சேரமான்பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக்கோவை


பண் :

பாடல் எண் : 1

விரிகடல் பருகி அளறுபட் டன்ன
கருநிற மேகம் கல்முக டேறி
நுண்துளி பொழிய நோக்கி ஒண்தொடி
பொலங்குழை மின்னப் புருவ வில்லிட்
டிலங்கெழிற் செவ்வாய்க் கோபம் ஊர்தரக்
கைத்தலம் என்னும் காந்தள் மலர
முத்திலங் கெயிறெனும் முல்லை அரும்பக்
குழலுஞ் சுணங்குங் கொன்றை காட்ட
எழிலுடைச் சாயல் இளமயில் படைப்ப
உள்நிறை உயிர்ப்பெனும் ஊதை ஊர்தரக்
கண்ணீர்ப் பெருமழை பொழிதலின் ஒண்ணிறத்
தஞ்சனக் கொழுஞ்சே றலம்பி யெஞ்சா
மணியும் பொன்னும் மாசறு வயிரமும்
அணிகிளர் அகிலும் ஆரமும் உரிஞ்சிக்
கொங்கை யென்னுங் குவட்டிடை இழிதரப்
பொங்குபுயல் காட்டி யோளே கங்கை
வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள்
அரிவை பாகத் தண்ணல் ஆரூர்
எல்லையில் இரும்பலி சொரியும்
கல்லோ சென்ற காதலர் மனமே.

பொழிப்புரை :

பொருள்வயிற் சென்ற தலைவர் குறித்த கார்ப் பருவமும் யாவரும் அறிய வந்திறுத்தது.
அதனால் ஆற்றாமை காரண மாக இவளும் (தலைவியும்) மற்றொரு முகிலின் தன்மையை எய்தி னாள்; தலைவர் தலைவியிடத்து மாறாக் காதலராயினும் (குறித்தபடி வாராமையால்) அவர் மனம் கல்லுப்போல வலிதாகிவிட்டதோ!

குறிப்புரை :

``விரிந்த கடல் நீரைத் தான் முற்றப் பருகியதனால் அது சேறாயிற்றுப் போலத் தோன்றுதற்கு ஏதுவான கரிய மேகம் மலை முகட்டில் ஏறி நுண் துளி பொழிய, அதனை நேரே கண்டு, தலைவி தானும் தனது காதணியாகிய மின்னல் மின்ன, புருவமாகிய வான வில்லைத் தோற்றுவித்து, விளங்குகின்ற எழிலையுடைய தனது சிவந்த வாயாகிய, `இந்திரகோபம்` என்னும் வண்டு ஊர்தர, `அகங்கைகள்` என்னும் காந்தட் பூக்கள் விரிய, முத்துப்போல விளங்குகின்ற பற்க ளாகிய முல்லை அரும்புகள் அரும்ப, கூந்தல் கொன்றைக் காயையும், தேமல் கொன்றைப் பூவையும், எழுச்சியையுடைய சாயல் மயிலையும் தோற்றுவிக்க, உள்ளிருந்து வெளிவரும் நெட்டுயிர்ப்பாகிய காற்று உடன் வீச, தனது கண்ணீராகிய பெருமழையைப் பொழிந்து, அத னானே கண்ணில் உள்ள மையாகிய கொழுவிய சேறு அலம்பப்பட்டு, அந்நீராகிய அருவி தன் கொங்கைகளாகிய மலைகளுக்கு இடையே, மாணிக்கம், பொன், குற்றம் அற்ற வைரம், அழகுமிகுந்த அகில், சந்தனம் இவைகளைத் தேய்த்து ஒழுகுதலால் மற்றொரு மேகமாம் தன்மையை விளக்கினாள்.
தலைவர் காதலுடை யாராயினும், (வந்து சேராமையால் அவர் மனம் இப்பொழுது கல்லாகிவிட்டதோ!`` எனப் பொருள் உரைத்துக் கொள்க.
``தவிர்த்த`` என்னும் பெயரெச்சம், ``சடை`` என்பதனோடு முடிந்தது.
`அண்ணலுக்கு` என நான்காவது விரிக்க.
பலி சொரியும் கல், பலிபீடம்.
பலி சொரியப்படும் கல் வலிதாதலோடு, பலியொன்றற்கன்றி பிறிதொன்றற்கு இடமாகாமையால் அதுவே கைப்பொருளுக்கன்றிப் பிறிதொன்றற்கு இடமாகாத மனத்திற்கு உவமையாயிற்று.
பொருளே காதலர் காதல்
அருளே காதல் என்றி நீயே
என்னும் அகப்பாட்டினையும் காண்க.
இப்பாட்டு உரிப் பொருளாற் பாலையாயிற்று.
இது நேரிசையாசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 2

மனம்மால் உறாதேமற் றென்செய்யும் வாய்ந்த
கனமால் விடையுடையான் கண்டத் - தினமாகித்
தோன்றினகார் தோன்றிலதேர் சோர்ந்தனசங் கூர்ந்தனபீர்;
கான்றனநீர் ஏந்திழையாள் கண்.

பொழிப்புரை :

(தலைவர் குறித்துச் சென்ற கார்ப் பருவம் வந்து விட்டமையால்) பெருமை பொருந்திய திருமாலாகிய இடபவாகனத்தையுடை சிவபெருமானது கண்டத்திற்கு ஒத்த வகையினையுடையவாய் முகில்கள் கண் முன்னே தோன்றிவிட்டன.
ஆயினும் தலைவர் ஊர்ந்து சென்றதும், சேமமாகக் கொண்டு சென்றவும் ஆகிய தேர்கள் எம் கண் முன் தோன்றவில்லை.
ஆகவே, இவளுடைய (தலைவியுடைய) மனம் மயக்கம் கொள்ளாது என் செய்யும்! (ஒன்றையும் செய்ய மாட்டாது.
ஆகையால்) இவள் கையில் உள்ள சங்க வளையல்கள் கழன்று வீழ்ந்தன; மேனி முழுவதும் பசலைகள் போர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன.

குறிப்புரை :

`இனி இறந்துபடுவாள் போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியது நிலை கண்டு தோழி வருந்திக் கூறியது.
இதுவும் உரிப் பொருளாற் பாலையே.
`கனம் வாய்ந்த மால்` என மாற்றிக் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.

பொழிப்புரை :

மேகம், `கண் பொருந்திய நெற்றியையுடைய எம் தந்தையாகிய சிவபெருமானது அழகிய கண்டம்` என்று சொல்லும்படி இருண்டு, தனக்கு இடமாகிய விண்ணின்கண் இடியுடன் மேலே உளதாயிற்று.
விசாலித்த நிலத்தின்கண் மலையிடத்து இளமையான மயிலின் ஆட்டம் கீழே உளதாயிற்று.
(எனவே,) விண்ணும், மண்ணும் கார்ப் பருவம் வந்ததைத் தெளிவாகக் காட்டி நிற்றலால்) இளைய மான் போலும் பெண்ணாகிய இவள் தலைவனைப் பிரிந்து உறையும் தனிமை இனி என்னாய்க் கழியுமோ!

குறிப்புரை :

`இறந்துபாடாய்க் கழியுமோ` என்றபடி ``இருண்ட`` என்னும் பெயரெச்சம் ``விண்`` என்னும் இடப் பெயர் கொண்டது.
`இருண்டு` என்றே பாடம் ஓதலும் ஆம்.
விண்ட - அகன்ற.
ஆல் - ஆலுதல்; முதனிலைத் தொழிற் பெயர்.
`கொண்டல் மேலது; மயில் ஆலுதல் கீழது; இனி என்னாய்க் கழியும்` என்க.
இதன் திணையும், துறையும் மேலனவே.

பண் :

பாடல் எண் : 4

உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய்
வெஞ்சிலை கோலி விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது வானே நிலனே
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும் அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ
டலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற் கஞ்ஞான்
றுலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.

