்னர் வந்தது. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. என்ற - என்று அமைந்த. அமர்தல் - விரும்புதல். ``கேட்டும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. உவமையில் வந்த இவ் வும்மைக்கு ஏற்புடைபபொருளிலும் `காணவும்` என உம்மை விரித் துரைக்க. சதுர் - பொதுக்கு, என்பது விரைவுக் குறிப்பாய நாட்டு வழக்கு இடைச்சொல். இது, `பொசுக்கு` என்றும் வழங்கும். பெருமை அஃது இங்கு அதிகாரத்தால் மோன சமாதியைக் குறித்தது. `மதுக் கொன்றைத் தாரானது வளம்` என ஆறாவது விரிக்க. அவ்வளமாவது, அவனது ஆனந்தம். அந்த ஆனந்த நிலையே மோன சமாதியாதலை அறிக. அன்றே - அப்பொழுதே` `காணினும் அக்காட்சி வளம் தரும்` என்க.
இதனால், `மோன சமாதி எய்தினார், உலகியலின் தாக்குதலால் அஃது இழக்கப்படாமைப் பொருட்டு அதில் உறைத்து நின்றாரொடு கூடியிருக்க` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

பொழிப்புரை :

நான் மோன சமாதியில் மூழ்கிவிட்டபொழுது, எனக்கு அந்த நிலையை வருவித்த குருவும் தோன்றவில்லை. அவர் அளித்தருளிய செல்வமாகிய ஞானமும் தோன்றவில்லை. அவரால் தூய்மை செய்யப்பட்ட உடம்பும் தோன்றவில்லை. அந்த உடம்பை ஆட்டிப் படைத்த உயிரும் தோன்றவில்லை. அந்த உடம்போடு கூடி நான் இருந்த இடமும் தோன்றவில்லை. உடம்பிற்கு உள்ளும், வெளியுமாய் அலைந்து கொண்டிருந்த மனமும் தோன்றவில்லை. அந்த மனத்திற்குமேல் அதன் செயலை ஆராய்ந்து நின்ற அகங்காரம் புத்தி சித்தங்களும் தோன்றவில்லை. கடைசியாக, `நான், நான்` என்று என்னால் `சொல்லப்பட்டும் உணரப்பட்டும் வந்த அந்த ஆன்மாவும் தோன்றவில்லை. இவையனைத்தும் தோன்றாமல் எப்படி எங்கே மறைந்துவிட்டன என்பது தனக்குத் தெரியவில்லை.

குறிப்புரை :

`அழிந்தன` என்றது, புலனாகாமை பற்றியேயாம். ஏனெனில், அந்தச் சமாதி நிலையினின்றும் பிரிந்த வழி இவ்வாறு சொல்லும் சொற்கள் நிகழ்தலானும், அழிந்தவை மீள இவ்வாறு நின்று சொல் நிகழ்த்தா ஆகலானும் என்க.
`இவையெல்லாம் முன்னர்த் தோன்றினமை வெறும் கற்பனையே யாகலின், கற்பனை கழியவே அவையும் தோன்றுதல் இலவாயின. ஆகவே, ``அழிந்தன`` என்றது `அழிந்தன` என்று கூறியதேயாம்` என்பாரும் உளர்.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
எனவும்,
``அண்டங்கள் ஏழும் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளே உளஒளி``
எனவும், மற்றும் இன்னோரன்னவாக மேலெல்லாம் கூறிவந்த நாயனார்க்கும் அது கருத்தாகாமை யறிக.
``உயிர்`` என்றது, உடம்பை இயக்கிநிற்கும் நிலையை. ``வான்`` என்பது இடத்தைக் குறித்தது. மனத்தைக் கூறவே, இனம் பற்றி ஏனை அந்தக் கரணங்களும் கொள்ளப்பட்டன. ``நான்`` என்றது ஆன்மாத் தன்னைப் பதி பாசங்களின் வேறாக அறிந்து நின்ற நிலையை. `நான்` என்பது அழிந்தபின் பிற அழிந்தவாற்றை அந்த `நான்` எனப்பட்டது எங்ஙனம் அறிதல் கூடும்? கூடாமையின், ``நான் அறியேன்`` என்றார். ``அழிந்து`` என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
இதனால், `மோன சமாதி எய்தினோர் மது உண்ட வண்டு, அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல்போல சிவா னந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்` என்பது கூறப்பட்டது.
``ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்,
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ``8
என்னும் திருவாசகத்தை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 18

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

பொழிப்புரை :

(`இம்மந்திரம் அதிகப்படியாக உள்ளது` எனப் பதிப்புக்களில் குறிக்கப்பட்டபோதிலும் இங்கு இருத்தற்குரியதே.)
மோன சமாதியை அடைந்தோர் பின்பு உலகத்தில் ஒன்றோ டொன்று மாறுபட்ட செயல்களைச் செய்தபோதிலும் திருவருள் உணர்வு சலியாது நிற்றலால் சிவஞானம் திரிபெய்தல் இன்மையால் சிவானந்தா -னுபவமும் குறையாது. அவர்கட்கு இனிப் பிறப்பும் இறப்பும் இல்லை இஃதே நிருவிகற்ப சமாதியாகிய நிட்டை நிலையாம்.

