சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி


பண் :

பாடல் எண் : 1

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

பொழிப்புரை :

தன்னைக் கண்ட எனது மேனியின் நிறம் அங்ஙனம் கண்டபின் எந்த நிறமாயிற்றோ அந்த நிறத்தையே தனது இயற்கை நிறமாக உடைய இறைவனுக்கு மேனி, எப்பொழுதும் பொன்னின் நிறம் என்ன நிறமோ அந்த நிறமே.
தாழ்ந்து தொங்குகின்ற சடைகள், விட்டு விளங்குகின்ற மின்னல் என்ன நிறமோ அந்த நிறமே.
பெரிய இடப ஊர்தி, வெள்ளி மலை என்ன நிறம் வடிவோ அந்த நிறம் வடிவுகளே.

குறிப்புரை :

``தன்னைக் கண்ட`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க.
இச்செய்யுள் தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டு ஆற்றாமை எய்தினாள் ஒருத்தி கூற்றாகச் செய்யப்பட்டது.
காதலால் வருந்தும் தலைவியரது மேனி பொன்னிற மாகிய பசலையை அடையும் என்பது,
பசப்பித்துச் சென்றாரை உடையையோ? அன்ன
நிறத்தையோ? பீர மலர்
என்பது முதலியவற்றான் விளங்கும்.
``தன்னைக் கண்ட என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்`` என்பது இவ்வாறு வெளிப் பொருள் தருவதாயினும், `காணப்படாத இறைவனது இயல்பு.
காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்` என்பதே இதன் உட்பொருள்.

ஒன்றும் குறியே குறிஆத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால் ஒன்றோடு
உவமிக்க லாவதுவுந் தான்இல்லை ஒவ்வாத்
தவம்மிக்கா ரேஇதற்குச் சான்று.

என்ற திருக்களிற்றுப்படியினைக் காண்க.
மால், மாயோனுமாம்

பண் :

பாடல் எண் : 2

ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.

பொழிப்புரை :

(``பிச்சை`` என்று கேட்டு வாயிலில் வந்தவன் சிவ பிரான் - என்று தெரிந்துயான்) `அவனைக் காண வேண்டும்` என்னும் ஆசையால் பிச்சையைப் பிறர் எடுத்துச் செல்வதற்கு முன் யானே விரைந்து எடுத்துச் செல்ல, என் தாய் (செவிலி) `பிறர் செல்லலாகாத இவள் மிக விரைந்து புறம் செல்கின்றாள் ஆதலின் பிச்சைக்கு வந்த இந்தப் பேய்க் கூட்டத்தான் மேல், பித்துப் பிடித்தவள் போல் இவள் காதல் கொண்டாள் போலும்` என்று அறிந்து, தோழியர் பலர்முன் தாய் என்னை, `ஏடி, உள்ளே வா` என்று பற்றி ஈர்க்க, எனக்கு உதவுவார் யாரும் இன்றி யான் சோர்தலைக் கண்டு, பிச்சைக்கு வந்த, நீண்ட சடையையுடைய அவன், `நீ என்னைக் காதலித்து விட்டபின் எவர் உன்னைத் தடுத்து என்ன பயன்.
(நீ என்னைக் காதலித்துவிட்ட பொழுதே நீ எனக்கு உரியவளாய் விட்டாய்; ஆகவே,) நீ யாவரும் அறியவே என்னைத் தழுவ வா` என்று அழைத்தான்.
அவனது பொருளை அறிய, என்னுடைய வாள் போன்ற கண்கள் பொழிந்த அன்பு நீரைத் தடுக்க மாட்டாமல் இமைகள் திறந்துவிட்டன.

குறிப்புரை :

``கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்``* என்று அருளிச் செய்தபடி, ``பக்குவான்மாக்கள் சிவனது வடிவைக் கண்டவுடனே அவன்மேற் கரையிறந்த காதல் உடையனவாம்`` என்பதையும், `அதுபொழுது அவ்வான்மாவை அபக்குவான்மாக்கள் ஏசியும், இகழ்ந்தும் தம் வயப்படுத்த முயலும்` என்பதையும், `எனினும் சிவன் தன்னைக் காதலித்த ஆன்மாவைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதலை ஒருவராலும் தடுக்க இயலாது` என்பதையும் இவ்வாறு அகப் பொருள்மேல் வைத்து அருளிச் செய்தவாறாக உணர்க.
இதற்குக் கண்ணப்ப நாயனார் சிறந்த எடுத்துக்காட்டு.
அதனையே மேற்காட்டிய சுந்தரர் திருமொழி குறிப்பால் உணர்த்தியது.
பிச்சி - பித்துக் கொண்டவள்.
சகரயகரங்கள் ஒன்றற்கு ஒன்று எதுகையாய் வருதல் உண்டு.

பண் :

பாடல் எண் : 3

கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.

பொழிப்புரை :

இச்சிறுமியை, அழகிய கண்டத்தையுடைய சிவன் வெறுக்கவும் இவள் அவன்மேற் கொண்ட காதலால், கண்கள் நீர் பொழிய, கை வளைகள் கழல, துகில் நெகிழ, அவனது கொன்றை மாலை போலும் நிறத்தை எய்தியதுடன் அறியாமையுடைய மனம் பித்துக் கொண்டவளாயினாள்.
இஃது இவளது பெண்மைக்குக் குற்றமாம்.

குறிப்புரை :

இது சிவபிரானைக் காதலித்த தலைவி தன் தாய் கூற்று.

வீழப் படுவார் கெழீஇயிலர், தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்.
*
என்றபடி, தம்மால் காதலிக்கப்பட்ட தலைவரால் தாமும் காதலிக்கப் பட்ட மகளிரன்றோ பெருமையடைதற்கு உரியர்? இவள் அவ்வா றின்மையின் குற்றப்படுகின்றாள் - எனத் தாய் நொந்து கூறினாள் என்க.
தீவிர பக்குவம் எய்தாத ஆன்மாவின் நிலைமையை இங்ஙனம் அகப்பொருள் முறையில் வைத்துக் கூறியதாக உணர்க.
`கண்கள் அங்கு அம் செய்ய` எனப் பிரிக்க.
அம் - நீர்.
`களக் கண்ணுதல்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
வேர்த்தல் - சிதைத்தல்.
அஃது இங்கு வெறுத்தலைக் குறித்தது.
`வேர்ப்பவும்` ஓர் பேதை நெஞ்சம் அவனையே விரும்பிப் பேதுறுகின்றாள் என்பது பெண் களங்கம்` என இயைத்து முடிக்க.
களங்கம் - குற்றம்.
உருவத்தோடு` என உருபு விரித்து அதனை, ``பேதுறும்`` என்பதனோடு முடிக்க.
`பண்களுக்கு அங்கமான (உறுப்பான) இசைகளை இனிது விளங்கப் பலர் பாட ஆடும் பரமனையே விரும்பிப் பேதுறும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இப்பாட்டுள் `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.

பண் :

பாடல் எண் : 4

பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.

பொழிப்புரை :

மூன்று கண்களையுடைய, பெரியதவக் கோலத்த னாகிய சிவபிரான் அயலார் இல்லந் தோறும் சென்று இரந்த போதிலும் அவன் உண்டது நஞ்சமே.
இதழ்களால் பன்மையைப் பெற்ற மலரின் கண் இருக்கும் பிரம தேவனைச் சிரம் கொய்ததும் அவனுக்கு வழங்கி யது பெரிய அருளே.
(படைப்புத் தொழில் தொன்மையை அளித்தது.
) மலர்க் கணைகளையுடைய மன்மதனை அழித்தபோதிலும் உடம்பில் இடப்பாதியாகக் கொண்டது பெண்ணையே.
இனி மேலாவன மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம்.

குறிப்புரை :

`இஃது அவன் இலக்கணம்` எனப் பழித்தல் குறிப் பெச்சம்.
இது பழித்ததுபோலப் புகழ்ந்தது.
சத்திக்குச் சிவன் எவ்வெம் முறையனாம் என்பதை, ``எம்பெருமான் இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன்``.
1 என்னும் திருவாசகத்தாலும், தவளத்த நீறணி யும்தடந் தோள் அண்ணல் தன்னொருபா
லவள் அத்த னாம்; மகனாம் தில்லையான்.
2 என்னும் திருக்கோவையாராலும் அறிக.
இங்ஙனம் கூறவே, இவை உலகில் உள்ள முறைபோலத் தம் பிறப்பினால் ஆகாது தமது அருள் நாடகச் செயலால் ஆவனவாதல் விளங்கும்.
தத்துவங்களில் சுத்த தத்துவங்கள் தோன்றுமிடத்து.
பிறிதொன்றையும் நோக்காது நோக்குங்காலத்தில் `சிவன், சக்தி` என் இரு கூறாய்ப் பரநாதமாகிய சிவன் சுத்த சிவத்தினின்றும் தோன்றித் தன்னின்றும் பரவிந்துவாகிய சத்தியைத் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் தந்தையாகின்றார்.
பின்பு பரவிந்துவாகிய சத்தியினின்றும், அபரநாதமாகிய சிவன் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் மகனாகின்றார்.
பின்பு அபர நாதமாகிய சிவன் அபர விந்துவாகிய சத்தியைத் தோற்றுவிக்க அச்சத்தியினின்றும் முதலில் சதாசிவனும், பின்பு மனோன்மனியும் தோன்றுதலால் சத்திக்குச் சிவன் தமையனாகின்றார்.
பின்பு அவ் விருவரும் சேர்ந்தே மகேசுரன் முதலிய தலைவர்களைத் தோற்று வித்து, அவர்கள் வழியால் உலகத்தையும் தோற்றுவித்தலால் சத்திக்குச் சிவன் கேள்வன் (கணவன்) ஆகின்றார்.
எனவே, இத்தத்துவக் குறிப்பே முறையில்லாத முறைகளாக நகைச்சுவை தோன்றச் சொல்லப் படுகின்றன என்க.
இப்பாட்டிலும், `திரிபு` என்னும் சொல்லணி வந்தது.
பர மனை - அயல் வீடு.
சரம், இங்கு பூங்கணையும், மன், மன்மதனுமாம்.
உடம்பு அட்டு - உடம்பை அழித்து.
``உடம்பொடு`` என்பதை `உடம்பின்கண்` எனத் திரிக்க.
வர மனை - மேலான மனைவி.
கிளை - சுற்றம்.
``உடம்பின் கண் இடம் ஆம்`` எனச் சினை வினை முதல்மேல் நின்றது.
கிளை ஆகும் - கிளையாக இருக்கும்.

பண் :

பாடல் எண் : 5

தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.

பொழிப்புரை :

`சிவபெருமானே எல்லோரிலும் மிக்கவன்; (எனவே, முதற்கடவுள் ) உலகிற்கு முதல்வனும் அவனே.
எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் அவன் படைத்தனவே.
(உயிர்கள், பிறப்பெடுத்த உயிர்கள்).
அவன் அனைத்துப் பொருள் களிலும் அவையேயாய் நிறைத்திருக்கின்றான்` என இவ்வாறு உணர்கின்றவர்கள் சிவலோக வாழ்க்கையைப் பெறுவர்.
`அவன் திருமாலை இடபமாகக் கொண்டு ஏறி நடாத்துபவன், பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தேவர் பொருட்டு உண்டவன், நினைப்பவர் நினைத்த இடத்தில் அவர் நினைத்த வடிவில் தோன்றுபவன்` என இவ்வாறு அவனைப் புகழ்பவரும் இவ்வுலக ஆட்சியைப் பெறுவர்.

குறிப்புரை :

மிகுதியை உணர்த்தும் `தவ` என்னும் உரிச்சொல்லடி யாக, `தவன்` என்னும் பெயர் பிறந்தது.
`சால்` என்பது அடியாக, `சான்றோன்` என்பது பிறத்தல் போல.
பவன் - தோன்றுபவன்.
பெறப்படுவன வேறாயினும் இரண்டும் பேறாதல் பற்றி, ``சொல்லுவாரும்`` என இறந்தது தழுவிய எச்சவும்மை தரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடம்மால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஓரமையத்தில் இடப்பக்கம் திரு மாலும், வலப்பக்கம் தானுமான ஒரு வடிவத்துடன் நின்றான்.
(அது படைப்புக் காலம் என்க) அப்பொழுது இடப்பக்கம் துழாய் மாலை யும், வலப்பக்கம் கொன்றைப் பூ மாலையும் - இடப்பக்கம் பொன்னாடையும், வலப்பக்கம் தோல் ஆடையும், இடப்பக்கம் சக்கர மும், வலப்பக்கம் மானும், இப்பக்கம் கருநிறமும், வலப்பக்கம் செந் நிறமுமாய் இருந்தன.
இனி இடப்பக்கம் குடக் கூத்தும், வலப்பக்கம் கொக்கரைக் கூத்தும் ஆடின.

குறிப்புரை :

`இதோர் அதிசய வடிவம்` என்பது குறிப்பெச்சம்.
இவ் வடிவம் `அரியர்த்தேசுரவடிவம்` எனப்படும்.
``எங்கள் கூத்தனுக்கு`` என்பதை முதலில் கொண்டு உரைக்க.
வட மால் - தாமோதரன், `இடம், வடமாவது துகில்` என்க.
துகில் - உயர்ந்த ஆடை.
`வலக்கையில் மான்` என்றது இவ்வடிவத்தில் மட்டும் சிறப்பாகக் கொண்டது.
``இடம் ஆல் கரிது ஆல்`` என்னும் `ஆல்` இரண்டும் அசைகள்.
சேது - செய்யது; செந்நிறமானது.
உருவம் கூறியபின் செயல் கூறுகின்றார்.
ஆகலின், ``இவனுக்கு`` என மீட்டும் சுட்டிக் கூறினார்.
எழல் நலம், ஒருபொருட் பன்மொழி.
குடம் கொண்டு ஆடிய கூத்தைக் ``குடம்`` என்றும் 1 கொக்கரித்து ஆடிய கொடுகொட்டிக் கூத்தைக் 2 ``கொக்கரை`` என்றும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.

பொழிப்புரை :

`இண்டை` என்னும் வகை மாலையைச் சடையில் தரித்துள்ள மேலானவராகிய இவர், எங்கும் ஆடிச் செல்வது முறைப் படி அமைந்த நடனம்.
எங்கும் சென்று பிச்சை ஏற்பது தம் தேவியர் பகுத்து உண்டற்கு.
இவர் மேனி பவளம்போல்வது, இவர் எவரிடமும் விரும்புவது தம்மைப் புகழ்தலை.
இவர் நினைவு மாத்திரத்தாற் செய்தது வேதம்.

குறிப்புரை :

இஃது இறையது பொது வியல்பைக் கூறியது.
``கூத்து`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், ``ஆடித் திரிவது`` என எடுத் தோதினமையால், அது முறைப்படி (கூத்த நூல் முறைப்படி) அமைந்த கூத்தாயிற்று.
இது பெத்தான்மாக்களுக்கு ஊன நடனமாயும், முத்தான் மாக்களுக்கு ஞான நடனமாயும் நிகழ்தலை உண்மை விளக்க நூலால் அறிக.
* ``கோல் வளை`` என்பது `திரட்சியான வளையலை அணிந்த வள் என ஒருமையாய் நின்று, பின் `கள்` விகுதியேற்றுப் பன்மையா யிற்று.
சிவபெருமானுக்குத் தேவியர் `உமை, கங்கை` என இருவராதல் வெளிப்படை.
எனவே, `அவர்களைக் காப்பாற்றுதற்கு வழியில்லா மையால் பிச்சை எடுக்கின்றான்` என்பது வெளிப்படைப் பொருளாய் இகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
ஆயினும், `பிச்சையிட வரும் மகளிரது வளைகளைக் கவர்ந்துகொள்கின்றான்` என்பது உள்ளுறைப் பொரு ளாய்ப் புகழ்ச்சியைத் தோற்றுவித்தது.
இது சிலேடையணி.
தொழிற் பெயர்கள் வினையொடு முடியுங்கால் வினையெச்சத்தோடே முடிதலும் உண்டு.
ஆகையால், ``திரிவது`` என்னும் தொழிற் பயர் ``பாத்து`` என்னும் வினையெச்சத்தோடே முடிந்தது.
பாத்து - பகுத்து.
இது வெளிப்படைப் பொருளில் `பகுக்க` எனச் செயவெனெச்சப் பொருட்டாயும், உள்ளுறைப் பொருளில் `கவர்ந்து` என்னும் பொருட்டாயும் நின்றது.
ஏத்து - துதி; முதனிலைத் தொழிற்பெயர்.
ஆதரித்தல் - விரும்புதல் ``இமையவர் ஒத்து`` என்றதனால் இறைவன் திருவருட் குறிப்பினை உணரத் தேவர்களும் வேதத்தை உணர்தல் சொல்லப்பட்டது.
`பெத்தான்மாக்கள், முத்தான்மாக்கள் ஆகிய இருவகை ஆன்மாக்களுக்கும் ஏற்புடையவற்றைச் செய்து அவைகளை உய் வித்தலும், தன்னை உணராதவரையும் தக்க வழியால் உணர்வித்தலும், சிறிது உணர்ந்தாரையும் தம்மைப் புகழ்தல் வாயிலாக மிக உணர்ந்து அன்பு கூரச் செய்தலும், உயிர்களுக்கு நூல்கள் வாயிலாக நன் னெறியை உணர்த்துதலும் இறையது பொது வியல்புகள்`` என்பது கூறியவாறு.
`மேனி பவளம்` என்றது வசிகரித்தலைக் கூறியது.
``கொல், ஆம்`` என வந்தன எல்லாம் அசைநிலைகள்.

பண் :

பாடல் எண் : 8

உத்தம ராயடி யாருல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.

பொழிப்புரை :

தம் அடியார்கள் யாவரினும் மேலானவராய், மண்ணுலகு வானுலகுகளை ஆள, ஊமத்தை மலர், பாம்பு, திங்கள், அவற்றின் அருகே நீர் இவைகளே தமக்கு உரியவாய் மிக அழகும் புகழும் குறையாதனவாய் உள்ளன.
எக்குலத்தவராயினும் தமக்கு அடியார்களாக ஆகும்படி செய்துகொள்ள வல்ல இறைவர் தமது மேல் நிலையினின்றும் இறங்கி வந்து என் உள்ளத்தில் பொருந்தி என்னோடு உடன் இயங்கியே திரியும் தன்மையுடையராகின்றனர்.

குறிப்புரை :

`இதுவும் மேற்கூறிய ஊமத்தை முதலியவற்றை உவந்து கொண்டது போல்வதுதான்` என்பது குறிப்பெச்சம்.
இக்கருத்துக் குறிப்பால் தோன்றவே இதனை இருதொடராக அருளிச் செய்தார்.
``தமக்கு உரியவாய்` என ஆக்கம் விரித்து ``சீர்மை குன்றா`` என்பதற்கு முன்னே கூட்டுக.
மத்தம் - ஊமத்தை.
மாடு - பக்கம்.
`அம்பு + அதி நலம்` எனப்பிரிக்க.
அம்பு - நீர், நலம் - அழகு.
`அதிநலமும், சீர்மை யும் குன்றா` என்க.
ஈற்றடியில், `மருவாய்` என்பது, மராய்` என வந்தது.
மருவு - மருவுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.
திரிதவர் - திரிதலையே தவமாக - தொழிலாக - உடையவர்.

பண் :

பாடல் எண் : 9

திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.

பொழிப்புரை :

இறைவர் மேற்கூறியவாறு என் கண்ணினுள்ளும், கருத்தினுள்ளும் என்னோடு அகலாது நின்று உடனே திரிபவராயினும், `அவரது தன்மை இதுதான்` என்று என்னால் வரையறுத்துச் சொல்லுதல் இயலாது.
ஆயினும் கடல் நஞ்சம் பொருந்திய அவரது மிடறு கறுத்தது; அவர் பூசிய சந்தனம் வெளுத்தது; (திருவெண்ணீறு) கண்களோ மூன்று, ஏந்திய வில் பிறரால் ஏந்துதற்கு அரிய ஒன்று (அஃதாவது மலை) தமக்குத் தாமே பல பணிகளைப் பணித்துக் கொள்வார்.
(பிறரால் யாதும் பணிக்கப்படுவாரல்லர்).
என இங்ஙன் ஒருவாறு அவரைப் பற்றிக் கூறலாம்.

குறிப்புரை :

ஈற்றில் வருவித்து உரைத்தது குறிப்பெச்சம்.
`கண் முன்னொரு பரி தவர் ஒன்றாம்` என்க - பரித்தல் - தாங்குதல்.
தவர் - வில்.

பண் :

பாடல் எண் : 10

பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.

பொழிப்புரை :

எனது ஒப்பற்ற மனமே, சூரியனது பல்லை உகுத்த, யாவர்க்கும் தந்தையாகிய சிவனை அடி பணி; கூத்தாடு; பொருந்தும் வகையால் பல இசைகளைப் பாடு; குளிர்ந்த மலர்களால் அலங்கரி; `அப்பெருமானுக்கேயான் அடிமை` என்னும் நிலைமையை நிச்சயமாக உணர்வதையே விரும்பு.
இச்செயல்களில் உனக்கு அவனைப் போலவே உடம்பில் தோலை உடுத்தலோடு, நீற்றை நிறையப் பூசி அமைதியுற்றிருத்தலாகிய நல்ல பதவியைக் கொடுக்கும்.
இனி உனது கவலையை விடு.

குறிப்புரை :

தம் மொழி வழி நிற்றல் வேண்டி, `ஒப்பற்ற நெஞ்சமே` என்றார்.
இனி, `துணையில்லாது தனித்து நிற்கும் நெஞ்சமே` என்றலும் ஆம்.
`பதம் பணி` என மாற்றியுரைக்க.
இசையாக - இசைவாக; பொருந்தும்படி.
`இசையாக இசை பாடு` என்க.
பதங்கன் - சூரியன்.
`அடிமைப் பதம் துணி` என இயைக்க.
பதம் - நிலைமை.
``தோலொடு.............தணிபதம்`` என்றது சாரூப பதவியை நீ - நீத்துவிடு.

பண் :

பாடல் எண் : 11

நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.

பொழிப்புரை :

மனம், வறட்சியால் வாடிய செடியாகாது, அன்பென்னும் நீரால் குளிர்ந்த செடியாகித் தளிர்க்க, அதினின்றும் தோன்றுகின்ற குருத்து அரும்புவதன் அறிகுறியாக அழகிய, சிவந்த கைகள் குவிந்து தோன்ற அக்கருத்தில் அன்பாகிய தேன் ததும்புவ தாகக் கண்களில் நீர் ததும்ப, அரும்பிய கருத்து மலர்வதாக முகம் மலர, மலர்ந்த கருத்துக்களை வெளிப்படத் தெரிவிக்கின்ற, தமது சொற்க ளாகிய மலர்களைத் தொடுத்த பாக்களாகிய மாலைகளை அணிவித்து, எட்டுறுப்புக்களாலும் அடிபணிய வல்லவர்க்கு என்றே நீண்ட சடையையுடையவனாகிய சிவபெருமான் சிறிதும் கர வில்லாமல் தனது பெரிய சிவலோகத்தை நன்றாகப் படைத்து வைத்தான்.

குறிப்புரை :

``தளிர்விட`` என்பது முதலியன உருவகத்தைக் குறிப் பால் உணர்த்தி நின்றன.
``கண்ணீர்`` என்பது சிலேடையாய் `கள் + நீர்` எனப் பிரித்து, `தேன்` எனப் பொருள் கொள்ள நின்றது.
எட்டுறுப் பாவன; முழங்கால் இரண்டு, மார்பு ஒன்று, தோள் இரண்டு, செவி இரண்டு, முகம் ஒன்று.
இவ் எட்டுறுப்பும் நிலத்தில் தோயப் பணிதல் அட்டாங்க நமற்காரம்` எனப்படும்.
மார்பும், தோள்களும் ஒழிந்த ஐந்துறுப்புக்கள் நிலத்தில் தோயப் பணிதல் பஞ்சாங்க நமற்காரமாகும்.
`மகளிர் அட்டாங்க நமற்காரம் செய்தல் கூடாது` என விலக்கியுள்ளது.
தலைமட்டும் தாழக் கும்பிட்டு வணங்குவது ஏகாங்க நமற்காரம்.
`இறைஞ்சுதல்` என்பதும் இதுவே.
அட்டாங்கத்தோடு கூடியது, `சாட்டாங்கம்` எனப்படும்.
ஈற்றில் வைக்கற்பாலதாய இதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
`சிவபெருமானை அன்பொடு பணிந்து பணி செய்பவர்கள் தவறாமல் சிவலோகத்தை அடைவர்` என்பது உணர்த்தியவாறு.
``தம் சொல் மலரலா`` என்றமையால் தாமே பாக்களை இயற்றிப் போற்றுவார் குறிக்கப்பட்டனர்.
தம் சொல்லால் தொடுக்கப்படும் பாக்களுக்கு ஒரு தனிச் சிறப்புச் சொல்லப்படுகின்றது.
இதனால், `பாமாலைகளைப் புதிது புதிதாய்த் தொடுத்தணியும் மரபு இடையே அற்றொழியாமல், நீடு செல்லல் வேண்டும்` என்பது இறைவனது திருவுளக் குறிப்பாதல் விளங்கும்.
தேவார திருவாசகங்கட்குப் பின்னரும் அன்புடைத் தொண்டர்கள் பாமாலை சாத்திப் பரவினமை இதற்குத் தக்கச் சான்று.
`பத்திமையால் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித் தானை` 1
`பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
பன்னியநூல் தமிழ்மாலை பாடு வித்துஎன்
சிந்தைமயக் கறுத்ததிரு அருளினானை`.
2 `நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை.
` 3 `நமக்கும் அன்பிற் பருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார், தூமறை பாடும் வாயார்.
` என்பன முதலிய திருவாக்குகள் இதனை வலியுறுத்தும்.

பண் :

பாடல் எண் : 12

வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

பொழிப்புரை :

சிவகங்கையில் ஆடுதல், சிவ நந்தனவனத்தில் நிறைந்த பூக்களைச் சூடுதல் முதலிய சிறப்புக்களுடன் சிவலோகத்தில் வாழ்பவரும், கிழிந்த ஆடையை அரையில் சுற்றிக்கொண்டு, கால் நகம் தேய மண்ணுலகில்`` எங்கும் திரிந்து, இரப்பவரும் யாவர் எனின், முற்பிறப்பில் திருமேனியில் பால்போலும் நிறத்தையுடைய திருநீற்றைப் பூசியுள்ள சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவரும், அது செய்யாது அதனை இகழ்ந்தவருமேயாவர்.

குறிப்புரை :

`சிவத் தொண்டு தூய இன்பங்களைத் தரும்` எனவும், `அதனை இகழ்தல் இவ்வுலகில் வறுமைத் துன்பத்தைத் தரும்` எனவும் உறுதிப்படக் கூறுவார் இங்ஙனம் கூறினார்.
படிறர் - பொய்யர்.
பொய் நிலையாமையை நிலைத்ததாக உணர்ந்து, நிலைத்ததை நிலையாததாக இகழ்தல்.
ஏகாரம், தேற்றம்.
ஆளுதல் - பயன் கொள்ளுதல்.
அவை மந்தாகினி ஆடுதல் முதலியன.
மந்தாகினி - கங்கை.
அஃது இங்குச் சிவலோக கங்கையைக் குறித்தது.
`நந்தவனம்` என்பது நீண்டு வந்தது.
`கெடாத வனம்` என்றலும் ஆம்.
`இவ்வாறெல்லாம் வானகத்தை ஆள்பவர்` என இறுதிக்கண் கூறற்பாலது செய்யுள் நோக்கி முதலிற் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.

பொழிப்புரை :

``எள் விழுந்த இடத்தைத் தேடிக்கொண்டு, `ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்` என்று அது பற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை `வரையாது வழங்கும் வள்ளலே` எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி 1 இரந்து, பிறிதொன்றற்கும் பயன்படாத உடலைப் பாதுகாத்தலை மேற்கொண்டு, பல இல்லங்களின் வாயிற் படிகளில் ஏறி இடறுதல் நேராத படி அதனினின்றும் நீங்குவோம்; நெஞ்சமே, புறப்படு.
`எதற்கு` எனின், எரியின்கண் ஆடுபவனும், எம்பெருமானும் கடலில் பரந்து எழுந்த நஞ்சத்தை உண்டவனும் ஆகிய அவனது திருவடிகளைப் பல்லாற்றானும் சார்வனவே, இவ்வுலகத்தில் கிடைத்ததாகிய இவ்வுடலினால் உளவாம் பயன்களாகும்.
இதனை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
(என்மேற் பழியில்லை).

குறிப்புரை :

`எனவே, அவற்றைச் சார்தற்கே புறப்படுக` என்பதாம்.
அவற்றைச் சாராதவர் நிலை முன்னைப் பாட்டில் கூறப்பட்டமையால், `அந்நிலை நமக்கு வாராது ஒழிய முயல்வோம்` என்றபடி.
படிறு - பொய்.
`சொல்லி ஓம்பி` என இயையும்.
சொல்லுதல் அதன் காரிய மாகிய இரத்தல்.
மேலும், ஓம்புதல் அதன் காரணமாகிய மேற்கொள்ளு தல் மேலும் நின்றன.
தாயின - பரந்த.
கண்டாய், முன்னிலையசை.
மனம், மொழி, மெய் என்பவற்றால் சார்தல் பலவாகலின் பன்மையாற் கூறினார்.
தான், அசை.
``சொன்னேன்`` என்ற விதப்பு இக்கருத்துடைய தாதலைக் ``குற்றமில்லை எனமேல்; நான் கூறினேன்``.

பண் :

பாடல் எண் : 14

உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தை ஆள விரும்புகின்றவர்களே, `நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானைக் கைகுவித்துக் கும்பிடுங்கள்.
விண்ணுலகை ஆள விரும்புகின்றவர்களே, (நீவிர், உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானது திருவடிகளில் வீழ்ந்து பணியுங்கள்.
நாள்தோறும் பற்பலவற்றை விரும்புகின்றவர்களே (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேறச்) சிவபெருமானை இடையறாது நினையுங்கள்.
இவைகளையெல்லாம் விடுத்துச்) சிவபெருமானோடு இரண்டறக் கலக்க விரும்புகின்றவர்களே, (நீவிர் உங்கள் விருப்பம் நிறைவேற) அப்பெருமானை நந்தவனத்தில் உள்ள நல்ல பல மலர்களால் அருச்சனை செய்யுங்கள்.
என்றும் நரகத்தில் நிற்றலாகிய பொல்லாத விளைவை விரும்புகின்றவர்களே, (அதற்கு நீவிர்) சிவ பெருமானுடைய அடியாரை வருந்தப் பண்ணுங்கள்.

குறிப்புரை :

`சிவபெருமானை இந்த இந்த அளவில் வணங்குகின்ற வர்கள் இன்ன இன்ன பயன்களை அடைவார்கள்` என்னும் வகை முறையையும், `சிவாபராதம், சிவனடியார்க்கு அபராதம் நரகம் விளைக்கும்` என்பதையும் இவ்வாறு கூறினார்.
நித்தம் - நாள்தோறும்.
கா - சோலை; நந்தவனம்.
`நாளும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று.
`அல்ல` என்பது இடைக்குறைந்து நின்றது.
நரகங்கள் பல வகையின ஆதல் பற்றி, `அல்ல` எனப் பன்மையாற் கூறினார்.
அலைத்தல் - வருத்துதல்.

பண் :

பாடல் எண் : 15

அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

பொழிப்புரை :

(உலகீர்) கொடியை உயர்த்திய தேரை உடைய இராவணன் பத்துத் தலையும், இருபது தோளும் உடைமையால் மிகப் பருத்திருந்தும் சிறிய மானைக் கையில் ஏந்திய சிவபெருமானது கால் விரல்களில் ஒன்றன் ஊன்றலைத் தாங்கமாட்டாது அலறிய காரணம் என்ன? (அதனை எண்ணிப் பார்த்து,) அலை பொருந்திட நீர், ஞாயிறு, நிலம், திங்கள், வானம், காற்று, அழிவற்ற உயிர் ஆகிய எட்டினையும் தனது உடம்பாகக் கொண்ட, ஒளி வடிவாகிய அந்தப் பெருமானையே அவனது திருவடிகளைத் தலையிற் சுமந்தாயினும் சேருங்கள்

குறிப்புரை :

``தலையாற் சுமந்தும்`` என்பதை, ``தொக்குமினோ`` என்பதற்கு முன்னே கூட்டுக.
தடித்தல் - பருத்தல்.
``என்னே`` என்னும் வினா, `அது நன்கு தெரிந்ததன்றோ! என்னும் தேற்றக் குறிப்பினது.
`எத்தனை பேர் எத்தனைப் பெரிய உடலும் பேராற்றலும் படைத் திருப்பினும் அவர்களது ஆற்றல்கள் எல்லாம் எங்கும் நிறைந்த பெரும் பொருள் ஆகிய சிவபெருமானது ஆற்றலின்முன் எவ்வளவு` என்றற்கு அவன் அட்ட மூர்த்தியாய் நிற்றலை எடுத்தோதினார்.
அட்ட மூர்த்தங்கள் செய்யுளுக்கேற்ப வைக்கப்பட்டன.
`அவன் சிறியதொரு மானை ஏந்துதலைக் கண்டு தவறாக உணர்ந்து விடாதீர்கள்` என்றற்கு, ``கலையான்`` என்றார்.
தொகுதல் - சேர்தல்.
``தொக்குமினோ`` என்பதில் ககரமெய் விரித்தல்.
ஓகாரம், அசை.

பண் :

பாடல் எண் : 16

காரணன் காமரம் பாடவோர்
காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவார்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.

பொழிப்புரை :

எப்பொருட்கும் காரணனாகிய சிவபிரான் (வீணை யேந்தி) இசை பாடிக் கொண்டு வீதியிலே வர, குறும்பு செய்கின்ற ஒருவனாகிய மன்மதனது அம்பு மார்பில் தைத்து ஊடுருவுதலால் போர்க்குக் கொள்ளப்படுகின்ற வேல்போலும் கண்கள் `நீராகிய துணியால் தம்மை மூடிக்கொண்டன.
அழகோடு அணிகளைத் தாங்கி அழகு தேமலையுடைய கொங்கைகள் பொன்னாடையால் தம்மை மூடிக் கொண்டன.
அவனது கொன்றை மாலையை வேட்ட வேட்கையே தனக்குத் துன்பமாக இவ்வாறு சோர்வடைகின்ற இம் மகளைத் தாங்குவார் யார்?

குறிப்புரை :

இது தில்லைப் பெருமானைக் காதலித்து வருந்தும் தலைவியது ஆற்றாமை நோக்கித் தோழி நெஞ்சழிந்து கூறியது.
``காமர்`` என்பது இழித்தற்கண் வந்த பன்மை.
``ஓர்`` என்றதும் இழிவு பற்றி.
தன் - சிவபிரானது.
``தார்`` என்றது அதனை வேட்ட வேட்கையை.
அணங்கு - துன்பம்.
`இத்தையலை` எனச் சுட்டியுரைக்க.
``புனற்படம்,பொற்படம்`` என்பன உருவகங்கள்.
`கண்கள் நிரம்ப நீரைச் சொரிந்தன; கொங்கைகள் பசலை போர்த்தன` என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 17

இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.

பொழிப்புரை :

நெஞ்சே, நாம் தவறு செய்யாமல் திருந்தும் பொழுது, மாதொரு பாகத்துப் பொருந்தப் பெற்ற புண்ணிய வடிவினனும்,கொடியோரை அழித்தலால் அவர் புண் பொருந்திய சூலத்தை ஏந்தியவனும் ஆகிய எம் சிவபெருமான் நமது தீவினை களை யெல்லாம் அவனே முன் வந்து நீக்கிவிடுவான்.
(ஆகையால் நீ திருந்து.
அஃதாவது,) நின்றும், திரிந்தும், கிடந்து அலைவுற்று மிக்க பொருளை ஈட்டியபோதிலும் வருத்தத்தையே தருகின்ற இவ்வுலக வாழ்க்கையை (நீ விரும்புதலை விடுத்து,) அஃது உன்னை விட்டு நீங்கும்படி நீக்கு.

குறிப்புரை :

``நெஞ்சே`` என்பது முதலாகத் தொடங்கி, `நம் தீவினையைக் களையும்` எனவும் `இருந்தனம் எய்தியும் வருந்திய` எனவும், `போகத் தவிர்த்திடு` எனவும் இயைத்து உரைக்க.
`திருந்தா நிலையாவது இது` என்பதையே வாழ்க்கையின் விளக்கமாக முதலிற் கூறினார்.
``அலைந்தும்`` என்னும் உம்மையைப் பிரித்து, ``கிடந்து`` என்பதனுடன் கூட்டுக.
`இறைவன் நமக்கு அருளாமைக்குக் காரணம் நமது குற்றமேயன்றி, அவனது குற்றம் அன்று` என்பதை விளக்கிய வாறு.
திருந்துதலுக்கு `நாம்` என்பதே தோன்றா எழுவாய் ஆதல் அறிக.
``இருந்தனம் எய்தியும் வருந்திய வாழ்க்கை`` என்றது உலக வாழ்க்கையின் இயல்புணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 18

தீவினை யேனைநின் றைவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஒவின துள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.

பொழிப்புரை :

தீவினையைப் பெரிதும் உடைய என்னை ஐம்புலன் களாகிய வேடர், கருவி கொண்டு சிதைத்துத் தின்னுதல் போன்ற துன்பத்தை உறுவிக்கும்படி இதுகாறும் பொருந்திநின்ற வாழ்க்கையை இதுபொழுது நான் வெறுத்து விட்டேன்.
அதனால் எனது சஞ்சித வினைகளும் என்னை விட்டு ஒழிந்தன.
அதனால் எனது உள்ளம் சிவனை வஞ்சித்து ஒழுகுதலை விலக்கித் தெளிவடைந்தது.
நான் விரிந்த, சிவந்த சடையையும், மூன்று கண்களையும் உடையவனும், வேதப் பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனது திருவடிகளையே சார்பாகச் சார்ந்தேன்.

குறிப்புரை :

இருவினை ஒப்பு, மல பரிபாகம், சத்தி நிபாதம் இவை வந்தபொழுதே இவையெல்லாம் நிகழ்வன ஆகலின், `இதுபொழுது` என்பது வருவித்துரைக்கப்பட்டது.
உள்ளம் தெளியாமைக்குக் காரணம் சஞ்சித கன்மமேயாதலின் ``ஓவினது`` எனப்பட்ட வினை அதுவேயாயிற்று.
`இவ்வினை சத்தி நிபாதர்க்கு ஞான குருவால் அழிக்கப்படும்` என்பது சைவ சித்தாந்தம்.
ஆயினும், ``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின்`` (குறள்.
, 359) * என்னும் திருக்குறளின் உரையில் பரிமேலழகர், ``அவ்வழிக் (ஞானத்தைப் பெற்றுவிட்ட பின்பு) கிடந்த துன்பங்கள் எல்லாம் என் செய்யும் - என்னும் கடாவை ஆசங்கித்து, - அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் - என்பது இதனாற் கூறப்பட்டது``.
என்றார்.
இன்னும் அவர் இதற்குமுன் சஞ்சித கன்மத்தைப் பற்றி, ``சாரக் கடவனவாய் நின்ற துன்பங்களாவன, பிறப்பு அநாதி யாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும், பிறந்த உடம் பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவன வாய்க் கிடந்தன`` என விளக்கம் தந்தார்.
``ஐவர்`` என்றது தொகைக் குறிப்பு உருவகம்.
செத்தித் தின்னல், வினைநிலை ஒட்டு, ``கான முயல் எய்த அம்பினில் யானை - பிழைத்த வேல் ஏந்தல் இனிது`` 1 என்றது போல், இஃது ``அடையும் பொருளும் அயற்பட மொழிதல்`` 2 என்பதனானே அடை அயற்பட மொழிதலாய் அடங்கும்.
ஆயினும் பரிமேலழகரும் இது பற்றி வாளா போயினார்.

பண் :

பாடல் எண் : 19

பாதம் புவனி சுடர்நய னம்பவ
னமுயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந்
தோற்பது பூங்கொடியே.

பொழிப்புரை :

என் மகளால் காதலிக்கப்பட்ட இவனுக்கோ இவளால் தழுவப்படுவதோர் உடம்பில்லை.
மற்று, இவனுக்கு நிலமே பாதங்கள்; கதிரும் மதியுமே கண்கள்; காற்றே மூச்சு; பெரிய கடலே உடை; உயர்ந்த வான முகடே தலை; எங்கும் பரந்துள்ள வானமே உடல்; வேதங்களே வாய்; திசைகளே தேர்கள்; பல வகையினவாய் வழங்குகின்ற மொழிகளே இவன் பாட்டு.
இங்ஙனமாக, இவன் பொருட்டு இவள் தனது அழகிய நிறம் கெட நின்று வருந்துவது என்ன அறிவுடைமை!

குறிப்புரை :

இது செவிலிதன் இரங்கற் கூற்று.
சிவ பத்தர்களது நிலையைக் கண்டு பிறர் அறியாமையால் இரங்கிக் கூறும் கூற்றாதல் இதன் உள்ளுறைப் பொருள்.
புவனி - புவனம்; நிலம்.
சுடர் - ஞாயிறும், திங்களும், நயனம் - கண்.
பவனம் - காற்று உயிர்ப்பு - மூச்சு, ஓதம் - அலை; அது கடலுக்கு ஆகு பெயர்.
உடுக்கை - உடை.
``வான்`` என்றது அதன் முகட்டினை; அஃது ``உயர்`` என்றதனானும் விளங்கும்.
விசும்பு - வானம்.
உடம்பு - உடல்; கழுத்திற்குக் கீழும், அரைக்கு மேலும் கை, தோள்கள் அல்லாத பகுதி; மார்பும், வயிறும்.
வாயை `முகம்` என்றல் வடமொழி வழக்கு.
கீதம் - இசை; அஃது அதனையுடைய பாட்டைக் குறித்தது.
போதம் - அறிவு.
இகழ்வது போலச் சிவபெருமானது உலக உருவத்தை (விசுவ ரூபத்தை)ப் புகழ்ந்தவாறு.
மாநிலம் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத், திசைகை யாகப்
பசுஞ்சுடர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப,
தீதற விளங்கிய திகிரி யோனே.
என்னும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை இதனுடன் ஒப்பு நோக்குக.
இதனுள் ``திகிரி`` என்பதைப் பொதுப்பட ஆஞ்ஞா சக்கரமாகக் கொள்வுழி இது பரம்பொருளின் தடத்தலக்கணத்தை விளக்கியதாதல் அறிக.
சேவடி முதலியவற்றை வேறு வேறு பொருளாகக் கூறிய வர்க்குச் சக்கரத்தையும் வேறுபொருளாக உடம்பொடு புணர்த்துக் கூறலே கருத்தாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 20

கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.

பொழிப்புரை :

கொடிச் சீலையின்மேல் எழுதப்பட்டுள்ள இடபமும், கோவணத்துடன் கூடிய கீளும், முடியின்மேல் ஒப்பற்ற ஒரு கொக்கின் இறகும், திங்களும், நறுமணத்தோடு மலர்ந்த கொன்றை மலர்மாலையும், மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறும், அங்குத் தவழ்ந்து சென்று முடிக்கு மேலே விரிக்கின்ற படங்களையுடைய ஐந்தலை நாகமும், திருவடியில் கட்டப்பட்டுள்ள கழல்களும், தோள்மேல் சார்த்தியுள்ள இலைவடிவான, கூரிய முத்தலை வேலும் ஆகிய இவை எப்பொழுதும் என் கண்ணில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

குறிப்புரை :

`இமைப் பொழுதும் நெஞ்சில் நீங்காது நிற்கின்ற சிவனது திருவுருவமும் கண்களிலும் தெரிகின்றன` என்றபடி.
செய்யுளுக்கு ஏற்ப முறை பிறழ வைக்கப்பட்டவை முறையானே வைத்து உரைக்கப்பட்டன.
கொக்குருவில் வந்த `குரண்டன்` என்னும் அசுரன் மிக்க வலியுடையன் என்பதைக் குறிக்க ``ஓர் கொக்கு`` என்றார்.
அவனை அழித்து எடுத்த சிறகை அதன் அடையாளமாகச் சிவபெருமான் தனது முடிமேற் சூடியுள்ளான்.

பண் :

பாடல் எண் : 21

வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.

பொழிப்புரை :

நெருப்புப்போலும் நஞ்சினை வெளிவிடுகின்ற பாம்பைக் கண்டு அஞ்சுதலை ஒழித்து வெள்ளிய திங்களைச் சிவந்த சடை முடியின் மேல் வைத்துள்ள, வேதப் பொருளானவனே, நாளுக்கு நாள் மிகுந்து வருகின்ற மூப்பும் கொடிய நோயும் செய்கின்ற போருக்கு அடியேன் சிறிதும் ஆற்ற மாட்டாதவனாய் உள்ளேன்.
அதனால், திருநீற்றைப் பூசிக் கொண்டு உன் அருகில் வந்து நிற்கும்படி அடியேனுக்கு அருள்புரி.

குறிப்புரை :

கண்டாய், முன்னிலையசை.
கூற்றுவன் வருகைக்கு அறிகுறியானவற்றை, ``கூற்றம்`` என்றே உபசரித்துக் கூறினார்.
`விரைந்து வீடருளுக` என்பது கருத்து.
வைகல் - நாள்.
வெரு - வெருவுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
``வெண்மதி செஞ்சடை`` சொல் முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 22

வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான் செல்வம் ஆவதென்
றேன் மேல் நினைப்பு வண்டேர்
ஒதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.

பொழிப்புரை :

வேதப் பொருளாகிய சிவபெருமானது பாதங் களை யான் பாவித்தேன்; பணிந்து, `ஞானம்` என்னும் ஒளி என்னிடத்தில் வந்து பொருந்துபடி இசைந்து நின்றேன்.
அங்ஙனம் நின்ற எனக்கு, `இன்று முதல் இந்த முறைமையே முறைமை` என அவன் அருளிச் செய்தான்.
ஆயினும், இதற்கு மேலும் எனக்கு ஒரு கருத்து உளது.
அஃதாவது, `உமையையும் உன்னையும் போன்ற வகையில் இருவராய் நில்லாது ஒருவராதலே பெருஞ் செல்வம் என்பதாம் - என்றேன்.

குறிப்புரை :

`அச்செல்வம் வாய்க்குங்கொல்` என்பது குறிப்பெச்சம்.
``என்றான்`` என்பதன்பின், `மேல் நினைப்பு, வண்டு ஏர் ஓதியையும், நின்னையும்போலும் வகைத்தாய் இருபாலும் ஒழித்த அதுவே செல்வம் ஆவது என்றேன்`` என இயைக்க.
``ஆவது`` என்பது, `ஆவ தாகிய நினைப்பு` என்றபடி.
ஏய்தல் - பொருந்துதல்.
`சிவன் சிவத் தொடு இரண்டறக் கலந்து நிற்பதே ஞானத்தின் பயன்.

பண் :

பாடல் எண் : 23

ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.

பொழிப்புரை :

சிவனது திருவடிகளையே பற்றாகச் சேர்ந்தேன்.
அதனால் யான் இனி வரக்கடவதாகிய பிறவி யாதொன்றும் இல்லாமல் ஒழித்துவிட்டேன்.
பிறப்பிற்குக் காரணமாகிய அகப்பகை ஆறினையும் மிதித்து மேல் ஏறினேன்.
எனது உள்ளம் உயர்நிலையை அடைந்தது.
உடம்பின் இழிவை உணராது பற்றியிருந்த நிலையைவிட்டு அதன் இழிவை அறிந்து இனிப் பிறரிடம் சென்று இரத்தலைச் செய்யேன்.
எனக்கு உரியதாக என்றாலும், பிறராலும் மதிக்கப்பட்ட இந்த இல்லத்தையும் இகழ்ந்து நீங்கினேன்.
குற்றங்களையே விளைக்கின்ற பஞ்சேந்திரியங்களாகிய யானைகளை அதட்டி அடக்கினேன்.
ஆகவே, யான் இப்பொழுது மயக்கங்கள் யாவும் நீங்கித் தெளிவடைந்தேனாகியேவிட்டேன்.

குறிப்புரை :

`இல்லம்` என்பது இல்லாளையும் குறிப்பது.
அகப்பகை ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.
அடக்குதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
ஏகாரம், தேற்றம்.
சிவனடி சேர்தலின் பயனை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 24

தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தாருரைத்த
கள்ளிய புக்காற் கவிகளொட் டார்
கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல்
ஆயினுங் கொண்டருளே.

பொழிப்புரை :

சிவபெருமானே, அடியேன் இனிய கவிகளைப் பாடவல்ல தெளிந்த அறிவடையாரை அடுத்ததும், இல்லை.
ஆயினும் ஆசையால் உன்மேல் இனிய கவிகளைப் பாடத் தொடங்கிவிட்டேன்.
அவற்றிற்கு `ஏற்ற விளக்கமான சொற்கள் இவை` என்பதையும் அச்சொற்கள் என்னென்ன பொருள்களைத் தரும் என்பதையும் அறிவினால் பெறப் பெற்றேனில்லை.
பழமையாகப் பாடினவர் களுடைய கவிகளிலிருந்து அவற்றைக் களவு செய்து கொள்ளப் புகுந்தால், அவர்களோ, அல்லது அக்கவிகளைக் கற்று வல்லவர்களோ அதற்கு இடங்கொடுக்க மாட்டார்கள்.
ஆகவே, ஆசையால் வாய்க்கு வந்ததைக் `கவி` என்று சொல்லிப் பாடுகின்ற பாடல்கள் அறிவுடை யோரால் கொள்ளத்தக்கன அல்ல.
அவை மிகப் புல்லிய சொற்களா யினும் ஏற்றருள்; நீ கடலில் தோன்றிய நஞ்சினையும் உண்ட பெருமான் அல்லையோ!

குறிப்புரை :

`அந்நஞ்சினுமா என் கவிகள் கொடியன` என்பது குறிப்பு.
கள்ளிய - களவு செய்ய.
கவிகள் - கவிபாடுவோர்.
கொள்ளிய - கொள்ளப்படுவன.
கண்டாய், முன்னிலையசை.
``நஞ்ச யின்றாய்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலின், அதனை வேறு வைத்து, இவ்வாறு பொருள் உரைக்கப்பட்டது.
`பாடிப்பரவும் ஆசை யுடையாரை அவர்க்கு அவ்வன்மையின்மை பற்றி இகழாது, அன்பு பற்றி ஏற்றுக் கொள்ளவே செய்வான் என்பதும், `அவன் நஞ்சுண்ட செயல் இதனைக் குறிக்கும் குறிப்பும் ஆகும்` என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 25

அருளால் வருநஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.

