திருநெல்வாயில்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய
மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்
நடையி னால்விரற் கோவ ணந்நயந்
துடையி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்தநீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடி மேல் திகழும் மாண்பினர்.

குறிப்புரை :

புடையின் - வயற்பக்கத்தில். ஆர் - பொருந்திய புள்ளி - நண்டு. கால் - வாய்க்கால். மடையின் - நீர் மடையில். ஊர்ப்பெயர்க் கேற்பவளம் கூறப்பட்டிருக்கின்றது. நடை - ஒழுக்கம். நால்விரற் கோவணம் ஐவிரற்கோவணம் `உடைதனில் நால்விரற்கோவண வாடை` (தி .1 ப .39 பா .2) `ஐவிரற் கோவணவாடை பாறருமேனியர்` (தி .1ப .44 பா .6) இரண்டும் இவர் திருமுறையுட் கூறப்பட்டன. நயந்து - விரும்பி. உடையினார் - உடை உடுத்தவர். உச்சியார் என்பது இத்தலத்து இறைவர் திருப்பெயர், நெல் வாயிலார், உடையினார் என்பன இறைவரைக் குறிப்பன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வாங்கி னார்மதிண் மேற்க ணைவெள்ளந்
தாங்கி னார்தலை யாய தன்மையர்
நீங்கு நீரநெல் வாயி லார்தொழ
ஓங்கி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை வளைத்தவர். பெருகிவந்த கங்கைநீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினைஉடைய நெல் வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம்முடிமேல் விளங்கும் மாண்பினர்.

குறிப்புரை :

மதில்மேல் - திரிபுரத்து மதிலின்மீது. கணை - பாணம். வாங்கினார் - (வில்லை) வளைத் (துஎய்) தார். வெள்ளம் - கங்கைப் பெருக்கு. தலையாயதன்மையர் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாந்தன்மை முதலிய ஆறும் உடையவர் . ... ஷாட்குண்யர். எண்குணமுமாம். நீங்கும் நீர - ஓடும் `நீர்ப் பெருக்காகிய வளமுடைய. நீள்கு என்பதன் மரூஉவே நீங்கு என்பது. `நீங்கிற் றெறூஉம் குறுகுங்கால் தண் என்னுந் தீ`(குறள் 1104) என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நுணுகி நோக்கின் இது விளங்கும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நிச்ச லேத்துநெல் வாயி லார்தொழ
இச்சை யாலுறை வாரெம் ஈசனார்
கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்
இச்சை யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.

குறிப்புரை :

நிச்சல் - நித்தல், நாடோறும். கச்சை - அரையிற் கட்டும் கயிறு. வடம். அரவக்கச்சு. கவின் - அழகு. இச்சையார் - உயிரின் இச்சைக்குக் காரணமான இச்சா சத்தியை உடையவர். `இச்சை உயிர்க்கு அருள்நேசம் ஆகும்` (சிவஞானசித்தியார், 83).

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மறையி னார்மழு வாளி னார்மல்கு
பிறையி னார்பிறை யோடி லங்கிய
நிறையி னாரநெல் வாயிலார் தொழும்
இறைவ னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடைமுடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.

குறிப்புரை :

மறையினார் - வேதகர்த்தா. மழுவாளினார் - மழுப்படையுடையவர். `பிறையோடு இலங்கிய நிறையின் ஆர் அம் நெல்` என்பது வானளாவ வளர்ந்து நிறைய விளங்கிய அழகிய நெற்பயிர் என்று குறித்தது. `விண்தயங்கு நெல்` என (பா . 10) வருதல் காண்க. நிறையினார் - கற்புடைய கங்காதேவியை உடையவர் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

விருத்த னாகிவெண் ணீறு பூசிய
கருத்த னார்கன லாட்டு கந்தவர்
நிருத்த னாரநெல் வாயின் மேவிய
ஒருத்த னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.