பொழிப்புரை :

வானம்; தன்னிடத்து உள்ள மேகங்களின்வழி மின்னலாகிய ஒளி பொருந்திய வாளை உறையினின்றும் உருவி வீசி, இடி முழக்கமாகிய போர்முரசம் ஒலிக்க, எவ்விடமும் அகப்படக் கொடிய வில்லை (வானவில்லை) வளைத்து, எங்கும் நிறைந்த மழைத் தாரைகளாகிய வெள்ளிய அம்புகளை ஏவிப் போர்புரியாநின்றது; நிலம், கடிய களாமலர், கொடிய முல்லை மலர், குலையாக மேம்பட்ட அழகிய, குளிர்ந்த வெண்காந்தள் மலர், அலைவால் மேம்பட்ட செங்காந்தள் மலர், `இந்திர கோபம்` என்னும் வண்டு காயா மலர் இவைகளுடன் கூடி கொடிய துன்பத்தைத் தாராநின்றது.
அவரோ (தலைவரோ) பகை மன்னரது காவல் மிக்க அரணை, வெளி வருவாரையும், உட்புகுவாரையும் அவற்றைச் செய்யாதவாறு தடுத்து முற்றுகையிட்டு, இரவும் பகலும் காவல் புரிதலை விரும்பிக்குற்றம் அற்றவனாகிய அரசன் பாசறைக்கண்ணே இருத்தலால் (எம்மையும், எமக்கு அவர் சொல்லிச் சென்ற சொல்லையும் நினைப்பாரல்லர்; ஆதலின்) யானோ இவ்விடத்திலே, அளவற்ற ஆற்றல் வாய்ந்த அருச்சுனனுக்கு அக்காலத்தில் அவன் போரில் இறந்து படாது வெற்றி பெறும்படி நல்ல வரத்தைக் கொடுத்த மேலோனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள, அழகிய, குளிர்ச்சி மிக்க திருவாரூரை நினைத்து மகிழும் நல் ஊழ் இல்லாது, உலக மயக்கத்திற் கிடக்கும் மாக்களைப் போலத் துயரத்தையே நுகர்ந்து இறந்துபடும்படி என்னுடைய கண்கள் உறங்குகின்றில.

குறிப்புரை :

`இனியான் என் செய்வேன்` என்பது குறிப்பெச்சம்.
இதுவும் உரிப்பொருளாற் பாலை.
வினைவயிற் பிரிந்த தலைவன் நீடத் தலைவி பருவங் கண்டு ஆற்றாமை துறை.
மயரிய - மயங்கிய.
``கடிய, கொடிய`` என்பன, `மணம் பொருந்திய, கொடியில் உள்ள என்னும் பொருளவாயினும் `கடுமையுடைய, கொடுமையுடைய` பிற நயங் களையுந் தந்தன.
இதனுள் இயைபுருவகம் வந்தமை காண்க.
இஃது இடையே குறளடி பெற்றமையால் இணைக்குறள் ஆசிரியப்பா.

பண் :

பாடல் எண் : 5

துயிலாநோய் யாம்தோன்றத் தோன்றித்தீத் தோன்ற
மயிலால வந்ததால் மாதோ - அயலாய
அண்டத்துக் கப்பாலான் அந்திங்கட் கண்ணியான்
கண்டத்துக் கொப்பாய கார்.

பொழிப்புரை :

துயிலாமைக்கு ஏதுவாகிய துன்பம் எம்மிடத்திலே தோன்றுமாறு தோன்றிப் பூவாகிய நெருப்புத் தோன்றும்படியும், மயில்கள் ஆடும்படியும் அடுக்கடுக்காய் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ள பல அண்டங்கட்கும் அப்பால் உள்ளவனும், அழகிய திங்களாகிய கண்ணியைச் சூடினவனும் ஆகிய சிவபெருமானது கண்டத்துக்கு ஒப்பாய் உள்ள முகில் வந்துவிட்டது.

குறிப்புரை :

`இனித் தலைவர் வருவார்` என்பது குறிப்பெச்சம்.
`வாராராயின் யாம் துயிலேம் என்பதை அவர் அறிவார்` என்றற்கு, `துயிலாநோய் யாம் தோன்றக் கார் வந்தது` என்றாள்.
இது, `பருவம் கண்டு தலைவி ஆற்றாள்` எனக் கருதி ஆற்றுவித்தற் பொருட்டுத் தலைவனை இயற் பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.
``நோய் யாம் தோன்ற`` என இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத் தின் மேல் நின்றது.
தோன்றித் தீ, உருவகம்.
ஆல், மாது, ஓ அசைகள்.

பண் :

பாடல் எண் : 6

காரும் முழக்கொடு மின்னொடு
வந்தது காதலர்தம்
தேருந் தெருவுஞ் சிலம்பப்
புகுந்தது சில்வளைகள்
சோருஞ் சிலபல அங்கே
நெரிந்தன துன்னருநஞ்
சாரும் மிடற்றண்ணல் ஆரூரன்
ஐய அணங்கினுக்கே.

பொழிப்புரை :

மேகமும் இடியோடும், மின்னலோடும் வந்தது.
தலைவர் சொல்லியபடி அவரது தேரும், தெருவும் ஆரவாரிக்கும் படி புகுந்தது.
நினைத்தற்கரிய விடத்தை உண்ட கண்டத்தினை உடைய முதல்வராகிய சிவபெருமானது ஆரூரை ஒத்தவளாகிய அழகிய தலைவி தன் கைவளைகள் மெலிவால் கழல்வனவாய் இருந்தவை இப்பொழுது பூரிப்பால் நெரிவனவாயின.

குறிப்புரை :

இது, பிரிந்திருந்த தலைவன் தான் குறித்தபடி வந்தமை யறிந்து கண்டோர் கூறியது.
``காரும், தேரும்`` என்னும் உம்மைகள் எதிரது தழுவியதும், இறந்தது தழுவியதுமாய எச்ச உம்மைகள்.
``தெரு வும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.
`அன்ன` என்பது கடைக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 7

அணங்குறை நெடுவரை அருமைபே ணாது
மணங்கமழ் தெரியல் சூடி வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில் புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்
தானாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து
அல்லியங் கோதை அழலுற் றாஅங்
கெல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்
திளமயிற் சாயல் ஏந்திழை தானே.

பொழிப்புரை :

தலைவ, தெய்வம் தங்கும் பெரிய மலைகளை `அவை அத்தன்மைய` என்றும், `ஏறுதற்கு அரியன` என்றும் எண் ணாது, நறுமணம் கமழும் மலையைச் சூடிக் கொண்டு, நாள்தோறும், வீசுகின்ற ஒளியையுடைய நீண்ட உனது வேற்படையே உனக்கு முன்னே வழியை விளக்கும் விளக்காய் அமைய, மிக்க வேகத்தை யுடைய கான்யாற்று நீண்ட நீரை நீந்திக் கடந்து, நீ ஒருவனே தனியாய் வரும்பொழுது, `பின்னப்பட்ட கூந்தலையுடைய தேவ மகளிர் உன்னை, `தேவன்` என மருண்டு, திண்மை வாய்ந்த உனது மார்பின் கண் பொருந்துதற்கு நீங்காக் காதல் மிகுகின்றவராய் உன் குணத்தை வேறுபடுத்திவிடுவர்` என்று, பகைவரது மூன்று ஊர்களும் ஒருங்கே எரிந்தொழியும்படி ஓர் அம்பையே ஆராய்ந்து எடுத்து எய்த, மாதொரு பாகனாகிய இறைவனது திருவாரூரில் நீர் வளத்தாற் சிறந்த பொய்கையிற் பூத்த தாமரை மலர் போலும் ஒளி பொருந்திய முகத்தை யும், இளைய மயிலினது சாயல்போலும் சாயலினையும், ஏந்திய அணிகலங்களையும் உடைய என் தோழி உன்னை வெறுக்கும் உள்ளத்துடன் இமை குவியாத கண்களையுடையவளாய், எங்கள் குடில்களையடுத்து ஆண்மான்கள் பெண்மான்களோடே பிரியாது திரிதலைக் கண்டு செயலற்று, ஆற்றாமையால் கையிலுள்ள மெல்லிய விரல்களை நெரித்துக் கொண்டு, விம்மி வெப்பமாக மூச்செறிந்து, அக இதழோடு கூடிய பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை ஒன்று கண்ணீர் விட்டு அழுதல்போல (இரவு முழுதும்) எல்லையில்லாத பெருந்துயரை எய்தி அழாநின்றாள்; (அவளை யான் ஆற்றுவிப்பது எங்ஙனம்?)

குறிப்புரை :

ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம்.
இது தலைவன் களவொழுக்கத்தை நீட்டியாது வரைதலை வேண்டித் தோழி இரவு வருவானை `வாரற்க` என இரவுக் குறி விலக்கியது.
இது முதல் கரு, உரி முப்பொருளாலும் குறிஞ்சி.
``கலை பிணை திரிய`` என்றது, `நீயும் அதுபோல இவளை வரைந்து கொண்டு பிரியாதிருத்தல் வேண்டும்`` என்பதைக் குறித்த உள்ளுறை யுவமம்.
`மணங்கமழ் தெரியல் சூடி`` என்றது, அவரது மருட்சிக்கு மற்றுமொரு காரணம் உண்மை கூறியது.

பண் :

பாடல் எண் : 8

இழையார் வனமுலை யீர்இத்தண் புனத்தின்
உழையாகப் போந்ததொன் றுண்டோ - பிழையாச்சீர்
அம்மான் அனலாடி ஆரூர்க்கோன் அன்றுரித்த
கைம்மாநேர் அன்ன களிறு.

பொழிப்புரை :

அணிகலன்கள் நிறைந்த, அழகிய தனங்களை யுடையவர்களே, வறிது படாத புகழையுடைய பெரியோனும், தீயில் நின்று ஆடுவோனும், திருவாரூரில் உள்ள முதல்வனும் ஆகிய சிவபெருமான் முற்காலத்தில் உரித்த யானையே போன்ற அந்த யானை இந்தக் குளிர்ச்சியான புனத்தின் பக்கமாகப் போந்ததொரு செயலை நீவிர் கண்டது உண்டோ?

குறிப்புரை :

இஃது, இயற்கைப் புணர்ச்சியிலும், இடந்தலைப் பாட்டிலும், பாங்கற் கூட்டத்திலும் தலைவியைக் கூடி இன்புற்ற தலை வன் பாங்கியிற் கூட்டத்தின் பொருட்டு அவளை மதியுடம்படுத்தற்கு அவர் இருவரும் உள்வழிச் சென்று வேழம் வினாயது.
``அன்ன`` என்பது சுட்டு.

பண் :

பாடல் எண் : 9

களிறு வழங்க வழங்கா
அதர்கதிர் வேல்துணையா
வெளிறு விரவ வருதிகண்
டாய்விண்ணினின் றிழிந்து
பிளிறு குரற்கங்கை தாங்கிய
பிஞ்ஞகன் பூங்கழல்மாட்
டொளிறு மணிக்கொடும் பூண்இமை
யோர்செல்லும் ஓங்கிருளே.

பொழிப்புரை :

யானைகள் உலாவுதலால் மக்கள் செல்லாத வழியில் கையில் உள்ள வேல் ஒன்றே துணையாக, ஆகாயத்தினின்றும் இறங்கிய, ஒலிக்கும் ஒலியையுடைய கங்கையைச் சடையில் தாங்கிய தலைக் கோலத்தையுடைய சிவபெருமானது அழகிய திருவடிகளை வணங்குதற்பொருட்டு அவற்றை நோக்கி, ஒளிவீசுகின்ற இரத்தினங்களால் ஆயவளைந்த அணிகலன்களை அணிந்த தேவர் மட்டுமே செல்கின்ற மிகுந்த இருட் காலத்தில் நீ அத்தேவர்காண இங்கு வருகின்றாய்!

குறிப்புரை :

`இது தகாது` என்பது குறிப்பெச்சம்.
இதன் திணையும், துறையும் மேல், ``அணங்குறை நெடுவரை`` எனப் போந்த பாட்டின வேயாம்.
`அர்த்த யாம பூசையில் தேவர் சிவபெருமானைச் சென்று வணங்குவர்` என்பது பற்றி ``பிஞ்ஞகன் பூங்கழல் மாட்டு இமையோர் செல்லும் இருள்`` என்றார்.
கண்டாய், முன்னிலை அசை.

பண் :

பாடல் எண் : 10

இருள்புரி கூந்தலும் எழில்நலம் சிதைந்தது
மருள்புரி வண்டறை மாலையும் பரிந்தது
ஒண்ணுதல் திலகமும் அழிந்தது கண்ணும்
மைந்நிறம் ஒழிந்து செந்நிறம் எய்தி
உள்நிறை கொடுமை உரைப்ப போன்றன
சேதகம் பரந்தது செவ்வாய் மேதகு
குழைகெழு திருமுகம் வியர்ப்புள் ளுறுத்தி
இழைகெழு கொங்கையும் இன்சாந் தழீஇக்
கலையுந் துகிலும் நிலையிற் கலங்கி
என்னிது விளைந்த வாறென மற்றி
தன்னது அறிகிலம் யாமே செறிபொழில்
அருகுடை ஆரூர் அமர்ந்துறை அமுதன்
முருகுவிரி தெரியல் முக்கண் மூர்த்தி
மராமரச் சோலைச் சிராமலைச் சாரல்
சுரும்பிவர் நறும்போது கொய்யப்
பெருஞ்செறு வனத்தில்யான் பிரிந்ததிப் பொழுதே.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகளைப் பக்கத்தே உடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாய் உள்ளவனும், நறுமணத்தோடு மலர்கின்ற மாலையை அணிந்தவனும், மூன்று கண்களையுடையவனும் ஆகிய இறைவனது மராமரச் சோலையையுடைய திருச்சிராமலைச் சாரலில், வண்டுகள் வீழும் நறிய போது சிலவற்றைக் கொய்து வருதற் பொருட்டு, அடர்த்தியான காட்டில் இவளை யான் இப்பொழுதுதான் பிரிந்து போய்வந்தேன்.
(நெடும்பொழுது தாழ்த்திலேன்; வந்து பார்க்கும் பொழுது) இவளுடைய இருள் போன்ற கூந்தல் எழுச்சியுடைய அழகு சிதைந்து குலைந்துள்ளது; வியப்பைத் தரும், வண்டுகள் ஒலிக்கும் மாலை அலங்கோலமாகக் கசங்கியுள்ளது, ஒளிபொருந்திய நெற்றியில் இட்டதிலகம் அழிந்துவிட்டது.
கண்களில் தீட்டிய மை கலைய, கண்கள் சிவந்து, எவையோ சில கொடுமையைக் கூறுவனபோல்வன போன்றன; சிவந்த வாய் அந்நிலை குலைந்தது; காதில் குழையணிந்தமையால் அழகிதாய்த் தோன்றும் முகம் வெயர்ப்புடையதாக, அணிகலம் பொருந்திய தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும் தனங்களில் பூசப்பட்ட சந்தனம் அழிந்து, மேகலையும், உடையும் நெகிழ்ந்தமையால் `இவ்வாறான இந்நிலை எத்தன்மையின் விளைவு` என அறிய யாம் இயலேம்.

குறிப்புரை :

இது, தலைவி தலைவனது களவொழுக்கத்துக்குட்பட்ட மையைத் தலைவியது தோற்றம் பற்றித் தோழி குறிப்பால் உணர்ந்தது, திணை குறிஞ்சி.
``செறி பொழில்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க.

பண் :

பாடல் எண் : 11

பொழுது கழிந்தாலும் பூம்புனங்காத் தெள்க
எழுது கொடியிடையாய் ஏகான் - தொழுதமரர்
முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கணான் நான்மறையான்
மன்னுஞ்சேய் போல்ஒருவன் வந்து.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கித் தனது சந்நிதியை அடைகின்ற, நெருங்கிய கழல் அணிந்த திருவடியை உடையவனும், மூன்று கண்களை உடையவனும், நான்கு வேதங்களின் முதல்வனும் ஆகிய சிவபெருமான்தன் மைந்தனாகிய முருகன்போன்ற ஒருவன் நமது அழகிய புனத்திலே வந்து, பொழுது போய்விட்டாலும் தான் போகாது, யாவரும் இகழும்படி காத்து நிற்கின்றான்; ஓவியத்தில் எழுதப்பட்டது, போன்ற அழகுடைய கொடிபோலும் இடையை உடையவளே!

குறிப்புரை :

`அவனுக்கு நான் என்ன சொல்வது` என்பது குறிப் பெச்சம்.
இது, தலைவனை மடல் விலக்கி அவனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியிடம் சென்று மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
இதுவும் குறிஞ்சியே.

பண் :

பாடல் எண் : 12

வந்தார் எதிர்சென்று நின்றேற்கு
ஒளிரும்வண் தார்தழைகள்
தந்தார் அவையொன்றும் மாற்றகில்
லேன் தக்கன் வேள்விசெற்ற
செந்தா மரைவண்ணன் தீர்த்தச்
சடையன் சிராமலைவாய்க்
கொந்தார் பொழிலணி நந்தா
வனத்துக் குளிர்புனத்தே.

பொழிப்புரை :

(தோழீ!) தக்கன் வேள்வியை அழித்த, செந்தாமரை மலர்போலும் நிறத்தையும், கங்கையைத் தரித்த சடையையும் உடைய சிவபெருமானது திருச்சிராமலையின் கண், பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்டு, நமக்கே உரித்தாய் நாம் சென்று விளையாடுகின்ற நந்தவனத்தின் நடுவிலே நாம் இருக்கின்ற புனத்தின் கண் ஆடவர் ஒருவர் தனியே வந்தார்.
(`இஃது என்` என்று வினாவ) யான் அவர் எதிரே சென்றபொழுது அவர் அழகிய மாலையையும், தழையையும் (`இவை எங்கும் கிடைத்தற்கு அரிய` என்று சொல்லித்) தந்தார்.
அவற்றுள் ஒன்றையும் யான் மறுக்க மாட்டாதவளாய் வாங்கிக் கொண்டேன்.

