திருவான்மியூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

பொழிப்புரை :

கடலின்கண் விளங்கும் சங்குகளும் வெண்ணிறமான இப்பிகளும் கரையில் வந்துலாவுமாறு அலைகள் வீசுவதும், அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்கள் பிறழ்வதுமான திருவான்மியூரில், எல்லோராலும் புகழப்படும் பொருளாய் உலகனைத்தையும் ஆட்சிபுரிபவராய் விளங்கும் இறைவரே! மலைமாது எனப்படும் உமையம்மையை ஓருடம்பில் உடனாகக்கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

கடலில் விளங்கும் சங்குகளும் வெள்ளையிப்பிகளும் கரையில்வந்து உலாவும்படி வலியனவாக அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளையுடைய கழிகளில் மீன்கள் பிறழ்கின்றன. உகளல் - பிறழ்தல். அத்தகைய வளமுடைய திருவான்மியூரிலெழுந்தருளிய சிவபிரானை முன்னிலையாக்கி வினாவியருளினார். `சொற்பொருளாயும் எல்லா உலகங்களையும் ஆளுபவராயும் இருக்கும் சுவாமீ! மலைமங்கையுடனாகிய மாட்சியை மொழிவீர்` என்றார். மாதியலும் பாதியனான உண்மையை வினாவிற்று இத்திருப்பாடல். சொல் - உமை. பொருள் - சிவம். உரையுலாம் பொருள்:- மங்கைபங்கன்; அம்மையப்பன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

பொழிப்புரை :

அடியவர்கள் சந்தனம், உயர்ந்து வளர்ந்த கரிய அகில், குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆட்டித் தமது சிந்தையால் நினைந்து பரவும் திருவான்மியூரில் வலக்காலில் விளங்கும் அழகிய கழல், இடக்காலில் விளங்கும் சிலம்பு ஆகியன ஆரவாரிக்கும் திருவடிகளை உடையவரே! மாலையந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

திருவான்மியூரில் அடியார், சந்தனமும், அகிலும், அபிடேக தீர்த்தமும் கொண்டு, தியானம்புரிந்து வழிபடுஞ்சிறப்பும், அழகிய திருவடியில் சிலம்பும் கழலும் கட்டவல்லராதலும், அந்தி வண்ணராதலும் இதிற் குறிக்கப்பட்டன. சந்து - சந்தனம். கார் அகில் - கரிய அகிற்கட்டை, (புகைத்தற் குரியது.) கழல் - வெற்றிகுறித்து வலக்காலில் அணிவதொரு படை. எருதின் கொம்புபோன்ற வடிவுங் கூர்மையும் அன்றி அருப்புத் தொழிலும் அமைந்தது. `தாள் களங் கொளக் கழல் பறைந்தன`, கொல்லேற்றின் மருப்புப்போன்றன, சுந்தரம் - அழகு. அந்தி - மாலையந்தி. வண்ணம் - அழகு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

பொழிப்புரை :

காடு, பள்ளமான கழி ஆகியன சூழ்ந்த கடலின் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருவான்மியூரில், புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே, நீர், யானையின் தோலை உரித்துப் போர்த்தி அனலாடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

கான் - காட்டில். அயங்கியகழி - பள்ளமானகழி, அசங்குதல் என்பதன் மரூஉவாக் கொண்டுரைத்தலுமாம். கான், கழி, கடல் ஆம் மூன்றன் வேறுபாடும் ஈண்டு உணர்க. தேன் அயங்கிய - தேன்சொரிந்த. பொழில் - சோலை, தோல் + நயங்கு + அமர் + ஆடை. நயங்கு அமர் தோலாடையினீர் என்றலுமாம். ஆடையினீர் - உடையை அணிந்தவரே, நயங்க - நசங்க முன்னைய நிலைமை குலைய (பதி 162.11.;211:.4) அடிகேள் - அடிகளென்பதன் விளியுருவம். அங்கம் உரி என்பது அங்கவ்வுரி என்று விகாரமாயிற்று. அங்கம் - உடம்பு. உரி - தோல், தீயாடியதை வினாவினார். ஆடல் என்றிருந்ததோ? `தோனயங்கம ராடையினீர்` என்பதற்குச் செம்பொருள் கொள்ளல் எளிதன்று. தோல் ஆடை இரண்டற்கும் இடையில் உள்ளதைப் பிரித்தல் எவ்வாறு? நயம் கமர் என்னின் `கமர்` என்பதன் பொருள்யாது? நயங்கு அமர் என்னின் `நயங்கு` என்பது தமிழில் இல்லை. தோன் எனப்பிரித்தல் ஒவ்வாது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மஞ்சு லாவிய மாடம திற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்
துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதால், இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாய் விளங்கும் திருவான்மியூரில், எல்லோரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே!, கரியவிடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.

