ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை


பண் :

பாடல் எண் : 1

மலமில்லைமாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களு மில்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலம்மன்னி அன்பில் பதித்துவைப் பார்க்கே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற்று` அதன் பயனாகச் சிவத்தில் புறம் போகாது, அன்பினால் தம்மை ஆழ்த்திவைத்திருப்பவர்கட்குப் புறத்தோற்றம் உலகத்தாரது தோற்றத்தோரடு ஒத்துத் தோன்றினும், உண்மையில் அவை இல்லையாம்.

குறிப்புரை :

மலம், ஆணவம், அஃது இங்கு ஆகுபெயராய் `யான், எனது` என்னும் செருக்கினைக் குறித்தது. உலகத்தார்போல இவர்களும், `யான் செய்தேன்; பிறர் செய்தார்` என வழங்கற்பாடு பற்றிக் கூறினாராயினும் அவர் உணர்வு, `எல்லாம் சிவன் செய்தது` என்றே உணர்ந்திருக்கும். மாசு - குற்றம். அஃது அவர் செய்த பிறவியைத் தருதலின் குற்றமேயாதல் அறிக. பாம்பு கடித்து இறந்த வணிகன் ஒருவனையும், அப்பூதியடிகள் மகனையும் உயிர்பெற்றெழச் செய்தும், முதலை வாயில் அகப்பட்டு இறந்த அந்தணச் சிறுவனை அவனது வளர்ச்சியோடு மீட்டும் வணிக்கன்னி யொருத்தி, அப்பூதி யடிகளும், அவர்தம் துணைவியாரும், அந்தணப் பெற்றோரும் ஆகியோர்ககு யாதொரு கைம்மாறும் வேண்டாமல் பெருநலம் தந்து உதவிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகி. மூவர் முதலிகட்கும் அவற்றால் யாதொரு புண்ணியமும் விளையாமையையும், தாதையைத் தாள் அற வீசிய சண்டேசரருக்கு அதனால் யாதொரு பாவமும் விளையாமையையும் அறிக. இவர்கட்குப் புண்ணியமும், பாவமும் விளைந்திருப்பின் இந்திராதி தேவர்கள் வாழும் சுவர்க்கத்திலும், பாதகன் சென்றடையும் நரகத்திலும் சென்றிருத்தல் வேண்டும். அவை அவர்க்கு இல்லாது போயினமை வெளிப்படை.
மானமாவது, தம்மைப் பிறர் இழிவு படுத்துதலைப் பொறுக்க மாட்டாமை, அப்பரைச் சமணர்கள்,
``தவ்வை சைவத்து நிற்றலின், தருமசேனரும் தாம் பொய்வகுத்ததோர் சூலைதீர்ந்திலதெனப் போயினார்``
என அரசனிடத்திற் கட்டிக் கூறி,
``தலைநெறியாகிய சமயந் தன்னைஅழித்து; உன்னுடைய
நிலைநின்ற தொல்வரம்பின் நெறியழித்த பொறியிலி`` *
எனப் பலர்முன் இகழ்ந்தபோதும் வாளா இருந்ததை எண்ணுக.
அபிமானம் - பற்று. அஃதாவது, உடம்பும், தாய் தந்தையார், மனைவி, பிறர் ஆகிய சுற்றமும், பொன், பொருள், மக்கள், மாட மாளிகை, காணி முதலிய செல்வமும் ஆகியவற்றைத் துறக்க விரும் பாமல், அவை தாமே நீங்கும் நிலைமை எய்தியவழி உயிர் போவது போலக் கையற வெய்துதல். இந்நிலை நாயன்மாரிடத்து இல்லாமை தெளிவு.
குலம் இல்லாமை திருநீல நக்க நாயனார் திருநீல கண்டப் பாணருக்கு அவர் தம் துணைவியாரோடும் இரவுப் பொழுதைக் கழிக்க வேள்வி அறையை அளித்ததில் இனிது விளங்கிற்று.
``கொள்ளும் குணங்களும் இல்லை`` என்றதனால், `தள்ளும் குற்றங்களும் இல்லை` என்பது போந்தது. அவை, `நியமம்` என யோக உறுப்புக்களுள் ஒன்றாக வைத்துச் சொல்லப்படும் விதி முறைகள். குற்றங்கள், அவற்றிற்கு எதிரவாயுள்ள விலக்குமுறைகள். அவற்றை விலக்கியொழுகல், `இயமம்` எனப்படும். மோன சமாதியில் நிற்போர் உலகை மறந்திருத்தலால், `இவைகள் அவர்பால் கட்டாயமாக நிகழும்` என்பது இல்லை.
நலமாவது இன்பம். இதனானே தீங்கும் பெறப்பட்டது. `நலத்தில் விரும்பும், தீங்கில் வெறுப்பும் அவர்பால் நிகழா` என்பதாம். ``ஓடும்`` செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்`` என அருளிச் செய்தமை காண்க. ``நலத்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்``* என்றதனையும் நோக்குக.
`இவற்றையெல்லாம் இவர்கள் தாமே வலிந்து நீங்காது, உறங்கினோன் கையிலிருந்த பொருள் அவனையறியாது தானே வீழ்ந்துவிடுதல்போல, மோன சமாதியை அடைந்த இவர்களிடத்தி லிருந்து தாமே நீங்குவன` என்பதை,
``உறங்கி னோன்கை வெறும்பாக் கெனவும்
தானே தவிரா தானால், புரியாது
ஒழித்திடில் நிரயத் தழுந்துதல் திடமே`` *
என்னும் சங்கற்ப நிராகரணத்தால் அறிக.
``ஞாலமதில் ஞான நிட்டை யுடையோ ருக்கு
நன்மையோடு தீமையிலை; நாடுவதொன் றில்லை;
சீலமிலை; தவமில்லை; விரதமொடாச் சிரமச்
செயலில்லை; தியானமிலை; சித்தமல மில்லை;
கோலமிலை; புலனில்லை; கரண மில்லை;
குணமில்லை; குறியில்லை; குலமுமில்லை;
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்
பாடலினோ டாடல்இவை பயின்றிடினும் பயில்வர்``9
என்ற சிவஞான சித்திக்கும் இதுவே கருத்தென்க.
ஞானத்தினாலே நந்தியைப் பலம் மன்னி அன்பில் பதித்து வைப்பார்க்கு` என்பதை முதலிற் கூட்டியுரைக்க. பலம் - பயன். `பலமாக` என ஆக்கம் விரிக்க.
இதனால், சிவனை அனுபவமாக அணைந்தோர், தோற்றத்தில் உலகர்போலவே காணப்படினும் அவரது நிலை முற்றிலும் வேறாதல் கூறப்பட்டது. இத்தன்மை யுடையாரே `சீவன் முத்தர்` எனப்படுவர்.

பண் :

பாடல் எண் : 2

ஒழிந்தேன் பிறவி உறவெனும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டன்
செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே.

பொழிப்புரை :

நல்லதொரு வளமான சார்பாய் உள்ள சீவனை நான் சார்ந்துவிட்டேன். அதனால், முன்பு எனக்குச் சார்பு போலத் தோன்றி என்னைப் பிறவிக் கடலிலே அலைய வைத்த பாசங்களினின்றும் நீங்கிவிட்டேன். இப்பொழுது நான் அப்பாசங்கட்கு மேலே போய்விட்டேன். `பரம்பொருள் வேறு நான்வேறு` என்பதன்றி, `ஒன்றே` எனப்படும் நிலையை `எய்தினேன்? ஆகவே, இறப்பதும், பின் பிறப்பதும் இனி எனக்குத் தவிர்க்க முடியாத சூழல் இல்லை.

குறிப்புரை :

ஈற்றடியை முதற்கண் கூட்டி உரைக்க. ``கழிந்தேன்`` என்பது அவற்றின் நீங்கி உயர்ந்தேன்` எனப் பொருள் தந்தது. `ஒன்று ஆனேன`` என்பது `ஒன்று எனச் சொல்லப்படும் நிலையினன் ஆயினேன்` என்றபடி.
ஆக்கம் - பிறப்பு. தம் குறிப்பின்றியும் வருவனவற்றைக் குறிப்பொடு கூடி வருவன போல, ``வேண்டேன்`` எனக் கூறியது இலக்கணை வழக்கு.
இதனால், மோன சமாதியை அடைந்தவர்கக்கு ஏனை யோர்க்கு உளவாகும் துன்பங்களுள் யாதும் இல்லாமை கூறப்பட்டது. ``இன்பமே எந்த நாளும்; துன்பம் இல்லை;3 என அருளிச் செய்ததையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 3

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்
சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.

பொழிப்புரை :

ஆலையில் இடப்பட்ட கரும்பும், சோறும், வெல்லக் கட்டியும், சோலையின் நடுவில் உள்ள பொய்கை நீரும் ஆகியவற்றை உடையது எங்கள் நாடு. அதில் அழகிய சாலம் வல்ல பெண்ணொருத்தி யுள்ளாள். அவள் மயிலின் தோகையில் காணப்படும் வியத்தகு `புள்ளிகளைப்போல் பல பொருள்களை விளக்கத்தக்க வகையில் தோற்றுவிப்பாள். அதனால் பலர்க்குப்பல பயன்கள் விளைதலால் அவட்குப்புகழ் உளதேயன்றிச் சிறிதும் இகழ்வில்லை.