குறிப்புரை :

இதுவும் மேற்கூறிய வகையில் தழை ஏற்பித்தது.

பண் :

பாடல் எண் : 13

புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடுசுடர் நடுவண்நின் றடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி
முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.

பொழிப்புரை :

முறைமையறியாத, `யமன்` என்னும் பெயரையும், கொடிய தொழிலையும் உடைய ஒருவனது வலிமையை அழித்த பெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர் வயல்களில் பூத்துள்ள தாமரை மலர் போலும் சிறிய பாதங்களையும் கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையும், குயிலின் குரலைப் போன்ற குரலையும், அழகிய மயில்போன்ற சாயலையும், பூவையணிந்த கூந்தலையும் உடையவள் ஆகிய, பூங்கொடி போல்பவளாகிய என் மகள், இந்த இல்லத்தில் நிறைந்த செல்வத்தில் திளைத்தலை விரும்பாதவளாய், அயலான் ஒருவனைத் தன் காதலனாகக் கொண்டு, (அவன்பின்னே போய்) ஒளியை வீசுகின்ற செங்கதிர் வானத்தின் உச்சியில் நின்று காய்தலால் நிலத்தில் உள்ளோரது நிழல்களும் அவர் அவர் அடிக்கீழ் வந்து ஒடுங்குகின்ற (எனவே, எந்த நிழலும் இல்லாத) பொறுத்தற்கரிய வெப்பத்தையுடைய சுரத்தின்கண் கொடுந்தொழிலை உடைய மறவர் கள் முழக்குகின்ற பறைகளின் ஓசையைக் கேட்டு உடம்பு நடுங்கும் நிலையை உடையவளாய் முள்போன்ற இலையை யுடைய ஈச்ச மரமும், அடிமரமும் உலர்ந்துபோன இலவ மரமும், (இலையுதிர்ந்த) விளா மரமும் ஆங்காங்கு உள்ள, மறைவு யாதும் இன்றி வெட்ட வெளியாகிய இடத்தில், கடுமையான குரலையுடைய, சினம் பொருந்திய நாய்களை நீண்ட சங்கிலியாற் கட்டிவைத் திருத்தலால் அந்தச் சங்கிலியால் தேய்ந்து போன கால்களின் மேல் மான்தோலை வேய்ந்து, அதனால் அதன் மயிர்கள் தோன்றும் கூரையையுடைய சிறிய குடில்களில் வாழும், பரட்டையாய் நரைத்துப்போன தலை மயிரையும், பாசடை இன்மையின் வெளுத்த வாயினையும் உடைய மறத்தியர்களுக்கு விருந்தாய்ப் போய்த் தங்கினாளோ!

குறிப்புரை :

`ஒன்றும் தெரியவில்லை` என்பது குறிப்பெச்சம் இது தலைவி தலைவனோடு உடன்போயினமை யறிந்து செவிலி பின் தேடிச் சென்றது.

பண் :

பாடல் எண் : 14

கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.

பொழிப்புரை :

பகைவரது முப்புரத்தைச் சாம்பல் ஆகும்படி எரித்த.
பாம்பே நாணாகச் சேர்ந்த வலிய வில்லை உடைய பெருமானது குளிர்ந்த திருவாரூர்க்கு அயலாக உள்ள கொடிய வழியிலே கொடிபோலத் துவளுகின்ற இடையினையுடைய என் மகள் கத்தரியால் மட்டம் செய்யப்பட்ட மாலையை அணிந்த ஓர் அயலான்பின்னே காலால் நடந்தே சென்றாள்; இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`அடைந்தாளாக` என்பது பாடமன்று.
``கொய்தார்`` என்பதனைச் சினைவினை முதல்மேல் ஏற்றப்பட்டதாகக் கொண்டு, `கொய்யப்பட்ட மலரால் ஆகிய மாலை` என்றலும் ஆம்.
இதுவும் முன்னைப் பாட்டின் துறையே.
``திண்சிலை`` என்றது, `மலையாகிய வில்` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியது.

பண் :

பாடல் எண் : 15

தடப்பாற் புனற்சடைச் சங்கரன்
தண்மதி போல்முகத்து
மடப்பால் மடந்தை மலரணைச்
சேக்கையிற் பாசம்பிரீஇ
இடப்பால் திரியின் வெருவும்
இருஞ்சுரஞ் சென்றனளால்
படப்பா லனஅல்ல வால்தமி
யேன்தையல் பட்டனவே.

பொழிப்புரை :

தீர்த்தங்களில் ஒன்றாய் இருக்கற்பாலதாய நீரை சடையிலே உடைய சிவபெருமான் அணிந்துள்ள பிறை போலும் நெற்றியையுடைய, பேதைமைப்பாலளாகிய என் மகள் இயல்பாக மலர் அணையாகிய படுக்கையினின்றும் சிறிது வெறுத்து நீங்கி இடம் மாறினாலும் அஞ்சி வருந்துவாள்.
அத்தகையவள் இப்பொழுது பெரிய பாலை நிலத்திலே நடந்து சென்றாள்.
தமியேன் %

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 16

பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் மூதூர் நத்தமும்
பரல்முரம் பதரும் அல்லது படுமழை
வரல்முறை அறியா வல்வெயிற் கானத்துத்
தேன்இவர் கோதை செல்ல மானினம்
அம்சில் ஓதி நோக்கிற்கு அழிந்து
நெஞ்செரி வுடைமையின் விலக்காது விடுக
கொங்கைக் கழிந்து குன்றிடை அடைந்த
கொங்கிவர் கோங்கமுஞ் செலவுடன் படுக
மென்றோட் குடைந்து வெயில்நிலை நின்ற
குன்ற வேய்களும் கூற்றடைந் தொழிக
மாயிருங் கடற்றிடை வைகல் ஆயிரம்
பாவையை வளர்ப்போய் நீநனி பாவையை
விலக்காது பிழைத்தனை மாதோ நலத்தகும்
அலைபுனல் ஆரூர் அமர்ந்துறை அமுதன்
கலையமர் கையன் கண்ணுதல் எந்தை
தொங்கலஞ் சடைமுடிக் கணிந்த
கொங்கலர் கண்ணி யாயின குரவே.

பொழிப்புரை :

நலத்தால் தகுதிப் பட்ட, அலையும் நீரையுடைய திருவாரூரில் விரும்பி உறைகின்ற அமுதமாகியவனும், மான் பொருந்திய கையை உடையவனும், கண் பொருந்திய நெற்றியை உடையவனும் ஆகிய எம் தந்தை கொன்றை மாலையோடு ஒக்க அணிந்த கண்ணியாதற்கு அமைந்த நறுமணத்தொடு கூடிய மலர்களை யுடைய குராமரமே, போரில் இறந்து பட்டோரது பெயர்களையும், அவர் செய்த வீரச் செயல்களையும் எழுதி நடப்பட்ட கற்களும், பழையனவாகிய குடில்களையுடைய சீறூர்களும், பரற்கற்கள் நிறைந்த அருவழிகளும் அல்லது, வானின்றும் வீழ்கின்ற பெய்தலை ஒரு காலத்தும் கண்டிராத மிக்க வெயிலையுடைய சுரத்தில்; தேன் ததும்பும் மாலையை அணிந்த என் மகள் செல்லும் பொழுதும் மான் கூட்டம் அவளது பார்வைக்குத் தோற்றுப் போன பகைமையால் மனம் வெதும்பி விலக்காதுபோகட்டும்; அவளது கொங்கைகளுக்குத் தோற்றுப் போய் மலையிடத்தே ஓடி நின்ற, மணம் மிக்க மலர்களை யுடைய கோங்க மரங்கள் அவளை விலக்காமல் பார்த்துக் கொண் டிருக்கட்டும்; அவளது மெல்லிய தோள்களுக்குத் தோற்றுப் போய் வெயிலிலே நின்று வருந்துகின்ற மூங்கில்கள் அவளை விலக்காமல் ஓரிடத்தில் ஒதுங்கியிருக்கட்டும்; பெரிய சுரத்திடையிலே நாள்தோறும் ஆயிரம் பாவைகளைப் பெற்று வளர்க்கின்ற நீ அவளை விலக்காது குற்றத்திற்கு மிகவும் ஆளாயினை.