குறிப்புரை :

``சற்று`` என்பதன்பின் `சற்றும்` என உம்மை விரித்து, ``பேராமல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தங்குதலால் பிறப்பற்றது` என்க. ஒளிர்தல், மாசற்று விளங்குதல். ``நிட்டை`` என்பதன்பின், `ஆம்` என்பது வருவித்து முடிக்க.
இதனால், மோன சமாதியை முற்றப்பெற்று நின்றோர் உலகியல் தாக்குதலால் சலித்தல் இல்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

பொழிப்புரை :

`கேவலம் சகலம்` என்னும் இரு நிலைகளையும் கடந்து சுத்த நிலையை எய்தி, அதில் மேற்பொருள் மேற்பொருளே யாயும், கீழ்ப்பொருள் கீழ்ப்பொருளேயாயும் விளங்க, அந்த மேற் பொருளுக்குள்ளே அடங்கியதனால், இடையிட்ட முன் மந்திரத்திற் கூறியபடி அனைத்தும் திருவருளால், தோன்றாது மறைவதாகிய சிவனது திருவடி நிழலில், சிறிதும் நகர்ந்து அப்பாற் செல்லாத கல்போன்ற உணர்வை நான் இப்பொழுது பொருந்தி நிற்கின்றேன்.

குறிப்புரை :

கேவல நிலையில் யாதும் தோன்றிற்றிலது. சகல நிலையில் மேற்பொருள் கீழ்ப்பொருளாயும், கீழ்ப்பொருள், மேற்பொருளாயும் மாறித்தோன்றின. அவ்விரண்டும் குற்றம் ஆகலின், `சுத்தத்தில் அவை உள்ளவாறு விளங்கின` என்பார், ``பொருளிற் பொருளாய்ப் பொருந்த உள்ளாகி என்றார். ``ஆகி`` என்றது, ஆகினமையால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. ``அத்தன் அடி`` என்பது திருவருள் வியாபகமே. ``அடிக்கு`` என்பது, ஏழாவதன் பொருளில் நான்காவது வந்த உருபு மயக்கம். ``மனம்`` என்றது உணர்வை. சிறிதும் சலியாமை பற்றி, `கல்போன்றது` என்றார். அவ்வாறு நிற்றலே உறைத்து நிற்றலாம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய சலியா நிலை உவமை முகத்தால் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

பொழிப்புரை :

நான் வெளியே எங்கெங்கு ஓடி ஓடி அலைந்ததை விட்டு, எங்கும் செல்லாது என்னளவுக்கு நின்று, என்னிடத்திலே என் அறிவை ஒன்ற வைத்து என்னுள் தானே நோக்கினேன். அப்பொழுது பரம்பொருள் காட்சிப்பட்டு பின் அதனை அடைந்து இன்புறும் வழியும் தோன்றிற்று. அவ்வழியாவது என் அறிவுக்கறிவாய் இருந்து பெத்தம், முத்தி இரண்டிலும் அறிவித்து வரும் திருவருளை அறிவாற் பற்றுதல். ஆயினும் இவைகளை நான் உணர்தற்கு எனக்குப் பல ஊழி சென்று விட்டன.

குறிப்புரை :

`சிவம்` என்பது, இங்கு, `பேரின்பம்` எனப்பொருள் தந்தது. `கதி, மார்க்கம், வழி` என்பன ஒரு பொருட் சொற்கள். `பேரின்ப வழி` என முன்னர்ப் பொதுவாகச் சுட்டிப் பின்னர் அதனை ``உணர்வு`` என விளக்கியருளினார். உணர்வு - உணர்வுக்கு உணர்வு; திருவருள். ``தம் உணர்வின் தமி அருள்``l என்றார் சிவஞான போதத்திலும், `திருவருளின் இடையறா உதவியை அறிந்து, அதன்கண் இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்ப வழி` என்பதை, ``அயரா அன்பின் அரன்கழ் செலுமே``9என்னும் சிவஞான போதத்தாலும் அறிக.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தோடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்``3
என அப்பர் பெருமானும் தாம் சிவனைக் கண்டுகொண்ட முறையை இங்ஙனமே அருளிச் செய்தவாறு அறிக.
``பல்லூழி காலம் பயின்றானை அர்ச்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``
என்ப ஆகலான் இந்நிலை வாய்த்தற்கு ஒரு பிறப்பில் செய்யும் தவம் போதாது; பல பிறப்புக்களில் தவம் செய்தல் வேண்டும் ஆகலின், ``ஒன்றி நின்றேன் பல ஊழிகண்டேனே`` என்று அருளியதன் உண்மையை உணர்க. இதில் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், மோன சமாதியை அடையும் வழியும், அதனை உணர்தல் பற்றல்களின் அருமையும் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி