திருப்புகலி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.

பொழிப்புரை :

`தாவிச்செல்லும் அலைகளை உடைய ஆழ்ந்த கடலால் சூழப்பட்ட உலகின்கண் வாழ்பவர்களே, தன்னோடு மாறுபட்ட அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சிவபிரான் உறையும் புகலி எனப்பெயர் பெற்ற சீகாழிப்பதியைப் போற்றி வழிபடுங்கள்`. வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போகும்.

குறிப்புரை :

உகலி - தாவி.(உகளிஎன்பதன்போலி) உகுதலையுடைய எனலுமாம். ஆழ் - ஆழ்ந்த. பார் - பூமி. உளீர் - உள்ளவர்களே!. வினை அகலியா - வினைகள் பெருகாமல் ஒழியும். அல்லல் போய் அறும். இகலியார் - பகைவர். புகலியாம் நகர் - சீகாழித் திருக்கோயிலை. போற்றி - வழிபட்டு. வாழ்மின் - இன்பவாழ்க்கை எய்துங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

பண்ணி யாள்வதோ ரேற்றர் பான்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.

பொழிப்புரை :

நன்மைகள் பலவும் உங்களை அடைய வேண்டுமாயின், அலங்கரித்து ஊர்ந்து ஆளும் விடையை உடையவனும், பால் போன்ற வெண்மையான பிறைமதியைக் கண்ணியாகப் புனைந்தவனும், மணம் கமழும் கொன்றை மாலைசேர்ந்த முடியினனும் ஆகிய புண்ணிய மூர்த்தியாகிய சிவபிரான் உறையும் புகலியை அடைந்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

பண்ணி - அலங்காரம் செய்து. ஏறி ஊர்வது இங்கு ஆள்வதாயிற்று. ஏற்றர் - எருதுடையவர். மதிக்கண்ணி - பிறையாகிய கண்ணி. தலையிற் சூடுவதும் காம்புகளை ஒருபால் வைத்துக் கட்டுவதுமாகிய பூங்கண்ணியாகப் பிறையைக் கொண்டவன் சிவன். நலம் ஆன - நலங்களானவை. வேண்டில் - விரும்பினால்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.

பொழிப்புரை :

இன்பம் பெரிதாக விளையவேண்டின், ஒளிவீசும் மின்னல் போன்ற அணிபூண்ட காதினனும், பற்றுக்கள், வலிய வினைகள் ஆகியவற்றைப் போக்கிய மேதகு பண்பினனும், திருநீறு பூசியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய புகலிப்பதியை அடைந்து அவனைப்புகழ்ந்து பேசுங்கள்.

குறிப்புரை :

வீசும் மின் புரை - வீசுகின்ற மின்னலை ஒத்த, பெரிது ஆகப் பேசுமின் என்க. பெரிது இன்பம் - பேரின்பம் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிக ளையடைந் தன்பு செய்யுமே.

பொழிப்புரை :

மணம் கமழும் வில்வம், ஊமத்தைமலர் ஆகியவற்றை முடிமிசைச் சூடியவனும், பெரிதான இவ்வுலகில் உள்ளோர் புகழ்ந்து போற்றும் தன்மையாளனும், திருநீற்றுப்பொடி பூசிய மேனியனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய அழகிய புகலிப்பதியை அடைந்து அங்கு மேவிய பெருமானிடம் அன்பு செய்யுங்கள்.

குறிப்புரை :

கடி - மணம், கூவிளம் - வில்வம், மத்தம் - ஊமத்தம் பூ. படி - உருவம். (நாற்றம் உடைமை ஆகிய) பண்புமாம். பாரிடம் - பூமி, படிகொள்பாரிடம் - பெரிய உருவங்கொண்ட பூதகணங்கள் என்பதும் பொருந்தும், பொடி - திருநீற்றுப் பொடி. அன்பு - பக்தி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

பாதத் தாரொலி பல்சி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.

பொழிப்புரை :

பாதங்களில் பொருந்தி ஒலிக்கும் பல சிலம்புகளை அணிந்தவனும், பாற்கடலிற் பொருந்தி எழுந்த விடத்தை உண்டவனும், பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது புகலிப்பதியை அடைந்து தொழ, துன்பங்கள் வருதற்கு இடம் இல்லையாகும்.

குறிப்புரை :

பாதத்து - திருவடிகளில், ஆர் - பொருந்திய. ஒலி - ஒலிக்கின்ற. ஓதத்து - பாற்கடலில். படைப்பூதத்தான் - பூதப்படை உடையவன். ஏதத்தார்க்கு - துன்பத்திற்கு. ஏதம் - துன்பம், இங்கு ஆர் விகுதி இழிவு பற்றியது. `பசியார்` என்பது போன்றதொரு வழக்கு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறை யினானுறை யும்பு கலியை
நிறையி னால்தொழ நேச மாகுமே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும், ஒலி நிறைந்த வீணையை உடையவனும், பூரணனாய் நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனும், எமது பொறுமையை மலராகக் கொள்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் புகலியையே குறிக்கொண்டு தொழ, அதுவே அன்பு வழிபாடாக அமையும்.