பொழிப்புரை :

(பெருமானே) இருளாகிய குற்றம் நீங்கும்படி இரவில் அழகு பொருந்தி நிறை நிலாத் தோன்றி விளங்கினாலும், சிறிய மின்மினிப் பூச்சியும் அஞ்சாது அதன் எதிரே சென்று, `எனது ஒளியும் இருளை விழுங்கும்` எனக் கருதித் தனது ஒளியால் சிறிது விளங்கிநிற்கின்றது.
அதுபோல, பாற்கடலினின்றும் தோன்றித் தேவரைத் துரத்தி வந்த நஞ்சினை அவர்கள் மேல் வைத்த கருணை யால் உண்டும் இறவாதிருக்கின்ற உனது கருணை மிகுதியைப் பொரு ளாக நிரப்பி அத்தேவர் கூட்டம் உயர்ந்த கவிகளைப் பாட, நானும் `கவிகள்` என்ற பெயரில் சில சிறுசொற்களைக் கோக்கின்றேன்.

குறிப்புரை :

`உலகர் மின்மினியை வெறாது நகைத்து ஏற்றல்போல, நீயும் எனது கவிகளை வெறாது நகைத்து ஏற்றருள்வாய்` என்பது கருத்து.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
``பொருள்ஆர்`` என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.
`இறைவன் தனக்கு அர்ப்பணிக்கப்படும் பொருள்களின் தன்மையை நோக்காது, அர்ப்பணிப்பவர்களது உள்ளத்தில் நிற்கும் அன்பையே நோக்குவான்` என்பதும் இதனால் உணர்த்தப்பட்டது.
இச்செய்யுள் எடுத்துக்காட்டு உவமையணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 26

விரிகின்ற ஞாயிறு போன்ற
மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தாலெந்தை ஒண்பொடியே.

பொழிப்புரை :

என் தந்தையாகிய சிவபெருமானுடைய திரு மேனி விரிந்து விளங்குகின்ற ஞாயிற்று வட்டம் போன்றுள்ளது.
எங்கும் வீழ்ந்து சுழல்கின்ற சிவந்த சடைகள் அந்த ஞாயிற்றைச் சூழ்ந்து சுடர்விடுகின்ற வெவ்விய கதிர்களைப் போன்றுள்ளன.
அச்சடைக்குக் கீழ் உள்ள கண்டம், அந்த ஞாயிற்றின் கதிர்கட்கு அஞ்சி ஓடி ஒளிந்த கரிய இருள்போன்றுள்ளது.
கண்டத்தின் கீழ் மார்பில் பூசப்பட்டுள்ள திருநீறு, அந்த இருட்குக் கீழாய்த் தோன்றிப்படரும் வெள்ளிய முகில் கள் போன்றுள்ளது.

குறிப்புரை :

சரிதல் - தோற்று நீங்குதல்.
சடை, சாதியொருமை.
`அச் சடைக்கீழ்க் கண்டம் இருள்போன்றது` என இயைக்க.
வெண்முகில் சூல் கொள்ளாத மேகம்.
பெருமானது திருவுருவத்தை வகுத்துப் புகழ்ந்தபடி.
இது மாலை யுவமையணி.

பண் :

பாடல் எண் : 27

பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.

பொழிப்புரை :

(என் மகளுக்கு) இன்னும் கொங்கைகள் முகிழ்ப் படையவில்லை.
பல் விழுந்து முளைக்கவில்லை.
அவளது சொற்கள் பொருள் விளங்கும் அளவிற்குத் திருந்தவில்லை.
கூந்தல் கூட்டி முடிக்க வரவில்லை.
(`பேதைப் பருவத்தினள்` என்றபடி) ஆயினும் இவள் நிலைமையைக் கேளுங்கள்; பெரிய வெள்ளநீர் எப்பொழுதும் இருக்கும் சிவந்த சடைமுடியையும், மேகம் போன்ற கண்டத்தையும் உடைய சிவபெருமான் தன்மேனியில் அணிந்துள்ள நறுமணம் உள்ள கொன்றைத் தாரின் மணம் கமழ்கின்ற உடம்புடையளாயினாள்.
`இதையறிந்தால் அயலார் சொல்லும் சொற்கள் எவையாய் இருக்கும்` என்பதையான் அறிகின்றிலேன்.

குறிப்புரை :

`பேதைப் பருவத்தே இவள் புத்தியறிந்து சிவனைத் தழுவிவிட்டாள்; இனி, இவள் பிறன் ஒருவனுக்கு உரியளல்லள்` எனப் பலரும் கூறுவார்கள் என்பதாம்.
இது கருவிலே திருவுடையராய்ச் சாமுசித்தராய்ப் பிறந்து, குழவிப் பருவத்தே சிவனையடைந்த ஞானசம்பந்தர் போன்றாரது பெருமையைக் குறிப்பால் உணர்த்தியது.
முதுக்குறைந் தனளே! முதுக்குறைந் தனளே
மலையன் ஒள்வேற் கண்ணி;
முலையும் வாரா; முதுக்குறைந் தனளே!
என்னும் பழம்பாடல் ஒன்றை இதனுடன் ஒப்பு நோக்குக.
`பிறர்க்கு உரியளல்லள்` என்பது, `கைச்சிறு மறியவன் கழல் அலாற் பேணாக் கருத்து` 1 உடையர் ஆதலையும், `அயலார்` என்பது பௌத்தர்களையும் உள்ளுறையாகக் குறிக்கும்.
``முடிக்கின்றில`` என்பது முடிக்கப் படு கின்றில` என்றபடி.
நீங்காதிருத்தலை, `குடிகொண்டிருத்தல்` என்றல் வழக்கு, ``குடிக் கொண்ட`` என்பதில் ககர ஒற்று விரித்தல்.
போக மாலையாவது மார்பிற் புரளும் தார் ஆகலானும் ``கண்ணிகார் நறுங் கொன்றை, காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 என்ப ஆகலானும், ``மெய்க்கொண்ட கொன்றை` என்றது, கொன்றைத் தார் ஆயிற்று.
அது மும்மடி ஆகு பெயராய், அத்தாரின் மணத்தைக் குறித்தது.
நாறுதல் - கமழ்தல்.
ஒற்றுமையால் உடம்பும், உயிரும் சினையும், முதலும்போல நிற்றலால், ``நாறுகின்றாள்`` என்றது, சினைவினை முதல்மேல் நின்றதாம்.
இப்பாட்டுச் சிவபெருமானோடு களவிற் கலந்த பேதைப் பெண் ஒருத்திக்குச் செவிலியாயினாள் கூற்றாக அருளிச் செய்யப்பட்டது.
ஞானிகளது செயலை உலகர் அறியார் ஆதலின், அது களவோடு ஒப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 28

உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் வொத்துள தால்சிர
மாலையெம் கண்டனுக்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சொற்கள் வளர்ந்து வாரா நின்ற நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு உலகம் எங்கும் பிச்சைக்குத் திரிகின்ற, சிவபெருமானுக்கு அவனது சடை முடியில் அலையை அடக்கிக் கொண்டுள்ள கங்கை நீர் தீர்த்தமாய் இருக்க, அதைச் சுற்றியுள்ள தலைமாலை, அந்தத் தீர்த்தத்திற்கு உயர்த்துக் கட்டிய கரை போன்று அமைந்து பெருமையைத் தருகின்றன.

குறிப்புரை :

கண்டன் - தலைவன்.
`எம் கண்டனாகிய மார்பனுக்கு அவன் விரிசடைமேல்` எனக் கூட்டியுரைக்க.
சொற்கள்.
வளர்த லாவது, வழிவழியாக ஓதப்பட்டு வருதல்.
வினா - வாசனை.
முன் இரண்டடிகள் சிவனைச் சிறப்பித் துணர்த்த வந்தன.
``திரை வளர்`` என்றதில் வளர்தல், உள்ளே பொங்குதல்.
தீர்த்தம் - புண்ணியப் பொய்கை.
வளர்வு - வளர்ச்சி உயர்தல்.
சிவபெருமானது தலையலங் காரத்தையும் புகழ்ந்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 29

கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.

பொழிப்புரை :

எமது புண்ணியத்தின் பயனாய் விளங்கும் சிவ பெருமான் கண்டம் கரிய நிறமானவன்; யானையை உரித்த தோலைப் போர்வையாக உடையாக உடையவன்; சிறிய மானைக் கையில் ஏந்திய தலைவன்; பிரமனது தலைகளில் ஒன்றைச் சேதித்த குருதி பொருந்திய கூரிய படைக்கலத்தை உடையவன்.
ஆயினும் அவன் தனது இயற்கையில் அனைத்துலகங்களையும் கடந்த பெரியோன்; அநாதியன்; அதனால, `பரம சிவன்` என்று குறிக்கப்படுபவன்.

குறிப்புரை :

`சிவன் தனது இயற்கை நிலையில் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, அருவத்தையும் கடந்து, கால இட எல்லைகளில் எதுவும் இன்றியிருப்பவனாயினும் உயிர்களின் மேல் வைத்த கருணையால் பலவேறு திருமேனிகளையும், அவற்றிற்கு ஏற்ற பெயர்களையும், செயல்களையும் உடையவன் ஆகின்றான்` என்றபடி.
பரம சிவன் - சுத்த சிவன்.
அல்லது சொரூப சிவன்.
சிவன் தடத்த சிவன்.
`பிரமன் தலையைக் கை உகிரால் கிள்ளினான்` என்பதே வரலாறு.
ஆதலின் அதனை இங்கு, `படைக்கலம்` எனக் கூறினார் என்க.
`பிரமன் ஓர் சிரம் அரிந்த` எனக் கூட்டுக.
`பண்டு` என்பது ஐகாரம் பெற்று, `பண்டை` என வருவது இங்கு ஐகாரம் பெறாது வந்தது.
`ஆரம், எலும்புமாலை` என்பது ஏற்புழிக் கோடல்.

பண் :

பாடல் எண் : 30

புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடல
நாடற் பசுபதியே.

பொழிப்புரை :

பசுக்களாகிய உயிர்கட்கெல்லாம் பதியாகிய சிவன் நல்லோருடைய புண்ணியங்களின் பயனாய் உள்ளவன்; கொடி யோருடைய குருதி ஒழுகும் முத்தலை வேலை ஏந்திய தலைவன்; கடலில் தோன்றிய நஞ்சைக் கண்டத்திலே உடையவன்.
எலும்பு மாலையன்; கண் பொருந்திய நெற்றியை உடையவன்; ஆகாய கங்கையைத் தரித்தவன்; உமையவள் தாளம் இட ஆடுபவன்; பண் பொருந்திய பாடலைப் பாடுபவன்.
அவனையே, நெஞ்சே, நாடுக.

குறிப்புரை :

`பசுபதி` என்பதை முதலிற் கொள்க.
வேல், முத்தலை வேல், வேலை - கடல்.
அங்கம் - எலும்பு.
கண்ணி - மாலை.
`விண்ணன்` என்பது இடையே இகரம் விரித்தல் பெற்று வந்தது.
அடியார்கட்கு வெளிப்படுங்கால் விண்ணில் நின்று காட்சி வழங்குதல் பற்றி இறைவனை, `விண்ணன்` என்றார்.
``பாணி`` இரண்டில் முன்னது நீர்; பின்னது தாளம்.
`உமையாற் பாணி கொளப் பண்ணியன்` என்க.
பண்ணியன் - கூத்தாடுபவன்.
`கோயில் திருப்பண்ணியர் விருத்தம்` என்றது காண்க.
நாடல் - நாடுக.
`அல்` ஈற்று வியங்கோள்.
இதற்கு.
`அவனையே` என்னும் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது.
`ஆடல்` எனப் பிரித்து, `பல்வேறான அருள் நாடகங்களை உடைய பசுபதி` என்று எடுத்துக் கொண்டு உரைப்பினும் ஆம்.
இப் பொருட்குப் பாடம், `ஆடற் பசுபதி` என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 31

பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்
றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண் டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள
தீவது மங்கையர்க்கே.

பொழிப்புரை :

பாவைபோலும் அழகை உடையவர்களே, நம் தில்லைப் பதியில் இருப்பவராய், பிச்சை ஏற்பதற்கென்று வந்த ஒருவருக்கு வேகமாகக் செல்லும் காலை ஊர்தி ஒன்று உண்டு; கண்கள் மூன்று உள்ளன; கறை பொருந்திய கண்டம் உண்டு; வெப்பம் மிகுந்த மழு உண்டு; `கொக்கரை` என்கின்ற வாச்சியம் உண்டு; தலைமை வாய்ந்த நடனம் உண்டு; பிறையைக் கண்ணியாகச் சூடிய முடிச் சடைகள் உள; இவையேயல்லாமல்; தம்மைக் காண்கின்ற மங்கையர்கட்குத் தருவதாக ஒரு மையலும் அவரிடம் உண்டு.

குறிப்புரை :

`அவர் யாவர் என நீவிர் அறிவீரோ? அறிவீராயின், எனக்காக அவர் பாற் சென்று, எனது மையல் நோயை உரைப்பீராக` என்பது குறிப்பெச்சம்.
இது தலைவன்பால் பாங்கியைத் தூதுவிடக் கருதியாள் கூற்று.
எனினும் உயிர்ப் பாங்கியை நோக்கிக் கூறாது, இறைவனைப் பிரிந்து ஆற்றகில்லாத அதிதீவிர பக்குவரது நிலை இதன் உள்ளுறை.
இறை - இறைமை; தலைமை.
மால் மயக்கம்.

பண் :

பாடல் எண் : 32

மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.

பொழிப்புரை :

பெண்மைத்தன்மைத்தாகிய கங்கை நதியின் அலையிடையே, சீற்றம் மிக்க சிவந்த கண்களையுடைய பாம்புகள் மிகுதியாய்ச் சடைகளின் இடையே தங்குவதும், கொன்றை முதலிய மலர்களுக்கிடையே பிறை தங்குவதும் ஆகிய முடியினையுடைய, பாண்டரங்கக் கூத்தனாகிய சிவபெருமான் இம்மங்கையின் கொங்கைச் சரிவிற்கு இடையே இங்கும் அழகிய குங்குமச் சேறு உடல் வெப்பதால் நீராகி உடம்பெங்கும் ஓட, இவள் கையில் உள்ள சங்க வளையல்களையும் கவர்ந்து அங்கே (அயலிடத்தே) செல்பவனாகின்றான்.

குறிப்புரை :

`இனிச் செய்வதென்` என்பது குறிப்பெச்சம்.
இது, நற்றாய்க்கு அறத்தொடு நிற்கக் கருதும் செவிலியது கூற்று.
இப்பாட்டு மெல்லிசை வண்ணக் கலித்துறையாய் நின்றது.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
`பாண்டரங்கன்` என்பது `பண்டங்கன்` என மருவிற்று, பாண்டரங்கம், ஒருவகைக் கூத்து.
பங்கம் - சேறு.
நுங்குதல் - முழுதும் வீழ்ந்து மறைத்தல்.
பங்கி - தலைமயிர்.
அஃது இங்குச் சடையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 33

பண்டங்கன் வந்து பலிதாவென்
றான்பக லோற்கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னமென்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்னையம்பெய் என்றான்
கொடித்தேர் அனங்கனென்றேன்
உண்டிற் கமைந்ததென் றாற்கது
சொல்ல உணர்வுற்றதே.

பொழிப்புரை :

`பாண்டரங்கம்` என்னும் கூத்தினைச் செய்வோ னாகிய சிவபெருமான் பிச்சாடனனாய் எங்கள் கடைத்தலையில் வந்து நின்று, இருபொருள் பட `பலிதா` எனக் கூறினான்`, அவன் குறும்பாக பல்லை உடையவளே, அவற்றை எனக்குத் தா (முத்தம் கொடு) என உள்ளுறையாக வேறொரு பொருளைத் தருதலை யான் உணர்ந்து கொண்டு, அந்த வார்த்தையை நீவிர் சூரியனிடம் சொல்லுக` என்றேன்.
பின்பு அவர் `அன்னம்` என்றார்.
அது வெளிக்கு, `சோறு (தா - எனப்பொருள் தருமாயினும், உள்ளுறையாக, `நீ ஓர் அன்னப் பறவை போல நடக்கின்றாய்` எனப் பொருள் தருதலை யான் உணர்ந்து கொண்டு, `ஆம்! நீர் சொல்வது பிரமதேவனுடைய ஊர்தி` என்றேன்.
பின்பு அவர், நீ விரைவில் கொண்டு உனது ஐயம்பெய் என்றார்.
அது வெளிக்கு, `பிச்சையிடு` எனப் பொருள் தருமாயினும், உள்ளுறையாக `உன்னிடத்து உள்ள ஐந்து அம்புகளை கொண்டு வந்து எய்` எனவும் பொருள் தருதலை யான் உணர்ந்துகொண்டு, ஆம்! அதற்கு உரியவன் மன்மதன்` என்றேன்.
அவரும் `உண்மை; நீ சொல்லியன எல்லாம் பொருத்தமானவைகளே` (என்று சொல்லிவிட்டு வாயடங்கிப் போனார்).
அவரது சொல்வன்மைக்குத் தக மறுமொழி சொல்ல எனக்கும் உணர்வு உண்டானது வியப்பு.

குறிப்புரை :

வருவித் துரைத்தன இசையெச்சங்கள்.
`பாண்டரங்கன்` என வந்தது பண்டங்கன் செய்யுள் முடிபு, `பலி` என்பது உள்ளுறைப் பொருளில் `பல்லி` என்பதன் இடைக்குறை.
பல்லி - பல்லை உடைய வள்.
`ஐயம்பெய்` என்பதை, `ஐயம் பெய்` எனவும் `ஐ அம்பு எய்` எனவும் பிரித்துக் கொள்க.
அனங்கன் - மன்மதன்.
இது முன்பே தனது உள்ளம் சிவன் வயப்பட்டு அதனை மறைத்து ஒழுகும் தலைவியது நிலையை.
அவள் தன்னிடம் மறையாது வெளிப்படுத்தற் பொருட்டுத் தோழி தானும் அந் நிலை அடைந்தது போலவும், அடையாதது போலவும் இரு பொருள் பயப்பக் கூறியது.
இது, ``மெய்யினும், பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர் பொருள் நாட்டம்`` ``கயமலர் உண் கண்ணாய்`` என்னும் கலித்தொகைப் பாட்டுப்போல (கலித். - குறிஞ்.37).

பண் :

பாடல் எண் : 34

உற்றடி யாருல காளவோர்
ஊணும் உறக்குமின்றிப்
பெற்றம தாவதென் றேறும் பிரான்
பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய்
இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகவென்
னுக்கு மெலிக்கின்றதே.

பொழிப்புரை :

தன்னைப் புகலிடமாக அடைந்த அடியார்களை (யானைமேல் உலாவந்து) உலகாள வைத்துத்தான் எருதின் மேல் ஏறிச் செல்கின்ற, அத்தகைய கருணையாளனாகிய சிவபிரான், பெரிய வேல் போன்ற, நீண்ட கண்களையும், சிறிய பாதங்களையும், வெண்மையான பற்களையும், சிவந்த வாயினையும் உடைய, என் தாயாகிய இவள் அவன் அணிந்துள்ள தலை மாலையை விரும்ப, அதனைத் தாராமல், அதன் பொருட்டு நாளும் உண்ணும், உறக்கமும் இல்லாமல், தன் இடை இயல்பிலே துவளுவது போல மேனி முழுதும் மெலிந்து போம்படி இவளை மெலியப் பண்ணவது ஏனோ!

குறிப்புரை :

`உற்ற` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
`உறக்கம்` என்பது ஈற்று அம்முக்கெட்டு, `உறக்கு` என நின்றது.
பெற்றம் - எருது.
ஆவது - விருப்பமாவது.
தாய் மகளை, `யாய்` என்றது, காதல் பற்றி வந்த மரபு வழுவமைதி.
இது தலைவியது ஆற்றாமை கண்டு, சிவபெருமானாகிய தலைவனைச் செவிலி இயற் பழித்துக் கூறியது.
இதன் கொண்டு கூட்டினை அறிந்து கொள்க.
``இற்று இடை ஆம்படியாக`` என்பதை, `இடையாய் இற்றிடும் படியாக` என மாற்றிவைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 35

மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.

பொழிப்புரை :

நீரின்கண் விரவிய தீ வெளித்தோன்றாது நிற்றல்போல எப்பொருளினுள்ளும் நிறைந்திருப்பவரும், ஒளி பொருந்திய மேனியை உடையவரும், மூன்று கண்களையுடைய முதல்வரும் ஆகிய சிவபெருமானாகப் பிச்சை ஏற்பவராக வேடம் பூண்டு, `பிச்சை` என்று கேட்டு வீதியிலே வந்தார்.
அவர் வரவைக் கண்டதும் பல உயிர்கள் அவரது வாசனை பொருந்திய கொன்றை மாலையைப் பெற்றுத் தாம் சூடிக்கொள்ள விரும்பி, எம்பொருளையும் அழிக்கின்ற, கொடிய தீயினிடத்து வெண்ணெயும், வெயிலிடத்து மெழுகும் போல ஆகிவிட்டன.
(ஆயினும் பயன் என்ன?) தாங்கிக் கொள்கின்ற காமம் கைப்பொருளானதும், உறக்கம் அருகிப் போனதுந்தாம் கண்டது.
கால தூதுவர் வந்து தம்முள்முணு முணுக்கின்ற ஓசைகள் அவற்றின் காதுகளில் ஒலிக்கின்றன.

குறிப்புரை :

`இனி அவைகட்கு நிகழ இருப்பது இறந்து பாடே என்ப தாம்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
சூடிய - சூடுதற்கு, `செய்யிய` என்னும் வினையெச்சம்.
பெண்டிரைப் பயனின்றி மெலிதல் நோக்கி, ``உயிர்`` என்றார்.
``வாய்`` என்னும் ஏழன் உருபை தீக்கும் கூட்டுக.
இழுது - வெண்ணெய்.
மெழுகு - அரக்கு.
இவற்றின் பின், `ஆயின` என்பது எஞ்சி நின்றது.
`தரிக்கின்ற` என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றதும் கரதலப் பொருளைக் ``கரதலம்`` என்றது ஆகுபெயர்.
கரதலப்பொருளவாது, கிடைத்த பொருள்.
மெல்லிது, இங்கு மிகக் குறைந்ததைக் குறித்தது.
``கூற்றம்`` என்றது, கூற்றனின் தூதுவரை.
அஃது ஆகுபெயராய் அவர்தம் வாயொலியைக் குறித்தது.
ஒலிக்கின்ற - ஒலிக்கின்றன.
இது பெருமானது பிச்சைக் கோலத்து அழகினைப் புகழ்ந்தவாறு.
`சென்றார்` என்னாது, ``வந்தார்`` என்றது இடவழுவமைதி.
``வருவிருந்து வைகலும் ஓம்புவான்`` * என்பதிற் போல.
``நீருறு தீயே`` என்னும் திருவாசகத்தைக் காண்க.

பண் :

பாடல் எண் : 36

பல்லுயிர் பாகம் உடல் தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.

பொழிப்புரை :

பகலோனது (சூரியனது) பல்லைப் பறித்தும், மறலி (யமனது) உயிரை உதைத்துப் போக்கியும், பெண் (உமா தேவியது) ஒரு பாதியினைத் தான் பொருந்தியும், வில்லி (மன் மதனது) உடலைச் சுட்டும், ஓர் வேதியனது (பிரமனது) தலையை அறுத்தும், யானையை உரித்தும் புகழைப் பெற்ற சிவபெருமானது புகழை உரையாற் சொல்லியும், பாட்டால் பாடியும் துதித்தால் நம்மைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அழிந்துபோம்.

குறிப்புரை :

`இது நிரல் நிறைப் பொருள்கோள்` என்பதை ஆசிரியரே, ``நிரையே`` என்பதனாற் குறித்தார்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
(குறள்.
, 5) என அருளிச் செய்த வழி நிற்றற்கு இறைவனது பொருள்சேர் புகழ் களைக் கிளந்தெடுத்துக் கூறியவாறு.
``துயர்`` என்றது பிறவித் துயரை யும் உள்ளடக்கியேயாம்.
`மறலி` என்பதைத் தொழிலாகு பெயராக, ``மறல்`` என்றார்.
இது முதல்நிலைத் தொழிற் பெயர்.

பண் :

பாடல் எண் : 37

துயருந் தொழுமழும் சோரும்
துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்குமந்தோ இங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக்
காட்பட்ட வாணுதலே.

பொழிப்புரை :

(மறைக் காட்டு இறைக்கு ஆட்பட்ட வாள் நுதல்) திருமறைக்காட்டுப் பெருமானுக்கே தான் உரியளாகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொண்ட என் மகள், (அவன் வந்து தன்னை ஏற்றுக் கொள்ளாமையால்) துன்புறுவாள்.
தொழுவாள்.
அழுவாள்; நெகிழ்கின்ற உடையும் மேகலையும் தன்னைவிட்டு நீங்கத் தான் அலைவாள்; வாயில் வந்தவற்றைப் பிதற்றுவாள், சிலபொழுது சிரிப்பாள், பெருமூச்செறிவாள், தணிக்கலாகா நோய் மிகுந்தவளாய்ச் சோர்வாள்; போராட்டமாக விக்குள் எழ விக்குவாள்; உடல் திமிர் ஏறியது போல முரித்துக்கொள்வாள்.
அந்தோ! அவ்வா றெல்லாம் மையல் மிகுகின்றாளே; (யான் என் செய்வேன்.)