குறிப்புரை :

திருவான்மியூரில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்குமளவினதாயிருந்தது. பொருண்மொழி வல்லார் வாழ்ந்தவூர். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதர், நஞ்சுண்டு வானோரைக் காத்தருளிய திறத்தை வினாவினார். மஞ்சு - மேகம். செஞ்சொல் - பொருள் பொருந்திய செவ்விய சொல். துஞ்சுதல் - துயிலுதல். இருள் தூங்கும்பொழுது ஆடல். வஞ்சு - வஞ்சம், கறுப்பு. வஞ்சிருள் - காரிருள். வஞ்சநஞ்சு - கருவிடம். பயிலும் - பெருகியிருக்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

பொழிப்புரை :

உலகோரால் புகழப்பெறும் குணநலங்களை உடைய மகளிரையும், உறுதியான வேலைப்பாடுகள் பொருந்திய மதில்களையும் உடைய திருவான்மியூரில் எல்லோரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே, நீர் வானத்தில் விளங்கும் வெண்பிறையை உம் செஞ்சடை மேல் வைத்துள்ள வியப்புடைச் செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.

குறிப்புரை :

திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும் சிவபத்தியாலும் உலகம் புகழப்பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும் வேலைப்பாடும் நிறைந்தது. திண்ணெனல் - உறுதிப்பாடு. புரிசை - மதில், தொழில் - வேலைப்பாடு. ஆர்தல் - நிறைதல். துண்ணெனல் - குறிப்புமொழி. திரியுஞ்சரிதைத் தொழில் - பிக்ஷை யேற்கச் செல்லுந்தொழில்.(சிந்தாமணி .3072.3.உரை) இதில் பா.9 - இன் வினாக்காண்க . பிறை - பிறத்தலுடையது. பிறைசூடியதை வினாவினார். செஞ்சடை என்றதால் வெண்பிறை எனக்கொள்ள வைத்தார். விண்பிறையைச் செஞ்சடையில் வைத்தது வியப்பாதல் அறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம்
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

பொழிப்புரை :

மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததும், மதில்களைப் புறத்தே உடையதும், குற்றமற்ற அந்தணர்கள் வேதம் ஓதுதலை இடையறாது உடையதுமாகிய திருவான்மியூரில் சூதாடு கருவி போன்ற வடிவுடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச்செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீர்.

குறிப்புரை :

போது - பூக்கும் பருவத்தது. பொழில் - சோலை. புரிசைப்புறம் - மதிற்புறத்தில் உள்ள வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர் வேதாத்திய நயம் ஒழியாச் சிறப்புடையது திருவான்மியூர். சூது - சூதாடுதற்கருவியாகிய வல்லுக்கு ஆகுபெயர். கொங்கைக்கு உவமை. கொங்கை - உமாதேவி. ஆகு பெயர். முதுமை + எயில் = மூதெயில். மொய்ம்பு - வலிமை. திரிபுர சங்காரத்தை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலைகளின் நிழலிலும் கானலிலும் தெளிந்த அலைகளை உடைய திருவான்மியூரில் அடியவர்கள் சிவநாமங்களைச் சொல்லித் துதிக்கும், பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே நீர் சிவஞானத்தைச் சனகாதியர் நால்வர்க்கு மட்டும் உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.