குறிப்புரை :

மறையினான் - வேதகர்த்தா. வீணையன் - `மிக நல்ல வீணைதடவி`. நிறை - நிறைவு. பொறை - பொறுமை. எட்டுப் பூக்களுள் ஒன்று. ஞானபூஜைக்குரியது. நிறை - சிவனையன்றி வேறு ஒன்றும் வழிபாட்டிற்குக் குறிக்கோளாக் கொள்ளாத கற்பு. நேசம் - அன்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டையுயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.

பொழிப்புரை :

வஞ்சகம் பொருந்திய மனத்தாரைக் காண விரும்பாதவனும், இரவில் பலியேற்கும் இயல்பினனும், எம் இறைவனும், போர் வல்ல விடைபொறித்த கொடியினனும் ஆகிய சிவபிரானது புகலியைப் பரவ நாம் செய்த பாவங்கள் அழியும்.

குறிப்புரை :

கரவு - வஞ்சகம். பொருவிடை - இடபக்கொடி. உயர்த்தவன் - எடுத்துப் பிடித்தவன். பரவிட - வாழ்த்த. பாறும் - அழியும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.

பொழிப்புரை :

தாமரை அரும்பை ஒத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், தன்மீது விருப்பினன் ஆயினும் செருக்குற்ற காரணத்தால் இராவணனது வலிமையை அடர்த்த கயிலைமலையினனும், பொழில் சூழ்ந்த புகலியூரைத்தன் இருப்பிடமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானுடைய திருவடிகளை ஏத்தி வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

அருப்பு - அரும்பு. ஆர் - ஒத்த. விருப்பினான் - பக்தன். உரம் - வலிமை. செகும் - அழிக்கும். பொருப்பு - மலை. இருப்பு - வாசம். விருப்பு, பொருப்பு இருப்பு மூன்றும் இன்சாரியையும் ஆன் விகுதியும் பெற்றுப், பெயரடியாகப் பிறந்த பெயராயின. விருப்பும் இருப்பும் தொழிற்பெயர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

மாலும் நான்முகன் தானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுட்
பால தாடிய பண்பன் நல்லனே.

பொழிப்புரை :

திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன்.

குறிப்புரை :

கழல்சீலம் - திருவடிப்பான்மை. `சீலமோ உலகம் போலத் தெரிப்பரிது` (சித்தியார்.50). முடியும் என்று உம்மை கூட்டிக் கொள்க. எரிபோலும் மேனியன் - தீ வண்ணன். பாலது ஆடிய - பாலால் அபிடேகம் செய்யப்பெற்ற. நல்லன் - சிவன். அல்லனே என வினாவாக் கொள்ளலும் அமையும். புகலி உட்பாலது ஆடிய என்பதற்குத் திருப்புகலியின் உட்பக்கத்திலுள்ள திருக்கோயிலில் திருக்கூத்தியற்றிய எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாகவை யாஉ ணர்வினுள்
நின்ற வன்நிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.

பொழிப்புரை :

நின்று உண்பவராகிய இழிந்த சமணர்கள், தேரர்களாகிய பௌத்தர்கள் உரைகளை ஒருபொருளாகக் கொள்ளாத அன்பர்களின் உணர்வினுள் நிற்கும் சிவபிரான் எழுந்தருளிய புகலியைச் சென்று கைதொழச் செல்வங்கள் உளவாம்.

குறிப்புரை :

துய்ப்பவர் - உண்பவர். `நின்றுண்போர்` எனப்பிற இடங்களில் வருதலும் காண்க. (பதிகம் . 38.95). `நின்றுண் சமணர் இருந்துண்தேரர்` (பதிகம் . 71). ஒன்று - ஒருபொருள், வையா - வைத்து மதிக்காத. செல்வம் - இம்மை, மறுமை. வீட்டுக்குரிய செல்வங்கள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

புல்லம் மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லு மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை யிருநி லத்துளே.

பொழிப்புரை :

விடைமீது ஏறி வருபவனாகிய சிவபிரானது அழகிய புகலியை நன்மை செய்யும் ஞானசம்பந்தன் தன் நாவினால் போற்றிச் சொல்லிய தமிழ் மாலையாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர்க்கு அகன்ற இந்நிலவுலகத்தில் வினைகள் இல்லை.

குறிப்புரை :

புல்லம் - எருது. `புல்வாய்` போன்றதொரு காரணப் பெயர். ஏறி - ஏறுகின்றவன். இகர விகுதியுடைய பெயர்ச்சொல். மாலை ஈர் ஐந்து - இப்பத்துப்பாக்களாலாகிய மாலையை. இருநிலம் - `மாநிலம் ` `பெரும்பூமி`.
சிற்பி