குறிப்புரை :

``துயரும், மயரும்`` என்பனவும் ஏனைய போலச் `செய்யும்` என்னும் முற்றுக்களே.
இப் பொதுவினை இங்குப் பெண் பாலில் வந்தது.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி கவன் றுரைத்தது.
அதிதீவிர பக்குவிகளது நிலைமை கண்டு உறவினர் கவறுதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 38

வாணுதற் கெண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன்
திருமால் அவர்க்கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல்
நைந்திவள் தாழ்கின்றதே.

பொழிப்புரை :

வளர்ந்த சடைகளையுடைய, அடியார்கள் `எந்தை` என்று ஏத்தும் சிவபெருமான் பிச்சை ஏற்க வந்தால், என் மகள் `நாண வேண்டுமே` என்று எண்ணாமல், விரைவில் பிச்சையை எடுத்துக்கொண்டு சென்று, அவன் எதிரிலே சிரிக்கின்றாள்.
அவன் மேல் விருப்பங் கொண்டு அவனுடன் நட்புக் கொள்ள நினைக் கின்றாள், அந்தப் பிரம விட்டுணுக்களாலே அடைதற்கரிய தலை வனைத் தான் அடைய விரும்பி இவள் இராப்பகலாக வருந்தி நகுதற் குரியளாதல் என்ன அறிவுடைமை? இவளுக்குப் புத்தி நல்லதாய் இல்லை.

குறிப்புரை :

நல்லது, இங்குப் பயன்படுவதை விரும்புவது.
இது, தலைவியது பேதைமை பற்றிச் செவிலி இரங்கிக் கூறியது.
இறைவன் அன்பர்க்கு எளியன் ஆதலையறியாத உலகர் அல்லாதார்க்கு அவன் அரியன் ஆகின்ற அஃது ஒன்றே பற்றி அன்பு செய்வார்மேல் இரக்கங் கொள்ளுதல் இதன் உள்ளுறை.
``எந்தை`` என்பதை ஒரு சிலர் கூற்றாக்காவிடின் முறை கெடும்.

பண் :

பாடல் எண் : 39

தாழுஞ் சடைசடை மேலது
கங்கைஅக் கங்கைநங்கை
வாழுஞ் சடைசடை மேலது
திங்களத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடை சடை மேலது
பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.

பொழிப்புரை :

எங்கள் பெருமுனிவனாகிய சிவபெருமானுக்கு உள்ளவை நீண்டு தொங்கும் சடை.
அச்சடையின்மேல் உள்ளது கங்கை நதியாதலின் அது கங்கையாகிய நங்கை வாழும் சடையாகின்றது.
அந்தச் சடை மேல் மற்றும் உள்ளது பிள்ளைத் திங்கள் (பிறை) ஆதலின் அந்தச் சடை பிள்ளைத் திங்களால் (பிறையால்) போழப் படும் (நுழைந்து செல்லப்படும்) சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது சீற்றம் மிக்க பாம்பு ஆதலின் அந்தச் சடை பாம்பு வசிக்கின்ற சடையாகின்றது.
அந்தச் சடைமேல் உள்ளது கொன்றை மாலை (ஆதலின் அதுவே அவனுக்கு அடையாள மாலையாய் உள்ளது)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது இசையெச்சம்.
``மேலது`` என்பவற்றை அடுத்து வந்தன பலவற்றின் பின்னும் `ஆதலால்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இரண்டாம் முறையாக வந்த ``சடை`` என்பவற்றிற்குச் சுட்டு வருவிக்க.
`பிள்ளை` என்பதை முன்னும் கூட்டி, `பிள்ளைத் திங்கள்` என மாற்றியுரைக்க.
புகழை மிகுத் துரைக்கின்றார் ஆதலின், சொற் பொருட் பின்வரு நிலையணி தோன்றப் பல தொடராற் கூறினார்.
எனினும், அடையாள மாலை யாகிய கொன்றையைச் சிறப்பித்தலே இப்பாட்டிற்குக் கருத்தென்க.
`சிவபிரான் பெரு முனிவன்` என்பதை விசுவாதிகோ, ருத்ரோ, மஹருஷி`` 1 என்னும் உபநிடதத் தாலும் அறியலாம்.
`பற்றற்றவன், தவக்கோலம் உடையவன்` என்பது இதற்குக் கருத்து.
``முன்னியாய் நின்ற முதல்வா போற்றி`` 2 என அப்பரும் அருளிச் செய்தார்.
இதன் பின்னும் `உள்ளது` என்னும் எழுவாய் எஞ்சி நின்றது.

பண் :

பாடல் எண் : 40

முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.

பொழிப்புரை :

முனிவனே, நறுமணம் கமழ மலர்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, எனக்குச் சாதலைத் தவிர்த்த கனியாய் உள்ளவனே, உனது வீரக் கழல் அணிந்த திருவடிகளைத் தவிர வேறு துணை ஒன்றும் இல்லேன்; (இவ்வுடம்பொடு நிற்றலால்) பெரிய தவத்தைச் செய்ய இயலாமல் ஐம்புலன்களையே நினைந்து தமியேன் படுகின்ற இடர்ப்பாட்டினை யார்க்கு அறிவித்துத் தீர்வு காண்பேன்; இப்பொழுதே என்னை நீ ஏற்றுக்கொள்.

குறிப்புரை :

முதற்கண், `முனியேல்` எனப்பாடம் ஓதுவாரும் உளர்.
``என்னை`` என்பது உருபு மயக்கம்.
அன்றி, `மூப்பொழித்து ஆண்ட` என ஒரு சொல் வருவித்து முடிப்பினும் ஆம்.
கனி, ஔவை உண்ட நெல்லிக் கனி போன்றது.
இப்பாட்டு, பாசப் பற்று அற்றவழியும் வாதனை தாக்குதலைக் கூறியது.

பண் :

பாடல் எண் : 41

சாற்றுவன் கோயில் தலையும்
மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்
தாற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத்
தானென் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.

பொழிப்புரை :

யான் இப்பொழுது அன்பு என்னும் நெய்யைச் சொரிந்து, (அருளாகிய தீயை வளர்த்து) அதில் தலையையும், மனத்தையும் நிறுத்தித் தவம் செய்வேன்; அதனால் அவை யிரண்டையும் `சிவனுடைய கோயில்` என்றே சொல்வேன்.
அழகிய சொல் மாலைகளைச் சிவனுக்கு அணிவிப்பேன்; தோத்திரங்களாய் உள்ளவற்றைச் சொல்லுவேன்; இவ்வாற்றால், `சிவன் என் மனத்தில் தான் உள்ளான்` என்று பலரும் அறியக் கூறுவேன்.

குறிப்புரை :

`தலையும், மனமும் கோயில் எனச் சாற்றுவன் எனவும், `நெய் சொரிந்து இவற்றால் தவம் ஆற்றுவன்` எனவும் இயைக்க.
நெய்சொரிதலாகிய காரணத்தைக் கூறினமையால், தீ வளர்த்தலாகிய காரியம் கொள்ளப்பட்டது.
`என` என்பது எஞ்சி நின்றது.
ஒருகாலை ஊன்றித் தவம் செய்தலேயன்றித் தலைகீழாக நின்று தவம் செய்தலும் உண்டு என்பதை அறிந்து கொள்க.
புறத்து வளர்க்கும் அங்கியிலும், அகத்து வளர்க்கும் அங்கி சிறந்தது என்க.
``சொல் மாலை`` என்றது தாமே இயற்றுவனவற்றையும், ``தோத்திரம்`` என்றது முன்னோர் இயற்றியவற்றையும் என்க.
``மாலையால்`` என்பதை, `மாலையை` எனத் திரிக்க.
இனி - இப்பொழுது.
`தவம் செய்தல், சொல் மாலை அணிவித்தல்,தோத்திரம் சொல்லுதல்.
இவற்றைச் செய்தல் அவ்வாறு செய்பவரது உள்ளத்தில் சிவன் வந்து குடிகொள்ளுதல் உறுதி` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 42

சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்
காத்தலை யும்பொறையும்
அல்லா அவயவந் தானும்
மனிதர்க் கசேதனமே.

பொழிப்புரை :

சோதிக்குட் சோதியாய் (ஒளிக்குள் ஒளியாய் - அறிவுக்குள் அறிவாய்) உள்ள சிவபெருமானுடைய பெயரைக் கேளாத செவிகள் செவிகள் அல்ல; ஒலி நுழையாத வன்மையை யுடைய மரங்கள்.
அதனைச் சொல்லாத நாக்கள் நாவல்ல; உழுபடை யின் நாக்கு, அவனைப் பரம்பொருளாகத் தெளிந்து தொழாத கைகள் மண்ணால் செய்து வைக்கப்பட்ட போலிக் கைகள்; மனிதக் கைகள் அல்ல; அவனை நினையாத மனங்கள் மனங்கள் அல்ல; உளியால் போழ்ந்தாலும் போழப்படாத உறுதியான கற்கள்; அவனை வணங் காத தலைகள் தலைகள் அல்ல; பிற உடற் பகுதிகளுக்கு ஏற்றி வைக்கப் பட்ட ஒரு சுமைகள்.
மக்கட்கு அமைந்த பிற உறுப்புக்களும் (கண், கால் முதலியனவும்) அவனுக்குத் தம்மால் ஆகும் பணியைச் செய்யா விடின் மனித உறுப்புக்கள் ஆகா; சடப்பொருட் பகுதிகளே ஆகும்.

குறிப்புரை :

தோத்திரமும், சாத்திரமும் 1 சிவனை, ``சோதியுட் சோதி`` எனக் கூறுதல் இங்கு நினைக்கத் தக்கது.
தான், பன்மை யொருமை மயக்கம்.
இங்குக் கூறியவாறே, கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
(குறள்.
, 9) 2 எனத் திருவள்ளுவரும் கூறினார்.
``வன்பராய் முருடொக்கும் என் சிந்தை; மரக்கண் என் செவி; இரும்பினும் வலிது`` எனவும், ``நெஞ்சம் கல்லாம்; கண்ணிணையும் மரமாம் தீவினை யினேற்கே`` எனவும் போந்த திருவாசகத்தையும் காண்க.
3 ``திணிந்த`` என்ற விதப்பினால் அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``மனிதர்க்கு`` என்றதனால், `மனித உடம்பும், அவற்றில் அமைந்த உறுப்புக்களும் சிவன் பணி செய்தற் பொருட்டே தரப்பட்டுள்ளன` என்பது விளங்கும்.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவன்.
எனவும் 4 ``வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து`` எனவும், கால்களாற் பயன் என்! கறைக்
கண்டன் உறைகோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக்
கால்களாற் பயன் என்
ஆக்கையாற் பயன் என்! - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி யென்னாத
இவ்வாக்கையாற் பயன் என்.
5 எனவும், ஆமாத்தூர் - அம்மானைக் - காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே
ஆமாத்தூர் - அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே
ஆமாத்தூர் - ஆம்மான்எம் வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே
ஆமாத்தூர் - நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
1 எனவும்,
மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ.
2 எனவும் வருவன பலவும் கண்டுணர்க.

பண் :

பாடல் எண் : 43

தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யானரு ளாற்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோடொக்க எண்ணுவனே.

பொழிப்புரை :

சிவபெருமானது அருள் வழியன்றிப் பிற வழிகளால் மலைபோலும் நிதியையும், பெரிய உலகம் முழுவதையும், பெற்றாலும் அவைகளை யான் என் மனத்தின் கண் நஞ்சினும் கடைப் பட்டனவாக என்றும் நினைப்பேன்.
கொல்லையில் நிற்கும் கொன்றை மரத்தில் தேனொடு மலரும் பூக்களால் ஆகிய மாலையையணிந்துள்ள சிவபெருமானது அருள் வழிப் புழுவாய்ப் பிறக்கினும் அதனையான் எனக்குத் தேவர்களது பொன்னுலகமே கிடைத்துவிட்டது போல என்று நினைப்பேன்.

குறிப்புரை :

``சங்கரன்றன் அருளாலன்றி`` என்பதனை முதலிற் கொள்க.
``பிறந்திடினும்`` என்னும் எதிர்மறை யும்மையை``, ``பெற்றால்`` என்பதற்கும் கூட்டுக.
``மனக்கு`` என்பது உருபு மயக்கம்.
`மனத்துக்கு` என்பதில் சாரியை தொகுக்கப்பட்டது.
``எனக்கு`` என்பதன்பின் `வாய்த்ததாக` என ஒருசொல் வருவித்து முடிக்க.
திருவருளாலன்றிப் பிற வழியால் வருவன வினையின்றி வருதலால் அசுத்தமும், திருவருள் வழியால் வருவன வினையின்றி வருதலால் சுத்தமும் ஆதல் பற்றி இவ்வாறு எண்ணினார்.
திருவருளால் அன்றி வினையால் மட்டுமே வருவனயாதும் இன்மையின் ``பெற்றாலும்`` என்றும் உம்மையும், திருவருளால் புழுவாய்ப் பிறத்தல் இன்மையின் ``பிறந்திடினும்`` என்னும் உம்மையும் எதிர்மறைப்பொருள.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
(குறள்.
, 755)
எனவும்,
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
(குறள்.
, 657)
எனவும் திருவள்ளுவர் அறம் பற்றிக் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக.

பண் :

பாடல் எண் : 44

எண்ணம் இறையே பிழைக்குங்
கொலாமிமை யோரிறைஞ்சும்
தண்ணம் பிறைசடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ தறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.

பொழிப்புரை :

தேவர் பலராலும் வணங்கப்படும், குளிர்ந்த அழகிய பிறையை அணிந்த சடைமுடியை உடையவனும், சங்கால் ஆகிய குழையை அணிந்தவனும் ஆகிய சிவபெருமான் வந்து என் உள்ளத்தின்கண் நீங்காது இருத்தலை அறிந்திருந்தும் எனது அழகிய நிறத்தை அழித்தற் பொருட்டும் இரவும், பகலும் ஊணோடு உறக்கமும் இன்றித் தன் அம்புகளைத் தொடர்ந்து எய்து கொண்டிருக்கின்ற மன்மதனுக்கு, `யாம் வெல்வோம்` என்னும் எண்ணம் சிறிதாயினும் நீங்காதோ!

குறிப்புரை :

சிவபெருமானைக் கண்ட பின் காமனால் கண்ணும் உறங்காது மெலிகின்றவள் தன் மெலிவை மறைத்துக் காமனைத் தோல்வியுறுபவனாக வைத்து இகழ்ந்தாள்; மக்களிலுள்ள இவள் தோற்பதன்றித் தேவரில் உள்ள காமன் தோற்பது எங்குளது! இதனால் அவட்குப் பெருமிதம் பிறந்ததாயினும், கேட்டார்க்கு நகை பிறந்தது.
நனவினான் நம்நீத்தார் என்பர்; கனவினான்
காணார்கொல் இவ்வூரவர்.
* என்றாற் போல்வனவற்றை இங்கு நினைவு கூர்க.
`இறையேனும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்த லாயிற்று.
கொல், ஐயப்பொருட்டாய், இகழ்ச்சி குறித்து நின்றது.
ஆம், அசை.
``சங்கரன்`` என்பதைச் ``சங்கக் குழையன்`` என்பதன்பின் கூட்டுக.
கவர்தல், இங்குப் போக்குதல்.
போதல், பசலையால், தலைவி சிவனைத் தலைப்பட்டவரும், காமன் பழ அடியார்களும் ஆதல் இதன் உள்ளுறைப் பொருள்.

பண் :

பாடல் எண் : 45

காமனை முன்செற்ற தென்றாள்
அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற
தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரையென்
றேற்கிரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.

பொழிப்புரை :

அழகிய தட்பத்தை (கருணையை) உடையவராகிய சிவபெருமான் முன்னிலையில் ஒரு பெண் `இப்பெருமான் (காமனை எரித்தவன், காலனை உதைத்தவன்) இவ்விரு செயல்களுள் முதலிற் செய்தது காமனை எரித்தது தான்` என்று சொன்னாள்.
அவட்கு எதிராக மற்றொருத்தி, `இல்லைகாலனை உதைத்ததுதான் முதலிற்செய்தது` எனத் தன் கைகளை ஒன்றோடு ஒன்று மோதும் படி அடித்து உறுதி படக் கூறினாள்.
யான் `அச்சம் உண்டாக, அவ்விரு வரில் நீவிர் முற்காலத்தில் முதலில் கொன்றது யாரை` என வினவி னேன்.
பெருமான் அவ்விருவருக்காகவும் அஞ்சி, `எவனை முதலிற் கொன்றது` என ஒன்றைத் திட்டமாக வாய்திறந்து கூறாமல், மௌன மாய் இருந்தார்.
(யான் இவரை, `யாரிடத்தில் அன்புடையவர்` என்று நினைப்பது?)

குறிப்புரை :

`சிவபெருமானது பண்டைச் செயல்கள் பற்றி முன் பின் கால ஆராய்ச்சி செல்லாது` என்பதனை, ஓர் மகளிர் உரையாடலாக வைத்துக் கூறினார்.
``முன்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே`` 1 என்ற அப்பர் திருவாக்கையும் காண்க.
நாம், அச்சப் பொருட் டாய உரிச்சொல் 2 இறைவன் ஒருவர்க்கு மட்டும் உரியன் ஆகாமையும் இங்குக் குறிக்கப்பட்டது.
``அந்தணர்`` என்பது இங்குக் காரணப் பெயராய் நின்றது.

பண் :

பாடல் எண் : 46

அந்தண ராமிவர் ஆரூ
ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென்
றேன்துடி கொட்டினரே.

பொழிப்புரை :

துறவிகள் போலப் பிச்சை ஏற்க வந்த இவரைப் பற்றி யான், `இவர் இருக்கும் ஊர் ஆர் ஊர்` (யார் இருக்கும் ஊர்) என்று பிறரை வினாவினேன்; இவர் தாமே முன் வந்து, `சாந்து பூசிய தோளை உடையவளே, நீ வினாவாகச் சொல்லிய அந்த ஊர்தான் (ஆரூர்தான்) நாம் இருக்கும் ஊர்` என்றார்.
பின்பு யான் இவர் முதலில் வைத்து எண்ணத் தக்க `சலவர்` (வஞ்சனைக்காரர்) என்றேன்.
அதற்கு அவர், `பந்து ஏந்தும் கையை உடையவளே, நீ இரண்டாவதாகச் சொன்னதும் உண்மைதான்` (சலத்தை - நீரை - கங்கையைத் தாங்கினவர்) என்றார்.
இப்படி அவர் நகையாடிக் கூறினமையால் `அவர் என்னைக் காதலிக்கின்றார்` என்று கருதி, யான், `மார்பில் கொத்துக் கொத்தாகப் பல மாலையை அணிந்துள்ளவரே, உமை அறிய உம்மை நான் - இன்னார் - என்று நன்கு அறியும்படி சொல்லுவீர்` என்று கேட்டேன்.
அவர் சொல் ஒன்றும் சொல்லாமல் கையில் இருந்த உடுக்கையை அடித்தார்.
(என்னை அவர் பக்கத்தில் உள்ள உமாதேவி பார்த்துத் தெரிந்து கொள்ளும்படிச் செய்தார்.)

குறிப்புரை :

`இவர் மிகவும் வல்லாளர்` என்பது குறிப்பெச்சம்.
`திருவாரூரை இடமாகக் கொண்டிருப்பவரும்.
உலகம் அழியா திருத்தற் பொருட்டுக் கங்கையைச் சடையில் தாங்கியவரும் ஆகிய சிவபெருமான் தம்மை அடைய விரும்புவோர்க்குத் தமது அருளாகிய கையைக் கொடுத்துக் காப்பார்` என்பது குறிப்புப் பொருள்.
``அந்தணர்`` என்பது இங்கு, ``அறவோரை`` * (துறவிகளை)க் குறித்தது.

பண் :

பாடல் எண் : 47

கொட்டும் சிலபல சூழநின்
ரார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வருமருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.

பொழிப்புரை :

மலர்கள் விளங்குகின்றனவும், பறவைகள் வாழ் வனவும் ஆகிய பெரிய சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் எழுந் தருளியுள்ள இறைவனது படையாகிய பூதங்களுட் சில (அச்சமும், துன்பமும் இன்றிக் களித்திருத்தலால்) கைகளையும், பறைகளையும் கொட்டும்.
பல சிவபெருமானைச் சூழ்ந்து நின்று ஆரவாரிக்கும்; மற்றும் சில குப்புற வீழ்ந்தும் எழுந்தும் கூத்தாடும்; பல பல விளையாட்டுக்களைச் செய்யும்; பல பாட்டுக்களைப் பாடும்; சிரிக்கும்; ஒன்றை ஒன்று அச்சுறுத்தும்; வட்டமாக ஓடி வரும்; அணி வகுத்துச் செல்லும்.

குறிப்புரை :

`சிவபெருமானுக்கு ஆட்பட்டவர் கட்கு எந்த வகையான அச்சமோ துன்பமோ, கவலையோ இல்லை, ``இன்பமே எந் நாளும்`` 1 என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
அச்சமிலர், பாவமிலர், கேடு மிலர், அடியார் நிச்சம்உறு நோயு மிலர், பச்சமுடை யடிகள் திருப் பாதம்பணி வாரே.
2 என்றது காண்க.
கிரீடித்தல் - விளையாடுதல்.

பண் :

பாடல் எண் : 48

பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.

பொழிப்புரை :

பூதங்களையே படைகளாகக் கொண்டுள்ள புண்ணிய சொரூபரே, உம்மைப் பற்றிப் புறங் கூற்றுக்கள் நீர் குற்றப் படும்படி பலவாய் எழுகின்றன.
(அவற்றை நீர் அறிவீரோ, அறியீரோ! அவற்றுள் தலையாயது) இளையாள் ஒருத்தியின் காதலில் உம்மை அகப்படுத்தற்குத் தனது கணையாகிய மலரை எய்த மன்மதனை நீர் உமது கண்ணாகிய மலரால் அழிவுபடுத்தியது.
`அஃது ஏன்` என்ப தற்கு நீர் விடை கூறுவீர்.

குறிப்புரை :

புறங் கூற்றுக்களாவன தன் கடமையைச் செய்ய வந்த காலனைக் காலால் உதைத்தது, முப்புரத்தவரை அழித்தது; தாருகாவன முனிவரது மனைவியரின் கற்பை நிலைகுலையச் செய்தது முதலி யவை பற்றியன.
`இன்னோரன்னவற்றை நும் எதிரில் கூற மாட்டாது பலர் புறங் கூறுகின்றார்கள்` என்றபடி.
`மன்மதன் செய்தது, தனிய ராய் இருந்த உம்மை இல்வாழ்க்கையர் ஆக்குவிக்க முயன்றதே.
அவனை அழிவு செய்தமை தகுமோ` என்பதாம்.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் *
என அருளிச்செய்ததே என்பது கருத்து.
ஆல் அசை.
இறை - விடை.
``காரணம்`` என்பதன்பின் `என்` என்பது எஞ்சிநின்றது.

பண் :

பாடல் எண் : 49

செப்பன கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனற்
கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.

பொழிப்புரை :

எல்லோரும் தங்கட்கு `அப்பன்` என்றும், `அம்மை` என்றும் சொல்லிப் போற்றுகின்ற இறைவன், கிண்ணம் போலும் தனங்களையுடைய நின்மகளுடைய தனங்களுக்குத் தான் அணிந்துள்ள கொன்றைப் பூவின் நிறத்தைக் கொடுத்தான் (தனிமை யால் உண்டாகும் பசப்பூரச் செய்தான்.
) மை தீட்டப்பட்ட சிறந்த கண்ணிற்குத் தான் தரித்துள்ள, ஒழுகுகின்ற கங்கை நீரைக் கொடுத்தான் (கண்ணீர்விட்டு அழச் செய்தான்) மனத்துக்குத் தான் அணிந்துள்ள, ஒப்பில்லாத, அழகுமிக்க ஊமத்தம் பூவைக் கொடுத்தான்.
(பித்தம் பிடிக்கச் செய்தான்) இதையறியாது, `இவள் ஏதோ தெய்வந் தீண்டப்பட்டாள்` என்று அதற்குப் பூசை போடுகின்றாயே!

குறிப்புரை :

இது வெறியெடுத்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது.
ஞானியரை உலகர் ஏதோ மனநோய் உள்ளவராகக் கருதி அது தீரத் தெய்வங்களை வேண்டுதல் முதலியன செய்தலும், அவர்க்கு அறிவர் அறிவுறுத்தலும் இதன் உள்ளுறை.
புரை - உயர்வு.
`ஊமத்தம் பூவைத் தலையில் சூடிக்கொண்டால் பித்தம் பிடிக்கும்` என்பது உலக வழக்கு.
``அப்பனை`` என்பதனோடு இயைய, ``அம்மனை`` என்பதிலும் இரண்டன் உருபு விரிக்க.
பெறுதல், இங்கு வரைவு உடன் படுதல்.

