திருக்கோழம்பம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

நீற்றானை நீள்சடை மேனிறை வுள்ளதோர்
ஆற்றானை யழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்ப மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிட ரேகவே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடையூர்தியனாய் உள்ளான். `நும் துன்பங்கள் நீங்க வேண்டுமாயின் அவனை ஏத்துங்கள்`.

குறிப்புரை :

நீற்றானை - திருநீற்றை அணிந்தவனை. நிறைவு - பூரணம். ஆற்றானை - கங்கையாற்றை அணிந்தவனை. மென் முலை யாள் - உமாதேவியார். ஓர் கூற்றானை ஒரு (வாம) பாகத்தையுடையவனை. பொழில் - சோலை. ஏற்றான் - எருது வாகனத்தன். இடர் ஏக ஏத்துமின் - துன்பம் தொலையத் தொழுங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.

பொழிப்புரை :

கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்பத்தில் விளங்கும் செம்மையன். தேன், நெய், பால் முதலியவற்றை ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள் மேவா.

குறிப்புரை :

மை - கருமை, மேகமும் ஆம். ஆன - ஆகிய, ஒத்த. கண்டனை - திருக்கழுத்துடையவனை. மறி - கன்று. கடி - மணம் பொழில் - சோலை. செய்யான் - செந்நிறமுடையவன், செம்மையுடையவன், (தி.195. ப .59 பா -5.)`திருநின்ற செம்மை` `செம்மையுள் நின்றவன்`(சுந்தரர்)`செம்பொருள்` தேன், நெய், பால் என்பன அபிடேகப் பொருள்களுள் அடங்கியவை, திகழ்ந்து - விளங்கி. ஆடிய - அபிடேகிக்கப்பெற்ற. மெய் - திருமேனி, சத்தியமுமாம். மேவுவார் - இடைவிடாது தியானிப்பவர். மேவா - அடையமாட்டா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

ஏதனை யேதமி லாவிமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.

பொழிப்புரை :

நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம் அற்ற இமையாநாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன். விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின்.

குறிப்புரை :

ஏதன் - குற்றமுடையவன். `குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்,(தி.3 ப.52 பா.3) என்று இவ்வாசிரியர் திருவாக்கேயிருத்தல் அறிக. ஏதம் - குற்றம். காரணனுமாம். இமையோர் என்பதற்குத் தேவர் என்று பொருள்கூறுவர். இது சைவநூல்கட்கு ஒவ்வாது. இமைத்தலில்லாதவர் - இமையோர் என்னும் சாமான்யம் பற்றி இவ்வாறு கூறுவர். `இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன்` என்பதில் தேவர்க்கு அன்பன் எனல்பொருந்துமோ? கண்ணிமைத்துக் காணாதயோகியர், விழித்தகண் குருடாத்திரி வீரர் என்பதே உண்மைப் பொருள். வேதன் - மறைகளை அருளியவன். வெண்குழை தோடு - சங்கத்தோடுங்குழையும். நைய - வருந்த (நீங்க).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை யுள்குமின் உள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில் விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன். வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில்சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர அவனை நினைவீர்களாக.

குறிப்புரை :

தண்மலரான்சிரம் - பிரமகபாலம், `வேத வேள்வி யை`(நிந்தனை செய்துழல் ஆதமில்லி) (தி.3 ப. 108.பா.1) என்றதறிக. நன்கு - நன்மை. உடையான் - உடையவன், சுவாமியும் ஆம். உள்கு மின் - தியானம் புரியுங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே.

பொழிப்புரை :

மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சிமிக்கவனாய் விளங்கும் புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம் பத்தைத்தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள்.