குறிப்புரை :

விருத்தன் - முதியவன். கருத்தன் - தலைவன். கனலாட்டு - தீயில் ஆடல். உகந்தவர் - விரும்பியவர். நிருத்தனார் - கூத்தர். ஒருத்தனார் - தனிமுதல்வர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு
பேரி னார்பிறை யோடி லங்கிய
நீரி னாரநெல் வாயி லார்தொழும்
ஏரி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மலரும் கொன்றைமலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறைசூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.

குறிப்புரை :

காரின் ஆர் கொன்றை - கார்காலத்தில் மலரும் கொன்றைமலர். `கார்நறுங் கொன்றை`(புறம் - கடவுள் வாழ்த்து) மல்குபேரினார் - நிறைந்த பெயர் (புகழ்) உடையார். நீரினார் - கங்கை (ச்சடை) யர். இலங்கிய - விளங்கிய, பிறைக்கும், நீர்க்கும் பொது அடைமொழியாகக் கொள்ளலும் ஆம். ஏரினார் - அழகர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆதி யாரந்த மாயி னார்வினை
கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்
நீதி யாரநெல் வாயி லார்மறை
ஓதி யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

உலகிற்கு ஆதிஅந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

ஆதியார் - முதல்வர், அந்தமாயினார் - (சங்கார காரணர்) முடிவுமானார். வினை கோதியார் - குரோத வினையுடையார். திரிபுரத்தசுரர். குரோதி என்பதன் திரிபு கோதி என்பது. `கோதித்த நெஞ்சன்` (பாரதம்). மறையோதியார் - வேதங்களை ஓதியருளியவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பற்றி னானரக் கன்க யிலையை
ஒற்றி னாரொரு கால்வி ரலுற
நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்
பெற்றி யாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒருகால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

நெற்றி - இராவணனது உச்சி. ஆர் - பொருந்த. பெற்றியார் - தன்மையையுடையவர். ஒரு கால்விரல் உறநெற்றி ஆர ஒற்றினார் என்று இயைக்க. `திருவொற்றாடை`.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நாடி னார்மணி வண்ண னான்முகன்
கூடி னார்குறு காத கொள்கையர்
நீடி னாரநெல் வாயி லார்தலை
ஓடி னாரெம துச்சி யாரே.

பொழிப்புரை :

நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளியிருப்பவர். தலை ஓட்டைக்கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.

குறிப்புரை :

நாடினார் - விரும்பினவர், தேடினவர். மணி வண்ணன் - திருமால், கூடினார் - கூடி, முற்றெச்சம், குறுகாத - (கண்டு) நெருங்காத. நீடினார் - சோதிப்பிழம்பாக நீண்டார். தலை ஓடினார் - பிரமகபாலத்தை உடையவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

குண்ட மண்டுவர்க் கூறை மூடர்சொற்
பண்ட மாகவை யாத பண்பினர்
விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை
உண்ட கண்டரெம் முச்சி யாரே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல் வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.

குறிப்புரை :

குண்டு அமண் - குண்டராகிய அமணர். துவர்க் கூறை - துவர்ப்பேறிய ஆடை. பண்டம் - பொருள். விண் தயங்கு - வான் (அளாவி) விளங்கிய, நஞ்சு - விடம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நெண்ப யங்குநெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன்சொல் லிவை
பண்ப யன்கொளப் பாட வல்லவர்
விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

பொழிப்புரை :

நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பண்ணின்பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.

குறிப்புரை :

நெண்பு - நண்பு. அயங்கு - அசங்கிய. (பதி .140.) சண்பை - சீகாழி, `பண்பயன்கொளப் பாடவல்லவர்` என்றதால் தேவாரம் பாடும்முறையை அறியும் இன்றியமையாமை புலனாகின்றது. விண் - வீட்டுலகம். பயன் - பேரின்பம், இம்மை மறுமைப் பயனுமாம். வேட்கையாளர் - விருப்பத்தை ஆள்பவர்.
சிற்பி