குறிப்புரை :

இம்மந்திரமும் மறைபொருட் கூற்றாகவே செய்யப் பட்டது. நாடு - நின்மலாவத்தை, ஆலைக்கரும்பு - உழைத்துப் பயன் பெறல் வேண்டும். அது நின்மல சாக்கிரம். சோறு, வாளா எடுத்து விழுங்கப்படும். அது நின்மல சொப்பனம். வெறும் சோறு சுவை யில்லாதது போல இதில் சிவானந்தம் இனிது விளையாது, அதன் உண்மை மட்டும் விளங்கும. வெல்லக்கட்டி வாயில் இட்டவுடன் இனிக்கும். இது நின்மல சுழுத்தி. துரியமும் உடன் நிகழும். இவற்றில் சிவானந்தத் தோற்றம் உளதாகும். சோலைத் தண்ணீர், குளிர்ச்சி யுடையதாய் உடல் வெப்பம் தணித்து, உண்ணீர் வேட்கையையும் தணித்து, நீந்தி விளையாடவும் இடமாம், இது நின்மல துரியாதீதம். இதில் சிவானந்த மேலீடு உளதாம். இவற்றையெல்லாம் தந்து நிற்பது அருட்டத்தி. அதுவே கோலப்பெண். இது திரோதான சத்தியைப்போல இடரை விளவியாது, இன்பத்தையே விளைத்தலால், இதனை உபசாரமாகக் கூட, `மலம்` என ஒருவரும் குறைத்துக் கூறார். ஆகவே, `இவட்குக் குறை ஒன்றும் இல்லையே` என்றார். ஏகாரம், தேற்றம். மோன சமாதியை அடைந்தோர் உடல் உள்ள அளவும் ஒரோ ஒரு கால் அதனின்றும் நீங்கிப் புறமோக்குடையராதலும் உண்டு. அந் நிலையிலும் அவர் பண்டை நிலை வந்து பற்றாதபடி நின்மலா வத்தையில் நிற்றல் அல்லது, அதற்குக் கீழ்ப்பட்ட மேலாலவத்தை மத்தியாலவத்தை கீழாலவத்தைகளில் வாரார் என்பதும் கூறியவாறு. அணைந்தோருள் தம்மையும் உளப்படுத்திக் கூறினார் என்க. `உடைத் தாகிய எங்கள் நாட்டிடையுள்ள பெண்ணாட்குக் குறையொன்றும இல்லையே` என்க.
இதனால், மோன சமாதி யுற்றருள் ஒரோர்கால்மீட்சி உறுவாரதுசெயல் கூறப்பட்டது.
``நேசமொடுத் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நீனைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி
ஆசையொடும் அங்கும இங்கும் ஆகி அலருவோர்
அரும்பாசம் அறுக்கும் வகை அருலின் வழியே [உரைப்போம்.l
என்றார் சிவஞான சித்தியிலும்.

பண் :

பாடல் எண் : 4

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதினிச்
சீரார் பிரன்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதல் லா(து)இனி
யார்பாடுஞ் சாரா அறிவறிந் தேனே.

பொழிப்புரை :

முதலடியை இறுதியில் கூட்டி, `இனிஎன்னை ஆராலும் அமட்ட ஒண்ணாது` என மாற்றியுரைக்க. அமட்டுதல் - அசைத்தல்; நிலைகலங்கச் செய்தல். சீர் - சிறப்பு. பிறர் ஒருவருக்கும் இல்லாத அருட்குணம். `சிந்தை` என்றது அறிவை, `அச்சீராடி எனச் சுட்டு வருவிக்க. ஆடுதல் - பயிலுதல் ஊடாடுதல்` என்னும் வழக்கையும் நோக்குக. அங்கு அவனிடத்தே. திரிதல் - உலாவுதல்; செயற்படுதல்.

குறிப்புரை :

பாடு - பக்கம். சாரா அறிவு, சாராமைக்கு ஏதுவாய அறிவு. `தான் சுதந்திரனாய் உள்ளவனைச் சார்ந்தால், நாமும் சுதந்திரமாய் வாழலாம்` என்னும் அறிவு.
``தாம் ஆர்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் ... ... ... ... ... ... ...
கோமற்கே நாம் என்றும் மீள் ஆளாய்க்
கொய்ம்மலராச் சேவடியிணையே குறுகி னோமே``
என அருளிச் செய்தமையும் காண்க.
``அறிவு அறிந்தேன்`` என்றது, `அறிவைப் பெற்றேன் என்றவாறு.
இதன் பொருள் வெளிப்படை.
இதனால், `சிவனை, பெறும் பொருளாகப் பெற்றார். எவ் வாற்றானும் பிறர்க்கு, அல்லது பிறவற்றில் அடிமையாகாது, வேண்டிய வேண்டியாங்கு எய்தி இன்புறுதல் கூறப்பட்டது. ``ஒன்றாலும் குறை வில்லை`` (திருமுறை - 6.98.1.) என்ற அருள் மொழிமையயும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பொழிப்புரை :

நான் இப்பொழுது, முன்பு பிரமன் என் தலையில் எழுதி நியமித்த கட்டினின்றும் நீங்கிவிட்டேன். `ஊழ்வினைகள் வந்து என்னை ஒன்றும் செய்யா` என்பதாம்.) சிவனை அடையும் வழியைத் தெரிந்து கொண்டேன். இப்பொழுது நான்செய்யும் செயல்களால் நான் பின்பு நுகரக் கடவனவாகப் புண்ணியமோ, அல்லது பாவமோ எதுவும் முளைக்காதபடி `ஞானம்` என்னும் கூரிய வாளால் அவைகளை அறுத்தெறிந்தேன்ய (`எனக்கு ஆகாமியம் இல்லை` என்றபடி.) என்னை வெளியில் செல்லாதபடி தடுத்து வைத்துள்ள உடம்பாகிய சிறைக் கூடம் இடிந்த பாழாய்விடப் பெற்றேன். ஆகவே, நான் எங்கும் செல்கின்றேன். (கருவிகளின் வயப்பட்ட ஏக தேச நிலை நீங்கி, வியாபகமாகப் பெற்றேன்` என்பதாம்.)

குறிப்புரை :

``நிலை`` என்றது வழியை. கதி - புகலிடம்.
``தொல்லையில் வருதல் போலத்
தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையும் ஞானத்
தழலுற அழிந்து போமே``*
எனவும்
``ஏன்ற வினை உடலோ டேகும்;இடை யேறும்
தோன்றில், அருளே சுடும்``*
எனவும் கூறுபவ ஆகலான், ``மனம்`` என்று ஞானமேயாதல் அறிக. ``ஞான வாள் ஏந்தும்; ஐயர் நாதப் பறை அறைமின்`` * என்னும் திருவாசகத்தையும் காண்க.
``தண்டா யுதமும்,திரிசூ லமும் விழத்
தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்;செந்தில்
வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத ஞானச்
சுடர்வடிவாள்
கண்டா யடா அந்த காவந்து பார்சற்றென்
கைக்கெட்டவே,``
``பட்டிக் கடாவில் வரும் அந்த கா! உனைப்
பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாது விடேன்; வெய்ய
சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெருமான்
திருமுன்பு நின்றேன்;
கட்டிப் புறப்படடா! சத்தி வாள் என்றன்
கையது வே``
என எவ்விடத்தும் ஞானமே வாளாக உருவகிக்கப்படுதலை அறிக. (``சத்தி`` என்பது சிலேடை வகையால், `சத்தி` என்னும் ஆயுதத்தையும், ஞானத்தையும் ஒருங்கே குறித்து நின்றது. சத்தி, முருகனது படைக்கலங்களுள் சிறந்த ஒன்றாதல் தெளிவு.)
புரம் - உடம்பு. முரிந்தேன் - முரிந்ததாகப் பெற்றேன்.
இதனால், மோன சமாதியை எய்தினவர்க்குப பிராரத்தமும் ஆகாமியமும் இலலையாதலும், அதனானே தனு கரண புவன போகங்களாகிய மாயையின் மயக்கம் நிகழாமையும் கூறப்பட்டன. இக்கருத்தினை நாயனார் முன் தந்திரத்தில்.
``தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்;
முன்னை வினையும் முடிச்சை அவிழ்ப்பர்கள்;
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியில் வைத்த திருவரு ளாலே``
எனக் கூறியருளினார். சஞ்சித சுன்மம் குருவின் திருக்கண் நோக்கத்தால் எரிசேர்ந்த வித்தபுபோல அப்பொழுதே கெட்டொழிந்தது. சஞ்சித கன்மம் நீங்காத வரையில் ஞானம் பிறவாது. ஆகவே, ஞானியர்க்குச் சஞ்சித கன்மம் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண்டீர்உல குக்குயி ராவதும்
நன்றுகண் டீர்இன் னமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

பொழிப்புரை :