குறிப்புரை :

`இது நன்றோ` என்றபடி குராமலர் பாவை போலத் தோன்றுதலின், அது பாவையைப் பெற்று வளர்ப்பதாக இலக்கியங் களில் கூறப்படும்.
`பாவையைப் பெற்று வளர்க்கும் அன்பின்மேலும், உனது மலரைச் சிலர் விரும்பியணியும் தகுதியையும் உடையை யன்றோ` என்றற்கு, ``எந்தை அணிந்த கண்ணியாயின குரவே`` என்றாள்.
`அணிந்த கண்ணிக் கொங்கலர் குரவே` என மாற்றியுரைக்க.
``குரா மலரோடு அரா மதியம் சடைமேற் கொண்டார்`` என்னும் திரு முறையால் (திருமுறை 6-96-11)குராமலர் இறைவனுக்கு இனிதாதல் அறிக.
இது மேலைத் துறையில் குரவொடு புலம்பல்.

பண் :

பாடல் எண் : 17

குரவங் கமழ்கோதை கோதைவே லோன்பின்
விரவுங் கடுங்கானம் வெவ்வாய் - அரவம்
சடைக்கணிந்த சங்கரன் தார்மதனன் றன்னைக்
கடைக்கணித்த தீயிற் கடிது.

பொழிப்புரை :

குரா மலர் மணம் கமழ்கின்ற மாலையை அணிந்த என் மகள் மாலை யணிந்த வேலை ஏந்தியவன் பின்னே சென்ற கடிய சுரம், கொடிய நஞ்சு பொருந்திய வாயையுடைய பாம்பைச் சடை யிலே அணிந்த சிவபெருமான், மாலையணிந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் சிறிதே நோக்கிய பொழுது எழுந்த தீயினும் கொடியது.

குறிப்புரை :

`அதில் அவள் எப்படிச் சென்றாள்` என்றபடி.
இதுவும் செவிலி புலம்பல்.

பண் :

பாடல் எண் : 18

கடிமலர்க் கொன்றையுஞ் திங்களுஞ்
செங்கண் அரவும்அங்கண்
முடிமலர் ஆக்கிய முக்கணக்
கன்மிக்க செக்கரொக்கும்
படிமலர் மேனிப் பரமன்
அடிபர வாதவர்போல்
அடிமலர் நோவ நடந்தோ
கடந்ததெம் அம்மனையே.

பொழிப்புரை :

எம் தாய் (மகள்) சுரத்தைக் கடந்தது, வாசனை பொருந்திய கொன்றையோடு திங்கள், சிவந்த கண்களையுடைய பாம்பு இவைகளையும் முடியில் அணியும் மலராகக் கொண்டு அணிந் துள்ள, மூன்று கண்களையுடைய திகம்பரனும், செவ்வானம் போலும் மெல்லிய மேனியை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவடி மலர்களைத் துதியாதவர்கள் போலப் பாதங்களாகிய தாமரை மலர்கள் நோகும்படி நடந்தேயோ!

குறிப்புரை :

இதுவும் மேலைத் துறை.

பண் :

பாடல் எண் : 19

மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் கரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆரூர் ஆவணத்
துறையில் தூக்கும் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.

பொழிப்புரை :

பாணனே, இல்லங்களில் வாழும் குருவிகளில் வளைந்த அலகினையுடைய ஆண் குருவி ஒன்று தன் பெட்டைக் குருவி கரு முதிர்ந்து முட்டையிடும் காலத்தை அடைந்திருப்பதை உணர்ந்து அது தங்கி முட்டையிடுவதற்கு உரிய கூடு ஒன்றைக் கட்ட வேண்டி, அப்பெட்டையின் மேல் உளதாகிய அன்பு மிகுந்து தனக்குச் சுமையாதலால், பெட்டை மனம் வருந்தாதபடி அதனை அடிக்கடி தழுவி மகிழ்ச்சி உண்டாக்கிக் கொண்டு பக்கத்து வயலில் கணு முற்றி வளர்ந்திருக்கின்ற கரும்பின் சிறிய சோனைகளில் நார் உரிக்கின்ற வயல் வளம் மிகப் பொருந்திய, பெருமை நிறைந்த இல்லங்களையும், எப்பொழுதும்வற்றாது வரும் நீரினையும் உடைய ஊரை உடையவன் உன் தலைவன்.
அவன் கட்டிவைக்கும் பார்வை மிருகமாய், இளைய கொடிபோல்பவராகிய மகளிரை அவன் வலையில் வீழ்க்க வந்து, வஞ்சக வார்த்தைகள் பலவற்றை இனிமையாகச் சொல்லி, உள்ளத்தில் உள்ள உண்மையை முற்றிலுமாக மறைத்துத் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டு, கள்ளக் கும்பிடு போட்டு, (தலைவர் இங்கு உள்ளாரோ` எனப் பொய்யாக வினவிக் கொண்டு) எங்கள் இல்லத்திலே வந்து நிற்கின்றாய்.
(அவன் செய்தியை நீ அறியாயோ? அவன் இங்கா இருப்பான்?) அவனோ அமரரும் அறியா ஆதி மூர்த்தியும், முருகன் தந்தையும், நீரால் குளிர்ந்த சடையை உடைய இறைவனும், ஒலிக்கும் கழலை அணிந்தவனும், எம் தந்தையும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவாரூர்க் கடைத் தெருவில் கடை களில் தொங்க விடப்பட்டுள்ள அழகிய தோற்றத்தையுடை கண்ணாடி களைப் போன்ற தன்மையை உடைய, பண்போல இனிமையாகப் பேசுகின்ற அத்தகைய பெண்டிர் இல்லங்களில் இருக்கின்றான்.

குறிப்புரை :

கண்ணாடி போன்ற தன்மையாவது அருகில் வந்தோர் யாராயினும், `இன்னார், இனியார்` என்னும் வரையறையின்றி உடனே அகத்திட்டுக் கொள்ளுதல்.
எனவே, `இந்நீர்மையுடையோர் வரை வின் மகளிர்` என்பது உணர்த்தியவாறு.
இது, தலைவியை வாயில் வேண்டிய பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது.
திணை, மருதம்.
``மனை வாய்ச் சேவற்குருவிதன் பெடையை அடிக்கடி தழுவித் தலையளி செய்து, ஈன் இல் இழைக்கக் கரும்பின் நுண்தோடு கவரும் ஊரன்`` என்றது, `அக்குருவியின் அன்பு தானும் உன் தலைவனுக்கு இல்லை` எனத் தலைவி உள்ளுறையாகக் கழற்றுரை கூறினாள்.
அவ் வுள்ளுறைக்கண் பொதியப்பட்ட பொருளானே தலைவி புதல் வனைப் பெறும் நிலையில் இருத்தலும், தலைவன் அதனையும் நோக்காது புறத்தொழுக்கினன் ஆயதும் பெறப்பட்டன.
ஈன் இல், வினைத்தொகை.

பண் :

பாடல் எண் : 20

பாலாய சொல்லியர்க்கே சொல்லுபோய்ப் பாண்மகனே
ஏலா இங் கென்னுக் கிடுகின்றாய் - மேலாய
தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும்
பூந்தண் புனலூரன் பொய்.

பொழிப்புரை :

ஏ பாண்மகனே, `மேலாய, இனிய, தண்ணிய கொன்றை மலரைச் சூடியுள்ள சிவபெருமானது திருவடிகளை யான் தலைமேற்கொள்பவன்; பொய்கூறேன்; உண்மையில் என்மேல் தவறு ஒன்றும் இல்லை` என்று தலைவன் கூறிய பொய்களையெல்லாம் இங்கே வந்து எதற்குக் `கொட்டுகின்றாய்? இங்கே அவைகள் ஏலா.
யாருடைய சொல் தலைவனுக்குப் பால்போல இனிக்கின்றதோ அவர் களிடத்தில் போய் அவைகளைச் சொல்லு; (கேட்டுக் கொள்வார்கள்.)

குறிப்புரை :

இதுவும் மேலைத் திணை; துறை.
``சூடும்`` என்றது, `சூடுவேன்` எனச் சொல்வானது சொற் பற்றிக் கூறியது.

பண் :

பாடல் எண் : 21

பொய்யால் தொழவும் அருளும்
இறைகண்டம் போல்இருண்ட
மையார் தடங்கண் மடந்தையர்
கேட்கிற்பொல் லாதுவந்துன்
கையால் அடிதொடல் செல்வனில்
புல்லல் கலையளையல்
ஐயா இவைநன்கு கற்றாய்
பெரிதும் அழகியவே.

