திருநள்ளாறு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

பொழிப்புரை :

இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள், வன்னிஇலை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு, சுரபுன்னை முதலிய மரங்களின் மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

ஏடு - இதழ். இந்து - பிறை. வன்னி - வன்னிப் பத்திரம். மாடு அவலசெஞ்சடை - பொன்னை ஒவ்வாதென்று அவலம் உறுத்தும் செஞ்சடை. கோடு - கொம்புகள். ஞாழல் - புலிநகக் கொன்றை, கோங்கெனலுமாம். குரவு - குராமரம். வாசம் - மணம், நள்ளாறே மைந்தனிடம் என்பர்; இவ்வாறே ஏனையவும் ஒட்டுக.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனன் முடித்த
புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல்
பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்
நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

பொழிப்புரை :

வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும் முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில் ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

விண் இயல் பிறை பிளவு - வானூர் பிறைத்துண்டம். அறைப்புனல் - ஒலிநீர்கங்கை. புவி - பூமி. பண்ணிய - செய்த, பண்ணோடு கூடிய எனலுமாம். நண்ணிய - விரும்பிய. வழிபாடு - அருள்வழி உயிர்க்குப் படுதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

பொழிப்புரை :

விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

இழை - ஆபரணம், முதல்நிலைத் தொழிலாகுபெயர். உளங்கொள - திருஉள்ளங்கொள்ள, விரும்ப. இருத்திய:- பிறவினை, ஒருத்தன் - தனிமுதல்வன், நளன் வழிபட்ட வரலாறு உணர்த்தப்பட்டது. பூசிக்கும் முறையும் கூறப்பட்டது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்
செக்கரவர் சேருமிட மென்பர்தட மூழ்கிப்
புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரு நண்ணி
நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

பொழிப்புரை :

திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும், வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான் திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிறகு அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர், சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர்.

குறிப்புரை :

கொக்கு - கொக்கிறகு. `கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்` (தி. 6 பதி .3 9 பா. 2) அரவர் - பாம்பணிந்தவர். கூன் மதியர் - இளம் பிறைசூடி. கோபர் - கோபத்தை உடையவர். செக்கர் திருமேனியர் - செவ்வானம் போலும் வண்ணத்தை உடைய திருமேனியர். அந்தி வண்ணர். புக்கு - புகுந்து. அரவர் - நாகலோகத்தவர். விஞ்சையர் - வித்யாதரர். நக்கர் - நக்நர். திகம்பரர். நாமம் - திருப்பெயர், திருவைந்தெழுத்துமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்
வஞ்சம தறுத்தருளு மற்றவனை வானோர்
அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த
நஞ்சமுது செய்தவனி ருப்பிடநள் ளாறே.

பொழிப்புரை :

மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத்தம் மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கியருள்பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில், அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம் திருநள்ளாறு.

குறிப்புரை :

நினைந்தார் - நினைந்தவரது, வஞ்சம் அது - வஞ்சத்தை, பொய்யை, பாற்கடலினின்றெழுந்த விஷத்தை அஞ்சிப்புறங்காட்டி ஓடிய வானவர் கைதொழ, அந்நஞ்சை அமுதாகக் கொண்டு அவர்களைக்காத்த சிவபெருமான்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்
காலனுடன் மாளமு னுதைத்தவர னூராம்
கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்
நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும் வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர் நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறி நின்று நீராட்டி அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

பாலன் - மார்க்கண்டேய முனிவர். பேண - விரும்பித் தொழ. காலன் உடல் - எமனுடைய தேகம். உடன்மாள - உடனே அழிய என்றுமாம். அரன் - சிவபெருமான். கோலமலர் - அழகிய பூக்கள். நீர்க்குடம் - அபிஷேக ஜலபாத்திரம். நாலின்வழி - நால்வேத நெறி. தொழில் - அருச்சனைத் தொழில்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை
பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை
வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்
ஓதியர னாமமு முணர்த்திடுநள் ளாறே.

பொழிப்புரை :

நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர். புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர். அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

நீதியர் - நீதிவடிவாய் விளங்குபவர். நெடுந்தகையர் - பெருங்குணங்களுக்கு உறைவிடமானவர். நீள்மலையார் - நீண்ட திருக்கயிலை மலையை உடையவர். பாவை பாதியர் - அர்த்தநாரீசுரர். பராபரர் - மேலவர்க்கும் மேலவர், `பராபரன் என்பது தமது பேராக் கொண்டார்` (அப்பர் பதி .310 பா .11) பரமும் அபரமும் ஆயவர் எனலும் பொருந்தும். `பின்தானும் முன்தானும் ஆனான்` (தி.6 பதி.11 பா. 2) `முன்னவன்காண் பின்னவன்காண்` (தி.6. பதி. 48 பா ..8) `முன்பனை உலகுக் கெல்லாம்`(தி .4. பதி.74. பா. 2) `முன்னவன் உலகுக்கு` (தி.5 பதி.60 பா .8)`முன்பாகி நின்ற முதலே போற்றி` (தி . 4. பதி. 56 பா. 2) `முன் பின் முதல்வன்` (தி.4 பதி. 90 பா 3)`முன்னியா நின்ற முதல்வா போற்றி`(தி .6 பதி. 57 பா .5) `முன்னையார் ... பின்னையார்` (தி.5 பதி.16. பா .7) வேள்வி - யாகம். நாளும் - நாள்தோறும், காலைதோறும் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கடுத்துவ லரக்கன்மு னெருக்கிவரை தன்னை
எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும்
அடர்த்தவர் தமக்கிடம தென்பர்அளி பாட
நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

பொழிப்புரை :

சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும், வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம். வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப் பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

வரை - மலை. அளி - வண்டு. கலவத்திரள்கள் - வாசனைக் கலப்புடைய பொருள்களின் கூட்டம். கலவத்திரள் - ஆண் மயில் கூட்டம் எனினும் ஆம். நடத்த - பெயரெச்சம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்
பயந்தவ னினைப்பரிய பண்பனிட மென்பர்
வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்
நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

பொழிப்புரை :

உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால், உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும் அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும் அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு என்பர்.

குறிப்புரை :

உயர்ந்தவன் - திருவிக்கிரமன், திருமால். பயந்தன் - பெற்றவன். பிரமன், அமரர் வியந்து மெச்ச. நயம் தருமம் - நயத்தையுடைய தருமம். தருமவேதம்:- `வேதத்தைவிட்ட அறமில்லை` (திருமந்திரம்) நயம் தரும் அவ்வேதவொலி எனலுமாம். ஆர் - நிறைந்த. நயந்தமரு என்றது பிழை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருள நின்றபர மன்னூர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழின் முழங்கியநள் ளாறே.

பொழிப்புரை :

மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம் என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும் விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில் முழங்கும் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

திருகல் - மாறுபாடு. வேதச்சந்தம் - வேதத்தை ஓதும் சந்தையொலி, பொழிலில் விரவி முழங்கிய நள்ளாறு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

ஆடலர வார்சடைய னாயிழைதன் னோடும்
நாடுமலி வெய்திட விருந்தவனள் ளாற்றை
மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்
பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.

பொழிப்புரை :

ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில் வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப் பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா.

குறிப்புரை :

ஆர் - பொருந்திய. ஆய் இழை - உமாதேவியார் `போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்பாகம் ஆர்த்த ... அண்ணல்` என்றதை நினைப்பிக்கும் இடம் இது. காழிச்சிறப்புணர்த்திற்று. பந்தன் - திருப்பெயர்ச் சுருக்கம். பாடலுடையாரைப் பழிகளும் நோய்களும் அடையா என்க.
சிற்பி