`கடவுள்` என்பதும், `தெய்வம்` என்பதும் வேறு வேறு. இரண்டும் ஒன்றல்ல. தெய்வம் எழுவகைப் பிறப்புக்களில் ஒரு பிறப்பு வகையைச் சேர்ந்ததது. அது தமிழில் `புத்தேள், அணங்கு` முதலிய பெயர்களால் குறிக்கப்படும்` கடவுள் பிறப்பில்லாது, அனைத்தையும் கடந்த நிற்கும் தனிமுதற் பொருள். கடவும் ஒன்றே; தெய்வங்கள் பல. மக்கள் அவர்தம் மரபுபடியும் விருப்பப்படியும் வேறு வேறு தெய்வங்களை வழிபடுவர். கற்புடை மகளிர் யாவர்க்கும் தெய்வம் கணவனே. கணவன் ஒரு தெய்வத்தை வழிபடுவானாயின் அவனோடு இசைந்த நின்று மனைவியும் அத்தெய்வத்தை வழிபடுவாள் ஆயினும், மனைவிக்கத் தெய்வம் கணவன் தான். இதனையே திருவள்ளுவர் ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்`` எனக் கூறினார். ஆகவே, மகளிர் கணவன் தொழாத தெய்வத்தைத் தாம் விரும்பி வழிபடுதல் குற்றமே யல்லது, கடவுளை வழிபடுதல் குற்றம் அன்றாம். ஏனெனில், கடவுள் யாவராலும் தெழத்தக்கவர்.
`மனைவி தன் கணவனைத் தவிரத் தான் ஒரு தெய்வத்தை வழிபடுதல் குற்றம்` என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. இந் நிலையில், `மனைவி கடவுளைத் தொழலாமா, தொழக்கூடாதா என்னும் வினா, சமண பௌத்த மதங்களில் இல்லை. ஏனெனில் அவை `கடவுள் உண்டு` எனக் கொள்ளவில்லை. கடவுளைக் கொள்ளாத அம்மதங்கள், `தெய்வங்கள் உள` என நம்புகின்றன். ஆகவே, `மனைவி கணவனைத் தவிரப் பிற தெய்வங்களைத் தொழ லாகாது` என மறுப்பதோடு அவை நின்றுவிடுகின்றன. `மனைவி கடவுளைத் தொழுதால் என்ன` என்று வினவினால், `அத்தொழுகை பயனற்ற செயல்` என்பது அம்மதங்களின் முடிவு. `கடவுள் உண்டு` எனக் கொள்கின்ற மதங்கள், `கடவுள் ஒன்றே` என்றும், `அஃது யாவராலும் தொழத் தக்கது` என்றுமே கூறும். தெய்வங்களும் கடவுள் அருளால் சில ஆற்றல்களைப் பெற்று விளங்குதலால் இவ் இடங்களில் `கடவுள்` என உபசரித்துக் கூறப்படும். கடவுள்பொது மக்களால் `தெய்வம்` என்றே` கருதி வழிபடப்பட்டு அவ்வழிபாட்டினை ஏற்று அவர்விருமிபிய பயனைத் தருதல் பற்றி, தெய்வம்` என உபசரித்துக் கூறப்படும். இம்மந்திரத்தில், ``உலகுக்கு ஒரு தெய்வம்` என்றமையால், கடவுளே `தெய்வம்` எனப்பட்டாமை தெளிவாம்.)
``ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்`` என்றது, `கடவுள் பல இல்லை`` ஒன்றே` என்பதைத் தெளிவித்தது. தெய்வங்களை யெல்லாம் `கடவுள்` எனக் கூறி, `அவற்றிடையே உயர்வு தாழ்வுகள் இல்லை` எனக் கொள்வோர், அநேகேசுர வாதிகள்` எனப்படுவர். `கடவுளே இல்லை` என்போர் நிரீச்சுரவாதிகள். அவருள் அநேகேசுர வாதிகள் கொள்கையை மறுத்ததே இதன் முதல் அடி.
அக்கடவுள் உலகுக்கு உயிர்`, அஃதாவது, `எல்லாப் பொருளிலும் எள்ளினுள் எண்ணெய்போல் நிறைந்து அவ்வப் பொருள்களின் தன்மை பயன்படச் செய்வது` என்பதாம். ஒன்றாய கடவுள். இவ்வாறு அனைத்துப் பொருள்களிலும் அது அதுவாய் நிற்றலையே மாணிக்க வாசகர்.
``ஏகன், அநேகன் இறைவனடி வாழ்க`` 8 என அருளிச் செய்தார்.
இந்நிலை `அந்தரியாமித்துவம்` எனப்படும்.
ஒன்றாய், உலகுக்கு உயிராய் உள்ள கடவுள் மந்திரம் `நமச் சிவாய` என்பதே உண்மை. அதன் உண்மைப்பொருளை உணர்ந்து பயில்கின்றவர்கள் கடவுள் இன்பம் கரையின்றி விளைதலைக் காண்பர். ஒரு பழத்தின் இனிமையை அதனைத் தின்று பார்த்தவர் அறிவாரேயன்றி, வாளா காண்பவர் அறியார். அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த அதுபோல, யான் அதனைப் பயின்று அதனால் விளைந்த இன்பத்தைக் கண்டேன். (பயிலாதவர் அதனை அறிதல் அரிது) ஆகையால், அம்மந்திரத்தை உருவகமாகக் கூறினால், `கிடைத்தற்கரிய தனி ஓர் இனியகனி` என்று கூறலாம்.
[இம்மந்திரம் முடிவான பொருளைக் கூறுதலாலும் அப் பொருளை உள்ளவாறுணர்தல் அரிதாய் இருத்தலாலும் உரை இங்ஙனம் விரித்தெழுதப்பட்டது.]

குறிப்புரை :

`கண்டீர்` முன்றும் முன்னிலையசைகள். `நன்று` என்றது, `பிழையற்றது`; உண்மை என்றபடி `நமச்சிவாய` என்பது ஒரு மந்திரம் - என்பதும், `மந்திரங்கள் எல்லாம் தெய்வங்களைப் பொருளாக உடையன் என்பதும் தெளிவாகலின், `நமச்சிவாயப் பழம் நன்று` என்பது இப்பொருட்டாயிற்று. ``இன்மைச்சிவாய`` என்பதை இன்னகை` என்பது போலக் கொண்டு சந்தி பிரித்துக் காள்க. `நமச்சிவாய இன்பழம்` என மாற்றிக்கொள்.
இதனால், `சிவானந்தப் பேற்றை எய்தினோர் அது நீங்காமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தமக்குரிய முறை யறிந்து ஓதியிருப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரன்
வந்தென்னை ஆண்ட மணிவிளக் கானவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்கறுத் தானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சந்திரனும், பாம்பும் பகைப் பொருள்கள்` என்பது புராணக் கொள்கை, அவை யிரண்டையும் சிவன் ஒருங்கே தனது முடியில் அணிந்துள்ளான். இது, `சிவன் உயிர்களை நடுவு நிலையில் நின்றே நோக்கியிருளுவன்` என்னும் குறிப்பையும், `உயிர்கல் அவை சார்ந்துள்ள உடம்பு காரணமாகப் பகைகொள்வனன்றி, இயற்கையில் அவற்றிடைப் பகையேதும் இல்லை என்னும் குறிப்பையும் உடைய தாகும். ஆகவே ``பாம்பும், மதியும் புனலும் தம்மிற் - பகை தீர்த்துடன் வைத்த பண்பா போற்றி``9 என்றது காண்க. இத்தகைய நடுவு நிலைமையும், பேரருளும், ஆதியந்தம் அற்ற நித்தியத் தன்மையும் உடைய சிவன் இனிது விளங்கப் பெற்ற நல்லறிவையுடைய பெரி யோர்க்குத் தியக்கம் (கலக்கம்) தோன்றுமாறில்லை என்பது குறிப்பு.
இதனால், `மோன சமாதி யுற்றார்க்கு நிலைகலங்கும் தன்மை யில்லை` என்பது ஏதுவுடன் குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பண்டெங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டங் கிருக்கும் கருக்கும் கருத்தறி வார்இல்லை
விண்டங்கே தோன்றி வெறுமன மாடியின்
துண்டங் கிருந்ததோர் தூறது வாமே.

பொழிப்புரை :

`படைப்புக்காலத்தில் எங்கள் கடவுளாகிய சிவன் அரியை முன்படைத்து, அவன் வழியாக அயனைத் தோற்றுவித்து, படைத்தல், காத்தல்களைச் செய்வித்த, அவர்கள் செயலைக் கண் காணித்துக் கொண்டிருக்கின்றான்` என்று வேதாகமங்கள் கூறுகின்றன. இஃது உண்மையாமாற்றை அறிய மாட்டாதவர் `அரி, அயன்` என்போருள் ஒருவனையே `முதல்வர்` என்றும், `அவர் உள்ளிட்ட பலர் முதல்வர்` என்றும் கூறிப் பிணங்குகின்றனர். தோற்றம் உடையவர்களாய்ச் சிவனின் வேறாகத் தோன்றிச் செயலாற்றுவோர், `நமது தோற்றமும், செயல்களும் சிவனது சங்கற்பத்தால் நிகழ்வன` என்பதை எண்ணாத வேறு நிலை உடையவர்களாய் இருப்பராயின், அவரது நிலைமை, ஒரு முப்பொருளில் ஒரு பகுதி துண்டாகிப் பிரிந்தவழி உளதாகும் பாழ் நிலையையே எய்தும்.

குறிப்புரை :