பண் :

பாடல் எண் : 50

ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.

பொழிப்புரை :

கார் காலத்தில் பூக்கின்ற கொன்றைப் பூவினா லாகிய மாலையைத் தனது அடையாள மாலையாகக் கொண்ட சிவ பெருமானிடத்தில் நீர் - நெருப்பு, திங்கள் - ஐந்து தலைப் பாம்பு, யோக நிலை - இல்லாள், உருவம் - அருவம், புலி - மான், பகல் - இரவு இவ்வாறு எல்லாம் ஒன்றுக்கொன்று பகையாய பொருள்கள்.
அப்பகை நீங்கி நட்புக் கொண்டு உடன் கலந்து வாழ்கின்றன.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம்.
ஆர்க்கின்ற- ஒலிக்கின்ற.
ஓர்க்கின்ற - தியானிக்கின்ற.
யோகு - யோகம்.
அஃது ஆகுபெயராய்.
அந்நிலையைக் குறித்தது.
`யோகம் துறவிகட்கு உரித்து` என்பது பெரும்பான்மை.
உரு - உருவத் திருமேனி.
அரு - அருவத் திருமேனி.
- முழுமையாக அமைந்த புலித்தோல் உயிருடைய புலி பார்ப்பது போலத் தோன்றுதலின் ``பார்க்கின்ற வேங்கை`` என்றார்.
`அதைக் கண்டு மான் அஞ்சவில்லை`` என்றபடி.
மான் விலங்காதலுடன் மறி (கன்று) ஆதலின், `உயிரில்லது` என அறியும் அறிவில்லதாம்.
பகல் வலக் கண்ணாகிய சூரியனாலும், இரவு இடக்கண்ணாகிய சந்திரனாலும் உளவாகின்றன.
`சிவபெருமானைச் சேர்ந்தவர்க்கு நடுவு நிலையே உளதாவதன்றி, உறவு பகைகள் உளவாவன அல்ல` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு.
``யோகும், உமையும்`` - என்றதனை,
ஒன்றொடொன்று றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலால் உலகம் நீங்கி நின்றனன்.
எனவும், உருவும், அருவும்`` என்றதனை, பந்தமும் வீடும் ஆய/# பதபதார்த் தங்கள் அல்லான்;
அந்தமும், ஆதி யில்லான்/# அளப்பிலன் ஆதலாலே
எந்தைதான் `இன்னன்` எ/#ன்றும், `இன்னதாம், இன்ன தாகி
வந்திடான்` என்றும் சொல்ல/# வழக்கொடு மாற்றம் இன்றே.
1 எனவும் சிவஞான சித்தி நூல் விளக்குதல் காண்க.
`சிவபிரான் அணி யும் கொன்றை கார்க் கொன்றையே` என்பதை ``கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் - வண்ண மார்பில் தாரும் கொன்றை`` 2 ``கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் - தாரன், மாலையன், மிலைந்த கண்ணியன்`` 3 என்பவற்றானும் அறிக.

பண் :

பாடல் எண் : 51

கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கச்சரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்து
அலந்தலைக் கென்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.

பொழிப்புரை :

இவளால் காதலிக்கப்பட்டவனுக்கு அணிகலம் ஆவன எலும்புகளே; அணியும் பூக்களாவன அரும்பவிழ்ந்த கொன்றைப் பூக்களே.
(இவை சூடும் மலர் அல்ல.
) அரைக்கச்சாவது பாம்பு.
அவனோ நீர் இல்லாமல் நீருக்கு அருகில் வெம்மை பொருந்திய காட்டில் (ஈமத்தில்) ஆடுபவன்.
ஆகவே, அவன் ஒரு சாண் அளவினதான இடமும் `தன்னுடையது` என்று இல்லாத அகதி, கழுத்தில் கறையுடை யனாய் எங்கும் திரிகின்ற அவனை நினைந்து இவள் மனம் அலைதல் என்னோ!

குறிப்புரை :

இது, தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
ஞானிகளது நிலைமை யறியாமல் உலகர் அவர் பொருட்டு இரங்குதல் இதன் உள்ளுறை.
``ஆடி`` என்றது பெயர்.
அலந்தலை - அலமரல்.
அது முன்னர் ஆகுபெயராய் அதனை உடையவனைக் குறித்தது.
`இவள் அழிகின்றது என்னே` எனத் தோன்றா எழுவாய் வரு வித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 52

அழிகின்ற தாருயிர் ஆகின்ற
தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.

பொழிப்புரை :

நான்கு மறைகளையும் அருளிச் செய்த,மூன்று கண்களையுடைய அறவோன் பொருட்டு எனது அரிய உயிர் போய்க் கொண்டிருக்கின்றது.
அதுபோவதற்கு முன்னே மனக் கவலை உண்டா கின்றது; மயக்கம் ஒருகாலைக் கொருகால் மிகுகின்றது; சங்க வளையல்கள் கழன்று வீழ்கின்றன; இறுமாந்திருந்த கொங்கைகளின் மேல் பீர்க்கம்பூப் போலும் பசலைகள் வெளிப்பட்டுக் கிடந்தன; கண்கள் நீரைப் பொழிகின்றன; வாய் புலர்ந்து விட்டது; மேகலைகள் போயே விட்டன.
எனக்காக அவரிடம் தூது சென்று வந்தவர்கள் என்ன சொல்கின்றனரோ!

குறிப்புரை :

`அவர்களது வாய்ச்சொல்லைப் பொறுத்துள்ளது என் உயிரின் நிலைமை` என்பது குறிப்பெச்சம்.
இது தூது சென்றார் வந்ததையறிந்து தலைவி அவர்சொல்லைக் கேட்க விதுப்புற்றுக் கூறியது.
தூதுவிடக் கருதுதலோடு ஒழியாமல், தூதுவிட்டே நின்றமையால், இது, ``மிக்க காமத்து மிடல்`` * என்னும் பெருந்திணை.
`நன்மைகள் பலவற்றை எய்தாது கழிகின்றது` என்னும் கருத்தால் தலைவி தனது உயிரை ``ஆருயிர்`` என்றாள்.
மால் - மயக்கம்.
பீர் - பீர்க்கு.
அஃது இருமடியாகுபெயராய் முன்னர் அதன் பூவையும், பின்னர் அப்பூப்போலும் பசலையையும் குறித்தது.
மணிக்கோவைகளின் பன்மை பற்றி மேகலை பலவாகச் சொல்லப்பட்டது.
மேகலையை, `கலை` என்றது தலைக் குறை, தீவிரதர பக்குவத்தில் அடியவர் வாய்மொழிகளை நோக்கியிருத்தல் இதன் உள்ளுறை.
`இறைவன், துறைவன், துணைவன்` - முதலியன போல, `முறைவன்` வகர இடைநிலை பெற்ற பெயர்.
இருந்த - கிடந்தன, நான்மறை - முக்கண் இவை முரண்தொடை; விரோத அணி.

பண் :

பாடல் எண் : 53

முறைவனை மூப்புக்கும் நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர்
சித்தந் தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.

பொழிப்புரை :

அறத்தின் வடிவானவனும், காலப் பழமைக்கும், நான்கு வேதங்கட்கும் முதலாய், ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவு களிலும் வழிபடப்படுபவனும், ஞானியர் சூழ்ந்துள்ள கயிலாய மலை யில் இருப்பவனும், தனது அனாதி நிலையினின்றும் என்றும் குறைவு படாத கடவுளும், எட்டுக் குணங்களையே ஐசுவரியமாக உடைய வனும், தன்னைத் துதித்தவர்களது உள்ளத்திலே என்றும் உறை பவனும் பாம்புகளையே அணிகலமாக அணிந்தவனும் ஆகிய சிவ பெருமானை யாம் இவ்வளவிலன்றி, வேறு எவற்றைச் சொல்லி ஓயாது துதிப்பது?

குறிப்புரை :

`சிவனது அளவிறந்த புகழ்களில் நாம் அறிந்தன மிகச் சிலவே` என்பது கருத்து.
``முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்``* ஆதலை, `மூப்புக்கு முதல்` என்றார்.
முதல் - முதல்வன்; ஆகுபெயர்.
``முதல்`` என்பதில் தொகுக்கப்பட்ட `ஆய்` என்னும் வினையெச்சம்.
``துறைவன்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது.
உலக முழுவதிலும் உள்ளாரால் வழிபடப்படுதல் பற்றி, ``ஏழ்கடல் துறைவன்`` என்றார்.
சூழ்தலுக்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
தொன்மை - அனாதி.
அஃதே இயற்கையாதலை அறிக.
எண் குணங்களாவன.
1.
தன்வயம்.
2.
தூய உடம்பு.
3.
இயற்கையுணர்வு 4.
முற்றுணர்வு, 5.
இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்றல் 6.
முடிவில் ஆற்றல், 7.
பேரருள், 8.
வரம்பில் இன்பம் - என்பன.
* இவையே கடவுட் குணங்கள் ஆதலை ஓர்ந்துணர்க.
தம், சாரியை.
இன் சாரியை நீக்கித் தம் சாரியை கொடுத்தார்.
``பின்னை`` என்பது `மற்று` என்னும் பொருட்டு.
``ஓதுதல்`` என்பது இங்கு இடைவிடாது துதித்தலின் மேற்று.

பண் :

பாடல் எண் : 54

ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாளவர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்
டொழியினி ஆரணங்கே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளே, உன்னை நான் இப்பொழுது பெரிய தவக்கோலமாய் வளர்கின்ற புல்லிய சடையை உடைய சிவபெருமான்பால் அனுப்புகின்றேன்; நீ அவ னிடம் சென்று, அவனுடைய பெயர்கள் பலவற்றையும் சொல்; அவ னுடைய இறைமைக் குணங்கள் பலவற்றையும் எடுத்துப் பேசு; அவன் எங்குச் சென்றாலும் அவனைவிடாது அவன் பின்னே செல்; சென்று, அவனது வாழ்க்கைக்கு ஏற்ப உன்னைத் திருத்திக்கொண்டு அவனுக்குப் பொருந்தியவளாய் இரு.
(மற்றும் அவன் மனம் இரங்க வேண்டிப்) பெரிய தவத்தைச் செய்.
(இவ்வளவும் செய்தால் அவன் ஏதாவது ஒரு முடிவைக் கூறாமல் இருக்க மாட்டான்.) அவன் என்ன முடிவைச் சொன்னாலும் அதைக் கேட்டுக் கொண்டு வந்துவிடு.

குறிப்புரை :

இது சிவபெருமானிடம் தூது விடுப்பவள் சொல்லியது.
`சிவபெருமான் பேரிரக்க குணம் உள்ளவன்` என்பதும், `அவனைப் பலபடியாலும் வழிபட்டால் அவன் இரங்கா தொழியான்` என்பது அவரது நம்பிக்கை.
நல்கா தொழியான் நமக்கென்றுன்/# நாமம் பரவி நயனம்நீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா/# வணங்கா மனத்தால் நினைந்துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப்/# பரவிப் பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி/# யருளாய் என்னை உடையானே.
1 என்றாற் போலும் திருவாக்குகளைக் காண்க.
``மாதவம்`` இரண்டில் பின்னது ஆகுபெயராய்த் தவக்கோலத்தைக் குறித்தது.
``தவம் மறைந்து அல்லவை செய்தல்`` 2 என்பதிற் போல.
`வாழ்க்கையோடு`` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலாயிற்று.
`புன் சடையானாகிய அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 55

ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.

பொழிப்புரை :

அரிய தெய்வப்பெண் போன்றவளாகிய இவளது முகம் மிக அழகிதாய் இருத்தலின் மன்மதன் வாழும் இல்லமாகின்றது; இவளது தோள்கள் தூங்கியசைதலால் அவ்இல்லத்தில் தூக்கப் பட்டுள்ள தோரணங்களாகின்றன.
அகன்ற அல்குல் மன்மதன் ஊரும் தேர் ஆகின்றது.
தனங்கள் பழைய மரபின்படி ஏந்தி வரும் பூரண கும்பங்களாகின்றன.
இவையெல்லாம் பலர்க்கும் தெரிய இவள் வந்து எங்கள் சிவபெருமானது திருவடிகளை வணங்குகின்றாள்.
ஆயினும் (இவள் மன்மதனது படைகளுள் ஒருத்தி யாதலின் இவள்) சிவபெரு மானை (மன்மதனையும் மறந்து) காதலித்து வரவேற்று வரவேற்று வணங்குகின்றாளா? இல்லை; பகைமை காரணமாக வெறும் நடிப்பாக வரவேற்று வணங்குகின்றாளா? இவள் மனத்தில் உள்ளது என்ன?

குறிப்புரை :

சிவபெருமான் வீதியுலா வரும்பொழுது வரவேற்று வணங்குகின்ற பலருள் காதல் பொங்க அவ்வாறு வணங்குவாள் ஒருத்தியைக் கண்டோர் ஐயுற்றுக் கூறியது.
அவனது பேரழகும், முகக் குறிப்பும் அவர்களது ஐயத்திற்குக் காரணம்.
மெய்யன்பர்களது உண்மையன்பின் பெருமையை அறியாது உலகர் அவர்களையும் தம்முட் சிலராக வைத்துக் குறைத்து எண்ணுதல் இதன் உள்ளுறை.
அனைத்து அழகிலும் முகத்தழகே தலையாயது ஆதலின் அதனை யுடைய முகமே மன்மதனது இல்லமாகச் சொல்லப்பட்டது.
ஏனைய வெளி.
உவமைகள் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையின் பொதுத் தன்மைகள் விரித்துரைக்கப்பட்டன.
காரணன் - முதல்வன்.
தொழும்.
`செய்யும்` என்னும் முற்று.

பண் :

பாடல் எண் : 56

கருதிய தொன்றில்லை ஆயினுங்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட்
டாதொடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லுந் தாழிருளே.

பொழிப்புரை :

ஊரவரே, நீவிர் ஆற்ற வேண்டிய கடமையாகக் கொண்டது யாதொன்றும் இல்லையாயினும், யான் சொல்வதைக் கேட்டருளுங்கள்.
இன்று வர இருக்கும் இருட்பொழுது இந்த அழகி இனி ஒரு நாளாயினும் வாழ விடாது.
ஆகையால் (நீவிர் அருள் கூர்ந்து) பகையாகிய அசுரர் பலர் அழியும்படி போர் செய்த திருமாலை இடப ஊர்தியாக உடைய புண்ணிய சொரூபனாகிய சிவபெருமான் அணிந்துள்ள அழகு மிக்க, அன்றலர்ந்த கொன்றைப் பூமாலையை இப்பொழுதே சென்று அவனிடம் விண்ணப்பித்து வாங்கி வந்து தாருங்கள்; எல்லோருக்கும் நல்லாதாயிடும்.
தாராது விடிலோ, இருட்பொழுது இவளை இன்று கொன்றுவிடும்.

குறிப்புரை :

இது, தலைவி ஆற்றாமை மிகுவது கண்டு தோழி அயலாரிடம் இரங்கிக் கூறியது.
நாணழிந்து அயலார் அறியக் கூறினமையின் இது பெருந்திணைப்பாலது.
தாழ் இருள் - இனித் தங்க வரும் இருள்; எதிர்கால வினைத்தொகை.
இருள் ஆகுபெயராய் அது வருவதற்குரிய காலத்தைக் குறித்தது.
தீவிரதர பத்தியால் சிவனை அடைய விரையும் அன்பரது நிலையை அறிந்து அவரோடு உடன் உறைபவர் அவ்வன்பரது நிலைமையை அடியார்கள் அறியக் கூறுதல் இதன் உள்ளுறை.
`தலைவன் தான் அணிந்திருக்கும் மாலையைக் கழற்றி ஒருத்தி அணிந்து கொள்ள இசைந்து தருவானாயின், அவன் அவளைக் கைவிடாது தன் துணைவியாகக் கொள்ளல் வேண்டும்` என்பது அறநெறி.
அதனால் துயர் கூருந் தலைவியரை ஆற்றுவிக்கத் தலைவன் அணிந்திருக்கும் மாலையை இரத்தல் அகப்பாட்டுக்களுள் சொல்லப்படுகின்றது.
காரிகை - அழகு.
ஒடுங்கார் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 57

இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமரையால்
பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கறுத்த கண்டத்தையுடைமையால் இரவாய் இருக்கின்றான்; தனது திருமேனி ஒளியால் பகலாய் இருக்கின்றான்; மானைக் கொண்டிருத்தலால் குறிஞ்சி நிலமாய் இருக்கின்றான்; அடையாளமாகப் பொருந்திய, மணங்கமழும் கொன்றையை அணிந்திருப்பதால் முல்லை நிலமாய் இருக்கின்றான்; பாம்புகள் இயங்கப் பெறுதலால் புற்றாய் இருக்கின்றான்; ஒளி பொருந்திய சந்திரன் தவழப் பெறுதலால் ஆகாயமாய் இருக்கின்றான்; தெளிவாகிய நீரைத் தாங்குதலால் கடலாய் இருக்கின்றான்.
இவ்வாறு அருள் காரணமாக அவன் பலப்பல பொருள் வடிவாய்க் காட்சியளிக்கின்றான்.

குறிப்புரை :

``தன்`` என்பது ஆகுபெயராய்த் தனது உடம்பைக் குறித் தது.
மரை - மான்.
`மதியால்` என்னும் மூன்றன் உருபு தொகுத்தலா யிற்று.
``விசும்பால்`` என்னும் ஆல், அசை.
சிவபிரானது தோற்றத்தை வியந்து கூறி `இத்தனைக்கும் காரணம் அவனது அருள்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 58

ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.

பொழிப்புரை :

மன்மதனது கையில் உள்ள படைக்கலத்திற்கு (கணைகளுக்கு) அவைகளைச் செயற்படாதபடி கட்டி வைக்கின்ற கயிறுபோலத் தோன்றுகின்ற பல சடைகளையுடைய எம்பெரு மானார்க்கு அன்பு செய்த எங்கள் மகளுக்கு இடையில் உடுத்துள்ள உடையும், கையில் அணிந்துள்ள வளையல்களும் அவளை விட்டு நீங்கிப் போய்விட்டன.
வாள் போன்ற கண்களில் தீட்டப்பட்டுள்ள மையோடு வீழ்கின்ற கண்ணீர்த் துளிகள் மார்பிடையே தாரையாய்ப் பாய்கின்றன.
ஆகவே, அறவோர் கூறும் மெய்ம்மொழி இவள்பால் மெய்யாகிவிட்டது.

குறிப்புரை :

அம்மொழியாவது `பற்றற்றான் பற்றினைப் பற்றினால் மற்றைய எல்லாப்
பற்றுக்களும் அற்றுவிடும்` என்பது
பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றிஅப்
பற்றை அறுப்பர்என் றுந்தீபற
என்னும் திருவுந்தியாரையும் காண்க.
வேள் - மன்மதன்.
கர பத்திரம்- கை வாள்.
அது பொதுவே `படைக்கலம்` என்னும் பொருட்டாய்க் கணையைக் குறித்தது.
மன்மதனது குறும்பு சடையையுடைய யோகிகள்பால் செல்லாமை பற்றிச் சிவபெருமானது சடைகளை அவனது கணைகளைக் கட்டிப் போடுகின்ற கயிறாக உவமித்தார்.
``வேங்கைக் கர பத்திரத்துக்கு`` என்பது முதலாகத் தொடங்கி, `அந்தணர் வாய்மை ஆயின` என மாற்றி, இறுதியில் வைத்து உரைக்க ``அந்தணர்`` என்றது அறவோரை.
`வாய்மை` என முன்னர் வந்தமை யால் பின்னும் அதனைக் கூறாது வாளா ``ஆயின`` என்றாள்.
இது காதலால் நலிகின்ற தன் மகளது நிலைமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது ஆகலின், அந்தணர் வாய்மையைப் புகழ்ந்தது வஞ்சப் புகழ்ச்சியாம்.
எனினும் அடியவர் நோக்கில் உண்மையே உள்ளுறைப் பொருளில் செவிலி, உலகர்.

பண் :

பாடல் எண் : 59

இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.

பொழிப்புரை :

மூங்கில்கள் நிறைந்துள்ள `திருக்கழுக் குன்றம்`` - என்னும் மலைமேல் வாழ்கின்றவனும், வரையறைப் படாதவனும் ஆகிய சிவபெருமானை இவள் காதலித்தாள்; அஃது எங்ஙனமெனின், இவளது அழகிய கண்கள் குழை பொருந்திய காதுகளுடன் சென்று சேர்ந்தன.
(நன்றாகத் தன் கண்களை உருட்டி இவள் சிவபெருமானை நோக்கினாள்` - என்றபடி) அதனால் அணிகள் நிறைந்த, அழகிய இவளது கொங்கைகள் மிகவும் பூரித்தலால் இவளுடைய இடை கொங்கைகளைச் சுமக்க மாட்டாது ஒடிந்து கொண்டிருக்கின்றது.
அஃது அறவே ஒடிந்துவிட்டால், இவள் பிழைக்க மாட்டாள் (என்பதைச் சொல்ல வேண்டுமோ! காதலால் இவள் உடம்பு பூரித்தலை, `நமக்குக் கட்டுப்பட்டு அடங்குவதாக` என நாம் சொல்வது வெறும் பேச்சே.

குறிப்புரை :

`அதனால் நாம் சிவபெருமானிடம் சென்று முறையிட்டுக் கொள்வதே வழி` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் மேற்கூறிய துறையே.
திரிபின்றி உறைத்த பத்தியுடையவரது நிலைமையை உணரும் பொழுது உலகவர் தம் செயல் அற்று அவர்வழி நிற்றல் இதன் உள்ளுறை.
கண்ணப்பர் அடைந்த நிலைமைக்கு முதலில் வருந்தித் தெரிவிக்க முயன்ற தந்தை நாகனும், பிற வேடர்களும் பின்னர்ச் செயலற்றுத் திரும்பினமை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க.
அகண்டனை, `கண்டன்` என்றது தலைக்குறை.
``காதலித்தாள்`` என்பதன் பின், `எங்ஙனம் எனின்` என்பது வருவிக்க.
`கண்கள் செவியொடு கூடின` என்றது நன்றாகப் பார்த்தமையைக் குறிப்பால் உணர்த்தியது.
வீங்கி - வீங்குதலால்.
``பிழையாள்`` என்பதன் பின் இசையெச்சம் வருவிக்கப்பட்டது.
கொல், ஆம் அசைகள்.

பண் :

பாடல் எண் : 60

கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.

பொழிப்புரை :

உமையவளை விரும்பிக் கூடிய தன் திருமேனியில் அவளை இடப்பாகத்தில் உடையவனைத் திருவையாற்றுத் தலத்தில் சென்று, `இவன் பாடியன நான்கு வேதங்கள், வெகுண்டு கொன்றது கூற்றுவனை; எங்கும் செல்வனவாகிய கோட்டைகளை எரித்துப் பூசிக்கொண்ட சாம்பலே இவனுக்கு நல்ல சந்தனம்; ஆகலின் இவன் எங்கள் சிவபெருமானே` என அடையாளம் கண்டு, `நெருப்பினது நிறம் இவன் தலையிலே உள்ள பல சடைகளிலும் உள்ளது` எனச்சொல்லி வணங்குங்கள்.

குறிப்புரை :

`வணங்கினால் பயன் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
``இடத்தான்`` என இரண்டில் முன்னது, ஏழாவதன் பொருளில் வந்த மூன்றன் உருபை ஏற்ற பெயர்.
அம்மூன்றன் உருபு, பின் வந்த, ``இடித்தான்`` என்னும் குறிப்பு வினையொடு முடிந்தது.
இடத்தான் - இடப்பாகத்திலே உடையவன்.
`ஐயாற்றின் கண்`- என உருபு விரிக்க.
`ஈண்டிய என்பது இடைக்குறைந்து, ``ஈடிய`` என வந்தது.
ஈண்டுதல் - நெருங்குதல்.
பின் இரண்டு அடிகள் அடையாளம் காட்டின.
ஆம் - இவன்பால் உள்ளன.
இதன்பின் `ஆகலின், இவன்` எனவும், ``எம் அயன்`` என்பதன்பின் `கண்டு` எனவும் வேண்டும் சொற்கள் வருவித்து, `எரி வண்ணம் சடை மேற்று எனப் பணிமின்`` என முடிக்க.
ஐயன், `அயன்` எனப் போலியாய் வந்தது.

பண் :

பாடல் எண் : 61

அயமே பலியிங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம
மாவும்மை நாணுதுமே.

பொழிப்புரை :

தாணுவே, (தலைவரே) நீர் இனிய வார்த்தை களையே பேசிய போதிலும், உமது கோலம் திகம்பரமாய் (நிருவாண மாய்) உள்ளது.
அதனால் உம்மைக் காண நாங்கள் வெட்கப்படுகின் றோம்.
அதனால், உம்முடைய வயிற்றுக்கு இட வேண்டுவது போல இங்கு நீர் பிச்சை ஏற்க வந்த செயலும் ஐயத்திற்கு உரியதே.
`பிச்சையிடு மின்; இட்டால் உங்கட்குப் புண்ணியம்` என்பனபோல், `நீவிர் சொல்லும் சொற்களும் உண்மைதாமோ` என ஐயுறவேண்டியுள்ளது.
இவைகிடக்க, நீர் ஏறிவந்திருக்கின்ற, பசுக்களுக்கெல்லாம் தலையாய எருது எங்களைப் பாய வருகின்றது.
ஆகவே, தங்கள் தோள்களின் மேல் நீர் பொருந்த இசைகின்ற மகளிர்தாம் உண்மையில் புண்ணியம் செய்பவராவர் (பிச்சையிடுவோர் புண்ணியரல்லர்) இப்படி நீர் பிச்சையெடுப்பது தீதாகும்.
இவ்விடத்தை விட்டுப் போய்விடுங்கள்.