பொழிப்புரை :

தலைவனே, இங்கே உன் கையினால் எம் காலைத் தொட்டு வணங்க வேண்டா.
மகனை அன்போடு அணைப்பது போலக் காட்டி, அவ்வழியாக வந்து எம்மைச் சார வேண்டா எம் உடையைப் பற்றி அலைக்கழிக்க வேண்டா ஏனெனில் பொய்யாக வணங்கி னாலும் அதற்கு அருள்செய்கின்ற சிவபெருமானது கண்டம் போலக் கறுத்த மைதீட்டிய, அகன்ற கண்களையுடைய உன் காதலிகள் இவற்றைக் கேள்விப்பட்டால் உனக்கு இடராய் முடியும்.
காதல் இன்றி யும் உடையவன்போல நடித்தற்கு இச்செயல்களையெல்லாம் நன்கு கற்றிருக்கின்றாய்.
இம்முறைமை உனக்கு மிகவும் அழகியவாய் உள்ளன.

குறிப்புரை :

இது, பள்ளியிடத்து ஊடலில் புதல்வன் வாயிலாகத் தலைவன் ஊடல் தணிவிக்கத் தலைவி ஊடல் தணியாளாய்க் கூறியது.
இதுவும் மருதத் திணை.

பண் :

பாடல் எண் : 22

அழகுறு கிண்கிணி அடிமிசை அரற்றத்
தொழிலுடைச் சிறுபறை பூண்டு தேர்ஈர்த்
தொருகளி றுருட்டி ஒண்பொடி ஆடிப்
பொருகளி றனைய பொக்கமொடு பிற்றாழ்ந்த
பூங்குழற் சிறாரொடு தூங்குநடை பயிற்றி
அக்கரை உடுத்தி ஐம்படை கட்டி
ஒக்கரை இருக்கும் ஒளிர்புன் குஞ்சிக்
குதலையங் கிளவிப் புதல்வன் தன்னை
உள்ளச் சொரிந்த வெள்ளத் தீம்பால்
உடைய வாகிய தடமென் கொங்கை
வேண்டாது பிரிந்த விரிபுனல் ஊரன்
பூண்தாங் ககலம் புல்குவன் எனப்போய்ப்
பெருமடம் உடையை வாழி வார்சடைக்
கொடுவெண் திங்கட் கொழுநில வேய்க்கும்
சுடுபொடி யணிந்த துளங்கொளி அகலத்
தண்ணல் ஆரூர் திண்ணிதிற் செய்த
சிறைகெழு செழும்புனல் போல
நிறையொடு நீங்காய் நெஞ்சம் நீயே.

பொழிப்புரை :

நெஞ்சே, அழகுடையவாகிய கிண்கிணிகள் அடி மேல் ஒலிக்க, அடிக்கத் தக்கதாகிய சிறுபறையைத் தோளில் மாட்டிக் கொண்டு, சிறுதேரை இழுத்துக் கொண்டும், யானையாகச் செய்யப் பட்ட அதனை உருட்டிக்கொண்டும், தெருப் புழுதியிலே முழுகி, போர்செய்தற்குரிய ஆண் யானை தன் பெண்யானையினிடத்துக் கொள்ளும் இன்பம் போலும் இன்பத்தை உள்ளத்தில் எய்தி, தன்னைப் பின்பற்றிவரும் அழகிய கால் அணிகளை அணிந்த மற்றைச் சிறுவர் களுடன் சாய்ந்து சாய்ந்து நடக்கும் நடை பழகி, ஓரங்களில் கரையை உடைய சிறுதுண்டை இடையிலே சுற்றிக்கொண்டு, கழுத்திலே ஐம்படைத்தாலி அணிந்து, பின் எனது ஒக்கலிலே வந்து அமரும், விளங்குகின்ற, சிறிதே வளர்ந்த தலைமயிரையும், மழலைச் சொல்லையும் உடைய என் பிள்ளையை யான் நினைத்ததனால் சுரந்து பொழிந்த வெள்ளம்போலும் இனிய பாலை உடையனவாய்விட்ட என் பருத்த, மெல்லிய கொங்கைகளை வெறுத்து பிரிந்து போய்விட்ட, மிக்க நீரையுடைய ஊரையுடைய தலைவனது அணிகலம் பொருந்திய மார்பினை, `யான் வலியச் சென்று தழுவுவேன்` என்று முயன்று, (அஃது இயலாமையால்) பெரிதும் பேதைமை யுடையை ஆயினாய்; நீ வாழ்வாயாக.
(இனி அது வேண்டா) தான் தனது நீண்ட சடையிலே அணிந்துள்ள, வளைந்த, வெள்ளிய திங்களினது செழித்த நிலவோடொக்கும் சுடுவெண் பொடியை அணிந்து ஒளிவிடுகின்ற மார்பினையுடைய பெருமானது திருவாரூரில் வாய்க்கால்களில் உறுதியாகக் கட்டப்பட்ட மடைகளில் அப்பாற் செல்லாமல் தன் மேகம் தடையுண்டு நிற்கின்ற மிக்க நீர்போல, உறுதிப்பாட்டுடன் என்னிடத் திற்றானே நீங்காது நில்.

குறிப்புரை :

இது புதல்வற் பயந்து தன்தலைக்கடன் இறுத்து வாழும் தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்த வழி ஆற்றாமையால் அவன் உள்வழிச் செல்ல நினைத்து, நாண் தடுத்தலால் அஃது இயலாது நின்ற நெஞ்சினைக் கழறிக் கூறியது.
இது, ``புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த்து அருக்கி எதிர்பெய்து மறுத்த ஈரம்` (தொல்.
கற்பு.
6) என்பதன் பகுதியாம்.
இதுவும் மருதத் திணை.
தாழ்தல் தங்குதல்.

பண் :

பாடல் எண் : 23

நீயிருந்திங் கென்போது நெஞ்சமே, நீளிருட்கண்
ஆயிரங்கை வட்டித் தனலாடித் - தீயரங்கத்
தைவாய் அரவசைத்தான் நன்பணைத்தோட் கன்பமைத்த
செய்வான தூரன் திறம்.

பொழிப்புரை :

நெஞ்சே, நம் தலைவனது செயற்கூறு, நெடிய இருளிடத்து தீ எரிகின்ற அரங்கத்தின்கண், தீயின் நடுவே நின்று கைகள் ஆயிரத்தைச் சுழற்றி ஆடி, ஐந்தலை நாகத்தைக் கட்டியுள்ள சிவபெருமானது அழகிய தோள்களினிடத்து அன்பை அமைத்த செயல்களைச் செய்வதாயிற்று நீ இங்கு இருந்து பெறுவது என்! என்னுடன் வா, போவோம்.

குறிப்புரை :

`நெஞ்சமே, ஊரன் திறம் அரவு அசைத்தான் தோட்கு அன்பு அமைத்த செய்வு ஆனது; நீ இங்கு இருந்து என்! போது` என இயைத்து முடிக்க.
`தோட்கு, தோட் கண்` என உருபு மயக்கம்.
அமைத்த - அமைத்தன.
அமைத்தனவாகிய செயல்கள்.
செய்வு - செய்தல்; தொழிற் பெயர்.
இஃது அறப்புறம் காவற் பிரிவில் ஆற்றா ளாய தலைவி தலைவன் உள்வழிச் செல்ல நினைந்து நெஞ்சத்தொடு கூறியது.
இதுவும் பாலைத் திணையே.

பண் :

பாடல் எண் : 24

திறமலி சின்மொழிச் செந்துவர்
வாயின எங்கையர்க்கே
மறவலி வேலோன் அருளுக
வார்சடை யான்கடவூர்த்
துறைமலி ஆம்பல்பல் லாயிரத்
துத்தமி யேயெழினும்
நறைமலி தாமரை தன்னதன்
றோசொல்லும் நற்கயமே.

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானது திருக் கடவூரில் உள்ள குளத்தில் அதன் துறைகளில் நிறைய பல ஆயிரம் ஆம்பல் மலர்கள் பூத்திருக்க, அவற்றின் இடையில் மணம் மிக்க தாமரை மலர் ஒன்றே பூத்திருப்பினும் அந்தக் குளம் `தாமரைக் குளம், என்றுதானே புகழப்படும்? ஆகையால் வீரம் அமைந்த வேலை ஏந்திய தலைவன் எமக்கு அருள் பண்ணாமல், திறமை நிறைந்த சில சொற்களையும் சிவந்த வாயினையும் உடைய எம் தங்கைமார்க்கே அருள் பண்ணட்டும்; (தலைவனாதல் எமக்குத்தானே? அவர்கட்கு ஏது?)

