திருமழபாடி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

களையும் வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே.

பொழிப்புரை :

உயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர் வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத் துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும் அண்ணல், நம் வல்வினைகளைக்களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.

குறிப்புரை :

நெஞ்சே, அஞ்சல்; வல்வினையை மழபாடி அண்ணல்களைவான் என்க. விற்பூட்டுப் பொருள்கோள். கருதார் - பகைவர் (திரிபுரத்து அசுரர்). உளையும் - வருந்தும். பூசல் - போர். வரை - மேருமலையாகிய வில். சரம் - பாணம்.(திருமாலாகிய கணை). மது - கள். தும்பி வண்டு - வண்டினங்கள். அளையும் - துழாவும். தார் - மாலை. மழபாடி - மழுவாடி என்பதன் மரூஉ என்பர். அண்ணல் - பெருமான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

காச்சி லாதபொன் னோக்குங் கனவயி ரத்திரள்
ஆச்சி லாதப ளிங்கின னஞ்சுமு னாடினான்
பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்
வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே! அவப்பேச்சால் உமக்கு விளையும் பயன்யாது? காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன்போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன்பாற்பட்டதை நுணுக்காது அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

பேதைகாள் - அறிவிலிகளே. பேச்சினால் - சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால். உமக்கு ஆவதென் - உமக்கு ஆவது யாது? மழ பாடியைப் பேணுங்கள். வாழ்த்துங்கள் என்க. காய்ச்சு - தீயிலிட்டுச் சுடல். காய்ச்சிலாத - காய்த்தல் இல்லாத, காய்ச்சு - காச்சு, முதனிலைத் தொழிற்பெயர். பிள்ளைத்தாய்ச்சி - பிள்ளைத்தாச்சி என்பது போலமருவிற்று. காய்ச்சப்பெறாத இயற்கையிலொளிரும் பொன் என்றபடி. பொன் - தேவியார். நோக்கும் - பார்க்கும். கன வயிரத்திரள் - இறைவன் திருத்தோள்களைக் குறித்த உவமையாகு பெயர். இறைவன் திருநாமம் வச்சிரத்தம்பநாதர் என்பதாகும். மகளிர்க்கு ஆடவர் தோள்நோக்கலும், ஆடவர்க்கு மகளிர் கொங்கை நோக்கலும் இயல்பு.(பார்க்க: கம்பர், மிதிலைக் காட்சிப் . பா.36). ஆய்தல் - நுணுக்கம். ஆய்த்தல் - நுணுக்கம்புரிதல். பளிங்கு, தன்பாற்பட்டதை நுணுக்கஞ்செய்யாது புறத்தே விளங்கச்செய்வது. அதனால் ஆச்சிலாத பளிங்கு என்றனர். சிவபெருமானைத் `தெளிவளர் பளிங்கின்திரள்மணிக்குன்றே` என்றார் திருமாளிகைத்தேவர். அஞ்சு - ஆனைந்து. ஆடினானது மழபாடியை என்க. வாச்ச - (இலக்கணமெல்லாம்) வாய்க்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

உரங்கெ டுப்பவ னும்பர்க ளாயவர் தங்களைப்
பரங்கெ டுப்பவ னஞ்சையுண் டுபக லோன்றனை
முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்
வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.

பொழிப்புரை :

சிறந்த மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின் வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும் போக்கியவன். கடலிடை எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங் களையும் தீயெழச்செய்து அழித்தவன்.

குறிப்புரை :

உரம் - வலிமை. உம்பர்கள் - தக்கன் வேள்வியிற் கலந்த தேவர்கள். பரம் - தேவத்தன்மை; திவ்வியம். பகலோன் முரண் கெடுப்பவன் - சூரியன் பல்லைத் தகர்த்தவன். வரம் - மூவர்க்குத்தந்த வரம். வள்ளல் - எவ்வுயிர்க்கும் எப்பொருளும் எப்பொழுதும் அருள்வோன். மழபாடிப்பெருமானது திருநாமம் வள்ளல் என்பதும் (தி.2 ப.9 பா.4,8,11) வயிரத்திரள் (தி.2 ப.9 பா.2) என்பதும் ஆதலறிக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்
வெள்ள மாதரித் தான்விடை யேறிய வேதியன்
வள்ளன் மாமழ பாடியுண் மேய மருந்தினை
உள்ள மாதரி மின்வினை யாயின வோயவே.