`காணப்படுகின்ற இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளைச் செய்யும் கடவுளர், அதிகார மூர்தத்களேயன்றி, முதற்கடவுள் அல்லர்` என்பது கடவுட் கொள்கையுடைய வேத மதங்கள் அனைத்திற்கும் ஒத்த முடிவு. `இவர்கள் முதற்கடவுள் அல்லர்` எனவே, `உயிர் வகுக்கதினர்` என்பதும், `மூவகை உயிர்களையும் மும்மலங்களுள் முதல்மலமாகிய ஆணவ மலம் பற்றியே உள்ளது` என்பதும், ஆயினும் அது மிக வன்மையாகப் பற்றியுள்ள உயிர்கள் அது காரணமாக முக்குண வடிவான பிரகிருதி வயப்பட்டு, முதல்வனை உணராமல் மயங்குகின்றன, அதனால் அவை சகல வருக்கத்தின` என்பதும், ஏனை இருவகை உயிர்களையும் ஆணவ மலம் மெய்மையாகவும் மிக மென்மையாகவும் பற்றியிருத்தலால் அவை பிரகிருதி வயப்படாதும், அதனானே முதல்வனை மறவாதும் உள்ளன; அதனால், அவை சகல வருக்கத்தின` என்பதும் சித்தாந்தம். `அரி, அயன்` என்போர்களில் அரி இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து உண்டு வளர்ந்து இன்பத் துன்பங்களை மயங்கினமையும் புராண இதிகாசங்களில் பரக்கக் கேட்கப் படுதலால் அவனை, `சகல வருக்கத்தினன்` எனக் கொள்ளுதலே பொருந்தும். அவன் சகலரே யாதல் சொல்ல வேண்டா. சிவன் இவ்வுலகில் பிறந்தமை ஓரிடத்தும் சொல்லப்படாமையேயன்றி சிவன் பிறப்பிலி` என்பது பலவிடத்து பேசப்படுகின்றது. ஆகவே, அவன் உயிர் வருக்கத்தினன் ஆகாது முதற்கடவுள் ஆகின்றான். நடுவுநின்று ஆராய்வார் இவ்வுண்மையை நன்கு உணரவே செய்வர், ஆயினும் பலர் நடுவு நில்லாது மாறுபடப் பேசுதல் பற்றி, ``எங்கள் ஈசன் கண்டு அங்கு இருக்கும் கருத்து அரிவார் இல்லை` என்றார். கருத்து - உண்மை. ``எங்கள்`` எனத் தம்மோடு உளப்படுத்தியது, பிறப்பின்மையே முதற் கடவுட்கு அடையாளம்` என்பதையும், `சிவன் பிறப்பிலி` என்பதையும் உடன்படுகின்ற பலரையும்.
``மூன்றுதிறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்;
தென்றலர்தொத் துள்ளார் துணை``
-திருவருட்பயன் - 13.
என்றது காண்க.
`தன்பொருட் டில்லையாயினும் உயிர்கள் பொருட்டாக இப்பரகிருதி உலகத்தில் பிறப்பெடுத்தலும் கடவுளது இயல்பு` எனக் குறின், அது, `முன்னே கடவுளின் இயல்புகள் யாவை` என ஆராய்ந்து வரையறுத்துக்கொண்டு, பின்னே, இவ்வுலகில் சிலரை, `இவர் கடவுளா, உயிர் வருக்கத்தவரா` என ஆராய்ந்து வரையரை செய்யாது, முன்னே சிலரை, `கடவுள்` என முடிவு செய்துகொண்டு, பின்னே `அவரது இயல்பே கடவுளின் இயல்பு` என மாறிக் கூறுவதாக்ம். இது `தலைக்கு ஏற்ப அமைவது தலை` என்பது போலத் தலைகீழபா பாடமாய்விடும். அன்றியும், எவையோ சில காரணங்களால், `பிறத்தலும் கடவுட்கு இயல்பு` எனக் கூறினால், `பிறப்பு இல்லாமையே கடவுள் தன்மை` என்பது நிலையாத ஒன்றாகி, `பிறவாமை` இழிவுடையதாகியும் விடும். அதனால், `எது உயிர்? எது கடவுள்? என ஐயுறுவார்க்கு, அவைகளை அடையாளம் காட்டித் தெளிவுபடுத்தலும் இயலாது. இத்துணை இடர்ப் பாடுகளும் பிறப்புடையாரை, `கடவுள்` என நிறுவ முயல்வதால் உளவாவனவாம். அதனால், உலகில் உயர்ந்தோர் சிலரை. `இவர் தமது தூய தன்மையால் கடவுள் தன்மையை எய்திய பெரியோராவர்` எனக் கூறியமைதலே பொருந்துவது.
மும்மூர்த்திகளில் ஒருவனாகிய உருத்திரன், அம்மூவருள் ஒருவனாயினும் அவன் சிவனை மறந்து செருக்குற்றதாக வரலாறு இல்லை. அதனால், அவன் சகல வருக்கதினனாகச் சொல்லப் படுகின்றான்.
இருமலம் உடையவனர் பிரளயாகலர். ஒருமலம் உடையவர் விஞ்ஞானகலர். இவர்களிலும் அதிகார மூர்த்திகளாய் அமைப்பவர் உளர். அவருள் `உருத்திரர்` எனப்படுவோர் பிரளயாகலர் வருக்கத் தினர். `வித்தியேசுரர்` என்றும், `மந்திரேசுரர்` என்றும் சொல்லப்படுபவர் விஞ்ஞான கலர் வருக்கத்தினர். விஞ்ஞானகலருள் `அணு சதாசிவர்` என நிற்பாரும் உளர் இவ்வாறான அதிகாரமூர்த்திகள் பலர் உளராயினும் சைவ நூல்களுள் அயன், மால் இருவரை மட்டுமே பெரும்பான்மையாக எடுத்துக் கூறுதற்குக் காரணம் அவர்கள் சகல வருக்கத்தினராய் இருத்தலாலேயாம்.
சகல வருக்கத்து ஆன்மாக்களும் அவை செய்த சிவபுண்ணியக் குறைவு மிகுதிகளால், இங்குக் காட்டிய எந்த அதிகார மூர்த்திகளாகவும் ஆதல் கூடும்.
``விறைக்கம லத்தோன் மாலும்
ஏவலால் மேவி னோர்கள்,
புரைத்ததி கார சத்தி
புண்ணியம் நண்ண லாலே``9
``வித்தைகள், வித்தை யீசர்,
சதாசிவர் என்றி வர்க்கு,
வைத்திடும் பதங்கள், வன்னம்,
புவனங்கள், மந்தி ரங்கள்,
தத்துவம்,சரீரம், போகம்,
கரணங்கள் தாம்எ லாமும்
உய்த்திடும் வயிந்த வந்தான்
உபாதான மாகி நின்றே`` 3
என்பன சிவஞான சித்தி.
காண்டல் - உண்டாக்கல். `அங்கு இருந்ததோர் துண்டின் தூறு ஆண்` என்க. பின் வந்த ``அங்கு`` இரண்டும், பொதுப்படக் குறித்த ஓர் இடத்தில்` எனப் பொருள் தந்தன. `தூறு, பாழ்` என்பன ஒரு பொருட் சொற்கள் ஈற்றில் நின்ற ``அது`` மேற்போந்த வெறுமனம் ஆதலைச் சுட்டு வந்தது.
இதனால், முன் மந்திரத்தில், `என்னை மோன சமாதியில் வைத்தவன் சந்திரன் பாம்பொடுஞ் சூடும் சடாதரனேயன்றிப் பிறர் அல்லர்` எனக் கூறியது வலியுறுத்தி நிறுவப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அன்னையும் அத்தனும் அன்புற்ற தல்லது
அன்னையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை?
அன்னையும்அத்தனும் யானும் உடன் இருந்(து)
அன்னையும் அத்தனும் யான்புரந் தேனே.

பொழிப்புரை :

இவ்வுலகில் எனக்குத் தாயாகவும், தந்தையாகவும், எல்லோராலும் அறியப்பட்ட அவ்விருவரும் `யான் பிறக்க வேண்டும்` என்று விரும்பித் தம்முட் கூடியதும், அதனால் யான் பிறந்ததும் உண்மை. ஆயினும் தங்களால் பிறந்த என்னை `யார்` என்று அவர்களில் ஒருவ ரேனும் அறிவாரோ? அறியார். அப்பால் வாழும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது முன்பு அவர்கள் என்னைக் காப்பாற்றியதுபோக அவர்களை யான் காப்பாற்றும் நிலை உண்டாயிற்று.

குறிப்புரை :

`ஆகவே, அவர்கள் எப்பொழுதுமே என்னைக் காப்பவர் ஆவரோ? சிலகாலமே அன்னராவர். என்றுமே என்னைக் காக்கும் அன்னையும், அத்தனும் வேறுனர்` என்பது குறிப்பெச்சம். `அந்த அன்னையும், அத்தனும் யாவர்` என்னும் வினாவிற்கு விடையும் பின்னிரண்டடிகளில் குறிப்பாய் அமைய அவற்றை இரட்டுற மொழிந்தார்.
முத்தி பஞ்சாக்கரத்துள் வகாரம் அன்னை; சிகாரம் அத்தன்; யகாரம் யான்; மூவரும் உடன் இருப்பது முத்து பஞ்சாக்கரம். புரத்தல் - பேணுதல், அது முத்தி பஞ்சாக்கரத்தை அயராது கணித்து அதன் பொருளை உணர்த்திருத்தல். `இதனால் யான் மோன சமாதியில் நிலைத்துள்ளேன்` என்பது கருத்து.
அன்புற்றது, அதன் காரியமும் உடன் தோன்ற நின்றது.
இரண்டாம் அடியில் ``அத்தனும்`` என்பதன்பின் `அவருள்` என்பது வருவிக்க. ஈற்றடியில், `அன்னையையும்` என உருபும், `அத்தனையும்` என உருபும் உம்மையும் விரிக்க.
இதனால், `உடம்பைப் பயந்த தாய் தந்தையார்க்கு மக்கள் கடமைப்பட்டவராயினும், உயிர்க்கு அறிவைப்பயந்து வரும் தாய் தந்தையாரை மறவாது போற்றுதல் அதனினும் பெரியதொரு கட்டுப்பாடு; அதனை மோன சமாதி அடைந்தோரே நிரம்பச் செய்வர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்துளே
உண்டனர் நான்இனஇ உய்ந்தொழிந் தேனே.

பொழிப்புரை :

இம்மந்திரம் சிவனது அருளைப் பெற்றுச் சிவனைச் சார்ந்து நிற்கும் மோன சமாதியினர்க்கு உலகு அனைத்தும் தமது வியாபகத்துள்ளே அடங்கித் தோன்றுதலைச் சில வகைகளால் விளக்கிற்று.