குறிப்புரை :

காரான் - மேகமாயிருப்பவன். `கனத்தகத்தான் கயிலாயத்துச்சியுள்ளான்` போது - பூ. தார் -(மாலை, கண்ணி) தார். தையல் - பாலாம்பிகை. சீரான் - கனவான். ஒல்க - சுருங்க. கோழம்பம் மேவிய ஊர் என்றதால் திருக்கோயிலின் திருநாமம் கோழம்பம் என்க. கோழம்பங்கோயிலாக் கொண்டான்` என மேல்வருதலும் காண்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பண்டாலின் னீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புர மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமி னுள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம் உரைத் தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும் திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

குறிப்புரை :

ஆல் - கல்லாலமரம். பரஞ்சோதி - மெய்யொளி. விண்டார்கள் - பகைவராகிய திரிபுரத்தசுரர்கள். புரம் மூன்று - முப்புரம். கண்டான் - கண்டவன்; வினையாலணையும் பெயர். கூறுமின் - புகழுங்கள். கடவுள் புகழை வாயாற் கூறுதல் உள்ளக் குளிர்ச்சிக்குக் காரணம் என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

சொல்லானைச் சுடுகணை யாற்புர மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்ப மேவிய
நல்லானை யேத்துமி னும்மிடர் நையவே.

பொழிப்புரை :

எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன். வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப்போர்த்தவன். திருக்கோழம் பத்தில் எழுந்தருளிய மங்கலவடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக.

குறிப்புரை :

சொல்லான் - சொல்வடிவாகிய அம்பிகையை உடைய வன். சொல்லாயிருப்பவன் எனலும் பொருந்தும். கணை - திருமாலாகிய அம்பு, வில் - மேருவில். வேத வேள்வி, (தி .2 ப .13. பா .4) கொல் லானை - கொல்லும் யானை வினைத்தொகை. (உரி - தோல்) உரியான் - தோலைப் போர்த்துக் கொண்டவன். நல்லான் - சிவன், மங்கலவடிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.

பொழிப்புரை :

விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன். கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற் பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா.

குறிப்புரை :

வில்தானை - விற்படை. வல் அரக்கர் - வலிய இராக்கதர். அசுரர் காரணம்பற்றி வருத்துபவர். இராக்கதர். ஒரு காரணமும் பற்றாது வருத்துபவன். அரக்கர் வேந்தன் - இராவணன். குற்றான் - சிறுமைப் படுத்தியவன், நசுக்கியவன் விரலாற் குற்றான் என்று கொள்க. காலனைச்செற்றான் - காலசங்காரக் கடவுள். பற்றான் - பற்றுதலுடையவன். பற்றுவார் - அடியர். பற்றா - தொடரா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டங்க வேடம் பயின்றானைக்
கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

பொழிப்புரை :

நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும் அறிய முடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம் கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக்கொடியினன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.

குறிப்புரை :

நெடியான் - விக்கிரமன், திருமால். அயன் - அஜன், பிரமன். படியான் - உருவத்தையுடையவன் (படியனார். தி .2 ப .79 பா . 10) பண்டங்கவேடம் - பாண்டரங்கம் என்னும் கூத்துக்காகக் கொண்ட திருவேடம். வெள்ளேற்றின் கொடி - இடபத்துவசம். எருதின்கொடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்ப மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

பொழிப்புரை :

புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக் கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும் பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம் மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள்.

குறிப்புரை :

தோகையம்பீலி - மயிற்பீலியாலாகியவார்கோல். பொய்மொழிப்பித்தர் - மெய்யுரையாத மயக்கவுணர்வினராய சமணர். பீடு - பெருமை. அத்தன் - பிதா. அல்லல் - பிறவிப்பிணி முதலிய துன்பங்கள். அறுக்க - அறச்செய்ய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை
விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய் என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும் ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

தராய் - சீகாழியின் பெயர். நம்பான் - சிவபிரான். விண் பொழில் - வானை அளாவிய சோலை. பத்தும் இவை - இப்பதிகத்தை. பண்கொளப் பாடவல்லார் - பண்ணிசையுடன் பாடும் வன்மையுடையவர்.
சிற்பி