பொழிப்புரை :

நடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும் ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை, வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.

குறிப்புரை :

பள்ளம் - சடைமுடி நடுவிற்பொருந்திய குழிவு. பள்ள மார்புனல் வெள்ளம் (கங்கைப் பெருக்கம்) எனலுமாம். மேய - மேவி, விரும்பிய. மருந்து - பிறவிப் பிணிக்கொரு பெருமருந்து. உள்ளம் - மனம். ஆதரிமின் - விரும்புங்கள். வாயாலுண்ணும் மருந்தன்று. `உன்னுமுள தைய மிலதுணர்வாய் ஓவாது மன்னுபவம் தீர்க்கும் மருந்து `( திருவருட்பயன் .10) என்றபடி நினைக்கும் மருந்து.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்
பானெ யஞ்சுட னாட்டமுன் னாடிய பால்வணன்
வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்
கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.

பொழிப்புரை :

மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய் முதலிய ஆனைந்து ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள் கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம்மோடு கூடுவான்.

குறிப்புரை :

மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன்சொரியும் பூக்களைக்கொண்டு பாலும் நெய்யும் தயிருமாகிய ஆனைந்தும் அபிடேகிக்க ஆடிய பால்வண்ணன். ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. நடனமாடிய. வானநாடர்கள் - துறக்கத்தில் வாழ்பவர்கள். அம்மெய்த்தேவர் வேறு, இவர் வேறு. கோன் - தேவாதிதேவேசன். குறிகூடல் - `அறிவ தொரு குறி குருவினருளினாலறிந்து மன்னு சிவன்றனை யடைந்து` நிற்றலும், `குறியொடு தாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுத` லும் பின்பு வாய்ப்பன, `குறியதனால் இதயத்தே அரனைக்கூடு` தலே ஈண்டுக் குறித்தது. `அருள் ஞானக்குறியில் நின்று கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரி` என்று விதித்தமையுணர்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தெரிந்த வன்புர மூன்றுடன் மாட்டிய சேவகன்
பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்
வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்
புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.

பொழிப்புரை :

எல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும் அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில் பரவிவிளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.

குறிப்புரை :

தெரிந்தவன் - சருவஞ்ஞன், முற்றுணர்வுடையவன். தெரிந்தவன்மை, புரம் என்றல் அமையாது. மாட்டிய - மாள்வித்த, தீயைமாட்டிய எனலுமாம். சேவகன் - வீரன். பரிந்து - அன்பு கொண்டு, பாவினான் - பரவியவன். வரிந்த - கட்டிய. சிலை - மேருவில். புரிந்து - விரும்பி. வினையாயின - பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும் மூன்றும், அவற்றின் உட்பட்ட பல்வகையும் ஆகிய கர்மங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை
எந்தை யானிமை யாதமுக் கண்ணின னெம்பிரான்
மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்
சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.

பொழிப்புரை :

அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட பொழில் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச் சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்து கெடும்.

குறிப்புரை :

சந்தம் - அழகு. வார் - நீளம், ஒழுகுதல், கூறு - இடப் பால். எந்தையான் - எம் அப்பன். முக்கண்ணினன் - சோம சூரியாக் கினி நேத்திரங்களையுடையவன். மழபாடி மருந்து - திருமழபாடியிலுள்ள பவரோக வைத்தியநாதன். இம்மருந்து உடற்கின்றி உயிர்க்காதலின், உண்ணலின்றி உன்ன நினைத்தலுக்குரியதால் எழுவார் என்றார். சிந்தியா - சிந்தித்து, நினைத்து, செய்யா என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம். வடசொற் பகுதியடியாகப் பிறந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இரக்க மொன்று மிலானிறை யான்றிரு மாமலை
உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற
விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்
வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.

பொழிப்புரை :

நெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன், திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால் விரலின் நுனியை ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில் வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்.