குறிப்புரை :

குளத்திற்குச் சிறப்புத் தருவது தாமரை மலரே ஆகையால் அதைக் குறித்துத் தான் குளத்தை, `தாமரைக் குளம்` எனப் பெருமையாகக் கூறுவார்கள்.
அதுபோல இல்லறத்திற்குத் துணை யாகின்றவள் தலைவியே ஆகையால் `அவளுக்குத் தலைவன்` எனச் சொல்லியே தலைவனை யாவரும் பாராட்டுவர் - என்றபடி.
எனவே, இப்பாட்டில், ``வார்சடையான்`` என்பது முதலாக உள்ள பகுதி ஒட்டணியாம்.
இது, பரத்தையிற் பிரிவில் `தலைவி ஆற்றாள்` எனக் கவன்ற தோழிக்குத் தலைவி `ஆற்றுவல்` என்பதுபடக் கூறியது.
எனவே இது முல்லைத் திணையாம்.
``தன்னது`` என்பதில் தன், சாரியை.
அதில் ஒற்று இரட்டியது செய்யுள் விகாரம்.
`தனதாக` என ஆக்கம் விரிக்க.
``சொல்லும்`` என்பது `சொல்லப்படும்` எனச் செயப் பாட்டுவினைப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 25

கயங்கெழு கருங்கடல் முதுகுதெரு மரலுற
இயங்குதிமில் கடவி எறிஇளி நுளையர்
நெய்ம்மீன் கவரல் வேண்டிக் கைம்மிகுத்
தால வட்டம் ஏய்ப்ப மீமிசை
முடிகெழு தருவலை வீசி முந்நீர்க்
குடரென வாங்கிக் கொள்ளை கொண்ட
சுரிமுகச் சங்கும் சுடர்விடு பவளமும்
எரிகதிர் நித்திலத் தொகுதியுங் கூடி
விரிகதிர் நிலவுஞ் செக்கருந் தாரகை
உருவது காட்டும் உலவாக் காட்சித்
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோளிழைத் திருக்குங் கொள்கை போல
மணிதிகழ் மிடற்று வானவன் மருவும்
அணிதிகழ் அகலத் தண்ணல் ஆரூர்
ஆர்கலி விழவின் அன்னதோர்
பேர்செலச் சிறந்தது சிறுநல் லூரே.

பொழிப்புரை :

ஆழம் பொருந்திய கரிய கடலின் முதுகு அலையும்படி அலைத்துச் செல்கின்ற ஓடங்களைச் செலுத்திய `இளி` என்னும் ஒருவகை ஒலியை வாயினின்றும் எழுப்புகின்ற வலைஞர் கள், `நெய்ம்மீன்` என்னும் ஒருவகை மீனைப் பிடிக்க வேண்டிக் கைமிகுந்து முடிச்சுகள் பொருந்திய வலையை ஆலவட்டம் போலத் தோன்றும்படி மிக உயரத்திலே சென்று வீழ வீசி, வீசிய வலைகள் கடலின் குடர்போலத் தோன்றும்படி வெளியே இழுத்து வாங்கும் பொழுது அவ்வலையில் அகப்பட்ட குவிந்த முனையையுடைய சங்கும், ஒளி வீசுகின்ற பவளமும், பொற்கதிரைப் பரப்புகின்ற முத்துக்களும் ஆகிய இவற்றின் தொகுதிகள் ஒருங்கு தொக்கு, வெள்ளொளியைப் பரப்புகின்ற திங்களும், செவ்வானமும், விண்மீன்களும் ஆகிய இவைகளின் உருவத்தைத் தோற்றுவிக்கின்ற, கெடாத காட்சியையுடைய, குளிர்ந்த, அழகிய துறையையுடைய தலைவனது அகன்ற மார்பினை ஒருமுறை கண்ணுறக் கண்டு, அங்ஙனம் கண்டது முதலாக இந்தச் சிறிய நல்ல ஊர், ஒளிபொருந்திய நிறத்தையுடைய கரும்பாம்பு இளந்திங்களை, `அது முதிரட்டும், முதிரட்டும்`, என்று விடாது பார்த்துக்கொண்டிருப்பது போல என்னைப் பற்றி விடாது எவற்றையேனும் சொல்லி, நீலமணிபோல விளங்குகின்ற கண்டத்தையுடைய பெருமான் எழுந்தருளியுள்ள, அழகு விளங்கும் விசாலித்த திருவாரூரில், நிறைந்த ஆரவாரத்தோடு கூடிய திருவிழாவில் அத்தலப் பெருமானது ஒருபெயரே எங்கும் ஒலித்தல்போலத் துறைவனது ஒரு பெயரே எங்கும் ஒலிக்கின்ற சிறப்பினை உடையதாயிற்று.

குறிப்புரை :

``இவ்வூரவர்க்குத் தொழில் வேறு இல்லை போலும்` என்பது குறிப்பெச்சம்.
இது வரையா நாளின் வந்தோன் முட்டிடக் கண்ட ஆயத்தார் அலர் கூறுதல் அறிந்த தலைவி முன்னிலைப் புறமொழியாற் கழறிக் கூறியது.
இதன் பயன் உடன்போக்காதலின் இது நெய்தலிற் பாலையாயிற்று.
நிலவு, செக்கர், தாரகை என்பவற்றைச் சங்கு முதலிய மூன்றனோடு நிரலே இயைக்க.
``தண்ணந் துறைவன் .
.
.
.
.
கொள்கைபோல`` என்றதனை, கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
* என்பதனோடு ஒப்பு நோக்கு.
`போலச் சிறந்தது` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 26

ஊரெலாந் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
பாரெலாம் பாடவிந்த பாயிருட்கண் - சீருலாம்
மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைக்காட்டுப்
பூந்துறைவாய் மேய்ந்துறங்கா புள்.

பொழிப்புரை :

ஊர் முழுதும் உறங்கி, உலகம் முழுதும் நள்ளிரவு நிலையை அடைந்து, மண் முழுதிலும் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒலி அடங்கிய இப்பரந்த இருளிடத்து, (தோழீ! என்னை காரணமோ) அழகு பொருந்திய திருமாந்துறையில் உள்ள ஈசனுக்கு உரித்தாய் உள்ள திருமறைக் காட்டில் உள்ள நீலமணிபோலும் நீரினது துறையில் நிரம்ப இரைமேய்ந்த பின்னும் அதில் உள்ள பறவைகள் உறங்காமல் ஆரவாரிக்கின்றன.

குறிப்புரை :

செய்தென் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன.
இஃது இரவுக் குறிக்கண் தலைவன் வந்தமையைத் தோழி தலைவிக்கு அவள் அறியுமாற்றாற் கூறியது.
புட்கள் உறங்காமல் எழுந்து ஆரவாரித்தல் தலைவன் தான் வந்தமை குறிக்கும் குறியாக எழுப்புதலினாலேயாம் இது குறிஞ்சித் திணை.

பண் :

பாடல் எண் : 27

புள்ளுந் துயின்று பொழுதிறு
மாந்து கழுதுறங்கி
நள்நென்ற கங்குல் இருள்வாய்ப்
பெருகிய வார்பனிநாள்
துள்ளுங் கலைக்கைச் சுடர்வண்
ணனைத்தொழு வார்மனம்போன்
றுள்ளும் உருக ஒருவர்திண்
தேர்வந் துலாத்தருமே.

பொழிப்புரை :

பறவைகளும் துயின்று, ஞாயிறு தன் கதிரும் தோன்றாமல் மறைந்து, பேயும் உறங்கி, இவ்வாறு `பாதி` என உணரப்படுகின்ற இரவில், இருளிலே, மிக்கு ஒழுகும் பனிக் காலத்தில், நினைத்தால் மனம் நெகிழ்ந்துருகும்படி, துள்ளுகின்றமானைக் கையில் ஏந்திய, தீ வண்ணனாகிய சிவபெருமானை வணங்குகின்றவர் களுடைய மனம் அப்பெருமானிடத்தே எவ்வாறு ஓய்வின்றி உலவுமோ அதுபோல ஒருவருடைய திண்ணிய தேர்வந்து வந்து உலவாநின்றது.