குறிப்புரை :

சுழி - சுழல், இதன்கண் தொகுக்கப்பட்ட துவ் விகுதியை, `சுழல் கொண்டது` என மாற்றி வைத்து உரைக்க. பல சுழல்களைக் கொண்டது கடல். குல வரை - உயர்ந்த மலை. இதனையும், உச்சிக் குலவரை` என மாற்றியுரைக்க. உச்சி - சிகரம், அண்டர் - வானுலகத் தவர். அவர்கட்குத்தலைவர் அண்டத்தலைவர் எண்டிசையோர், திசைக்காவலர், ஆதி - பிரமன். இவரைக் கூறியது உபலக்கணம் ஆதலின் எஞ்சியோரும் எஞ்சிய பொருள்களும் கொள்ளப்படும். சீவத்தன்மை நீங்கிச் சிவமாம் தன்மையடைந்தார்க்கு உலகம் தம்முள் அடங்கித் தோன்றிதற்குச் சான்று, உபநிடங்களில் வாம தேவர் முதலிய முனிவர்கள். ``யானே மனுவாய் இருந்தேன், சூரியனாய் இருந்தேன்``9 என்றாற்போலக் கூறியதாக உள்ள வாக்கியங்களும் சருவஞ்ஞானத் தரத்தில், ``யானே எல்லாமாய் நின்றேனும், எல்லாவற்றையும் கடந்து நின்றேனும்`` என்பனபோல் உள்ள வாக்கியங்களுமாகும். `கொள்` என்பது அடியாகக் `கொண்டனர்` எனவும் `விள்` என்பது அடியாக `விண்டனர்` எனவும் வருதல்போல் `உள்` என்பது வினைப் பகுதியாகாது, பண்புப் பகுதியாகலானும் `மாண்` என்னும் பண்படியாக `மாண்டது` என வருதல்போல, `உள்` என்பது அடியாக ஓரிடத்தும் `உண்டது` என வாராமை யாலும் இஃதோர் அரிய ஆட்சி. `உளராயினர்` என்பது இதன் பொருள். உய்ந்தேன் - பிறவியினின்றும் தப்பினேன். `ஒழி` துணிவுப் பொருள் விகுதி. பின் அதுவும் சேர்ந்து பகுதியாயிற்று.
மோன சமாதி என்றது மீளப் பிறவாமையை, ``வீட்டையடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்; மேவாது தப்பினவர் ... ... ... இந்தப் பார்மேல் நாட்டிய நற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தடைவர் நாதன் தாளே``3 என்னும் சிவஞான சித்தியால் அறிக. [இதன்பின் பதிப்புக்களின் காணப்படும்`` தானே திசையொடு தேவருமாய் நிற்கும்`` என்னும் மந்திரம் இரண்டாம் தந்திரத்தில் `திதி` என்னும் அதிகாரத்தில் வந்தது.]

பண் :

பாடல் எண் : 11

நமன்வருன் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நான்உடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம்வரும் சிந்தைக்குத் தான்எதி ராமே.

பொழிப்புரை :

ஞான நிட்டையில் நிற்கும் அறிவையுடையார்க்கு அவர்தம் உடல் நீங்கும் காலத்து அதனை நீங்கச் செய்து சிவனே முன் வந்தருளுவான். (ஏனையோர்க்கு யமதூதுவர் வந்து உடலை நீக்கி, உயிர்முன் நிற்றல்போல நில்லார்.) யான் தவத்தால் முன்பே பிறப்பிற்குக் காரணமான வினைகளை யெல்லாம் அருத்தொழித்துச் சிவனை மறவாமையாகிய நிட்டையில் நின்றேன். (ஆகவே, யம தூதுவர் என் முன்வாரார்.) `வந்தாலும், சிவனை உணரும் உணர் வாகிய வாளால் அவர்களை எறிய இயலும்` என்னும் உறுதி யுடையேன். முற்கூறியவாறு சிவன் தான் என்முன் வருவான். வந்தால் அவனுடன் நான் மகிழ்ச்சியோடு செல்வது திண்ணம்.

குறிப்புரை :

ஈற்றடியை மூன்றாம் அடிக்கு முன்னர்க் கூட்டிப் பின் அவற்றை முதலில் வைத்து உரைக்க. `தானே எதிராம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. `எதிராரே` என்பது பாடமாயின், `தாம் எதிராரே` என வருதல் வேண்டும். `அதுவும் அவ்வாறு ஆம் `எனில், `நிட்டையுடையார்க்கு மாறாய் முன்னிற்பவர் இலர்; அதனால் அவர்முன் நமன் தூதர் செல்லார்` என உரைக்க. ``நமன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, `வருதல் இல்லை` என்பதையும், சிவன் வரின்`` என்பதில் `வரின்` என்பது, வருதல் உறுதி` என்பதையும் குறித்து நின்றன. ஞானம் வாளாதல் மேலேயும் சொல்லப்பட்டது. 9 ``சிவன்வரின் நான் உடன் போவது` என்பதில் வருதல் போதல்கள் இடையீடகல ஒன்றுதலைக் குறித்தது.
பவம் - பிறப்பு. முகந்து வந்த பிராரத்த வினை முடிந்தால், எடுத்த உடம்பு வீழ்ந்துவிடும். அவ்வீழ்ச்சி, மேலும் வினை யுடையார்க்கு `இறப்பு` என்றும், வினையில்லாதார்க்கு `வீடு பேறு` என்றும் சொல்லப்படும். `இறவா நிலை` என்பது முதற்கண் கூறிய வகையில் உடம்பு நீங்காமையாம். ``நமனை அஞ்சோம்`` 3 என்ற அப்பர் திருமொழியும் காண்க. முதல் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால் `மோன சமாதியடைந்தார்க்கு உடலை விழ்த்துவது திருவருளேயன்றி, வினைப் பயனை அடைவிக்கின்ற கூற்றுவன் அல்லன்` என்பது கூறப்பட்டது. இது பற்றியே, `ஞானிகளது` உடலை எரிப்படுத்தல் கூடாது` என ஏழாம் தந்திரத்தில் `சமாதிக் கிரியை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

சித்தம் சிவமாய் மலம்மூன்றும் செற்றவர்
சுத்த சிவமாவர் தோயார் மலபந்தம்
கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என் றெண்ணியே.

பொழிப்புரை :

மும்மலங்களையும் நீக்கித் தமது அறிவு சிவனது அறிவே யோகப் பெற்ற ஞானிகள், சீவராகாது, இயல்பாகவே பாசம் இன்மையால் தூயனாய் உள்ள சிவனேயாவர், ஆகையால் அவர்கள் மாயா மலமாகிய உடம்போடு கூடி, உலகில் உலவினாராயினும் அவற்றால் அவர் கட்டுறார். `சிவன் இல்லை` என அழித்துப் பேசுவாரது அழிப்புரையும், சிவனை அடைதற்கு இத்துணை விரைவு ஏன்` என மயக்க உரை கூறுவாரத் ஆரவார உரையும் `இவர்களது உரைகள் யாவும் பாசங்களுள் ஒன்றாகிய சுத்த மாயை அளிவினவே என எண்ணித்தம்பால் அணுகக் காணாதவராவர்.

குறிப்புரை :

முதலடி அவ்வாறு கூறப்பட்தாயினும், அதனை `மலம் மூன்றுஞ் செற்றுச் சித்தம் சிவம் ஆயவர்` என்றதாகவே கொள். ``சித்தம்` என்றது அறிவை. சிலுகு - புன்மொழி. அவை நாத்திகர் பேசும் நாத்திக உரை. கலகம், ``ஆத்தம் ஆனார் அயலார் கூடி நாத்திகமாகப் பேசும்`` மயக்க உரை. சொற்கள் யாவும் சுத்தமாயா காரியமேயாயின் பாசத்திள் நின்று கூறுவாரது சொல் அந்த மாயா நாதமே யாக, திருவருளில் நின்றாரது சொல் அருள் நாதமாம். `அவற்றுள் இங்குக் குறிக்கப்பட்டவர் சொல் மாய நாதமே` என்பதை, ``சத்தம் பரவிந்து மாயை. `சத்தம்` என்னும் வடசொல், `சொல்` என்றே பொருள் தருமாயினும், இங்கு, `வெற்றாரவாரம்` என்னும் நயத்தையும் தோற்றுவித்தது.
பின்னிரண்டடிகளில் வரும்பொருளை நிறுவுதற்கு முன்னிரண்டடிகள் அநுவாதமாய் வந்தன.
இதனால், மோன சமாதி எய்தினோர் அதன் சிறப்பை உணர மாட்டாதார் கூறுவனவற்றிற்குச் செவி கொடார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற் றறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற் றறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

பொழிப்புரை :

நினைப்பு, மனம் முதலிய கருவிகள் செயற் படுதலால் நிகழ்வது. மறப்பு, கருவிகள் செயற்படாது ஒடுங்குதலால் நிகழ்வது. கருவிகள் இல்லாத பொழுது அறிவு நிகாழமை ஆணவ மல மறைப்பினாலாம், ஆகவே, ஆணவ மலம் நீங்கினால் கருவிகளால் ஆவதொன்றில்லை. ஆன்ம அறிவு எப்பொழுதும் அறிவாயே இருக்கும்; அறியாமையாகாது. இவை ஒளி குறைந்த கண்ணிற்குக் கண்ணாடி வேண்டாது, எப்பொழுதும் பார்வை நிகழ்வதும் போல்வன வாகும். ஆணவ மலத்தால் மறைக்கப்பட்ட அறிவு ஒளி குறையாத கண் போல்வது. பெத்தான்மாக்களது அறிவு ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டிருத்தலால் அவ்வறிவு மேற்குறித்த நினைப்பும், மறப்புமாய் நிலைமாறிக் கொண்டேயிருக்கும். முத்தான்மாக்களின் அறிவு ஆணவ மலம் நீங்கப் பெற்றமையால் மாற்றம் இன்றி, அறிவாயே விளங்கும். அதனால் அவைகட்குச் சிவம் மறைதல் இன்றி, விளங்கியே நிறுகும்.