குறிப்புரை :

இது, பிச்சைக் கோலத்தவராய்ச் சென்ற பெருமானைக் கண்டு காதலித்த மடவார் கூற்று, உண்மையில் அவரைக் கண்டு அவர்கள் நாணமும், வெறுப்பும் கொண்டவராயின் பொருக்கென இல்லத்துக்குள் போய்விட வேண்டியவர் தாமே? அதை விடுத்துப் பல வார்த்தைகளை விரிப்பது ஏன்?
`தாணு` என்பது விளி.
அது பன்மையொருமை மயக்கமாய் நின்றது.
குக்கி (குட்சி) = வயிறு.
`குச்சிக்கு இட இங்குப் போந்த பலி (ஏற்றல் செயல்) ஐயமே` என்க.
ஐயம், ``அயம்`` எனப் போலி யாயிற்று.
`மாடு உளஏறு, பசுபதியாம் ஏறு` எனத் தனி இயைக்க.
மாடு- பக்கம்.
`உம் பக்கம்` என்றபடி.
பயமே - பொருள் உடையனதாமோ? (உண்மையோ` - என்றபடி.
) ``குழல் `` என்னும் விதப்பினால் `வார் குழல்` (நீண்ட கூந்தல்) எனக் கொள்க.
``ஏய குழலியர்`` என்றது, `ஏய இசையும் குழலியர்` என்றபடி.
`குழலியரே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று.
`அவரே புண்ணியர்` என்றது, `அந்தப் புண்ணியச் செயலை விரும்பித்தான் நீர் வந்தீர்; பிச்சையிடும் புண்ணியச் செயலை விரும்பி வந்தீர்` என்றபடி.
அதை, ``புண்ணியம்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி,.
``இரத்தல்`` என்பதன் முன், `இவ்வாறு` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது.
`பொல்லாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று.
`அம்மா` என்னும் அச்சக்குறிப்பு இடைச்சொல் இடைக் குறைந்து, `அமா`` என வந்தது.
`சிவன் பிச்சை ஏற்பது, உயிர்களைத் தன்பால் சேர்த்து கொள்ளுதற் பொருட்டே` என்பது இதன் உட் கருத்து.

பண் :

பாடல் எண் : 62

நாணா நடக்க நலத்தார்க்
கிடையில்லை நாமெழுக
ஏணார் இருந்தமி ழார்மற
வேனுந் நினைமினென்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.

பொழிப்புரை :

அணிகலன்கள் பொருந்திய தனங்களையுடைய தோழியர்களே, (உங்கள் உதவியை நாடாது) `நாமே செல்வோம்` என்றால் (நாணம் தடுக்கின்றது) நாணம் உண்டாகாதபடி செல்லச் சமையம் வாய்க்கவில்லை.
நடனம் புரிபவரும் புரியாகிய சடைகளை யுடையவரும், உலகர் எல்லாராலும் `எம் தந்தை` என்று போற்றப்படு பவரும் ஆகிய சிவபெருமான் (இங்கு வருவார்) வந்தால், நான் அவரைக் காணாமல் இருந்துவிடமாட்டேன்.
கண்டு, `உம்மை யான், உம்மை அகப்படுத்தவல்ல பெரிய தமிழாற்பாடி மறவாதிருக் கின்றேன்; இதை நினைமின்` என்று சொல்லி அவர் அணிந்துள்ள வாசனை பொருந்திய மலர் மாலையை இரந்து வாங்கவும் செய்வேன்.

குறிப்புரை :

`முலையீர்`, `நாம் எழுக` என்றால் நாணாது நடக்க இடையில்லை` என மாற்றி ஒரு சொல் வருவிக்க.
`நாணாது` என்பது கடைக் குறைந்தது.
இடை - சமையம்.
எண் - வலிமை, இருமை - பெருமை அஃது இங்கு விரிவைக் குறித்தது.
`சிவபெருமான் தமிழ் விருப்பன்` என்பதை, ``நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்`` * என்பது முதலியவற்றால் அறிக.
`தமிழாற் பாடி` எனவும் ஒருசொல் வருவிக்க.
`உம்மை மறவேன்`` என உருபு விரித்து மாற்றுக.
``என்றும்`` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மையைப் பிரித்து, `இரவாது` என்பதனுடன் கூட்டுக.
இது தூதுவிடக் கருதிய, தோழியரோடு, புலந்து கூறியது, இது வாயிலாக, தமிழாற் பாடுவோரைச் சிவபெருமான் மிக விரும்புதல் குறிக்கப்பட்டது.
``தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்`` * என்பது முதலியவற்றையும் காண்க.

பண் :

பாடல் எண் : 63

கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க் கழ கல்லவென்பேன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
வாணை தொடங்குவனே.

பொழிப்புரை :

(நாளை இங்கு வருகின்ற சிவபெருமான் என்னைத் துறவாமைக்கு அடையாளமாகத் தனது) வாசனை பொருந்திய கொன்றை மலர்களால் ஆன மாலையை வலிய எனக்குத் தந்தானாயினும் யான் உடல் பொருந்தத் தழுவ மாட்டேன்; எனது உடையை அவன் பற்றவரின் நெருங்க விடமாட்டேன்; என் கூந்தலில் முடிக்கப்பட்டுள்ள மலரைத் தொடும் முறையால் என்னைத் தொட முயல்வானாயின், வெகுண்டு விலக்குவேன், `கொங்கையை அவன் தொட்டு விட்டால் நான் இறந்து விடுவேன்` (என்பது தோன்றப் புறங் காட்டி நிற்பேன்) பிற குறும்புகளும் செய்வானாயின் `தேவர் பலரும் உனது திருவடிகளை வணங்க இருக்கின்ற உனக்கு இவையெல்லாம் அழகல்ல` என அறிவுரை கூறுவேன், அவைகளையும் கடந்து அவன், வளையும், மாலையும் பொருந்திய எனது தோள்களை வலாற்கார மாகப் புல்ல வருவானாயின் அவன்மீதே ஆணை வைக்க முயலுவேன்.

குறிப்புரை :

`ஆகலான் நீ கவலற்க` என்பது குறிப்பெச்சம்.
இது வரைவுகடாவ எண்ணிய தோழியைத் தலைவி உடன்பட்டுக் கூறியது.
`தலைவன் வரைவு நீட்டிப்பின் இருமுது குரவர் பிறர் வரைவுக்கு உடன்படுதல் முதலியன நேரத் தலைவி இறந்துபடுவாள்` எனத் தோழி கவன்று, தலைவனை வரைவு கடாதற்கு விரைதல் இயல்பு.
அவ்வழித் தலைவி புணர்ச்சி மறுப்பாள் என்க.
அதிதீவிர பக்குவிகள் சத்தியோ நிர்வாணத்தையை விரும்பி வேண்டுதல் இதன் உள்ளுறை.
முனிதல் அதன் காரியம் தோற்றி நின்றது.
`தான் இறந்து படின் அவனும் படுவான்` எனத் தலைவி அஞ்சுவாள் ஆதலின், ``கெடுவேன்`` என்றது, கெடுதலைக் குறிப்பித்தலையேயாம்.
ஏனையோர்மீது வைக்கும் ஆணைபோலாது சிவன்மீது வைக்கும் ஆணை தலையாயது ஆகலின் ``திரு ஆணை `` என்றார்.
ஆணை வைத்து விடின் பின்னர்க் கூட்டம் இன்றாம் ஆகலின், ``ஆணை தொடங்குவன்`` என்றாள்.

பண் :

பாடல் எண் : 64

தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்குமன்றிக்
கிடங்கின்றி பட்ட கராவனை
யார்பல கேவலரே.

பொழிப்புரை :

(இல்லறத்தார் கிடக்க,) துறவறத்தை மேற் கொண்டவர்களிலே பலர் அந்தத் துறவறத்தைப் பயனிலதாகப் போக்குவர்.
எங்ஙனம் எனின், உலகப் பொருள்களினின்றும் நீக்கிய தங்கள் ஆசையை அரன்பால் செலுத்தாது, வேறு எவ்வெப்பொருளிலேயோ செலுத்துதலால்.
ஆகவே, அவர்கள் சிவனிடத்து அன்பு செய்யாது பிற விடத்து அன்பு செய்தலால் அம்மைக்கும் உரியராகாது, இவ்வுலகப் பொருள்களைத் துறந்தமையால் இம்மைக்கும் உரியராகாது, அகழியுட் கிடக்கும் முதலைபோலத் துன்பத்திற் கிடத்தலல்லது, கரையேறாது தமியர் ஆகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
``துறந்தவரே`` என்பதை முதலில் வைத்து, ``இலர்`` என்பதன் பின் `ஆகலின்` என்பதனைக் கூட்டுக.
அடங்கிய - உலகப் பொருள்மேல் செல்லாது அடங்கிய.
அறுகாற் பறவை, வண்டு.
அவை முடங்குதல் கொன்றை மலரிடத்து.
எனவே, `கொன்றையைச் சூடிய சடை` என்றபடி.
``அன்றி`` இரண்டில் முன்னது, `மாறுபட்டு` என்றதாம்.
பின்னது, `உரியராகாமல் எனப் பொருள் தந்தது.
``இங்கும்`` என்ற உம்மையால், `அங்கும்` என்பது பெறப்பட்டது.
`அங்கு, இங்கு` என்பன, `அம்மை, இம்மை` என்பவற்றைச் சுட்டின.
கிடங்கு - அகழி.
கரா - முதலை அது கரையேறாமைக்கு உவமை.
`கேவலர் தமியர்` என்பன ஒரு பொருளைக் குறிக்கும்.
தமியர் - துணையற்றவர்.
`உலகப் பற்றை விட்டபோதிலும், மெய்யுணர்வு இல்லையேல் துறவு பயன் இலதாம்` என்றபடி.
இதனைத் திருவள்ளுவரும்,
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
1 என அருளிச்செய்தார்.
இத்தன்மையோரையே அப்பர் பெருமானும் ``இருப்பிறப்பும் வெறுவியர்`` 2 என்று அருளினார்.

பண் :

பாடல் எண் : 65

வலந்தான் கழலிடம் பாடகம்
பாம்பு வலமிடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்து
எரிவலம் பந்திடமென்பு
அலர்ந்தார் வலமிடம் ஆடகம்
வேல்வலம் ஆழியிடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழலிடம் சங்கரற்கே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு வலப்பாதியும், இடப்பாதியும் மாறுபட்டதான வடிவம் உள்ளது.
எங்ஙனம் எனின், வலப்பாதியில் காலில் வீரக்கழல், மார்பில் பாம்பு, சாம்பல், இறந்தவர் எலும்பால் ஆகிய மாலை, கையில் மழு, சூலம், தலையில் நீர் தங்கியுள்ள சடை - இவ்வாறு உள்ளது.
இடப்பாதியில் காலில் பாடகம், மார்பில் விலை உயர்ந்த அணி கலம், சந்தனம், பொன்னரி மாலை, கையில் பந்து, மோதிரம், பூச்சூடிய கூந்தல் - இவ்வாறு உள்ளது.

குறிப்புரை :

`வலப்பாதி ஆணும், இடப்பாதி பெண்ணுமாய் உள்ளது` என்றபடி.
`இது ஒரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம்.
`சிவபெருமானது உருவம், ஏனையோரது உருவம் போன்றதன்று` என்பதாம்.
அப்பர் பெருமானும், சிவபெருமானது திருவடிகளை,
``உருவிரண்டும் ஒன்றோடொன்றொவ்வா அடி`` என்று அருளினார்.
செய்யுள் நோக்கிச் சிலவற்றை முறை பிறழ வைத்தார்.
``எரி`` என்றது மழுவை.
சலம் - நீர்.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 66

சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின் தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென்
நெஞ்சம் எரிகின்றதே.

பொழிப்புரை :

தொண்டு மனப்பான்மையுடைவர்களே, யம கிங்கரர்கள் (தூதுவர்கள்) சிவபெருமானுக்கு ஆட்படாதவர்கட்குச் செய்யும் இழிவான பல துன்பங்களை நூல்கள் வாயிலாகக் கேட்ட வுடன் இவ்வுலகத்திற்றானே எனது மனம் ஆயிர அரங்களால் அராவு வது போலத் துன்பத்தால் வெதும்புகின்றது.
ஆகவே, நீவிரும் பிற தொண்டுகளை விடுத்து, சுகத்தைச் செய்தலால், `சங்கரன்` எனப் பெயர் சொல்லப்படுகின்ற.
சங்கக் குழையணிந்த செவியையுடைய சிவபெருமானுடைய திருவடித் தாமரையை அகங்கைகளைக் குவித்துக் கும்பிட்டு, அவனுக்கே ஆளாகித் தொண்டு செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தால், யமகிங்கரர் அணுகார்` என்பது குறிப்பெச்சம்.
மிறை - துன்பம்.
கீழாயின மிறை.
அருவருக்கத் தக்க துன்பம்.

பண் :

பாடல் எண் : 67

எரிகின்ற தீயொத் துளசடை
ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக்
கின்றதத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தாலத் திறலரவே.

பொழிப்புரை :

சிவபெருமானுக்கு அவனது சடை எரிகின்ற தீயைப் போலவும், அந்தச் சடையில் சுழல்கின்ற நீர் அந்தத் தீயை அணைப்பதற்காகத் தேவர்கள் ஊற்றுகின்ற பாற்கடற் பால் போலவும், அந்த நீரில் மிதந்து செல்கின்ற பிறை ஒரு தோணிபோலவும், அந்தப் பிறையைச் சூழ்கின்ற திறமையுடைய பாம்புகள் அந்தத் தோணியை இயக்குதற்குத் தெரிந்தெடுத்த உறுதியான மூங்கில் போலவும் உள்ளன.

குறிப்புரை :

மாலையுவமை.
திங்கட் கதிரால் நீர் வெண்ணிறம் பெற்றது.
இது சிவபெருமானது தலைக் கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 68

அரவம் உயிர்ப்ப அழலும்
அங்கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழலுமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தார்
பரவும் புகழண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடரின்பம் எம்மிறை
சூடிய வெண்பிறையே.

பொழிப்புரை :

எங்கள் கடவுளாகிய சிவபெருமான் முடியில் சூடியுள்ள வெள்ளிய பிறை, அங்குள்ள பாம்பு தன்னை நோக்கிச் சீறும் பொழுது தான் கோபத்தால் தணலாய் எரியும்.
அங்குள்ள அழகிய கங்கை பாயும்பொழுது குளிர்ச்சியடையும்.
குராமலரைச் சூடியுள்ள கூந்தலையுடைய உமையவள் ஊடல் கொள்ளும் பொழுது, தன்னை அடைந்தோரால் துதிக்கப்படுகின்ற சிவபெருமான் (உமை அறியாத படி) தன்னைக் கையால் தீண்ட, தான் நைந்து உருகி உமையவள்மேல் தனது கதிர்களைப் பொழியும்.
மற்றைய நேரங்களில் நிலத்தையும், வானத்தையும் இருள் நீங்க ஒளி பெற்று விளங்கச் செய்யும்.
ஆகவே, அது துன்பத்தையும், இன்பத்தையும் மாறி மாறி அடைவதாகின்றது.

குறிப்புரை :

திங்களின் கதிர்கள் காதலை மிகுவித்தலால் உமையவள் ஊடல் தணிவாளாவள்.
அதன் பொருட்டுத் திங்களைத் தூண்டச் சில சொற்களைச் சொல்லின் உமை மேலும் வெகுள்வாள் ஆதலின், குறிப்பால் தூண்டச் சிவபெருமான் தனது கையால் தீண்டுவான் என்க.
இவ்வாறு செய்தல் உலக வழக்கம்.
இது சிவபெருமானது தலைக் கோலத்துள் பிறை ஒன்றனையும் புகழ்ந்தவாறு.
``வளாய்`` என்பதனை `வளாவ` எனத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 69

பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாயர வாடலுற்றோ
குறைக்கொண் டிவளரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.

பொழிப்புரை :

(மகளிர்) இவள் (தலைவி) சிவன் பின்னே குறையிரந்து செல்லத் துணிந்தது அவன் சூடியுள்ள பிறையைத் தான் சூட விரும்பியோ? (அவனுடன் சென்று) பிச்சை ஏற்றுப்பின் அவ னோடு கூடத் தீயில் நின்று ஆட விரும்பியோ? அவனோடு இணைந்து கண்டத்தினின்றும் சாமவேதம் பாடவிரும்பியோ? அவன் அணிகின்ற எலும்பு மாலையையும், பூசுகின்ற சாம்பலையும் தானும் அணியவும், பூசவும் விரும்பியோ? அவனுடைய கருமையான கழுத்தைக் கட்டித் தழுவ விரும்பியோ? அவன் தன்மேல் ஆடவிட்டுள்ள நஞ்சு பொருந்திய வாயினையுடைய பாம்புகளைத் தன்மேலும் ஆட விட்டுக்கொள்ள விரும்பியோ? `எதனை விரும்பி` என்பதை எனக்கு நீவிர் கூறுமின்.

குறிப்புரை :

இது, செவிலி தலைவியது வேறுபாடு கண்டு இரங்கி ஆயத்தாருடன் கூறியது.
அவளால் காதலிக்கப்பட்ட சிவனைச் செவிலி தலைவியை ஆற்றுவித்தற்கு இயற்பழித்துக் கூறினாள்.
மெய்யுணர்வில்லாதார் சிவனது கோலங்களை இகழ்தலைக் குறித்தல் இதன் உள்ளுறை.
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர்.
* என மேல் வந்த அம்மை திருவாக்கினைக் காண்க.
``செல்வது`` என்பது எதிர்காலம்.
ஆதலின் அது செல்லத் துணிந்தமையையே குறித்தது.
பின் செல்லல், வழிப்படுதலைக் குறித்த குறிப்பு மொழி.
`இது துணிந்தவள் உடன் போக்கிற்கும் உடன் படுவாள்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 70

கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.

பொழிப்புரை :

(உலகீர்; நீவிர் நும்செயல்களை விடுத்து,) சிவனைத் துதியுங்கள்; அவனுக்கு அணுக்கராய் நின்று சிறிய பணி விடைகளைச் செய்யுங்கள்.
(அன்பினால் நீர் துளித்தலால்) கண்கள் குளிர்ச்சியடையுங்கள்; மனத்தை ஒரு நிலையில் நிறுத்துங்கள்; `சிவனே முதல்வன்` - என அவனைத் தெளியுங்கள்; எவரிடத்தும் பகைமை கொள்ளுதலைத் தடுங்கள்; ஆசையை அடக்குங்கள்; துன்பத்தினின்றும் நீங்குங்கள்; இவைகளையே வழியாகப் பற்றி வானுலகில் ஏறுங்கள்; ஏறியவராய் அங்கு வானத்தவர்க்கு எய்தற் கரிய விருந்தினராய் அங்கு அவர் உபசரிக்க வீற்றிருங்கள்.

குறிப்புரை :

குற்றேவலே கிரியா பூசையாகச் சொல்லப்படுகின்றது.
``ஏறுமின்`` என்றது குறிப்புருவகம்.
உலகியலில் நிற்போரை நோக்கிக் கூறினார்.
ஆகலின், `அவரது விருப்பமும் இவற்றால் நிறைவுறும்` என்றற்கு.
``வானத்து விருந்தாய் இருமின்`` என்றார்.
`சிவ வழிபாடே எல்லாப் பயன்களையும் தரும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட
நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாயணைந்தே
எமையா ளுடையான் தலை
மகளாவங் கிருப்பவென்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.

பொழிப்புரை :

(கங்கையானவள் தான் வானுலகத்திலே இருக்கவும்) தேவர்கள் கொணர்ந்து நிலத்திலே இறக்கிவிடத் தன் தன்மை கேட்டு, (ஆகாயகங்கை` என்னும் சிறப்பு நீங்கி,) ஓர் அரசன் பின்னேசென்று, தனக்கு ஏற்புடைத்தாகாத வழியிலே நடந்து, பின்பு ஓர் ஆழமான ஆற்றுவடிவத்தை அடைந்து, தனது கரையில் எம்மை ஆளுடையானாகிய சிவன் தலைவனாய் வீற்றிருக்க.
அதனால் அவன் தேவி உமையவள் தலைவியாய் இருத்தலால் அவருக்குக் கீழே ஓர் உறைவிடம் பெற்றோ இருப்பது! (இஃது என்ன முறை!)

குறிப்புரை :

சிவன் ஆகாய கங்கை மண்ணில் வந்து காசியில் சிறந்த புண்ணிய நதியாய் இருக்கச் செய்து, அதன் கரையில் தானும், தன் தேவியும் வீற்றிருந்து அங்குச் சென்று அந்த கங்கையில் முழுகித் தன்னை வழிபட்டவர்களது பாவங்களைப் போக்குதலும், இறந்தவர் களுக்கு வீடுபேற்றைத் தருதலும் ஆகிய அருட் செயல்களைக் கங்கை யின் பொருட்டு இரங்குவார் போலக் கூறியவாறு.
காசிக் கங்கை நதியின் பெருமையும் இதனால் குறிக்கப்பட்டது.
``ஏந்தல்`` என்றது பகீரதனை.
அமையா நெறி, தரை வழி.
பகீரதன் கங்கையைக் கொணர்ந்த வரலாற்றினை இராமாயணம் முதலியவற்றிற் காண்க.
``இமையோர்`` என்பது பிரமன் ஆணையைப் பெற்ற தேவர்களை.
`கெட்டு, ஆய் அணைந்து, உறைகின்றது` - என்பவற்றிற்கு, `கங்கை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
``சலமகளாய்`` என்றது, `நதி வடிவாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 72

உறைகின் றனரைவர் ஒன்பது
வாயிலோர் மூன்றுளவால்
மறைகின்ற என்பு நரம்போ
டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயனில்லை போயடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.

பொழிப்புரை :

(உலகீர்) விரிந்து கிடக்கின்ற தோலாகிய கூரை வேய்ந்த சிறு குடிலாகிய இந்த உடம்பில் அக்கூரையால் எலும்பும், நரம்பும், இறைச்சியும், குருதியும், மச்சையுமாகிய கட்டுப் பொருள்கள் வெளித்தோன்றாது மறைந்து கிடக்கின்றன.
(வெளித் தோன்றினால் அருவருப்பைத் தரும்.
) இந்தச் சிறுகுடிலுக்கு வாயில்களோ ஒன்பது உள்ளன.
(ஆகவே பாதுகாப்பில்லை.
) இதில் பண்டங்கள் மூன்றே உள்ளன.
அவைகளை முன்னிட்டு இதில் ஐந்துபேர் வாழ்கின்றனர்.
(ஆகவே, இதில் உங்கட்குப் பயன் எப்படிக் கிடைக்கும்?) கிடையாது, ஆகையால், ஒலிக்கின்ற, தெளிவாகிய நீரைச் சிவந்த சடையிலே வைத்துள்ள சிவபெருமானது மலர்போலும் திருவடிகளை நோக்கிச் சென்று, அவற்றையே அடைமின்கள்.

குறிப்புரை :

ஐவர் - ஐம்புல ஆசைகள்.
மூன்று - வாத பித்த சிலேத்து மங்கள்.
மச்சை - பித்த நீர் ``போர் குரம்பை``, இறந்தகால வினைத் தொகை.
குரம்பையில்` என உருபு விரித்து, `என்பு முதலியன மறை கின்ற` என்க.
மறைகின்ற, அன்பெறா அகர ஈற்றுப் பலவின்பால் வினை முற்று.
`யாக்கையது நிலையாமையையும், துன்ப மிகுதியையும் உணர்ந்து இதன்மேல் உள்ள பற்றினை விடுத்துச் சிவனது திருவடிகளைப் பற்றல் வேண்டும் என்றபடி.
போதல் பற்று விடுதலையும், அடைதல் பற்றுதலையும் குறித்தன.
`உடம்பினால் வரும் துன்பத்தினை எண்ணாமல் அதன்மேல் மக்கள் பற்றுச் செய்கின்றனர்` என்பதைத் திருவள்ளுவர், இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.
* என்பதனால் உணர்த்தினார்.

பண் :

பாடல் எண் : 73

அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாயெமக்கோரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே
றுயர்த்த குணக்குன்றமே.

பொழிப்புரை :

வண்டுகள் தேனை உண்கின்ற கொன்றை மலரால் ஆகிய, நறுமணம் பொருந்திய கண்ணியைச் சூடியுள்ளவனே, நீ, உனது திருவடியை விரும்பி உன்னைக் கையால் தொழுதவர்கட்கெல்லாம் பெரிய இவ்வுலகத்தையே பரிசிலாகக் கொடுத்து, உனது அடிக்கீழ் கிடக்கும் நாய்போன்ற, மாவடு ஒத்த கண்களையுடைய இவள் நின்னைத் தொழ, (இவட்கு ஏதும் கொடாமல்) இவள் அணிந்திருந்த வளையல்களையும் கொண்டுவிட்டாய்.
கொடியை உயர்த்துக் கட்டும் கயிற்றில் அறமாகிய இடபக் குறியை உயர்த்துள்ள குணமலை போல்பவனே, எங்களைப் பொறுத்தமட்டில் ஓர் ஊரில் இரண்டு இல்லங்களைக் காட்டுதல் போலும் செயலைச் செய்தால்; (இது நீதியோ!)