குறிப்புரை :

இரக்கம் - பக்தி. இறையான் - சிவபிரான். மலை - கயிலாயம். உரம் - வலிமை. இலான், எடுத்தான், மேயவன் மூன்றும் வினையாலணையும் பெயர்கள். ஒள் முடி - ஒளியுடைய முடிகள். இற - இற்றொழிய. விரல் - ஈண்டு, காற்பெருவிரல் மட்டும். நிறுவி - ஊன்றி, ஊன்றியதும் கருணைப் பொருட்டாதலை வரத்தையே கொடுக்கும் என்றதாலறிக. (தி .2 ப .9 பா .3,4,8,11) வள்ளல் என்றதும் `வரங்கொடுப்பவன்` `வரத்தையே கொடுப்பான்` என்றதும் அறியின், சிவதலயாத்திரைக் கருத்தும் பயனும் விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார்
கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார்
சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விட
மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.

பொழிப்புரை :

நஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும் தம்மைச்சாரும் புகலிடமாய் விளங்குபவர்.

குறிப்புரை :

தான் உண்டது நஞ்சு, அமரர் (தேவர்)க்கு அருளியது அமுதம் ஆயினும் நஞ்சின் பயனாம் இறப்புத் தனக்கில்லை. அமுதத்தின் பயனாம்வாழ்வு அத்தேவர்க்கிருக்கின்றது. இதனால்உயிர்களின் வாழ்முதல் இறைவன் என்னும் சிவபரத்துவம் இனிது விளங்கும். தன்னைப் புகலடைந்தவர்க்கு மரணபயம் போக்கும் ஆற்றலுடையவன் என்னும் வாய்மைக்குக் `கால காலன்` `நீலகண்டன்` என்ற திருநாமமே சான்றாம் என்பார், `காலனாருயிர் வீட்டிய மாமணிகண்டனார்` என்றார். அடியவர்க்குளதாகும் நலத்தை அளவிடலரிதென்பதை, `சால நல்லடியார்` என்று விளக்கினார். தவத்தார்களும் என்றதால் அடியார்களும் என்க. சார்விடம் - புகலிடம் (சரணாகதி ஸ்தானம்). மைந்தனே - சிவபெருமானே. அடியார் - திருவடியடைந்தவர். தவத்தார் - அடி அடையத்தவஞ்செய்பவர். தவம் - சரியை, கிரியை, யோகம், அடி - ஞானம், மால் - திருமால். அயன் - பிரமன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்
நலியு நாள்கெடுத் தாண்டவென் னாதனார் வாழ்பதி
பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்
மலியு மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.

பொழிப்புரை :

துன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச் சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என் நாதனார் வாழும்பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய முழவொலியும் பிற மங்கல ஓசைகளும் நிறைந்து சிறந்த மழபாடி. அதனை வாழ்த்திவணங்குவோம்.

குறிப்புரை :

கலி - துன்பம், இங்குத் துன்பஞ்செய்தலைக் குறித்தது. அமண் - சமணர். நலியும் நாள் - தமிழ் நாட்டு மக்களை வருத்திய காலத்தில். கெடுத்து - அவ்வருத்தத்தைப் போக்கி, ஆண்ட - சைவத்தை நிலைநாட்டிப் பரவச்செய்து சிவநெறியிற் புகுத்திய, `என் நாதனார்` என்றது இங்கு மிக்க பொருத்தமாகி இவர் திருவருளை முன்னிட்டுப் பரசமய நிராகரணம் புரிந்த உண்மையை விளக்குகின்றது. திருமழபாடியில் பலி, பாட்டு, பண், முழவு, பலவோசை எல்லாம் மலிந்திருந்தன என்பதால் அக்காலத்துச் சிவாலயபரிபாலன மகிமையை அறியலாம், வாழ்த்தி வணங்கும் என்றது முன்னிலைப் பன்மை ஏவல்வினை. (பார்க்க: தி .2 ப .9 பா . 2,4,6)

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்
கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்
* * * * *

பொழிப்புரை :

(இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில) மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் ...

குறிப்புரை :

மழபாடி, மாளிகைச் சிறப்புடையதென்று இரண்டாவது திருப்பாடலிலும் கூறினார். கலி - வலிமை, எழுச்சி. கவுணியன் - கௌண்டின்ய கோத்திரத்தான்.
சிற்பி