திருவையாறு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திக ழெழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய வற்புதரி ருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

அழகிய மலைமகளோடு மிக்க ஒளிவடிவினராய சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலைமலையில் உறைவதற்கு விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில் சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.

குறிப்புரை :

திரு - அழகு. திகழ் - விளங்குகின்ற. மலைச்சிறுமி - இமாசலகுமாரியாகிய பார்வதி தேவியார். தேசர் - ஒளிவடிவினர். உரு - வெண்மையுருவம். எழில் - அழகு. வெற்பு - மலை. உயர்ச்சியிற் பிற எல்லாவற்றையும் வெல்லுங்காரணத்தாற் பெற்ற பெயர். ஏர் - அழகு. மரு - மணம். அற்புதர் இருக்குமிடம் திருவையாறு எனக்கூட்டுக. 7,8 பாக்களில் கூறியபடி. வண்மை - கொடையாளர்; ஈகையை உணர்த்தும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திரனு ணர்ந்துபணி யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தருமி டைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப் பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற அச்செம்பொற்சோதியை இந்திரன் உணர்ந்து வழிபடும் இடம் எங்கும் அழகு விளங்கும் மரம் நிறைந்த பொழிலைச் சார்ந்து வரும் குளிர்ந்த காற்று தங்கிக் கலந்துள்ளதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

கந்து - பற்றுக்கோடு. அமர - பொருந்த. உந்தல் - தூண்டல், செலுத்துதல். இல் - இல்லாத. விளக்கு ஏர் - விளக்கினது அழகை. பணி - பணிகின்ற. இந்திரனுணர்ந்தது செம்பொற்சோதியைப் போலும். இதன் முதலடியிற் குறித்த `விளக்கேர்` என்பதன் உண்மை புலப்பட்டிலது. திருவையாற்றுப்புராணம் :- பஞ்சநதிச் சருக்கம். பா .15, ல் உணர்த்தும் வரலாறு காண்க. சந்தம் - அழகு, சந்தனமுமாம். தரு - மரங்கள். வளி - காற்று. நந்து - நந்தவனம். அணவு - கிட்டும், பொருந்தும். எந்தையிடம் திருவையாறு எனக்கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்
கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்
கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்
வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

எட்டு வடங்களால் கட்டப்பட்ட வட்டமான முழவத்தை நந்திதேவர் தம் கரங்களால் கொட்ட, அம்முழவொலிக்கும தாளச்சதிக்கும் ஏற்ப அவர்க்குப் பெருவிருப்பம் உண்டாகுமாறு நடனமாடிய சிவபிரானது இடம், அழகிய வட்டமான மதில்களுள் விளங்குவதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

முழவம் எட்டு வடத்தைக் கொண்டு கட்டப்பட்டது. வட்டமானது. நந்திதேவரால் கொட்டப்படுவது. கரம் - கை. இடம் - விருப்பம். நட்டம் அவை இட்டவர் - திருக்கூத்து வகைகளை ஆடியவர் (சிவபெருமான்) இட்டவர் இடம் திருவையாறு என்க. சீர் வட்டம் இரண்டும் மதிலைவிசேடித்தன, மதிலுள் திகழும் திருவையாறு. வண்மை - வளத்தைக் குறித்தது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்
றெண்ணிலி மறைப்பொருள்வி ரித்தவ ரிடஞ்சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலை அடைந்து சனகாதியர் நால்வருக்கு அக்காலத்தில் வேதப்பொருளை விரித்துரைத்த சிவபிரானது இடம்; குளிர்ந்த சந்தனம், அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற பொன்னியாற்றின் கரையின்மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

வடத்தின் நிழல் - கல்லாலமரத்தின் நிழல். நால்வர் - சனகாதியர். விரித்தவர் - விரித்துரைத்தவர்; (சின்முத்திரைக் குறிப்பால்) சீர் - சிறப்பு, கனமுமாம். தண்ணின் மலி - குளிர்ச்சியில் மிக்க. சந்துஅகில் - சந்தனமும் அகிலுமாகிய மரங்கள். பொன்னி - காவிரி, விரித்தவர் இடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றன்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர் போகுமாறு சினந்து அவனை அழித்த கோபம்மிக்க காளிதேவியின் சினம் அடங்க அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம், பெரிய மலர்மணம் நிறையும் பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

வென்றி - வெற்றி. தாருகன் - ஓர் அசுரன். ஆருயிர் மடங்க - அரியவுயிர் மடிய. கன்றி - மனங்கன்றி. கதம் - கோபாவேசம். ஓவ - நீங்க. நடமாடி - பெயர்ச்சொல், நடராசப்பெருமான். மன்றல் - மணம். மேலால் பொலியும் பொழில் என்றும் நடமாடி இடம் திருவையாறு என்றும் கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி அடிமுதல் முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக் கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும் வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பூதமொடு பேய்கள் பல பாட இறைவன் நடமாடினான். பை - படம். சர்ப்பாபரணத்தைப் பாதாதிகேசாந்தம் அழகுபெறக் கொண்டவன். கோதையர் - தாருகாவனத்து ரிஷிபத்தினிகள். பரன் - மேலானவன், மாதவி - குருக்கத்தி, பரன் இடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

துன்னுகுழன் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி யென்றுரைசெ யங்கணனி டஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

