திருக்கருப்பறியலூர்


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக் குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர்.

குறிப்புரை :

சுற்றமொடு பற்று அவை - (துணையும்) சுற்றமும் பற்றும் ஆகியவற்றை. இவ்வாறு கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர் என்றாயிற்று. கலந்தவர் கருப்பறியல் என ஆசிரியரே இப்பதிக முடிவில் ஊர்ப்பெயர்ப் பொருளை உணர்த்தியது உணர்க. துயக்கு - அறிவு வேறுபடல். சிவபிரானையே அறியும் அறிவு வேறுபடாதவாறு சுற்றம் முதலியவற்றை அறுத்து என்றபடி. மற்று அசை. அடியார்களாகிய அவரை என்க. வானுலகம் - வீட்டுலகு. கற்றவன் - இயல்பாகவே உணர்ந்த சிவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகண்மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே,

பொழிப்புரை :

வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்றை மலர்மாலையை நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும் உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

வண்டு அணைசெய் - வண்டுகள் அணைதலைச்செய்கின்ற. கோலம் - திருக்கோலம், அழகு. கோள் - துன்பம், வலிமையுமாம். விண்டு -(இடம்) விண்டு, நீங்கி, விள்ளல் உற்று.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

முதலாக - முதலிய பல நற்செயல்களிலும். போதினொடு - (காலம்பெறப்) பொழுதொடு. போது - மலரும் பருவத்தது. மலர் - பூ. குழைதாழும் காதவன் - `குழைக்காதன்` என்னும் திருப்பெயரைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய உமையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான் வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.

குறிப்புரை :

மடம் - அழகு. துறவிகள் உறையும் இடம் பல உடையதால் மடம் படுமலை என்று இமயத்தினைக் குறித்தல் பொருந்தும். இறைவன் - அரசன். மறையோன் - மார்க்கண்டேய முனிவன். அணவு - கிட்டிய. காலன் - யமன். கால - கக்க. கடந்தவன் - கடக்கவுதைத்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய
விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும் அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.

குறிப்புரை :

நிருத்தன் - கூத்தன். நித்தன் - அழியாதவன். விருத்தன் - முதியோன். வேதம் அங்கம் - நான் மறையும் ஆறங்கமும். கருத்தவன் - தலைவன், கருத்துள் இருப்பவன். (தி .6 பதி . 83. பா . 5)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன்
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவவந்த காமனது உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

விண்ணவர்களுக்கு, வெற்புக்கு அரசு எனக்கூட்டுக. எரிகாலும் கண் - நெருப்பைக்கக்கும் கண்; இது பெருமானது வெகுண்ட நிலையைக் குறித்தது, அணைதல் அம்பிகையது. அணைவித்தல் ஆண்டவனது. தேன்மொழி, பண்மொழி என்றவாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

ஆதியடி யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டு மலையாய் உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

அப்பு - சலம். சோதி ஒளி - தீபம். நற்புகை - தூமம். வளர்க் குவடு புக்கு - வளர்தலையுடைய கருப்பறியலூர்க் கோயில் கட்டுமலை மேலுள்ளதாதலின் அதனுள் புகுந்து. அரங்க - புடைபெயர, அழியவுமாம். காதினன் - ஈண்டு உதைத்தவன் என்னும் பொருட்டு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வாய்ந்தபுகழ் விண்ணவரு மண்ணவரு மஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.

குறிப்புரை :

வாய்ந்த புகழை உடைய விண்ணவர் என்றும் மாறிக்கூட்டிப் புகழ் வாய்ந்த என்றும் கொள்ளலாம். இற்றுவிழ - ஒடிந்து விழ. காய்ந்தவன் - சினந்தவன். ஏய்ந்த - பொருந்திய.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடி அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.

குறிப்புரை :

நிரந்து - வரிசையாக. பரந்து - பரவி. சடைமேல் மிசை - சடையினது மேலிடத்தில். நிரந்தரம் - எப்போதும். நேடி - தேடி. கரந்தவன் - ஒளித்தவன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென விருப்பது கருப்பறிய லூரே.

பொழிப்புரை :

மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன் அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர்.

குறிப்புரை :

அற்றம் மறையா அமணர் - மறைக்கவேண்டிய உறுப்புக்களை மறைக்காத சமணர். `அற்றம் மறைப்பதுமுன் பணியே` என்ற துணர்க. சொற்றம் - சொல்லும் சொற்கள். சொல் + து + அம். கொகுடி - ஒருவகை முல்லை. குற்றமறியாத பெருமான் - இத்தலத்துப் பெருமான் திருப்பெயர். கற்றென - நிலையாக. கல் + து - கற்று. கல்லைப்போன்று உறுதியானது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

பொழிப்புரை :

நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில் மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம்.

குறிப்புரை :

கடவுள்ளை - கடவுளை (விரித்தல் விகாரம்). பலம் - பலன். வலந்தருதல் - உயிர்க்கு வன்மையை அளித்தல், திருக்கோயிலை வலம்வருதலுமாம். வினை வாடல் - கருப்பறிதல், `கலந்தவர்கருப்பறியல்` என்ற தொடர் இத்திருத்தலத்தின் பெயர்ப் பொருளைக் குறித்தது. பறியல்மேய - பறியலில் மேவிய.
சிற்பி