குறிப்புரை :

``அடிக்கண்ணி`` என்பதில் ககர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது.
``கண்ணி`` - நான்கில் முதலாவது `கருதி` என்றும், இரண்டா வது, `கண்களையுடையவள்` என்றும், மூன்றாவது, `முடியில் அணி யும் மாலை` என்றும், இறுதியது `கயிற்று முடி` என்றும் பொருள் தந்தன.
ஓர் ஊரில் இரண்டு சுகம் - `வேண்டுபவர்க்கு` என்று எல்லா நலங்களும் நிறைந்த ஓர் இல்லமும், `வேண்டாதவர்க்கு` என்று ஒன்றும் இல்லாத ஓர் இல்லமுமாக அமைத்தல்.
ஓர் இல்லமேயிருப்பின் வேற்றுமையில்லை.
அதனால், `இரண்டகம்` என்று சொன்னாலே, `வேண்டாதவர்கட்கு` என்று வேறு இல்லம் அமைப்பதையே குறித்தல் வழக்கு.
`உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே` என்பர்.
நன்மை, அறம்.
``கொல்லேறு`` என்றது இன அடை.
`ஏனையோர்க்கெல்லாம் அருள்செய்து, இவளைக் காதலால் வருந்தவிட்டாய்` என்பது கருத்து.
இது தலைவியது ஆற்றாமை கண்டு செவிலி இரங்கிக் கூறியது.
`மாணிக்க வாசகர் போலச் சிவனை அடைதலில் வேட்கை மிக்காரைச் சிவன் இவ்வுலகத்தில் வைத்தல் என்னை` என உலகத்தார் இரங்கி ஆராய்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 74

குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத்
துறுகுழியே.

பொழிப்புரை :

தான் வீற்றிருக்கும் மலையைப் பெயர்த்த இராவணனை அன்று அவன் தனது காது, கண், வாய், தலை எல்லாம் நெரிந்து அவன் `ஓ` என்று அலறும்படி அடர்த்து, அவனது அகங்காரம் முழுதும் அற்றொழிய அவனை ஒறுத்தவனும், மற்றுப் பற்றுக்கள் எல்லாவற்றையும் விட்டுத் தன்னையே பற்றாகப் பற்றுவோர்க்குத் தானும் தன் பெருமைகளையெல்லாம் விட்டு அவர்க்கு இரங்கி வந்து எவ்வகையிலும் நலம் புரிபவனும் ஆகிய `சிவன்` என்னும் அரு நெல்லிக்கனி வெளியிடத்திலே தோன்றி நிற்க.
மக்கள் அதனை உண்ணாமல் தமக்கு எளிதில் தெரிந்ததை எடுத்துச் சொல்லி இறப்பிற்கு ஆளாகிப் பின்பு மிக ஆழ்ந்த குழியாகிய நரகத்திலும் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவரது அறியாமையின் நிலை` என்பது குறிப் பெச்சம் `நிக்கிரகமும், அநுக்கிரகமும் செய்யவல்ல முழுமுதல்` என்பதை முதல் இரண்டடிகள் குறித்தன.
``அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய்`` * என்ற திருஞானசம்பந்தர் திருமொழி காண்க.
சிவன் அற்றவர்க்கு அற்றவன் ஆதலை, வன்றொண்டருக்கு இருமுறை தூது நடந்தமை முதலியன பற்றி அறிக.
செவி, கண் முதலிய வற்றை விதந்தோதியது.
அவை அளவின் மிக்கிருந்தமை குறித்தற்கு.
நெல்லிகனி, ஔவை உண்ட நெல்லிக்கனி போல்வது.
`சிவனை அடைந்தால் இறப்பில்லை` என்பதை அது குறித்தது.
ஒன்று - எளிதாகிய ஒன்று.
அது சிவனது கோலம்.
`அந்தக் கோலத்தின் மெய்ம்மையறியாது இகழ்ந்து, நரகுறுகின்றனர்` என்றபடி.
`உறுகுழி` நரகத்துப் புகுவர்` என மாற்றியுரைக்க.
உறு - மிகுதி.

பண் :

பாடல் எண் : 75

குழிகண் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடையூன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல் கண்டன்
ஆடும் கடியரங்கே.

பொழிப்புரை :

யாவர்க்கும் தலைவனாகிய சிவன் ஆடுகின்ற விளக்கமான அரங்கமாவது, ஆழமான கண்களையும், வேகமான நடையினையும், வளைவான பிளவுபட்ட பாதங்களையும் நீண்ட இடையினையும், ஊன் தின்னும் புலி தொங்குகின்ற விரிந்த செவிகளையும், வெறுந் தோலாய்த் திரைந்த கொங்கைகளையும், பரட்டை மயிரினையும், பிளந்த வாயினையும், `கட்டு, உதை` என்று அதட்டி இரைகின்ற குரலையும், ஒட்டிய வயிற்றையும், முறுக்கிய விரல்களையும் உடைய பேய்களுக்கு உரிய உறைவிடந்தான் போலும்!

குறிப்புரை :

`வேறு இடம் இல்லையோ` என்பது குறிப் பெச்சம்`இங்குக் குறிக்கப்பட்ட இடம் முதுகாடு` என்பது தெளிவு.
`முதுகாடு` என்பது உண்மையில் அனைத்தும் ஒடுங்கிய முற்றொடுக்க நிலையையும், `பேய்கள்` என்பது அந்நிலையில் நிகழும் மூன்று வகையான கேவல நிலையில் நிற்கும் ஆன்மாக்களையும் குறிக்கும்.
அக்கேவலங்களைச் சிவஞான யோகிகளது சிவஞான போத ஆறாஞ் சூத்திரச் சிற்றுரையால் அறிக.
இந்நுட்பம் உணரமாட்டாதார் சிவனை உலக முதுகாட்டில் ஆடுபவனாகவே வைத்து இகழ்வர்.
அவர் அவ்வாறு இகழ்தலையே தாம் இகழ்வதுபோலக் கூறினார்.
``போல்`` என்றதனால், அவனுக்குப் பொன், வெள்ளி, மணி முதலிய நல்லரங்கு களும் உள என்பதனைக் குறிப்பால் உணர்த்துதலும் செய்தார்.
`சிவன் ஆடுவது சுடுகாட்டில் என, யார் அக்காட்டினை எத்துணை இகழினும் அனைவரும் இறுதியிற் செல்லும் இடம் அதுவேயாதல் அறியத் தக்கது.
இறப்பிற்கு அஞ்சுவோர் யாவரும் சுடுகாட்டை நினைப்பினும் துணுக்குறுவர்; இறவாதவன் ஏன் அதற்கு அஞ்சப் போகின்றான்? ``கட்டு`` என்பது கூறினமையால் அதற்கு இனமான `உதை` என்பதும் வருவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 76

அரம்கா மணியன்றில் தென்றலோர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால்
இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரம்கா முறுவான் எலும்புகொள்
வானென்றன் தேமொழிக்கே.

பொழிப்புரை :

தேன்போலும் மொழியையுடைய என் மகளுக்குச் சோலைகளில் உள்ள அழகிய அன்றிலின் குரலாகிய அரம், தென்ற லாகிய ஓர் யமன், திங்களாகிய அழகிய நெருப்பு, மன்மதன் எய்கின்ற ஐந்து மலர்களாகிய அம்பு, பூசப்படுகின்ற சந்தனம் மேலுக்குக் குளிர் வதுபோலக் காட்டி உண்மையில் வெதுப்புகின்ற உட்பகை ஆகிய வற்றால் இவள் உயிர் தளர்ந்தாள்.
இதைக் கண்டு மனம் இரங்காதவர் இல்லை.
ஆயினும், தேவர்களது தலைகளையும், எலும்புகளையும் மாலையாகவும், அணிகலமாகவும் அணிய விரும்புகின்ற அவன் மனம் இரங்கவில்லை.

குறிப்புரை :

`அவனைக் காதலித்தே இவள் இந்நிலையை அடை கின்றாள்` என்றபடி.
இதுவும் செவிலியின் இரங்கற் கூற்றே.
உள்ளுறை யும், ``அடிக்கண்ணி`` என்னும் பாட்டில் கொண்டவாறே கொள்க.
`அழகிய தீ` என்றது.
`பார்ப்பதற்கு அழகாய்த் தோன்றிச் செயலால் வருத்தம் செய்கின்றது` என்றபடி.
அன்றில் தன் துணையை அழைத்து வருந்தும் குரல் தனிமைப்பட்ட காதலர்க்கு வருத்தத்தை மிகுவிக்கும்.
``உட்பகை`` என்பதன்பின், `இவற்றால்` என்று `இவை` என்பது தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 77

மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்னுயிர்மேற்
கழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.

பொழிப்புரை :

தில்லையில் உள்ள சிவபெருமான், என்னைப் பலரும் பழி தூற்றவும், எனக்கு வருத்தம் ஒரு காலைக் கொருகால் மிகவும், முன்கையில் உண்ட சங்க வளையல்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகவும், அன்றிலின் குரல் என்னையும் என் உயிரையும் வேறுபடும்படி பிளக்கவும், தென்றல் எனது உயிர்மேல் சினந்து நோக்கவும், இன்ன பல இன்னல்கள் மிகுதிப்படவும், உடை யும், மேகலையும் நீங்கிப் போகவும் செய்தான்.
இவை என்னிடத்துச் செய்த கள்ளச் செயல்கள்.

குறிப்புரை :

தலைவி தானும் அறியாதவாறு இவை நிகழ்ந்தமையின், ``கள்ளங்கள்`` என்றாள்.
இதன்பின் `இவை` என்பது எஞ்சி பக்குவி களைச் சிவன் அவர்களையறியாமலே அவர்களைத் தன்வயம் ஆக்கல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 78

கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

(உலகீர்) மனத்தில் வஞ்சனைக்கு இடம் அளிக்கா மல் போக்கி, உண்மையாக அடிமைப்படத் தெரிந்தவர்களுடைய உள்ளமாகிய வரைவிடத்தல் வீற்றிருக்கின்ற, மேலானவனாகிய சிவ பெருமான் தனது நீண்ட முடியின்மேல் பெருவெள்ளப் பரப்பின் நுரையிலே சூடிய வெள்ளிய பிறையைக் கொள்ளுதற்குச் சூழ்கின்ற பாம்பு ஒன்று இருத்தலைக் கருத்துட் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அஃது, ஒன்றற்கு ஒன்று பகையாகியவற்றைப் பகை யின்றி வாழச் செய்யும் குறிப்பினது ஆதலின், அவனை யடைந்தால் நீங்களும் பகை முதலிய இடர் இன்றி வாழ்வீர்` - என்றபடி.
வளாகம்- பரந்த வரைவிடம் `நுரைக்கண்` என ஏழாவது விரிக்க.
`சூடிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
வளாவுதல் - சூழ்தல், `வளாவுகின்ற` என்பது, ``வளாய்கின்ற`` எனத் திரிந்து வந்தது.

பண் :

பாடல் எண் : 79

குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை
யேவந்து கோளிழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ
சிறுமி கடவியதே.

பொழிப்புரை :

நீல கண்டத்தை உடையவரே, உமக்கு இவள், ஒன்றைக் கருத்திலே கொண்டு இட்டன தான் அணிந்திருந்த வளையல் களையே.
அவைகளை நீர் வந்து கொண்டும் விட்டீர்.
ஆயினும் இச் சிறுமி உம்மை இரக்கக் கருதியது உம்மிடத்துள்ள மணம் பொருந்திய விளாம் பூவோ? எலும்போ? விரிந்த சடைமேல் இருக்கின்ற கொன்றை மாலையோ? உடையாகப் பொருந்திய தோலோ? சாம்பலோ? உடைந்து போன பிச்சைப் பாத்திரமோ?

குறிப்புரை :

`இவை தவிர உம்மிடத்தில் வேறு என்ன இருக்கின்றது` எனச் சொல்லி நகையாடித் தன் தலைவியின் அறியாமைக்குத் தோழி இரங்கியவாறு.
``சிறுமி`` என்றது பேதைமை குறித்ததே.
`இப் பேதைமையுடையாளை நீ கைவிடலாகாது` என ஓம்படுத்தினாள் என்க.
வெறி - நறு நாற்றம்.
வெள்ளில் - விளா.
`உறைதலை யுடைய கொன்றை` - என்க.
உடை கலன், வினைத்தொகை.
`நுமக்குப் பெய்தது` என மேலே கூட்டுக.
கடவியது - கடாவியது.
கேட்டது.

பண் :

பாடல் எண் : 80

கடவிய தொன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தாற்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்கவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.

பொழிப்புரை :

இவள் இங்கு வந்த நீண்ட சடையையுடைய, பலரும் `எம் தந்தை` எனப் போற்றுகின்ற சிவபெருமானிடம் எதனையும் இரக்கவில்லையாயினும் அவன் செய்ததைக் கேளுங்கள்; அவனுக்குத் தனது விரிந்த நெஞ்சத்தை இடமாகக் கொடுத்த ஒன்று தான் இவள் செய்தது.
ஆயினும், அதற்குக் கைம்மாறாக அவன் இவளுக்குத் துன்பத்தைக் கொடுத்தான்.
பெரிய கிளைகள் அடிமரத்தின் மேலே இருக்கும் பொழுது அந்த அடிமரம் நிற்கக் கிளை வெட்டப்படுவது உலக இயல்புதானே?

குறிப்புரை :

`அதுபோல, இவட்குப் பற்றுக்கோடாயினார் பலர் இருக்கவும் இவள் இறந்துபடுகின்றாள்` என்பதாம்.
ஈற்றடி ஒட்டணி யாய் நின்றது `ஆகவே, இவளது அறியாமையின் நிலையை யாம் கண்டோம்` என முடிக்க.
கடவியது - கடாவியது கேட்டது.
``காரிகையாள்`` என்பதை முதலிற் கூட்டுக.
மடவியவாறு.
மடமையாளாகிய வகை.
இடவிய - இடம் பரந்த.
தடவிய - பெரிய; `தட` என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம்.
கொம்பு - கிளை.
தாள் - அடிமனம்.
தறிக்குறும் - வெட்டப்படும்.

பண் :

பாடல் எண் : 81

தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லுஞ்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ
லாமென்று பாவிப்பனே.

பொழிப்புரை :

(எங்கள் பெருமானே, நீ பிரமன் தலையைக் கிள்ளி னாய்; சலந்தராசுரனைக் கொன்று வீழ்த்தினாய்; காமனைப் பொறிக் கறிபோல ஆகும்படி நெருப்பாக்கினாய்; இவையெல்லாம் உனக்குப் புகழாதலைக் கண்டு, `இவளுடைய சில வளையல்களை நீ கவர்ந்தது உனக்குப் பழியாகும்` என்று கருதி நான் வருந்துகின்றேன்.

குறிப்புரை :

கொல், ஆம் அசை.
பாவித்தல் - கருதுதல்.
``வளையைக் கவர்ந்தாய்` என்றது, `மெலியப் பண்ணினாய்` என்றபடி.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி.
1 என்ப ஆதலின், `அவ்வாறு அருளாமை புகழுடைய நினக்கு ஆகாது` என்பதாம்.
இது தோழி தலைவனை இரந்து பின்னிற்றல் ஆகலின் பெண்பாற் கைக்கிளை.
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் தாள்பரவி ஏம்பலிப் பார்கட்கு இரங்கு கண்டாய்.
2 நின்னடியார் இடர்களையாய்.
3 என்றாற்போல, அன்பர் பொருட்டு அருளாளர் விண்ணப்பித்தல் இதன் - உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 82

பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கமெங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.

பொழிப்புரை :

எம் சிறுமி, செய்வது அறிகின்றிலள்; கொட்டாவி விடுகின்றாள்; மனம் நெகிழ இவள் உடம்பெங்கும் குங்குலியம் போன்ற மணம் வீசநின்றது.
குவளை மலர் போலும் கண்கள் நீரைச் சொரியாநின்றன.
தன்னை மறக்கின்றாள்; நீல கண்டனைத் தன் கண்களில் நிறுவுகின்றாள்.
இவையெல்லாம் வெண்மையான பற்களையும், மென்மையான கூந்தலையும் உடைய இவளை வந்து பொருந்தின.
ஆகலான் இவள் நாம் முன்பெல்லாம் அறிகின்ற பழைய பெண் அல்லள்.

குறிப்புரை :

`சிவனுக்கு உரியளாய புதியள்` என்பதாம், இது, நாற்றம் தோற்றம் முதலியவற்றால் பாங்கி மதியுடம் பட்டது.
சிவஞானிகளது நிலைமையை அவர்பால் நிகழும் சில மெய்ப்பாடுகள் பற்றி உலகத்தார் ஊகித் துணர்தல் இதன் உள்ளுறை, `செய்யும்` என்னும் வினைகள் பலவற்றுள் முதலதாகிய ``பாவிக்கும்`` என்பது ஒன்றும் எச்சம்; ஏனைய வெல்லாம் முற்று.
``சிறுமி பரிசறியாள்`` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க.
`அகம் நெக, அங்கம் எங்கும் குற்குலு நாறும்` என்க.
இது சிவனைத் தழுவியதால் உண்டாயது.
சோர்த லாகிய, இடத்தின்மேல் நின்ற வினைக்கு, `நீர்` என்னும் வினைமுதல் வருவிக்க.
தாவிக்கும் - தாபிக்கும், ஓதி - ஓதியை உடையாள்.
``ஓதிக்கு`` என்னும் நான்காவதை இரண்டாவதாகத் திரிக்க.

பண் :

பாடல் எண் : 83

சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.

பொழிப்புரை :

வந்து எதிர்நின்ற நமனுக்கு நமன் ஆவான்; நோய்கட்கு ஒப்பற்ற மருந்தாவான்; நினைத்தால் சிந்தாமணிபோல, நினைப்பவற்றைக் கொடுப்பான்; இனிக்கின்ற அமுதம்போல இனிமையைத் தருவான்; வணங்கினால் எதிர்ப்பட்டுத் தன்வயம் ஆக்கிக் கொள்வான்; தேவர்களும் வணங்க நிற்கின்ற, இரவில் காட்டில் ஆடுகின்ற சிவன் தன் அடியார்களுக்கு ஆகின்ற பொருள்கள் இவைகளாகும்.

குறிப்புரை :

`தித்தித்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
என்னை, `எவன்` என்னும் வினாப் பெயரின் திரிபு.
அஃது இங்கு `எத் துணை` என்னும் பொருட்டாய் மிகுதியைக் குறித்தது.
மால் - மயக்கம்.
அஃது இங்குவசப்படுத்துதலைக் குறித்தது.
`காட்டில்` என்பது ஆற்றலால் வந்தது.
`ஆவன இவை` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 84

ஆவன யாரே அழிக்கவல்
லாரமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
புராபுரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேனிழந் தேன்கலை
யோடு செறிவளையே.

பொழிப்புரை :

முப்புரத்தை எரித்த கடவுளாகிய தில்லையிலே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அடிதொழுதமையால் (நல்லோர் பலரும் பல நன்மைகளைப் பெற) யான் தீவினை செய்தேன் ஆகலின் எனது உடையோடு.
செறிந்த வளையல்களையும் இழந்தேன்.
ஒரு நெறிப்படாத இந்த உலகத்தில் ஊழ் வலியால் மேன்மேல் நன்றாய் வளர்வனவற்றை - அழிக்க வல்லவர் யாவர்! சிறிது சிறிதாய்த் தேய்ந்து போவனவற்றை அவ்வாறு தேயாமல் கட்டிக் காக்க வல்லவர் யாவர்! (ஒருவரும் இல்லை)

குறிப்புரை :

இது, சிவபெருமானைக் காதலித்தாள் அக்காதல் நிறை வெய்தாமை பற்றி ஆற்றாது கூறியது.
பக்குவ மிகுதியால் சிவனை அடைய விரும்பினார் அதற்குத் தடையாய் நிற்கும் பிராரத்தம் பற்றி வருந்திக் கூறுதல் இதன் உள்ளுறை.
ஊழ் வலியாகிய பொதுப் பொருளால் கலை வளையல்களை இழந்த சிறப்புப் பொருளைச் சாதித் தமையால் இது வேற்றுப் பொருள் வைப்பணி ``சிவனை அடியைத் தொழுது`` என்றதை, `கள்வனைக் கையைக் குறைத்தான்`` என்பது போலக் கொள்க.
திருந்து அடி செவ்வியவாய பாதங்கள்.

பண் :

பாடல் எண் : 85

செறிவளை யாய்நீ வரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோருமேத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதுங் கலங்கியதே.

பொழிப்புரை :

செறிக்கப்பட்டவளைகளை உடையவளே `சிவனது செவ்விய பாதங்களாகிய தாமரை மலர்களே குடிப்பிறப்பு, கல்வி, மெய்ப்பொருள் எல்லாமாகும்! என யாவரும் புகழ்கின்ற அத் தன்மையையே நிலைபேறாக உடைய உனது மனம், `அந்தச் சிவனைத் தாம் விரும்பியதையே விரும்புகின்ற கீழ்மக்கள் கூட்டத்திற் சென்று காண்பேன்` என்று இப்பொழுது கலக்கமடைந்து விட்டதே; இஃது என்! அந்த மனத்தின்வழி நீ விரைந்து செல்லாதே.

குறிப்புரை :

இது, தலைவியை ஆற்றுவிக்க வேண்டி, `தலைவனை யான் விடர்கள் கூட்டத்திற் சென்று கழற்றுரை கூறி நின்னைச் சேர்விப்பேன்` எனத் தலைவனை இயற்பழித்த வழி, தலைவி, `அவர் விடர்களது கூட்டத்தில் சேர்பவர் அல்லர்` எனத் தலைவனை இயற்பட மொழிந்தது, பக்குவிகள் பால், `சிவஞானம் இன்றியும் வீடு பெறலாம்` என மயங்கிக் கூறுகின்றவர்களைப் பக்குவிகள் `அது கூடாது` எனத் தெருட்டுதல் இதன் உள்ளுறை.
`சேவடித் தாமரைப் போது` என மாற்றுக.
நிறை - வழுவாது நிறுத்துதல்.
``நெஞ்சு இது`` என்றது.
`தான் அவள்` என்னும் வேற்றுமையின்மையால் தோழியது நெஞ்சத்தை.
``கலங்கியதே`` என்பதன்பின் வருவித்தது சொல்லெச்சம்.
விரையல் - விரையாதே.
``வேண்டிற்று வேண்டிய நீசர்`` என்பதனை, ``காணா தான் - கண்டானாம் தான்கண்டவாறு`` 1 ``பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்`` 2 முதலியவற்றோடு ஒப்பிட்டு உணர்க.
`அக்கறை வளர் கண்டனை` எனச் சுட்டு வருவிக்க.

பண் :

பாடல் எண் : 86

கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்அவிந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ தெம்மிறையே.

பொழிப்புரை :

எங்கள் பெருமானே, கடல்கள் யாவும் தீயால் கொதித்து வற்றிவிட்டன.
கரிய மலைகள் பெருவெள்ளத்தில் மூழ்கி விட்டன.
பூவுலகங்களும் அவ்வெள்ளத்தில் ஆழ்ந்து மறைந்து விட்டன.
வானுலகங்களும் நிலை குலைந்து போயின.
பலவாகிய உமது கணங்களும் `என்ன செய்வது` என்று தோன்றாமல் மயங்கி விட்டன.
`இறவாதவர்` எனப்படுகின்ற தேவர்களும் இறந்துவிட்டனர்.
இந்த நிலையில், ஆகாயம் எங்கும் போய் விட்டுவிளங்குகின்ற மின்னலோடு மின்னலாய் ஒளிர்கின்ற உமது நீண்ட சடைகள் சுழல நல்லதொரு சிறந்த நடனத்தை யார் பார்ப்பதற்கு ஆடுகின்றீர்?

குறிப்புரை :

`பார்ப்பதற்கு ஒருவருந்தாம் இல்லையே என்றபடி.
இது `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனக் கூறப்படுவதன் உண்மையை விளக்கியது.
`சுடுகாடு` என்பது எல்லாம் ஒடுங்கிய நிலை.
இது முற்றழிப்பு, அல்லது `சருவ சங்காரம்` - எனப்படும்.
`இந் நிலையில் சிவன் ஆடுகின்றான்` என்பது, புனர் உற்பவத்திற்கு (மறு முறைப் படைப்பிற்கு) ஆவனவற்றைச் செய்தலைக் குறிக்கும்.
அச் செயல் `சூக்கும பஞ்ச கிருத்தியம்` - எனப்படும்.
இந்நிலையில் ஆன்மாக்கள் `சேகல கேவலம்` - என்னும் நிலையில் நிற்கும்.
அந்த ஒரு கேவலத்திற்குள்ளே `பிரளய கேவலம், விஞ்ஞான கேவலம் - என்னும் இருகேவலங்கள் உளவாகும், இவற்றைச் சிவஞானபோத ஆறாம் சூத்திரத்துச் சிவஞான யோகிகளது சிற்றுரையால் அறிக.
இக்கேவலங்களை உடைய ஆன்மாக்களே சிவனோடு உடன் நிற்கும் பேய்களாகச் சொல்லப்படுகின்றன.
இஃது உணராதார், `சிவன் ஆடும் சுடுகாடு உலகில் பல இடங்களில் உள்ள சுடுகாடுகளே` என்றும், `பேய்கள் அங்கு வாழும் பேய்களே` என்றும் கருதிவிடுகின்றனர் என்பது கருத்து.
நாகம் - சுவர்க்க லோகம்.
``இமையோர் அவிந்தார்`` என்பதை, ``பல்கணம்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
``இமையோர் வியந்தார் என்பது பாடம் அன்று, அலங்கல் - அசைதல்.