குறிப்புரை :

நினைப்பே சகலம்; மறப்பே கேவலம் இவைகளை, `பகல், இரவு` எனச் சாத்திரங்கள் குறியீட்டுச் சொல்லாற் கூறும். நினைப்பும், மறப்பும் இன்றி அறிவு ஒரே நிலையில் நிற்புது இரவு பகல் அற்ற இடமாகக் கூறப்படும்.
``இரவு பகலில்லா இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற;
விரைய விரையநின் றுந்தீபற``9
என்றது திருவுந்தியார்.
இவ்வாற்றால், ``வினைப்பற்றறுக்கும் விமலன், நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சத்து இருக்கும்`` எனவு நினைப்பும் உள்ளவர் நினைப்பினாலே அவனைப்பற்ற முயன்றால் அவன் கிட்டான் ஆதலின், ``அவவைத் தேடி நினைக்கப் பெறில் நீளியன் ஆம்`` என்றும் கூறினார். நீளியன் - சேய்மையன். ``தேடி நினைக்கப் பெறில்`` என்றே கூறஇனாராயினும், `நினைத்துத் தேடப் பெறில்` என்றலே கருத்தென்க. விமலன் - பரிசுத்தன். என்னே, அவன் ஆவண மலத்தில் அகப்பட்டான்` என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. இனி, `அவன் ஆணவத்தில் அகப்படா னாயினும் வளர்பிறை மதி இருளைச் சிறிது சிறிதாக ஓட்டி வருதல்போல அவன் உயிர்களில் மறைந்து நின்று ஆணவத்தை நீக்கியே வருகின்றான் என்பதை ``வினைப் பற்று அறுக்கும்`` என்பதனால் குறித்தார். `நெஞ்சத்து` என்னும் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது.
இதனால், மோன சமாதி யுற்றார்குச் சிவன் கரவின்றி விளங்குதல் எதுக் காட்டி விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சிவபெரு மானென்று நானழைத் தேத்தத்
தவபெரு மானென்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்` என்னை ஆளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானைச் சிவபெருமானாகவே அறிந்து, அப்பெயரையே சொல்லி ``சிவனே, சிவனை என்று ஓலம் இட்டுத் துதிக்க. `அந்த மெய்த்தவத்திற்கும் தலைவனே நான்` என்பான் போல அப்பெருமான் என்முன்னே வந்து நின்றான். இவ்வாறுதன் பெயரைச் சொல்லுவாரிடத்தெல்லாம் உடனே தோன்றுகின்ற அப்பெருமானை, `யார், யார் எவ்வெப்பெயரால் அழைக்கின்றாரோ, அவர் முன்னெல்லாம் அவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் அருளாளன்` எனவும் அறிந்து நான் பணிபவனாயினேன்.

குறிப்புரை :

சிவபெருமானை, `சிவபெருமான்` என்று சொல்பவ ரெல்லாம் அப்பெயரின் பொருளை உணர்ந்து சொல்லாமல், பொதுவாக ஓர் இடுகுறியாகவே நினைத்துச் சொல்கின்றனர். ஆயினும் அப்பெயர், `அமங்கலம்(பிறப்பிறப்பு) ஒருபோதும் இல்லாத நிறைந்த மங்கல குணத்தை யுடையவன்`3 எனவும், பேரின்பத்துக்குக் காரணன்` எனவும், `முற்றுணர்வினன்` எனவும், தூய தன்மையன்` எனவும் l பொருள் தருதலால் `அவ்வெல்லாத் தன்மைகளையுடையவனே அவன்` என உணர்ந்ததையே ``சிவபெருமான் என்று`` என்றார். இதில் `உணர்தல்` என்பது சொல்லெச்சம். தவம், `பொதுத் தவம்` என்றும், `மெய்த் தவம்` என்றும் இருவகைப்படும். பொதுத் தவம் பசு புண்ணியங்கள். மெய்த்தவம் சிவபுண்ணியம், இது சிவஞான போதத்துள், ``இறப்பில் தவம்`` எனப்பட்டது. இவற்றுள் இங்கு, ``தவம்`` என்றது மெய்த் தவத்தை. பின்மூன்று அடிகளிலும் சந்திப் பகர ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப் பட்டது. மூன்றாம் அடியில் அதனுடன், அகரத்தையடுத்து வந்த சந்திரவகர ஒற்றும் தொகுக்கப்பட்டது. ``அவ்வப்பெருமான்`` என்றது, அவரவர் கருதும் பெருமானார்களாய்த் தோன்றும் பெருமான் என்றபடி இக்கருத்தே, ``யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்``3 எனக் கூறப்பட்டது. சிவனைச் சிறப்பாகக் குறிக்கும் மற்றைப் பெயர்களுள் `பவன்` என்னும் பெயர் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. `பவன்`` எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால் இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே``9 என அப்பரும் அருளிச் செய்தார். ``பவன்`` என்பதற்குப் பொருள், `நினைத்த இடத்தில் நினைத்த உடன் தோன்றுபவன்` என்பது ஆகலின், அப்பெயரையே சொல்லி அழைப்பவன்முன் அவன் எதிர்படுதல் உறுதி` என அப்பர் அருளிச்செய்தார். அந்தக் குறிப்பே இங்கு, சிவபெருமானைப் பணிந்து நின்றேன்`` என்பதில் அமைந்திருத்தலை உணர்க. ``நின்றேன்`` என்றது, `இனி நான் வேறொன்றை நினையேன்` என்றவாறுஎனவே இதுவே மோன சமாதியாதலை உணர்க.
இதனால், சிவபெருமானை உள்ளவாறுணர்ந்த அடையவரே மோன சமாதியில் நிற்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே.

பொழிப்புரை :

முதல்வகட்கெல்லாம் முதல்வனாய் முடிநிலை முதல்வனாயுள்ள சிவனையே நான் முதல்வனாகத் துணிந்தேன். அதனால் அவனையே நான் வணங்கினேன். இனி அவனை வணங்குதலைத் தவிர பிறிதொன்றையும் அவாவ மாட்டேன். அவனையே என்உள்ளத்தில் இருத்தினேன். அதனால், எனது முனைப்பு நீங்கப் பெற்றேன். அவனது உண்மை யியல்புகள் எல்லாம் எனக்கு அனுபவமாயின.

குறிப்புரை :

மோன சமாதி வாய்க்கப் பெறும் வழியையும் அது வாய்க்கப் பெற்றாரது இயல்பையும் தம் அனுபவத்தின்மேல் இட்டுக் கூறியவாறு.
பரம் +அதிபதி =பரமாதிபதி; வடமொழித் தீர்க்க சந்தி அதிபதி - முதல்வன். ``பரமாதிபதியைத் துணிந்து நின்றேன்`` என்பதை முதலிற் கூட்டியும், `ஆதிப் பிரானை உடல் அணிந்து நின்றேன்` என மாற்றி வைத்தும் உரைக்க. அணிதல் - தரித்தல். உள்ளத்தை ``உடல்`` என நாயனார் குறித்தலை மேலேயும் கண்டோம்.* `உடலில்` என ஏழாவது விரிக்க. காண்டல், அனுபவமாக உணர்தல்.

பண் :

பாடல் எண் : 16

என்நெஞ்சம் ஈசன் இணையடி தான்சேர்ந்து
முன்னஞ்செய் தேத்த முழுதும் பிறப்பறும்
தன்னெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னஞ்செய்(து) என்னைபக் பிணக்கறுத் தானே.

பொழிப்புரை :

எனது நெஞ்சம் சிவனது இரண்டு திருவடிகளையே சார்ந்து, அவற்றையே நினைத்து, அவற்றையே துதித்தலால், எனது பிறவித்தொடர் முடிவடைந்து அற்றொழியும்; இது திண்ணம். இனித் தனக்கு மனம் முதலிய மாயா கருவிகள் ஒன்றும் இல்லாதவனாகிய அவன், இப்பிறப்பிலும் நான் முகந்து கொண்டு வந்த ஊழ்வினையை எனக்கு ஆகாதபடி பிரித்து, எனது உடலுக்கே ஆகும்படி செய் தமையால், எனக்கு இன்பத்தில் மகிழ்ச்சியும், துன்பத்தில் வாட்டமும் ஆகிய முரண்பட்ட நிலைமைகள் இல்லாதபடி அறவே நீக்கிவிட்டான்.

குறிப்புரை :

முன்னம் செய்தல் - நினைத்தல். ஏத்த - ஏத்தலால். ஏத்துதல் வாயின் தொழிலாயினும் அது மனத்தின் வழி இயங்குதல் பற்றி நெஞ்சமே ஏத்துவதாகக் கூறினார். தலைவிதி - ஊழ்; பிராரத்தம். பின்னம் செய்தல் - வேறுபடுத்தல். உடம்பை `யான்` என மயங்குதலும். அதனைப்பற்றிய பொருள்களை `எனது` என மயங்கும் சிவனையே நினைப்பார்க்கு இல்லாமையால் உடலை வந்து பற்றுவ தாகிய ஊழ் அவரைப் பற்றுதலும், அதனால் அவர் மகிழ்ச்சியும், வாட்டமும் அடைதலும் இல்லையாம். இந்நிலையே, `ஞானியர்க்கும் அவர்தம் பிராரத்த வினை உடல் ஊழாய்க் கழியும்` என்று சொல்லப் படுகின்றது. எனவே, இதனால் அணைந்தோரது இத்தன்மைகள் கூறப்பட்டமை காண்க.
``என்னைப் பிணக்கறுத்தான்`` என்பதை, `யானையை அரட்டடக்கினான்` என்பது போலக் கொள்க.

பண் :

பாடல் எண் : 17

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத் தெண்ணும்
கணக்கறுத் தாண்டனன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத் தென்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவம் வந்தது தானே.

