திருத்தெளிச்சேரி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்
மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்
பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

பொழிப்புரை :

அலர்ந்தனவாய பூக்களைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து வழிபடும் புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய செயல்களைப்புரியும் உமையம்மையோடு பன்றியின் பின் வேடனாகப் பொய் வேடந்தரித்து நின்றது உம் பெருமைக்கு ஏற்ற செயல்போலும்!

குறிப்புரை :

தெளிச்சேரியில் மூன்றுவேளையிலும் தேவர்கள் பூக்களைக் கொண்டுவந்து சிவபூசைசெய்த வரலாறு உணர்த்தப்பட்டது. மேவரும்தொழில், சிவசத்தியின் கிருத்தியம் ஏனையோரெவராலும் அடைதற்கரியவை. கேழல் - பன்றி. சிவனும் உமையும், வேடனும் வேட்டுவிச்சியுமானதை உணர்த்திற்று. பாவகம் - மெய்யல்லாமை குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே
திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்
வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை யெங்ஙன நீர்கண்ணிற் காய்ந்ததே.

பொழிப்புரை :

பக்தியை விளைத்தலால் விண்ணவரும் மண்ண வரும் உம்மை வழிபடற்பொருட்டு, திளைத்து முழுகும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! உம்மீது வளைந்த வலிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக எய்து களிப்புற்ற மன்மதனை, நீர் நெற்றிக் கண்ணினால் காய்ந்தது எங்ஙனம்?

குறிப்புரை :

சிவபத்தியை விளைத்தலால் தெளிச்சேரி தீர்த்தத்தில் விண்ணோரும், மண்ணோரும், திளைப்பர். அத்தகைய தீர்த்தம் இடையறாத சீர்த்தியை, அத்தலம் உடையது. சிலை -(கரும்பு) வில். ஐந்து (மலர்க்)கணை, எய்து களித்த மன்மதனை நெற்றிக் கண் நெருப்பைப் பெய்தெரித்தது எங்ஙனம் என வினாவினார். காய்தல் - எரித்தல். காம தகனம் புரிந்ததைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்
கொம்ப டுத்ததொர் கோல விடைமிசைக் கூர்மையோ
டம்ப டுத்தகண் ணாளொடு மேவ லழகிதே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய மலர்களை உடைய பொழில்களால் சூழப் பெற்றதும், செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்து விளங்குவதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! கொம்புகளை உடைய அழகிய விடைமீது கூரிய அம்பு போன்ற கண்களை உடைய உமையம்மையோடு மேவி வருவது அழகுதரும் செயலோ?

குறிப்புரை :

வம்பு - மணம். மதி - சந்திரன். செம்பு - உலோகம். புரிசை - மதில். செம்புமதில். கொம்பு - எருதின்கோடு, கோலம் - அழகு. கண்ணாள் - பார்வதிதேவியார், மேவல் - எழுந்தருளியிருக்குங் காட்சி. இடபாரூடரானதை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

பொழிப்புரை :

நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலாவும் கடல், முத்துச்சிப்பிகளையும், முத்துக்களையும் அலைகளால் கரையில் கொண்டுவந்து பெய்வதும் தேர் உலாவும் நீண்ட வீதிகளை உடையதுமான திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்ற நீர் கச்சணிந்த தனபாரங்களையுடைய உமையம்மையைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு இடமின்றியோ உமது திருமேனியின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டுள்ளீர்!

குறிப்புரை :

கார் - மேகம். இப்பி - (முத்துப் பிறக்குமிடங்களுள் ஒன்றாய) சங்கினத்தின் முதற்பிறப்பு. முதற்பதிகம் இரண்டாவது பாட்டின் குறிப்பிற்காண்க. தேருலாவும் பெருந்தெரு, ஏர் - எழுச்சி, அழகு. வார் - கச்சு, அர்த்தநாரீச்சுர வடிவமானதை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்
மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே
நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.

பொழிப்புரை :

ஒரு பாகமாக உள்ள பார்வதிதேவி உம்மைத் துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்ற, செம்மதிசேரும், மதில் சூழும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பலியேற்றற்குக் காரணம் மைபூசப் பெற்ற இளம் பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்தற்குத்தானோ? சொல்லீர்.

குறிப்புரை :

முதற்பாட்டிலும் எட்டாவது பாட்டிலும் உள்ளவாறே இதிலும் முன்னிலை (`உம்`, `நும்`) நின்றவாறுணர்க. பார்ப்பதி - பருவதபுத்திரி. செக்கர் - செவ்வானம். மாமதி - பூரணசந்திரன், தேவி பூசித்த திருத்தலம் ஆதலை முன் ஈரடியில் உணர்த்தினார். கண்ணியர் - தாருகாரணியத்து மாதர். வளை - வளையல். மால் - காமமயக்கம். வௌவல் - கவர்தல். நக்கர் -(நக்நர்) ஆடையில்லாதவர், `இக்கலிங்கம்போனால் என் ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டேதுணை` என்று நக்நனாதலாலும் கூறினார் இரட்டைப் புலவருள் ஒருவர். பலியேற்றதைச் சொல்லிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே.

பொழிப்புரை :

வெண்மையான பிறைதோயும் தழைகள் தாழ்ந்த பொழில் சூழ்ந்ததும், அசைகின்ற அழகிய ஒளியினையுடைய மணிகள் இழைக்கப்பட்ட மாடவீடுகள் திகழ்வதுமான திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! குவளை மலர் போன்ற கண்களை உடைய உமையம்மை நடுங்குமாறு உம்மைக்கொல்ல வந்து அடைந்த கவளம் கொள்ளும் பெரிய யானையை எவ்வாறு நீர் கைகளால் சினந்தழித்தீர்?.