பண் :

பாடல் எண் : 87

எம்மிறை வன்னிமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாளிவள் என்பிழைத்
தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற் றெழிற்கலையே.

பொழிப்புரை :

எமக்கு இறைவனும், தேவர்கட்குத் தலைவனும், உமைக்குக் கணவனும், யாவராலும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் வணங்கப்படுபவனும், மூன்று கண்களை உடைய வனும், திகம்பரனும் ஆகிய சிவனுக்கு என்னை வஞ்சித்து இவள் என்ன முறை உடையவள் ஆயினான்? (`மனைவி ஆயினளோ` - என்றபடி - அது நிற்க,) என்னை வஞ்சித்த இவளுக்குச் சிவன் இவள் தன்னை விரும்பியதை அறிந்தும் இவளுக்கு மெலிவை நீக்காமல் மெலிவை விளைவித்து, இவளது அழகிய உடையை அகன்று போகும்படி இவ்வாறு தவறு செய்தது ஏன்?

குறிப்புரை :

`அதனை யான் அறிகின்றிலேன்` என்பதாம்.
`இறை பிழைத்தான்; என்` என மாறிக் கூட்டுக.
`எழிற் கலை கவரக் கருதிய தாகிய இம்முறையாலே பிழைத்தான்` என்க.
இது, செவிலி தலைவி யது ஆற்றாமை கண்டு தலைவனை இயற் பழித்தது.
இறைவனைச் சார்ந்தார்க்கு ஆற்றாமை உளதாதலைக் கண்டு உலகர் இறைவனை இயற் பழித்தல் இதன் உள்ளுறை.

பண் :

பாடல் எண் : 88

கலைதலைச் சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட்
சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந்
தோர் இந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

`எட்டுக் கைகளில் மான், முத்தலைச் சூலம், மழு, நெருப்பு, மணி, மழுவிற் சிறிது வேறுபட்ட கட்டங்கம், கொடி, வில் - என்னும் இவற்றை ஏந்தியுள்ள சிவபெருமானுக்கு மனம், மொழி, மெய் மூன்றும் பிற வழிகளில் செல்லாது பணிவிடை செய்தவர்கள் நிலையாய் உள்ள மகாமேருமலையைப் போன்ற உயர்ந்த குறிக்கோள்களைக் கொள்ளினும் தவறாமல் பெறுவார்கள்` - என்று, அறிவுடையோர் இந்தப் பெரிய பூமியில் எங்குள்ளவரும் அறியக் கூறுவர்.

குறிப்புரை :

``உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்`` எனக் கூறிய திருவள்ளுவர் `அஃது எய்துதல் அரிது` என்னும் கருத்தால், ``மற்றது- தள்ளினும் தள்ளாமை நீர்த்து`` என்றார் ஆகலின், `சிவனடியார்கள் அத்தகைய குறிக்கோள்களைத் தவறாமல் எய்துவர்` என்றார்.
`மேரு வும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 89

மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையவத் தேவரெல்லாம்
ஆநலத் தாற்றொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங
னேயினிப் பாடுவதே.

பொழிப்புரை :

பெரிய பூமியில் உள்ள மக்களினும் மேம்பட்ட பெருமையுடையவர் தேவர்.
அத்தேவர் யாவரும் தம்மால் ஆன மட்டும் நன்முறையில் வணங்கும் சிவபெருமான் பெருமையுடைய வன், அவனது பெருமையைத் தேன் பொருந்திய தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரம தேவனும், திருமாலும் ஆகிய அவரே ஆராய்ந்து முற்றும் உணரவல்லரல்லர் என்றால், அவனது பெருமையை நாம் எங்ஙனம் முற்ற உணர்ந்து பாநயத்தோடு கூடிய கவிகளால் பாடுவது!

குறிப்புரை :

`இயலாது ஆகையால் அறிந்த அளவில் பாடுவேம்` - என்பது குறிப்பெச்சம்.
``யான் அறி அளவையின் ஏத்தி` என்றார் முருகாற்றுப் படையிலும் தேவரது பெருமையை உணர்த்தற்கு, ``மாநிலத் தோர்கட்குத் தேவர்`` என்றார்.
``தேவர்`` என்பதன் பின்னும், ``ஈசன்`` என்பதன் பின்னும் `பெருமையுடையர், பெருமையுடையன்` என்பன எஞ்சி நின்றன.

பண் :

பாடல் எண் : 90

பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

பொழிப்புரை :

எம் தலைவனாகிய சிவபெருமானுக்கு அவன் பூசியுள்ள திருநீறு அவன் அணிந்துள்ள படத்தையுடைய பாம்பு பெருமூச்சு எறிதலால் கையில் ஏந்தியுள்ள நெருப்பு ஓங்கி எரிய, அதனால் அவன் முடியில் அணிந்துள்ள பிறை உருகி ஒழுகுவது போன்று உள்ளது.
பின்பு அந்நீறும், உமையாளது பாகமும் ஒன்று சேர்வது, கங்கை நதியும், தெளிவாகிய நீரையுடைய யமுனை நதியும் ஒன்று சேர்ந்தது போன்று உள்ளது.

குறிப்புரை :

கங்கை நீர் வெண்மை நிறத்தையும், யமுனை நீர் கருமை நிறத்தையும் உடையன.
``பாடிய வண்டு உறை கொன்றையினான்`` என்பது, ``எம் கொற்றவன்`` எனப்பட்டவனை.
`அவன் எனச் சுட்டும் அளவாய் நின்றது.
`அதுவும், உமை பாகமும் கூடியது, கங்கையும், தெண்ணீர் யமுனையும் கூடிய கோப்பு ஒத்தது` என வேண்டும் சொற்கள் வருவித்து இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 91

கொற்றவ னேயென்றுங் கோவணத்
தாயென்றும் ஆவணத்தால்
நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி
யென்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக
னேயென்றும் மன்மதனைச்
செற்றவ னேயென்றும் நாளும்
பரவுமென் சிந்தனையே.

பொழிப்புரை :

என்னுடைய சித்தம் எந்நாளும், யாவர்க்கும் என்றும், `கோவணமாக உடுத்த உடையை உடையவனே` என்றும், `புனைந்துள்ள கோலத்தால் நல்ல தவசியே` என்றும், `நஞ்சை உண்டவனே` என்றும், அஞ்செழுத்தை நெஞ்சில் அமைத்தவர்களால் பெறப்பட்டவனே` என்றும், `தலைக்கோலம் உடையவனே` என்றும், `மன்மதனை அழித்தவனே` என்றும் இவ்வாறே சொல்லித் துதிக்கும்.

குறிப்புரை :

`வேறொன்றையும் செய்யாது` எனத் தமது உள்ளத்தின் உறைப்பை வெளியிட்டவாறு.
சிந்தித்தல் அன்றித் துதித்தல் சித்தத் திற்கு இல்லையாயினும், `சிந்தித்தலே துதித்தலாம்` என்னும் கருத்தால் `துதிக்கும்` என்றார்.
ஆவணம், `ஆய வண்ணம்` என இறந்தகால வினைத்தொகை.
உண்டி - உணவு.
உண்டியை உடையவனை, `உண்டி` என்றது ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 92

சிந்தனை செய்ய மனமமைத்
தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
கிவையான் விதித்தனவே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தை இடையறாது உன்னுதற்கு வைத்தேன்; நாவைப் புகழ்சொல்லுதற்கு வைத்தேன்; தலையை வணங்குதற்கு வைத்தேன்; கைகளைக் கும்பிடுதற்கு வைத்தேன்; அன்பை அகப்படுத்தற்கு வைத்தேன்.
உடம்பை மயர்க்கூச்சு எறிவ தற்கு வைத்தேன்; வெந்து தணிந்த வெள்ளிய நீற்றைப் பூசுகின்ற இறை வனுக்கு யான் நேர்ந்தன இவை.

குறிப்புரை :

`என்னால் ஆயின இவை; இனி அவனது திருவுள்ளம்` என்பதாம்.
`மனம் முதலியவற்றை வேறொன்றற்கு வைத்திலேன்` என்றபடி.
``ஈசற்கு`` என இறுதியிற் கூறியமையால், முன்னர்க் கூறியன பலவும் அவனுக்கேயாதல் தெளிவு.

பண் :

பாடல் எண் : 93

விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.

பொழிப்புரை :

நன்மை தீமைகளை அறிகின்ற பலவகையான அறிவுகளைக் கொண்டு பிரமன் எமக்கு வகுத்த வாழ்நாள்களிலே பெரிய நோய்கள் வந்து வெதுப்புவதில் சிறிதும் குறைவில்லை.
மகளிரது குங்கும மலைபோலும், மார்பில் அழுந்துதலையுடைய தனங் களை முன்னே கண்டோம், பின்பு அத்தனங்கள் தாமே மலைகளில் வெள்ளிய சந்தனம் பூசப்பட்டனபோல் ஆயினமையை உணர்ந்து பார்த்தோம், (இவ்வளவும் செய்துவிட்டமையால்) எமது மனம் இனிச் செய்வதற்கு என்ன வஞ்சனை உள்ளது?

குறிப்புரை :

`செய்யக் கூடிய வஞ்சனைகள் அனைத்தும் செய்தாகி விட்டன` என்றபடி.
`இங்கு கூறியன எல்லாம் எமது மனம் எம் வழிநின்று சிவனை நினையாமல் தப்பி ஓடிச் செய்த வஞ்சனைகளால் விளைந்தன` என்பதாம்.
`சிவனை நினையாது மனம் போன போக்கிலே போகின்றவர் இவ்வாறு கெடுவர்` என்பது கருத்து.
`மகளிரது தனங்கள் முதலில் குங்குமக் குன்று போலக் காணப்பட்டது` என்றது கலவிக்கு முன்னுள்ள நிலையையும், `அவை வெண்சந்தனம் பூசப் பட்ட குன்று போலக் காணப்பட்டன` என்றது கலவிக்குப் பின்னுள்ள நிலையையும் குறித்தது.
தலைவரது மார்பில் சந்தனக் குழம்பு இருத்தல் இயல்பு.
இன்ப நோக்கில் இன்பமாய்த் தோன்றினும் துறவு நோக்கில் இவை இடர் ஆதல் அறிக.
`பட்டனையவாக` என ஆக்கம் விரிக்க.
`மதித்தனம்` என்பது முற்றெச்சம்.
`விச்சைகள் கொண்டு பண்டே விதித்தனவாகிய வாழ் நாளில் பெரும்பிணி கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை` என இயைக்க.
விதித்தன - விதிக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 94

வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மாலருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்வியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.

பொழிப்புரை :

என்னுடைய மனத்தில் மயக்கம் நிறைந்து ததும்பும்படி, யான் அறியாமலே எனது கீற்றுப் பொருந்திய வளையல் களைக் கவர்ந்து கொண்டு, யானைத் தோலைப் போர்த்துக் கொண்டு இருக்கின்ற வீரனை நான் உறங்கும் பொழுதும் மிக வணங்கினேன்.

குறிப்புரை :

`வணங்கியும் அவன் எனக்கு அருள் செய்திலன்` என்பது குறிப்பெச்சம்.
வஞ்சனையாலே கவர்ந்து கொண்டவன் தன்னை `வீரன்` என்று சொல்லிக் கொள்வதுவெட்கம் - என்பது கருத்து.
`மால் பனிப்பக் கொண்டு` என்க, ``கொண்டு`` என்னும் செய் தென் எச்சம், ``மூடிய`` என்பதனோடு முடிந்தது.
துஞ்சும் பொழுதும் தொழுதல், இடைவிடாத பழக்கத்தால் நிகழ்வது.
``நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே`` * என்று அருளிச் செய்தது காண்க.
``மால்`` மூன்றில் முன்னவை மயக்கம்; ஏனையது பெருமை.
பனித்தல் - ததும்புதல்.
`அருவியை யுடைய வரை` என்க.
வரை - மலை.
`மயக்க அருவி` என்பதில் மயக்கம், அதற்கு ஏதுவாகிய மத நீரைக் குறித்தது.
அஞ்சனம் - மை; அஃது அதன் நிறத்தைக் குறித்தது.
வெள்ளிய தந்தங் களை வாயில் கொண்டு நிமிர்கின்ற கரிய யானைக்கு, வெண்பிறை கௌவி அண்ணாக்கின்ற அஞ்சன மலையை உவமையாகக் கூறியது இல் பொருள் உவமம்.
ஈர் உரி - உரித்த தோல்; இறந்தகால வினைத் தொகை.

பண் :

பாடல் எண் : 95

வீரன் அயனரி, வெற்பலர்
நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகையெங்கள்
ஈசர் பரிசுகளே.

பொழிப்புரை :

எங்கள் இறைவரது தன்மைகள் யாராலும் ஒரு நிலையாக அறிந்து சொல்லுதற்கு இயலாதன.
ஏன் எனில், அவர் பெயர் ஒன்றாகாது, `உருத்திரன், பிரமன், விட்டுணு` - என மூன்று என்றும், அவருக்கு இடம் ஆவதும் ஒன்றாகாது, `மலை, மலர், நீர்` என மூன்று என்றும், அவரது நிறமும் ஒன்றாகாது, `தீ வண்ணம், பொன் வண்ணம், அழகு நிறைந்த மேக வண்ணம்` என மூன்று என்றும், அவரது அடையாள மாலையும் ஒன்றாகாது, `கொன்றை மலர், தாமரை மலர், துளசி` என மூன்று என்றும், அவர் ஏறிச் செல்கின்ற ஊர்தியும் ஒன்றாகாது, `இடபம், அன்னம், கலுழன்` என மூன்று என்றும் இவ்வாறு அனைத்தையும் மூன்று மூன்றாகவே, அறிந்தோர் கூறுகின்றனர்.

குறிப்புரை :

இஃது, ஒருவனாகிய சிவனே `படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழிலை நோக்கி `அயன், அரி, அரன்` என மூவராய் நிற்கின்றான் - என உணர்த்தியவாறு.
ஓர் உருவாயினை மான் ஆங்காரத்து ஈரியல்பாய், ஒரு விண்முதற் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயினை``.
* என்று அருளிச் செய்ததது காண்க.
சம்பு பட்சமாகப் பார்க்கும் பொழுது மூவரும் ஒருவனே.
அணுபட்சமாகப் பார்க்கின் வேறுவேறாம்.
சம்பு பட்ச அணுபட்சங்களின் இயல்பைச் சித்தாந்த நூல்களுட் காண்க.
இறைவனது தொழிலை மூன்றாகக் கூறும் பொழுது மறைத்தல் காத்தலிலும் அருளல் அழித்தலிலும் அடங்கும் என்க.
தொழில்களை ஐந்தாக விரிக்குமிடத்துச் சிவன் `அயன், அரி, அரன்` என்பவரோடு `மகேசுரன், சதாசிவன்` - என மேலும் இருவராய், ஐவராய் நிற்பன் பேர், பதி, நிறம், தார், ஊர்தி - என்பவற்றுள் ஒவ்வொன்றையும் வீரன் முதலிய மும்மூன்றனோடு முறை நிரல் நிறையாகப் பொருத்திக் கொள்க.
இவர்தல் - ஏறுதல்.
இவர் ஊர்தி, வினைத்தொகை, அன்னமும், கலுழனும் ``பறவை`` என அடங்கின.
`வகையின` என்பதில் சாரியையும், இறுதி நிலையும் தொகுத்தலாயின.
அன்றி, `வகை, ஆகுபெயர்` - என்றலும் ஆம், ``வீரன்`` என்றது ``அரன்`` என்னும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 96

பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட
னாவன் எனவடியார்க்
கரியான் இவனென்று காட்டுவன்
என்றென் றிவையிவையே
பிரியா துறையுஞ் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.

பொழிப்புரை :

``அடியார்களைப் பிரியாது அவர்களோடு உடன் உறைபவனாகிய சிவபெருமான், பிறர்க்கு அரியவனாயினும், `யான் என்னைப் பணிந்தவர்கட்கு உரியவன்` என்று, சொல்லி உன்னோடு உடன் உறைவான் என்று அவன் அடியவர் சொல்ல, யாம், அவனுடைய அடியவர்களை விட்டு அகலாது வந்து பற்றுகின்ற பாவமும், பற்றும், மற்றும் பழி முதலியனவும் ஆகிய இவை இவை, `அவன் அடியார்க்கு எளியனல்லன்; அவர்கட்கும் அரியவனே` எனக் காட்டுவன்` என்று என்று அவன் திருவடிக்கு என்றும் விண்ணப்பிப்போம்.

குறிப்புரை :

இது, வீர, என்றன்னை விடுதிகண் டாய், விடில்,/# என்னை மிக்கார்
`ஆரடியான்` என்னின், `உத்தரகோச/# மங்கைக்கரசின்
சீரடியார் அடியான்` என்று நின்னைச்/# சிரிப்பிப்பனே.
* என்றது போலப் பிராரத்தத்தை விரைய விலக்காமை பற்றி வருந்திக் கூறியது.
பரிதல் - நீங்குதல்.
`பரியாதனவாய் வந்த` - என ஆக்கம் விரிக்க.
``பணிந்தார்க்கு உரியான் - எனச் சொல்லி, - உன்னுடன் ஆவன் - என`` என்பதை முதலிலும், ``இவை, இவை`` என்பதை ``மற்றும்`` என்பதன் பின்னும் கூட்டியுரைக்க.
`என - என்று அடியவர் சொல்ல` என்க.
``உன்னுடன்`` என்பது வேறு முடிபு ஆகலின் பன்மை யொருமை மயக்கம் இன்று.
`இவன் என்று காட்டுவன்` என்பது பாடம் அன்று.
அடுக்கு, பன்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 97

பேசுவ தெல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுவறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவையொன்றும் பொய்யலவே.

பொழிப்புரை :

அந்தச் சிறுமியாகிய அழகி பேசுகின்ற பேச்சு முழுதும் சிவன் திருப்பெயர்களேயாய் உள்ளன.
காய்கின்ற சினத்திற்கு முதலாய் உள்ள அவளது வேட்கை, சிவனிடத்தில் உள்ளதான, வண்டுகள் மொய்க்கும் கொன்றையை உடைய அவனது முடியின் மேலது.
அவள் தன் தனங்களின்மேல் பொருந்திய பூசியுள்ள சந்தனக் குழம்பை (`நீயேனும் சிவனை அடையத் தவம் செய்` என்று) அதனைக் கும்பிடுவாள்.
யான் சொல்லிய இவைகள் சிறிதும் பொய்யல்ல.
(மெய்)

குறிப்புரை :

`ஆகவே, இனி இவளை நாம் சிவனுக்கு வரைவு நேர்தலே செய்யத் தக்கது` என்பது குறிப்பெச்சம்.
இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.
பக்குவிகளது நிலைமையை அறிவர் அவர்தம் சுற்றத்தார்க்கு உணர்த்துதல் இதன் உள்ளுறை.
``எல்லாம்`` என்பது எஞ்சாமையைக் குறித்தது.
தலைவி அருகில் இல்லாமையால் ``அப்பேதை நல்லாள்`` எனச் சேய்மைச் சுட்டாகச் சுட்டினாள்.

பண் :

பாடல் எண் : 98

பொய்யா நரகம் புகினுந்
துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ
நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.

பொழிப்புரை :

பாவிகட்குத் தப்பாது கிடைக்கின்ற நரகத்திலே நான் புகுந்தாலும், அதைவிட்டுச் சுவர்க்கத்தை அடைந்தாலும், இப்பூமியில் வந்து, வெறுப்பைத்தரினும் விட இயலாத உடம்புகளோடு கூடி, `ஊர்வன` என்றும் `நடப்பன` என்றும், `பறப்பன` என்றும் பிறப்புக்களை எடுத்து வருந்தி வாழ்ந்து இறக்கினும், (யாதேனும் ஒரு பிறப்பில்) பேரரசனாகி நிலம் முழுவதையும் ஆளினும் நான் வேண்டுவன எல்லாம் நான்கு வேதங்களில் ஒலி பொருந்திய நீல கண்டத்தினை உடைய சிவபெருமானது திருவடிகளை மறவாதிருக் கின்ற அந்த ஒருவரமேயாகும்.

குறிப்புரை :

``புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே - வழுவாதிருக்க வரந்தர வேண்டும்`` * என அப்பர் பெருமான் அருளிச் செய்ததும் காண்க.

பண் :

பாடல் எண் : 99

வேண்டிய நாள்களிற் பாதியும்
கங்குல் மிகவவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி
அவா வழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.

பொழிப்புரை :

(படைப்போன் ஆகிய நான்முகக் கடவுள்) மக்களைப் படைக்கும் பொழுது `ஒவ்வொருவரும் இவ்வுடம்போடு கூடி இத்துணை ஆண்டுகள் வாழ்க` என வேண்டி வரையறுக் கின்றான்.
அவ் ஆண்டுகள் அனைத்தும் மக்களுக்கு வாழும் நாளாக அமைவதில்லை.
பொதுவாக ஒரு பாதி ஆண்டுகள் இரவுப் பொழு தாகி விடுகின்றன.
(இரவு வாழ்க்கை வாழ்க்கையன்று) மற்றொரு பாதி ஆண்டுகளே பகலாய் மிஞ்ச, அவைகளிலும் பலவாய்த் திரண்ட கொடிய நோய்கள் உளவாகும்.
இனி, வரையறுக்கப்பட்ட ஆண்டு களில் தொடக்கப்பகுதி குழவிப் பருவமாய்க் கழிகின்றது.
முடிவுப் பகுதி முதுமைப் பருவமாய்க் கழிகின்றது.
(இடையில் எஞ்சும் ஒருசில ஆண்டுகளில் என்ன செய்ய இயலும்!) அவைகளிலும் `அச்சம், வெகுளி, அவா அழுக்காறு` என இப்படி ஆண்டுகள் கழிந்தோடிப் போகின்றன.
ஆகையால் (யாம் மிக இளைய பருவத்திற்றானே வேறு எதனையும் பொருட்படுத்தாமல்) நீண்ட, புல்லிய சடையையும், மூன்று கண்களையும் உடைய கள்வனைக் கண்டறிந்து, அவன் திருவடிகளையே புகலிடமாக அடைவோம்.

குறிப்புரை :

வேண்டுதல் - விரும்புதல்.
அஃது அதன்படி வரை யறுத்தலாகிய தன் காரியம் தோற்றி நின்றது.
இதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது.
``பாதியும்`` என்னும் உம்மை சிறப்பு.
கங்குல் இரவு.
`கங்குல் ஆம், பிள்ளைமை ஆம், மூப்பும் ஆம்` என்க.
மிகுதல்- எஞ்சுதல்.
ஈண்டுதல் - திரளுதல்.
ஆண்டின - `ஆண்டு` எனப்படும் காலங்கள்.
`கள்வன்` என்றது, எளிதில் அகப்படாமை பற்றி.

பண் :

பாடல் எண் : 100

மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.

பொழிப்புரை :

எளிதில் அகப்படாமை பற்றி, `கள்வன்` எனப் படுகின்ற, நல்ல, உயர்ந்த நீலமணி போலும் கண்டத்தையுடைய வனும், நீண்ட சடையை உடையவனுமாகிய சிவனுக்குத் தொண்டு பூண்ட அடியார்கள் யாதோர் உடம்பினையும் பற்றா நிலையாகிய வீட்டைப் பெறுதல் உண்மையே.
எங்ஙனம் எனில், பொன் மலையை அடுத்த காக்கையும் அப்பொழுதே பொன்னிறத்தைப் பெற்று விடுகின்றது.

குறிப்புரை :

இஃது எடுத்துக்காட்டுவமை.
தன்னைச் சார்ந்த பொருளைத் தன் வண்ணம் ஆக்குதல், சிவனுக்கும், செம்பொன் மலைக்கும் இடையேயுள்ள பொதுத் தன்மை.
சேர்வார் தாமே தானாகச் செயுமவன் என ஞானசம்பந்தர் அருளிச் செய்தது காண்க.
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாமே என்பது திருமந்திரம்.
கொடி - காக்கை.
``சொல்`` என்றது பொருளை.
``காய்சின ஆனை வளரும்`` என்றது கனக மலைக்கு அடைமொழி.

பண் :

பாடல் எண் : 101

அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலைஅரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.

பொழிப்புரை :

இதிற் குறிக்கப்பட்ட வரலாற்றைத் திருத் தொண்டர் புராணத்துக் கழறிற்றறிவார் நாயனார் புராணத்தால் அறிக.
இது பிற்காலத்து ஆன்றோரால் செய்யப்பட்டது.

குறிப்புரை :

சுற்று - எப்பக்கத்திலும்.
மன்று - தில்லையம்பலம், பொன்வண்ணத் தந்தாதியாவது, இவ்வாறு வழங்குகின்ற இதுவே` என முடிக்க.
பொன்வண்ணத் தந்தாதி முற்றிற்று.
சிற்பி