பொழிப்புரை :

எங்கள் நந்தி பெருமான் என்னுடைய அறியாமையைப் போக்கினார். ஆகவே, என் உடம்பு நோய் உறு தலையும், முதுமை எய்தித் தளர்வுறுதலையும் போக்கி `அவை வரும் என்று எண்ணும் எண்ணங்களையும், அஃதாவது கவலையையும் போக்கி, என்னைத் தமக்கு ஆளாகக் கொண்டவராயினார். யானும் தொன்று தொட்டு என்னோடு கூடவே தொடர்ந்து வந்து கொண்டிருந்த வெறுப்பு விருப்புக்களைப் போக்கி, அவரையே சிவமாகக் கண்டு வழிபட்டேன். அதனால் சிவமே என்முன் வந்து நின்றது.

குறிப்புரை :

``நந்தி`` என்பதை முதலிற் கொள்க. ``பிணக்கறுத் தான்`` என்பதன்பின் `அதனால்` என்பது வருவிக்க கணக்கு - எண்; எண்ணம். காண், முன்னிலையசை, `என்னை ஆண்டனன்` என முன்னே கூட்டி முடிக்க. ``முன்`` என்பது `முற்றொட்டு` எனப்பொருள் தந்தது. ``துன்பம்`` என்றதனால், `இன்பம்` என்பதும் கொள்ளப்பட்டு, `என்னும்` என ஒரு சொல் வருவித்து, `துன்பம் இன்பம் என்னும் பிணக்கு` என உரைக்கப் பட்டது. `வணங்கல்` என்பது எதுகை நோக்கி வலிந்து நின்றது. தான், அசை, `தானே வந்தது` என்றலும் ஆம்,
இதனால், குருவருளாலே சிவப்பேறு முறையானே வந்து வாய்த்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்(டு)
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் உள்ளே அகப்பட்ட வாறே.

பொழிப்புரை :

சிவன் ஒருவனே எனக்குத் தந்தை; குருவாகி வந்து ஆட்கொள்ளும் முதற்கடவுள். அத்தகையோன் முன்பெல்லாம் எனக்கு அகப்படாதிருந்து, இப்பொழுது வந்து என் உள்ளத்திலே அகப்பட்டமை தேவர் கூட்டமும் உடன் வர அவன் பற்றி நின்ற பாசத்தை அரித்தமையாலேயாம்.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முன் வைத்து உரைக்க. உரைக்கவே, முன்னின்ற ``அவன்`` என்னும் சுட்டுப் பெயர் `சிவன்` என்னும் சிறப்புப் பெயராயும் , `சிவன்` என்னும் சிறப்புப் பெயர், அவன் என்னும் சுட்டுப்பெயராயும் நிற்கும். இதனால் சிவன் நந்தி பெருமானாய் நின்று நாயனாரை ஆட்கொண்டதேயன்றி தன் இயற்கை வடிவிலும் காட்சியளித்து அருள்புரிந்தமை பெறப்படுகின்றது. ``ஆட்பாலவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகின் அளவில்லை``l ஆதலின், `குருவாகி நின்று அருள் செய்தபின்பும் இவர்க்கு இவ்வாறு தோன்றி அருள்புரிவான் ஏன்` என்றும், `இங்ஙனமாயின் ஏனை யோர்க்கும் இவ்வாறு ஏன் அருள் புரிதல் கூடாது` என்றும் அவனை வினாவ நாம் யார்?
`சிவன், தேவர் உடன் கூட வந்து` என மாற்றியுரைக்க, `அகப் பட்ட ஆறு` என்பதில் அகப்பட்டதையே `ஆறு` எனக் கூறினமையின் பெயரெச்சம் தொழிற் பெயரொடு முடிந்ததாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பது போல, `இவன் வாழ்தல், அவனைச் சார்ந்து` என்பது போலத் தொழிற்பெயர் எழுவாய்கள் வினையெச்சப் பயனிலைகளைக் கொண்டு முடிதல் உள ஆகலின், `அகப்பட்ட ஆறு பாசம் அறுத்திட்டு` என முடிந்தது.
இதனால், இயைபு பற்றி நாயனார் தமது தனி அனுபவம் ஒன்றை அருளிச் செய்தார். இதனானே பிறர்க்கும் இது கூடலாம் என்பது உணர்தல் வேண்டி.

பண் :

பாடல் எண் : 19

கரும்பும்செந் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும்முன் கைத்தது தேனும் புளித்ததே.

பொழிப்புரை :

கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டவழி, `அதன் இனிப்பு இத்தகையது` என வரையறுத்துச் சொல்ல வாராமைபோல, `இன்னது` என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பம் இவ்வுடம்பிற்றானே உண்டாகின்றது. (அஃது அரிவையர் இன்பம். அதனால் அதனை மக்கள் பின்னும் வெறாதே விரும்பு கின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்றஓர் ஆனந்தம் உண்டு. (அது சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, அதனை அவர்கள் நுகர்ந்த பின் அவர்கட்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன; ஏதன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.

குறிப்புரை :

எனவே, `அவை யிரண்டும் கலந்தது போன்ற இன்பமும் அவர் கடுகக் கசப்பும், புளிப்பும் ஆகின்றதேயன்றி, இனிப்பதால் இல்லை` என்பது இசையெச்சம். `இங்ஙனமாகவே அவ்வின்பம் அவர்களால் வெறுக்கப்படுவதாதலைச் சொல்ல வேண்டா` என்பதாம்.
``பெரும்பைம் புனத்தினில் சிற்றேனல் காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்யன்பி னால்,மெல்ல மெல்லஉள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம் தித்தித் தறிந்தஅன்றே
கரும்பும் துவர்த்துச்செந் தேனும் புளித்து(து)றக் கைத்ததுவே, 3
என்னும் அனுபவ மொழியை இங்கு எண்ணுக
``கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை தோள்
புணர்ந்தால், புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்,
மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல வளர்கின்றதே``l
என அருளிச் செய்த திருப்பாட்டிற்கும் உலகத்தாரது பேதைமையைப் புலப்படுக்கு முகத்தால், சிவபோகமே நுகருந் தொறும் நுகருந்தொறும் புதிது புதிதாய் எல்லையின்றி வினைவதாகிய பெரும் போகம் என்னும் உண்மையை உணர்த்தலே கருத்து` என்பதைச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரத்துச் சிற்றுரையால் அறிக.
``பாலொடு தேன்கலந் தற்றே, பணிமொழி
வாலெயி றூறிய நீர்``9
என்னும் திருவள்ளுவப் பயனும் அன்னது.
இதனுள் பாடம்மிக வேறு பட்டதுய ``ஓர் காயத்தில்`` என்பதை முதளிற் கூட்டுக. ``ஓர் காயம்`` என்றாரேனும், இன்பத்தை `ஓர் இன்பம்` என்றலே கருத்து, கலந்தது - கலந்தது போன்றது.
இதன்பின் `உண்டு ஆயினும்` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. `ஆகிய என்னும் ஆக்கச்சொல் உவமை குறித்து நின்றது விரும்புதற்கு எழுவாயும், கைத்தல் புளித்தல்களுக்குக் கோடற் பொருளும் வருவிக்கப்பட்டன.
இதனால், சிவானந்தத்தை நுகர்வார்க்கு ஐம்புல இன்பம் இன்பம் ஆகாது, உவர்ப்பேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.

பொழிப்புரை :

வள்ளலாகிய சிசிவபெருமான் முதலில் `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவ நிலையில் என் உள்ளத்தில் உள்ளப் படும் பொருளாய்ப் பொருந்தி, பின்பு ஞான நிலையில் தனது அருளை வைத்த அந்தப் பயனையே நினைந்து நான் போற்றிக்கொண்டு, என்னால் நிகழ்த்தப்படும் செயல்களையெல்லாம் என் செயலாகக் காணாது அவன் செயலாகவே நான் கண்டுவருதலால், எனக்கெனச் செயலின்றி பிறவியைக் கடந்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

`உள்ளம் ஒட்டியே` என இயைக்க. ஒட்டுதல், உண்மை மாத்திரையால் விளங்குதல், ஆகவே, ``சரியாதி`` என்பதும் சரியை முதலிய மூன்றையே குறித்தன. `அன்பு` எனப் பொருள் தரும் ``அருத்தி`` என்பது இங்கு `அருள்` எனப் பொருள் தந்தது. சிவன் சீவர்களிடத்தில் தான் அவை என்னாது ஒன்றி நிற்றல் அருள் வடி வாயேயாகலின் தம்மிடம் சிவன் அவ்வாறு நின்றமையை, ``அருத்தி வைத்து`` என்றார். அதனானே `அந்நிலை ஞான நிலை`` என்பது போந்தது. `சிவன் தவநிலை அந்நியமாயும், ஞான நிலை அந்நிய மாயும் நின்றான்` என அருளியவாறு ``மீட்டு`` என்பது, வினைமாற் றாய `மற்று` என்பதன் பொருட்டாய் நின்றது. ``வள்ளல்`` என்பதை முதலிற் கூட்டுக. `அருத்தி வைத்த வளமே பாடி` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றிவைத்துரைக்க. நினைவு தோன்றாத வழிப் பாடுதல் தோன்றாமையால் ``பாடி`` எனவே, `நினைந்து` என்பதும் தானே பெறப்பட்டது. ``துருத்தியாய், திருந்தடி உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே``l என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச்செய்தார். `மனம், மொழி, மெய்` என்பவற்றுள் மெய்யால் ஆவனவற்றை, கையால் ஆவனவாகவே கூறும் வழக்குப் பற்றி அவற்றை, ``கை வளம்`` என்றும், முப்பொறிகளாலும் வினை வரு மாயினும், வினை பெரும்பான்மை காய்த்தால் வருவனவாகவே கருதப் படுதலால் வினைவாராமையை, ``கைவளம் இன்றி`` எனவும் கூறினார். ``இன்றி`` எனப் பண்பின் நிலை பண்பின்மேல் ஏற்றப் பட்டது. அன்றி, `இன்றாக` எனத் திரிப்பினும் ஆம். இஃது ஈரடி எதுகை பெற்றது. `குறிலை யடுத்த யகர மெய் அசைக்கு ஐகாரம் எதுகையாய் வரும் என்க.
இதனால், மோன சமாதியுற்றார்க்கு அவரது நினைப்பின் தன்மையால் வினை இன்றாமாறும் அதனால் பிறப்பின்றாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

பொழிப்புரை :

உலகியலிற் செல்லும் செலவிலிருந்து மீண்டவரது உள்ளக் கமலமாகிய தகளியில் ஞானமாகிய விளக்கு அணையாது எரியும் படி, தூண்டா விளக்கின் தகளியில் நெய்யையே, உலகத் தலைவியாகிய ஒப்பற்ற ஒருத்தி எடுத்துவார்க்கும் செயலை முன்சென்று மேற்கொண்டாள், அதனால், அவ்விளக்கின் ஒளி விளக்கத்தில், அனைவரிலும் மாட்சி மிக்கோள் ஒருவனது கை வன்மை இனிது நிகழ்ந்தது.