குறிப்புரை :

தவளம் - வெண்மை. அழகுமாம். வெண்பிறை என்றது. அடையின் பொருளின்றிப்பெயரளவாய்நின்றதுபோலும், திவள் அம் எனப்பிரித்து, திவள்கின்ற அழகிய எனப்பொருள் கொள்க. திவளல் - அசைதல், திகழ்தல் - விளங்குதல். `குவளைக் கண்ணி கூறன் காண்க`. துண்ணெனல் விரைவுக் குறிப்பு. கவளம் - யானைகொள்ளும் உணவுத் திரட்சி, மால்கரி - மதமயக்கமும் துதிக்கையும் உடையயானை. கரத்தை உடையது கரி. யானையுரித்ததை உணர்த்திற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்
மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.

பொழிப்புரை :

மரக்கோடுகள் நிறைந்த பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து கூவுவதும், பெருமைமிக்க தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்வதுமான திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும் மலர்போலும் கண்ணினளும் ஆகிய கங்கை நங்கையை இதழ்கள் பொருந்திய கொன்றை மலர் அணிந்த சடையின்கண் சூடியது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை :

கோடு - கொம்பு. பொழில் - சோலை, சேடு - பெருமை. மாடு - பொன், செல்வம். கண்ணினாளும் கங்கையுமாகிய நங்கை. தோடு - இதழ், கங்கை சூடியதைக் கூறிற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்
வித்த கப்படை வல்ல வரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே.

பொழிப்புரை :

வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் ஆகிய பார்வதிதேவி குயில் வடிவு கொண்டு வழிபட்டதும், ஓவியம் எழுதப்பட்ட கொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்ததும் ஆகிய திருத்தெளிச்சேரியில் வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாட்போரில் வல்லவனும் வலிய தலைகள் பத்து, கைகள் இருபது ஆகியவற்றைக் கொண்டவனுமாகிய இராவணனைக் கால்விரலால் நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்வீராக.

குறிப்புரை :

தெளிச்சேரியில், தேவியார் குயிலுருவுற்றிருக்கின்றார் போலும்! மலர்க்கொத்து -(வண்டுகள்) இரைத்த மலர். குழல் - கூந்தல். அத்தலத்து மாளிகையின் மேலுள்ள கொடியின் சித்திரம் எனலாம். சித்திரம் - அழகுமாம். வித்தகப்படை - சிவன் தந்தவாள். அரக்கன் - இராவணன், விறல் - வலிமை, தலைபத்து, கரம் - கை, இரட்டி:- இருபது. `பத்துமோ ரிரட்டி தோளான்`(தி.4 ப.70 பா.10) இராவணனை அடக்கிய திறம் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமல ரான்முடி தேடியே
ஓல மிட்டிட வெங்ஙன மோருருக் கொண்டதே.

பொழிப்புரை :

காற்றால் எடுத்துக்கொணரப்பெறும் கடலின் திரைகளாகிய கைகள் கரையின்கண் வீசப் பெறுவதும், கடற்கரைச் சோலைகள் சூழ்ந்ததும், சேல் மீன்கள் தவழும் வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியதும் ஆகிய திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவரே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேடமுற்பட்டுக் காணாது ஓலம் இட, நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.

குறிப்புரை :

கால் - காற்று. திரை - அலை. சேல் - மீன்வகையுள் ஒன்று. திருவடியைத் திருமாலும் திருமுடியைப் பிரமனும் தேடிக்காணாத அருமையைத் தெரிவித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்
செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்
வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.

பொழிப்புரை :

மந்திரங்கள் ஓதும் மறையோர்களும் தவத்தை உடையவர்களும், செந்து என்ற பண் போன்று இனிய மொழிபேசும் மகளிரும், வாழும் திருத்தெளிச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங்கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை எவ்வாறு நீக்கியருளினீர்?.

குறிப்புரை :

மறையோர்கள், தவத்தவர் (- தவத்தையுடையவர்) என்று பிரிக்க, செந்து - ஒரு பெரும் பண், `செந்தினத் திசையறுபத முரல்` (தி.2 ப.82 பா.9) நல்ல செந்திசைபாடல். (தி.1 ப.114 பா.11) செந்துநேர் மொழியார். (தி.2 ப.51 பா.11) மொழியவர் - சொல்லுடைய மகளிர், வெந்தல் - எரிந்தகட்டை. நிறம்பற்றிய உவமை. ஆகிய - உவம உருபு. அது சமணர்க்கும் அடையாகும். `காரமணர்` என்ற வழக்குணர்க. சினமுமாம். திறத்தன - வகையின. நீக்குவித்தீர் - நீங்கச்செய்தீர். சதிரர் - மேம்பட்டவர். சாமர்த்தியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ விருப்பவர் சொல்லிலே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் எம் செல்வன்மீது புகழ்மிக்க காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய தக்க பாடல்கள் பத்தையும் வேதமுறைப்படி ஓத வல்லவர்கள் அடையும் பயனைக் கூறின், பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ அவர்கள் இருப்பர் எனலாம்.

குறிப்புரை :

திக்கு - எட்டுத் திக்குகளிலும், மிக்க - எல்லா உலகிலும் மேம்பட்ட. தட - பெரிய. தொக்க - ஒன்றுகூடிய. வல்லார்கள் எழுவாய். இருப்பவர் - பயனிலை. சொல்லில் என்பது சொல்லுங்கால் என்றவாறு. சொல்லில், பத்தும் வல்லவர் வானவர்சூழ இருப்பவர் ஆவர் என்க.
சிற்பி