திருஇந்திரநீலப் பருப்பதம்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்
திலகு மான்மழு வேந்து மங்கையன்
நிலவு மிந்திர நீலப் பர்ப்பதத்
துலவி னானடி யுள்க நல்குமே.

பொழிப்புரை :

விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த் தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான்.

குறிப்புரை :

பாரிடம் - பூதகணம். அங்கையன் - அகங்கையுடையவன். பர்ப்பதத்து - மலைமேல். உலவினான் - உலாவியவன். உள்க - தியானம்செய்ய. நல்கும். அருள்செய்யும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

குறைவி லார்மதி சூடி யாடல்வண்
டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்
இறைவ னிந்திர நீலப் பர்ப்பதத்
துறைவி னான்றனை யோதி யுய்ம்மினே.

பொழிப்புரை :

மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்த்துள்ள இறைவனும், இந்திரநீலப் பருவதத்து உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள்.

குறிப்புரை :

குறைவு இல் ஆர் மதி - குறைதல் இன்றி நிறைவு பொருந்திய பிறை. கடவுள் சடைமேல் உள்ள பிறைக்குக் குறைவும் அழிவும் இல்லை. உறைவினான் - வாழ்தலை உடையவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

என்பொ னென்மணி யென்ன வேத்துவார்
நம்ப னான்மறை பாடு நாவினான்
இன்ப னிந்திர நீலப் பர்ப்பதத்
தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள்.

குறிப்புரை :

என்பொன், என்மணி என்ன ஏத்துவார் நம்பன் - என் பொன்னே என்மணியே என்று எடுத்துப் புகழ்ந்து போற்றுவாரை விரும்பியருள்பவன், `நம்பும் மேவும் நசையா கும்மே` என்றார் தொல் காப்பியர். `பாதமே` என்றதில் ஏகாரம் பிரிநிலை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நாச மாம்வினை நன்மை தான்வரும்
தேச மார்புக ழாய செம்மையெம்
ஈச னிந்திர நீலப் பர்ப்பதம்
கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.

பொழிப்புரை :

நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே வந்தெய்தவும், உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப் பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள்.

குறிப்புரை :

வினை நாசம் ஆம் என்க. நன்மைவரும். கூசிவாழ்த்து தும் - இறைவன் பெருமையையும் நம் சிறுமையையும் எண்ணிக்கூசி, வாழ்த்துவோம். `நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்தம்மைக் கூசன் காண் கூசாதார் நெஞ்சுதஞ்சே குடிகொண்ட குழகன்காண்` என்ற அப்பர் திருவாக்கில் வந்த கூசுதல் வேறு. இது வேறு. தேசம் ஆர் - தேசம் (முழுதும்) நிறைந்த.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்
பரவு வார்வினை தீர்த்த பண்பினான்
இரவ னிந்திர நீலப் பர்ப்பதத்
தருவி சூடிடு மடிகள் வண்ணமே.

பொழிப்புரை :

இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான் போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும்.

குறிப்புரை :

மருவு ... பண்பினான் - அம்மையப்பராகத் தொழுத அன்பர் கன்மத்தைத்தீர்த்த குணமுடையவன். இரவன் - இரத்தலைச் செய்தவன், இரவாகியவன். அன்பர் இரத்தற்குரிய வள்ளல். அருவி - மலையருவி, கங்கையுமாம். வண்ணம் - இயல்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வெண்ணி லாமதி சூடும் வேணியன்
எண்ணி லார்மதி லெய்த வில்லினன்
அண்ண லிந்திர நீலப் பர்ப்பதத்
துண்ணி லாவுறு மொருவ னல்லனே.

பொழிப்புரை :

வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும், தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும் ஒருவன் அல்லனோ?.

குறிப்புரை :

வேணி - சடை. எண்ணிலார் - நினையாத பகைவர். வில் - மேருவில். `அல்லனே` ஏகாரம் வினா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்
பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்
அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்
உடைய வாண ருகந்த கொள்கையே.

பொழிப்புரை :

கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின் இயல்புகள் இவையாகும்.

குறிப்புரை :

ஏற்றினர் - விடையுடையவர். கூற்று - யமன். உயிர் வேறு உடல் வேறாகக் கூறுபடுத்துவோன் கூற்றுவன். பொடி - திருநீறு. வாணர் - வாழ்நர். உகந்த - உயர்ந்த, விரும்பிய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்
அடர்த்த தோர்விர லானவ னையாட்
படுத்த னிந்திர நீலப் பர்ப்பதம்
முடித்த லம்முற முயலு மின்பமே.

பொழிப்புரை :

கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும்.

குறிப்புரை :

கரம் - கை. புயம் - தோள். அடர்த்து - நெருங்கியது. விரலான் - விரலால். படுத்தன் - படுத்தியவன். முடித்தலம் - உச்சியிடம். உச்சியிலுள்ள ஸ்தலமுமாம். உற - அடைந்து வழிபட. முயலும் இன்பம் - நாம் அடைய முயலும் இன்பமே எளிதின் வாய்க்கும் என்ற படி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பூவி னானொடு மாலும் போற்றுறும்
தேவ னிந்திர நீலப் பர்ப் பதம்
பாவி யாவெழு வாரைத் தம்வினை
கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.

பொழிப்புரை :

தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும் இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம் கொல்லும்.

குறிப்புரை :

பூவினான் - செந்தாமரை மலரிலுள்ள பிரமன். போற்று - துதி, உறும் - அடையும். பாவியாது - தியானம் பண்ணாமல், கோவியா - கோபித்து, கூற்றம் வரும் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கட்டர் குண்டமண் டேரர் சீரிலர்
விட்ட ரிந்திர நீலப் பர்ப்பதம்
எட்ட னைநினை யாத தென்கொலோ
சிட்ட தாயுறை யாதி சீர்களே.

பொழிப்புரை :

கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமணபுத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்திரநீலப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?.

குறிப்புரை :

கட்டர் - உடற்கட்டுடையவர், சீர் - சிறப்பு. விட்டர் - விட்டொழிய நின்றவர், `விட்டல் - வீடுதல்` திருவிளையாடல். எள்தனை - எள்ளளவும். சிட்டதாய் - நல்லறிவுமயமாய். உறை - வாழும். ஆதி - முதல்வன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்
இந்தி ரன்றொழு நீலப் பர்ப்பதத்
தந்த மில்லியை யேத்து ஞானசம்
பந்தன் பாடல்கொண் டோதி வாழ்மினே.

பொழிப்புரை :

மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும் அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள்.

குறிப்புரை :

கந்தம் - மணம். அந்தம் இல்லி - முடிவில்லாதவன் - அநந்தன்.
சிற்பி