குறிப்புரை :

`இது குறிப்பிடத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம். ``அங்கி`` என்றது சுடரை. இது ஞானமே மிக - மிகும்படி, `சோர்வித்தல்` என்னும் பிறவினைத் தொழிற்பெயரில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது. சோர்வித்தல் - சொரிதல்; வார்த்தல். `சோர் வித்தலும்` என்னும் உம்மை சிறப்பு. தூண்டா விளக்காவது மணி விளக்கு. அஃது மாணிக்க மணியே விளக்காக வைக்கப்பட்டு ஒளி தருவது. ``நொந்தா ஒணசுடர்`` என்பேது இதனையே, இதில் மணியே தகளியாகவும், அதன் தன்மையே நெய்யாகவும், அதன் ஒளியே சுடராகவும் இங்குக் கொள்ளப்படுதலின், சிவத்தை அவற்றினுள் தகளியாகவும், அதன் தன்மையாகிய அறிவு அல்லது ஞானத்தை நெய்யாகவும், அருட் சத்தியை உள்ளத் தகழியில் ஞானச் சுடர் அணைந்து விடாதபடி அந்நெய்யை வார்க்கும் பெண்ணாகவும் உருவகித்தார். `புவன சூடாமணி யாகிய ஒருத்தி` என்க. ஞானச் சுடர் ஒளிவிட்டு விளங்கவே, அவ்விளக்கத்தில் சிவத்தின் செயற்பாடு தடையின்றி நிகழ்ந்தது என்பதாம்,
ஞானம் முதலியவற்றைச் சுடர் முதலியவாக உருவகித்து, உள்ள கமலத்தைத் தகளியாக உருலவகம் செய்யாமையால், இஃது ஏகதேச உருவகம். `அங்கு, தூண்டா விளக்கு, தகளி, நெய்` என்பன சிறப்புருவங்கள் யாவரினும் மாட்சிமையுடைய ஒருவன் சிவன். ``கை`` என்பது அதன் செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், முத்தரது அறிவில் அருட்சத்தி மேன்மேற் பதிந்து ஞானத்தை மிகுவித்தலால், அவர்களது அறிவில் சிவ விளக்கம் மிகுந்து, சிவானந்தம் மேன்மேல் விளைவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் நானே.

பொழிப்புரை :

`தன்பால் காதல் மிக்க பெண்டினிடம் காதல் மிக்க ஆடவன் அவளது நலத்தை எவ்வாறு கண்டு, கேட்டு உண்டு, உயிர்த்து, உற்று அனுபவிப்பானோ அது போல என்பால் அருள்மிக்க சிவனிடத்தில் நான் அன்பு மிகுந்த அவனது ஆனந்தத்தைப் பல்லாற்றானும் அனுபவிக்கின்றேன் என்பது இம் மந்திரத்தின் திரண்ட பொருள். (திருத்துதல் - தனக்கு ஏற்ற வகையில் கொள்ளுதல். `தானே` என்பது பாடமன்று)

குறிப்புரை :

`அன்பால்` என உருபு விரித்து, `அன்பால் உள் உருகி, என்பும் உருக. அழுவன்;அரற்றுவன் எனவும் `என் பொன் மணியை இறைவனை, ஈசனை இராப் பகல் ஏத்தி, தின்பன் ... நானே எனவும் இயைக்க.
`அன்பே இன்பாவதன்றி, வேறில்லை` என்பதை,
``ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து
இன்பமே! என்னுடை அன்பே``8
எனவும் `யான் அனுபவிக்கும் இன்பமாவது என்னுடைய அன்பே` என அருளிச் செய்த திருவாசகத்தாலும்,
``இன்பில் இனிதென்றல் இன்றிண்டேல் இன்றுண்டாம்;
அன்பு நிலையை அது`` *
என்னும் திருவருட் பயனாலும் அறிக.
``அன்பே சிவமாவது ஆரூம் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே``*
என இந்நாயனாரும் மேலே கூறினார்.
``எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்``*
என்றார் தொல்காப்பியனாரும், எனவே அன்பு நிலைதான் இன்ப நிலையேயன்றி, அனபில்லாத நிலை ஒரு வறட்டு நிலையேயாகும்.
இதனைத் திருவள்ளுவர்,
``அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதேதால் போர்த்த உடம்பு`` *
என வேறொரு வகையால் விளக்கினார். இஃதே பற்றி மெய்கண்ட தேவரும், ``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``3 என்றார்.
ஞானமாவது, பொருளியல்புகளை உள்ளவாறு உணர்தல், அது, துன்பப் பொருளின் நீங்கி, இன்பப் பொருளைப் பற்றுதற்கு ஏதுவாம், ஆயினும் அதனாலே இன்பப் பொருளை உணர்ந்து பற்றினவன் அதனை மேலும் மேலும் விரும்பிதலாற்றான் அதனது இன்பத்தை அனுபவித்தல் கூடும். அந்த விருப்பமே அன்பு, அது முடிவின்றி வளர்தலாற்றான் இன்பமும் முடிவின்றி வளர்கின்றது. இதனையே ``பெருமபோகம் பின்னும் புதிதாய் ... ... ... வளர்கின்றதே`` என்னும் திருக்கோவையார் விளக்கிற்று.
``அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்,
செறிதொறும் சேயிழை மாட்டு``3
என்றதும் இதனையே. ஆகவே, `ஞானத்தால் அடையத்தக்கது அன்பே` என்பதும், `அந்த அன்பே இன்பத்தை விளைக்கும்` என்பதும் போதரும். இதனையே சேக்கிழார்.
``ஞானம் ஈசன்பால் அன்பே
என்றனர் ஞானம் உண்டார்`` l
என அருளிச்செய்தார். இவ்வாற்றால், ஞானம் வித்தாக, அன்பே விளைவதால் விளங்கும். வித்தை வேண்டுவது, விளைவின் பொருட்டேயன்றோ! ஆகவே, ஞானத்தை மட்டும் வேண்டு, அன்பை வேண்டாதவர், வித்தை வேண்டி, விளைவை வேண்டாதவர் ஆகின்றனர். இதனைத் திருவிந்தியார்.
``வித்தினைத் தேடி, முளையைக்கை விட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற;
பெறுவந் கென்பெணே!உந்தீபற``8
எனக் கூறிற்று. இன்னும் ஞானத்தை வேண்டி, அன்பை வேண்டாத சமயங்களைச் சுட்டி அந்நூல்,
``சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்(று)
ஆவியறாதேயென் றுந்தீபற;
அவ்வுரை கேளாதே; உந்தீபற``8
என்றும் கூறிற்று. இவ்வுந்திகளின் கருத்தைத் திருக்களிற்றுப் படியார்.
``வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம்;
வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில், - வித்ததனில்
காணாமை யால்அதனைக் கைவிடுவர்; கண்டவர்கள்
பேணாமை யால்அற்றார் பேறு`` *
என விளக்கிற்று.
``விறகில் தீயின், நன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்;
உறவு கோல்நட்(டு) உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே`` 3
என்னும் அப்பர் திருமொழியில், ``உறவு`` என்றது, சிவன் சீவர்களோடு அருள் காரணமாகக் கொண்டுள்ள ஆண்டான்
அடிமைத் தொடர்பினை அறியும் அறிவையும், ``உணர்வு`` என்றது, அத்தொடர்பினை அறிந்து, அவனையே விரும்பி, அவனிடத்திற் செலுத்தும் அன்பையும் குறிப்பன. அவற்றுள், அறிவைக் கோலாகவும் அன்பைக் கயிறாகவும் உருவகித்தமையால், `கயிற்றில் வழிக்கோல் இருந்து கடைதல் கூடாமையால் விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படாதவாறுபோல, அறிவாகிய ஞானம் இருந்தும் அன்பு இல்லாவிடில் சிவனிடத்தில் தோய்தல் கூடாமையால், மறைய நின்றிள்ள அவன் முன்னிற்றல் இயலாது` என்பது போவ்தவாறு அறிக. எனவே, இன்ப நிலைக்கு முடிநிலை ஏது அன்பேயாயிற்று.
இதனையே இம்மந்திரத்தால் அனுபவமாகக் கூறிமுடித்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும்,
``மனம்வி ரிந்து குவிந்தது! மாதவ
மனம்வி ரிந்து குவிந்தது வாயு;
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்;
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே``
என்பது யாப்பு, முற்றிலும் வேறுபட்டதுடன், பொருள் சிறப்பிலதாயும். இவ்விடத்திற்கு இயைபில்லாதாயும் இருத்தலின் நாயனாரது வாக்காகத் தோன்றவில்லை.]
சிற்பி