குறிப்புரை :

இரைத்தல் - ஒலித்தல். திரை - அலை. ஓதம் - நீர். தொண்டு - தொண்டர். இரைத்து - சிவநாம தோத்திரஞ்செய்து. பண்டு - கல்லாலின் நிழற்கீழ் உபதேசித்த அன்று. இருக்கு - சிவஞானோபதேசம். வேதமுமாம். நால்வர் - சனகாதியர். தக்ஷிணாமூர்த்தியாயிருந்து உபதேசித்ததை வினாவினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

பொழிப்புரை :

தகுதியற்ற நெறியில் வந்த இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டுத் தன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டு அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு இணைந்த உமையம்மை யாரோடும் வீற்றிருந்தருளியவரே! பல பூதகணங்களும், பேய்க்கணங்களும் உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தகு இல் - தகுதியில்லாத நெறியினில், தசக்கிரீவன் - பத்துத்தலை இராவணன். கிரீவம் - கழுத்து. திருக்கயிலையை எடுத்தபோது அடர்த்த வரலாறு. இதில் இரண்டுமுறை விளித்ததை அறிக. பலபாரிடம் - பூதகணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.

பொழிப்புரை :

பெரிய கடல் அலைகள் எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டு வந்து தரும் முத்து பவளம் முதலிய வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்த திருவான்மியூரில் வேதங்களை ஓதி மகிழும் திருமால், பிரமன் ஆகிய இருவர்க்கும் அறிதற் கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.

குறிப்புரை :

பொருது - அலைகள்மோதி, வார் - நீளும். வாரி - வருவாய், புகழ் செல்வம் - வினைத் தொகையும் உம்மைத் தொகையும் ஆக நின்றது அறிக. சுருதியார் - வேதங்களில் கூறப்பட்ட அயனும் அரியும், சிவபரத்துவங்கேட்டவர் எனலுமாம். ஆனேறிச் சில்பலிக்குத் திரிந்த வரலாறுணர்த்தினார். இதனை, 5இல் விளியாற் குறித்தது உணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

பொழிப்புரை :

கருநிறம் மிக்குத்தோன்றும் சோலையின்கண் மாலைக்காலத்தில் வண்டுகள் குழுமித் தவஞ்செய்யும் தொழிலையுடைய அந்தணர் ஓதும் வேதாகமம் போல் இசைபாடிச் சேர்கின்ற திருவான்மியூரில், மேனிமீது மிகுதியாக வெண்பொடியணிந்த திருமேனியை உடையவரே! வஞ்சனையை உடைய சமணர் சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப்பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறீர்.

குறிப்புரை :

மை - மேகம், கரியது என்னும் பொருள்தரும் மைப்பு என்ற பெயரின் மரூஉவாகிய மப்பு என்னும் வழக்குமொழியை உணர்க. மாலை - ஈண்டுப்பொழுது, செய்தவம் ஆகிய தொழிலுடைய அந்தணர், முனிவர். இசை - வேதாகம முழக்கம். புகழெனல் பொருந்தாது. மெய்தவப் பொடிபூசல் - பால்வண்ண நாதர் என்னும் பெயர்க்கொப்பத் திருமேனியில் தவக்கோலத்தின் குறியாகிய திருநீற்றைப் பூசுதல். வழிபடுவார் உடம்பு (பிறவி) ஒழிய வெண்பொடி பூசுதல் எனினுமாம். கைதவம் - வஞ்சகம். சமண் - சமணர். கட்டுரைத்தல் - கட்டிச்சொல்லும் பொய்யுரை. புறப்புறச்சமயத்தார் பொருளில்லாத மொழியைக் குறித்த வினா இது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு கூறாக உடைய நல்ல தவத்தின் வடிவாய் திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய எம் பெருமான் அருள் செய்தற்பொருட்டு வினாவிய இதனை ஓதி, ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்தன் சொல்லால் எழுந்த இப்பதிகத்தை முறையோடு நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.

குறிப்புரை :

நல்தவன் - நல்ல தவத்தன். செய்ய - செய்யற் பொருட்டு. வினாவுரை - இறந்தகால வினைத்தொகை, உரையை ஓதி என்க. நீதி - சைவாசாரத்தில் விதித்த ஒழுங்கு. நெடுவானுலகு - திருவடி நீழல். அருள் செய்த என்ற பாடம் பின்னோர் படைத்தது. அது பொருந்தாது.
சிற்பி