திருப்புகலி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

முன்னிய கலைப்பொருளு மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னியிமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர்யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.

குறிப்புரை :

முன்னிய - பொருந்திய, முந்திய, நினைக்க. கலை - அறுபத்து நான்கு கலைகள்; `உவமையிலாக் கலைஞானம்` எனலுமாம். மூவுலக வாழ்வு - மூன்று உலகத்திலும் வாழும் வாழ்க்கை. பன்னிய - ஆராய்ந்த, ஒருத்தர் - தனிமுதல்வர், வினவின் - கேட்டால்; ஞாலம் - பூமி. துன்னி - நெருங்கி, இமையோர்கள் - தேவர்கள். துதி - தோத்திரம், சென்னியர் ஆரம்போல மேம்பட்டவர், சென்னியிலுள்ளவர் என்றுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே

பொழிப்புரை :

வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும் , தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும் .

குறிப்புரை :

வண்டு இரை என்றால் புனலில் உள்ள மணம்பற்றிய தாகும் . வண்திரை என்றால் புனல் ( நீர் ) அலையின் வளம் உரைத்த தாகும் . மதிச்சடை - பிறைசூடிய சடைமேல் , மிலைத்த - சூடிய . புனல் - கங்கை நீர் . எரி - தீ . ஆடுபரமன் - ஆடும் கடவுள் , தீயில் ஆடும் , தீ ஏந்தி ஆடும் என்றிரண்டும் ஆகும் . பதியது - தலம் , அது - பகுதிப் பொருள் விகுதி . புண்டரிகம் - தாமரை , வாசம் - மணம் , கடல் பொலி - கடலில் மிதந்து விளங்கிய காழி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருண் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத் தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.

குறிப்புரை :

பா - பாடல். அணவு - கிட்டும், சிந்தையவர் - சித்தத்தையுடையவர். பத்தர் - அன்பர். நா அணவும் - நாக்கில் (புகழ் வடிவாகப்) பொருந்திய. அந்தணன் - சிவன், அம் + தண் + அன் - அழகும் குளிர்ச்சியும் உடையவன். அந்தத்தை அண்ணுதலை, உடையவன் என்றாருமுளர். `அந்தத்தை அணவுவார்` என்றார் நச்சினார்க்கினியர். கூர - மிக. தேவணவிழா - தெய்வவடிவான திருவிழா.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மைதவழு மாமிடறன் மாநடம தாடி
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழு முருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

மை - நஞ்சின் கறுப்பு. மை தவழும் - மேகம் போலும் கருநிறம் பரவிய, மா - கரிய. மிடறன் - திருக்கழுத்தை உடையவன். மாநடம் - மகாதாண்டவம். பணி - தொண்டு. இணக்கு உறு - இணங்குதல் உற்ற.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்க ளக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

இரு மூன்றுசமயங்கள், `அறுவகைச் சமயம்` அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`(சித்தியார் . 2) அக்கு - உருத்திராக்க மாலை, சங்குமணியுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கண னருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

வங்கம் - மரக்கலம், கடலுக்குச் சாதியடை. அங்கணன் - கருணைக்கண்ணன். அருத்தி - விருப்பம், கொங்கு - மணம், தேன், பூந்தாது. அண - அண்ண, வியன் (வியல்) - அகலம், தெங்கு - தென்னை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

நல்குரவு மின்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளு மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரவிசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.

குறிப்புரை :

நல்குரவு - வறுமை, நல்க ஊர்தல் என்னுந் தொடர் நல் கூர்தல் என்று மருவிற்று. பிறர் நல்க - வீடு வீடாக ஊர்ந்து சென்று வேண்டி நிற்றல் பற்றிய காரணப்பெயர். இன்பம் - இன்பந்தரும் பொருள். மைந்தன் - வலிமையுடைய வீரன். படி - நிலம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளு மண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

பரப்பு - பரவுதல். பெருமை புகழ் ஆளன் - பெரும் புகழை ஆள்பவன், புகழினது பெருமையை ஆள்பவன் எனக்கிடந்தவாறுங்கொள்ளலாம், வரை - கயிலை மலை. திரை - அலை. முத்தம்மணி -முத்துக்களையும், மணிகளையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளு மப்பனிரு வர்க்கும்
நேடவெரி யாகியிரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

கோடல் - வெண்காந்தள், குலாய - குலவிய, நேட - தேட. பேணி - விரும்பி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற் றொடிமடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

பொழிப்புரை :

கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

கற்ற அமணர் - அவைதிகநூல்களைப்படித்த சமணர். குற்றம் மொழி - குற்றங்களையுடையவார்த்தைகளை, கொள்கையது - கொள்ளுவது. தொடி - வளையல். மடந்தையர் - மகளிர். மைந்தர் - ஆடவர். புலன் ஐந்தும் செற்றவர் - ஐம்புலத்தாசையையும் அகற்றிய ஞானியர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செய்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

பொழிப்புரை :

செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்.

குறிப்புரை :

`செந்தமிழ் பரப்பு உறு திருப்புகலி` என்றதால், பண்டு சீர்காழியின் கண் இருந்த தமிழ் வளர்ச்சி புலனாகும். முதல் அந்தம் ஆகி எனமாற்றுக. பந்தன் - சம்பந்தர். தமிழ்கள் - தமிழ்ப்பாடல்கள், இசைகூர - பண்ணிசைமிக. வந்தவணம் - வந்தவாறு. (பார்க்க: 170:112 .).
சிற்பி