செறிந்த கூந்தலையுடைய உமைமங்கை சினம் கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, `உமையே! நீ சினம் கொள்ளக்காரணம் யாதென` வினவி, அவளை மணந்துறையும் கருணை நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய. குழல் - கூந்தல். மங்கையுமை நங்கை - உமாதேவியார். சுளிவு எய்த - கோபம் அடைய. பின் ஒரு தவம் செய்து - பின்னரும் ஒரு தவத்தைச் செய்து. உழல் - உழலுதற்குக் காரணமான. பிஞ்ஞகன் - சடைமுடி உடையவன். அங்கே - தவஞ்செய்த இமயமலைச்சாரலில். என்ன சதி என்று உரைசெய் அங்கணன் - சதி என்ன காரணத்தால் நீ தவம் செய்கின்றாய் என்று வினாவியவன். சதி - பதிவிரதை. அங்கணன் - கருணைக்கண்ணன். சீர் மன்னு கொடையாளர் - சிறப்பு நிலை பெற்ற கொடையை ஆள்பவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

இரக்கமில்கு ணத்தொடுல கெங்குநலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடும டங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவரி டஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள், தோள்கள் ஆகியன அழியுமாறு கால்விரலால் செற்ற சிவபிரானது இடம் புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

இல் - இல்லாத. நலி - வருந்துகின்ற. அரக்கன் - இராவணன். முடியத்தலை புயத்தொடும் அடங்க - இருபது தோள்களொடும் பத்துத் தலைகளும் நெரிந்தழிய. துரக்க - செலுத்த. (அழுத்த என்றவாறு) சீரும் வரமும் கருணையும் ஆள்பவர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

பருத்துருவ தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவனி டங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

பருந்து உருவமாய் விண்ணிற்சென்று தேடிய பிரமன், பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற சிவபிரானது இடம், வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும் வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பருத்து உரு அது - பருந்து உருவம். வலித்தல் விகாரம். விண்ணடைந்தவன் - பிரமதேவன். பெருத்த பன்றி உருவதாய் - பெரிய பன்றி வடிவமாய். பெயரெச்சத்து அகரம், தொக்கது. உலகிடந்தவன் - உலகங்களைப் பேர்த்தவன். திருமால், பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடிதேடினான் என்னும் உண்மை இதில் குறிக்கப்பட்டது. `பூவார் பொற்றவிசின் மிசை இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத், தேவாரும் திருவுருவன்`(தி .1, பதி .131, பா .9) என்று முன்னும் அருளியது உணர்க. `ஏனங்கழுகானவருன்னை முனென் கொல் வானந்தலமண்டியும் கண்டிலாவாறே` என்றது காண்க. (தி .2. பதி .37. பா .9) `புண்டரிகத்துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய், அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப், பண்டொருநாள், காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறி போற்றி` (தி .11, நக்கீரர் போற்றித்திருக்கலி வெண்பா 4,5 கண்ணிகள்) கருத்து உரு ஒணாவகை - அவர்கள் கருத்தில் இறைவன் உருவம் (அடிமுடி) ஒன்றாவகை, ஒன்றாமை - ஒண்ணாமை மருஉ. கார்வருத்து வகை தீர்கொள் பொழில் - வானோங்கி வளர்தலால் ஆங்குச் செல்லும் முகிலைத் தடுத்து வருத்தும் வகையால், வெயிலால் காய்ந்த வெப்பத்தை மழையால் தீர்தலைக்கொள்ளும் சோலை. காரை வருவித்தலால் எனலுமாம். வருத்தல் (- வருவித்தல்) என்பது வழக்கிலும் உண்டு. நிமிர்ந்தவன் இடம் திருவையாறு எனக்கூட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்
நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.

பொழிப்புரை :

நல்லூழ் இல்லாத சமண் பாதகர்கள், புத்தராகிய, சாக்கியர்கள் என்று உடலைப் போர்த்தித் திரிவோரின் பார்வைக்கு அகப்படாத மெய்ப்பொருளாகிய சிவபிரானது இடம் உலகில் நீண்டு வளர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், வள்ளன்மையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

பாக்கியம் - நல்வினை. இல் - இல்லாத. ஒன்றும் - சிறிதும். பதகர் - பாதகர். பொதிந்து - மறைந்து, மூடி. நோக்கு அரிய தத்துவன் - நோக்கிற்கு அரிய மெய்ப்பொருளானவன். படி - பூமி. நீடு - வளர்ந்த. மாக்கம் - விண். மாகம் மாக்கமென விரித்தல் விகாரம், தத்துவனிடம் திருவையாறு என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்
ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்
பூசுரன் உரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த பொழில்களைக் கொண்டுள்ள வளமான திருவையாற்றுள் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய புகலி மன்னனும், உண்மை ஞானம் பெற்ற அந்தணனும் ஆகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இப்பதிகப்பாடல்கள் பத்தையும் வல்லவர், சிவபிரான் திருவடிக்கண் மிக்க அன்புடையவராவர்.

குறிப்புரை :

வாசம் - மணம். புகலிமன்னவன் - காழிவேந்தன். மெய்ஞ்ஞானப் பூசுரன் - திருஞானசம்பந்தன். பூசுரர் - பூ தேவர். நேசம் - அன்பு. பத்தர் - பக்தர். நின்மலன் - அழுக்கில்லாதவன். மலரகிதன்.
சிற்பி