குறிப்புரை :

`ஊழது நிலை இவ்வாறாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
இஃது இரவுக் குறிக்கண் அல்ல குறிப்பட்டுத் தலைவனை எய்தாளாய தலைவி பின், வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன் பிழைப் பாகத் தழீஇத் தேறிக் கூறியது.
இது குறிஞ்சித் திணை.
இறுமாத்தல், இங்குச் செயலின்றி மடிந்திருத்தல்.
`உள்ளும்` என்னும் உம்மை, உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 28

உலாநீர்க் கங்கை ஒருசடைக் கரந்து
புலால்நீர் ஒழுகப் பொருகளி றுரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன்
அன்பின் அமைத்தவன் ஆரூர் நன்பகல்
வலம்புரி அடுப்பா மாமுத் தரிசி
சலஞ்சலம் நிறைய ஏற்றி நலந்திகழ்
பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட
இப்பியந் துடுப்பால் ஒப்பத் துழாவி
அடாஅ தட்ட அமுதம் வாய்மடுத்
திடாஅ ஆயமோடு உண்ணும் பொழுதில்
திருந்திழைப் பணைத்தோள் தேமொழி மாதே
விருந்தின் அடியேற் கருளுதி யோஎன
முலைமுகம் நோக்கி முறுவலித் திறைஞ்சலின்
நறைகமழ் வெண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்குபுனல் உற்றது போலஎன்
அங்க மெல்லாந் தானா யினனே.

பொழிப்புரை :

(தோழீ, கேள்) பாய்ந்து செல்வதாகிய கங்கை நீரை ஒரு சடையிலே ஒளித்துவைத்தும், போர் செய்வதாகிய ஆண் யானை ஒன்றை உதிரம் ஒழுக உரித்தும் தன் ஆற்றலைப் புலப்படுத்திய, பூதப் படைத் தலைவனும், யாவர்க்கும் முன்னேயுள்ள மூர்த்தியும், அழகிய, இளைய மலைமகட்கும் தனது திருமேனியில் பாதியைத் தந்து அன்பினாலே அவளை உடன் கொண்டு இருப்பவனும் ஆகிய சிவபெருமானது இத்திருவாரூரிலே (நாம் தெருவில் விளையாடுகின்ற பருவத்திலே நீ ஒருநாள் அன்னையோடு இருக்க நான் ஆயத்தாருடன் தெருவில்) வலம்புரிச் சங்குகளை அடுப்பாகக் கூட்டி, சலஞ்சலச் சங்கினைப் பானையாக ஏற்றி, அது நிறையச் சிறந்த முத்துக்களை அரிசியாக இட்டு, பவழங்களை: சிவந்த தீயாக மூட்டி அழகு உண்டாக இப்பியை அகப்பையாக இட்டு நன்றாகத் துழாவி இவ்வாறு உண்மையாகச் சமைக்காமல் பொய்யாகச் சமைத்த சோற்றினை வாயில் இடாமலே நான் ஆயத்தாருடன் உண்ணப் போகும் பொழுது (சிறான் ஒருவன் வந்து) `திருத்தமான அணிகளையும், பருத்த தோள்களையும், தேன்போன்ற சொற்களையும் உடைய மாதே, உங்கள் சிற்றில் அயர்வின்கண் விருந்து ஒன்று இல்லாத குறையை யான் நிரப்புதற்கு அருள்செய்வாயோ`` என்று வினவி, என் கொங்கையின் முகங்களை நோக்கி, உள்ளத்து ஆசை வெளிப்படும்படி சிரித்து, என் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்.
அவனது செயல், நறுமணம் கமழும்படி காய்ச்சப்படுகின்ற வெண்ணெயிலே சிறிய, நுண்ணிய நீர்த்துளி ஒன்று வீழின் அந்நெய் முழுவதும் அதனாலே ஆரவாரித்துப் பொங்குதல் போல யான் என் உடம்பு முழுதும் அவனாகி விட்டது போலும் உணர்ச்சியை அடைந்தேன்.

குறிப்புரை :

`இஃது இளமைக் காலத்தில் நிகழ்ந்தது` என்பது இசை யெச்சம்.
`இதனை நம் தாய்க்கு நீ சொல்லுதல் வேண்டும்` என்பது குறிப்பு.
இது களவொழுக்கத்தில் அது வெளிப்படாத வகையில் ஒழுகிய தலைவி தமர் வேற்று வரைவிற்கு முயல்வதை அறிந்து தானே தன் தோழிக்குப் படைத்து மொழியால் அறத்தொடு நின்றது.
இதுவும் குறிஞ்சித் திணை.
``பூத நாதன்`` என்பதற்கு, `உயிர்கட்கு முதல்வன்` என உரைத்தலும் ஆம்.
தனது ஊரையே வேறுபோலக் கூறினார்.
ஆதலின், ``இவ் ஆரூர்`` எனச் சுட்டுவருவித்துக் கண்ணுருபு விரிக்க `நல்லதொரு விளையாட்டு நிகழ்ந்த பகல்` என்பாள் பகலை, ``நன் பகல்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
``துடுப்பு`` என்றாராயினும் சோற்றைத் துழாவுவது அகப்பையேயாதல்பற்றி அதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது.
`வாய் மடுத்திடா` என்பது ஒரு சொல்.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
`துளி` என்பது ``துள்ளி`` என விரித்தல் பெற்றது.
தான் - அவன் ``ஆயினன்`` என்பது தன்மை யொருமை வினைமுற்று.

பண் :

பாடல் எண் : 29

ஆயினஅன் பாரே அழிப்பர் அனலாடி
பேயினவன் பார்ஓம்பும் பேரருளான் - தீயினவன்
கண்ணாளன் ஆரூர்க் கடலார் மடப்பாவை
தண்ணாருங் கொங்கைக்கே தாழ்ந்து.

பொழிப்புரை :

தீயில் நின்று ஆடுபவனும், பேய்க் கூட்டத்தை உடையவனும், உலகத்தைக் காக்கும் பேரருளாளனும், நெருப்புப் பொருந்திய கண்ணை உடையவனும் ஆகிய சிவபெருமானது திருவாரூரோடு ஒத்த, கடற்கரைக் கண் உள்ள, இளையபரவை போல் வாளது குளிர்ச்சி நிறைந்த கொங்கையின் கண்ணே தங்கிவிட்ட அன் பினை இனி அழிப்பவர் யார்?

குறிப்புரை :

இது, குற்றம் காட்டிய வாயில் பெட்ப (கழற்றுரை கூறிய பாங்கன் பின் தன்னை விரும்பும்படி) தலைவன் தன் ஆற்றாமை கூறிக் கழற்றெதிர் மறுத்தது.
இது நெய்தலிற் குறிஞ்சி மயங்கியது.
``ஆடி`` என்பது பெயர்.
``பேயினவன்`` என்பதில் `இன்` சாரியை; அகரம் பெயரெச்ச விகுதி `வன்கண்` என்க.
`ஆரூர் போலும் மடப்பாவை` என்க.
கொங்கைக்கு , `கொங்கைக்கண்` என உருபு மயக்கம்.
தாழ்ந்து `ஆயின அன்பு` என மேலே கூட்டுக.
தாழ்தல் - தங்குதல்.

பண் :

பாடல் எண் : 30

தாழ்ந்து கிடந்த சடைமுடிச்
சங்கரன் தாள்பணியா
தாழ்ந்து கிடந்துநை வார்கிளை
போல்அயர் வேற்கிரங்கிச்
சூழ்ந்து கிடந்த கரைமேல்
திரையென்னும் கையெறிந்து
வீழ்ந்து கிடந்தல றித்துயி
லாதிவ் விரிகடலே.

பொழிப்புரை :

தாழ்ந்து தொங்குகின்ற சடைமுடியை உடைய, `சங்கரன்` என்னும் பெயரினன் ஆகிய சிவபெருமானது திருவடிகளை வணங்காமையால் துன்பத்தில் ஆழ்ந்து கிடந்து வருந்துவாரது சுற்றம் போல வருந்துகின்ற என்பொருட்டு இரங்கி இந்த அகன்ற கடல் தன்னைச் சூழ்ந்து கிடக்கின்ற கரைமேல் அலைகளாகிய கையை அடித்து அடித்து, தரைமேல் வீழ்ந்து, வாய்விட்டு அலறிக் கொண்டு உறங்காமல் உள்ளது.

குறிப்புரை :

`பிறர் ஒருவரும் என்பொருட்டு இரங்குவார் இல்லை` என்பது கருத்து.
இது, `தாளாண் எதிரும் பக்கம்` எனப்படும்.
பொருள் வயிற் பிரிவின்கண் தலைவன் நீட ஆற்றாளாய தலைவி தூது செல்லாத பாங்கியைப் புலந்து கடலை முன்னிலைப்படுத்துக் கூறி இரங்கியது.
இதனை, `காமம் மிக்க கழிபடர் கிளவி` என்பர்.
இது நெய்தல் திணை, பணியாதவரே யன்றி அவர் சுற்றமும் வருந்தும் நிலையை உடைத்தாதல் பற்றி, ``நைவார் கிளைபோல் அயர்வேற்கு`` என்றாள்.
திருவாரூர் மும்மணிக் கோவை முற்றிற்று.
சிற்பி