திருமணஞ்சேரி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

அயிலாரு மம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

அயில் - கூர்மை. அம்பு - திருமாலாகிய கணை. `குயில் வாய்மொழியம்மை` என்பது அம்பிகை திருநாமம். பயில்வான் - கோயில்கொண்டு பயில்பவன். பற்றி நிற்றல் - பற்று விடுமாறு பற்றி வழிபடல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய
நெதியானை நீள்சடை மேனிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

பொழிப்புரை :

நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.

குறிப்புரை :

விதியானை - வேதாகமவிதியானவனை, படைப்பவனாகியவனை; `கரியானை நான்முகனை`(தி .6 ப .1 பா .1) `நாரணன் காண்` `நான்முகன்காண்` (தி .6 ப .8 பா .3) நெதி - செல்வம். `நிதி`யின் மரூஉ மொழி முதல் இகாரம் எகாரமாயொலிக்கும், `விலை - வெலை` போல. வான் மதி - வெண்பிறை, `வானூர்மதி`யுமாம். பாறும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய
இப்பாலா யெனையு மாள வுரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

பொழிப்புரை :

வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

எய்ப்பு - இளைப்பு, மெய்ப்பான் - பொய்யாதல் இல்லாதவன்; உண்மைப்பொருள். வீடும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்
உடையானை யூழிதோ றூழி யுளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

விடையான் - எருதேறி. படையான் - படைகளையுடையவன். ஊழிதோறும் உள்ளபடை ஞானவாட்படை, `ஞான வாளேந்தும் ஐயர்` (திருவாசகம். 613). மணஞ்சேரியில், ஆசிரியர் சென்றருளிய காலத்தில் பண்ணிசை பாடுதல் சிறந்திருந்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

எறியார்பூங் கொன்றையி னோடு மிளமத்தம்
வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை
மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான்கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.

குறிப்புரை :

எறிஆர் - ஒளிபொருந்திய (எறித்தல் - ஒளிவிடல்) வெறி - மணம். ஆர - நிறைய, மிலைத்தான் - சூடினான். மறி - மான் கன்று. கொன்றையினோடும் மத்தம், சடை ஆரமிலைத்தானும் மறிக்கையுடையானும் செறிவானும் ஆகிய சிவனைச் செப்பவல்லார் என முடிக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்து மின்பமே.

பொழிப்புரை :

முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

`எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன் என்னத்தக்க முதல் பரப்பிரமம் சதாசிவன் ஓம் என வேதம் சாற்றும்`. (காஞ்சிப். குமர .16), `சொல்லும் பொருளெலாம் ஆனாய் நீயே` (தி .6 ப .78 பா .5) `இமையோர் ஏத்தும் சொல்தான்காண்` (தி .6 ப .8 பா .4) என்பன வேதவுண்மையாதலின் மொழியான் என்றார், `சொல்லானை` (தி .2. ப .16 பா .9) எனப்பின் வருதலும் அறிக. நான்மறையும் அம்மறைப் பொருளுணர்ச்சிக்குக் கருவியாகிய ஆறு அங்கங்களும் மொழிந்தவன் சிவனே ஆதலால், அவற்றைப் பழியாதவாறு காத்தல் அவன் கடனாகும். `தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம், வகுத்தவன்` `விரித்தவன் அருமறை`. (தி .3 ப .23 பா .,6,7) `மருவினிய மறைப்பொருளை` `விரித்தானை நான்மறையோடங்கம் ஆறும்` (தி .6 ப .80 பா .,6,10) `வேதத்தை வேதவித்தை` (தி .6 ப .79 பா .3) அதுபற்றிப் பண்ணிசைகளையும் அளித்தருளினான். அஸ்ய மஹதோ பூதஸ்ய நிவ்வஸித மேத த்ருக் வேதோ யஜீர் வேதஸ் ஸாமவேத: இருக்குவேதம், யஜுர்வேதம், சாமவேதம் (முதலியவை) இம் மெய்ப்பொருளின் உயிர்ப்பு) என்று பிருகதாரண்யோபநிடதம் (4,4,10,6,5,11) கூறுகின்றது. பகர்தல் - சொல்லுதல், ஆன - ஆனவை, வினையாலணையும் பெயர். வழியான் - வேதாகம வழி, திருவருள்நெறி, ஒளிசேர்நெறி. இழியாமை - இகழாமல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்
கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை
மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

பொழிப்புரை :

யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.

குறிப்புரை :

எண்ணானை - யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவனை, மனாதீதனை. எண் - அளவு, பெண்ணான் - மங்கைபங்கன், கங்கைச்சடையன். பெரியோர்க்கு உரிய இலக்கணத்துள், சிவகீர்த்தனம் பாடுதலும் ஒன்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எடுத்தானை யெழின்முடி யெட்டு மிரண்டுந்தோள்
கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல் லார்பெரி யோர்களே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகியபத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.

குறிப்புரை :

இராவணன் முடிபத்தும் தோள் (இருபதும்) கெடுத்தசிவனை, கேடிலாச்செம்மை - அழிவில்லாத `திருநின்ற செம்மை` எனப்படும் பேரின்பம். வண்டுகள் மடுத்து (உண்டு) ஆர - நிறைய. பிடித்துஆர - சிக்கெனப்பற்றிப் பூரணமாக, பேண - பத்திசெய்ய, பெரியோர்க்கு இதுவும் இலக்கணம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

சொல்லானைத் தோற்றங்கண் டானு நெடுமாலும்
கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி
எல்லாமா மெம்பெரு மான்கழ லேத்துமே.

பொழிப்புரை :

வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப்படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.

குறிப்புரை :

சொல்லானை, (பார்க்க: தி .2 ப .2 பா .6) தோற்றம் - படைப்பு, சிருட்டி. கண்டான் - பிரமன். கல்லானை - கற்றுணரப்படாத பெருமையுடைய சிவனை, கற்றன - கற்றறிந்த சிவகீர்த்தனங்களை, ஓங்க வல்லார் - திருவருளுயர்ச்சியை அடையவல்லவர். `ஓங் குணர்வு` (திருவருட்பயன்,91) `எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி` `ஒருவனே எல்லாம் ஆகி அல்லானாயுடனுமாவன்`(சித்தியார், 47) ஏத்தும் - ஏத்துங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

பொழிப்புரை :

சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.

குறிப்புரை :

சற்று - சிறிது. சொல்தேயும்வண்ணம் - பிதற்றுரைகள் பொருளுறாதனவாய் ஒழியும்வகை, `செம்மை உடையானை` (பா .8. பார்), வாவி - குளம். பற்று ஆக - உண்மையன்பிற்குரிய தலமாக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம் பந்தன் றமிழ்மாலை
மண்ணாரு மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாடவல்லார்க் கில்லை பாவமே.

பொழிப்புரை :

கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

காழியர்கோன் - தோணியப்பர். கருத்து - திருவுள்ளம். ஆர்வித்த - நிறைவித்த, ஒவ்வொரு திருப்பதிகமும் ஒவ்வொரு `தமிழ்மாலை` என்னும் உண்மையை இதில் அறியலாம். பண்ணாரப்பாடுதல் வல்லார்க்குப் பாவம் இல்லை. `கண் ... ... சீர்` என்றது ஆசிரியர் சிறப்பை உணர்த்துகின்றது. கண் - வேணுவனம், கண் - மூங்கில், `கண்ணார் கமழ்காழியர்` (தி .2. ப .23 பா .11.) என்றது காண்க.
சிற்பி