திருத்தென்குரங்காடுதுறை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மே யவழகார்
குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும் , அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும் .

குறிப்புரை :

குரங்காடுதுறை பரவ வல்வினை கெடும் என்றியைக்க . பாரிடம் - பூதகணம் . ஆடி - பெயர்ச்சொல் . அந்தணன் - ` அறவாழி யந்தணன் `. மேய - எழுந்தருளிய . ( மேவிய - விரும்பிய ) குரவம் - குராமரம் . பரவுதல் முன் நின்று துதித்தல் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி
வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம்
கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

விண்டார் - பகைவர்; விமலன் - மலமில்லாதவன். இண்டு - புலிதொடக்கிக்கொடி. மென்குழல் மங்கை - இத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயராயிருக்கலாம். கொண்டான் - கொண்ட சிவபிரான். வினையாலணையும் பெயர். கொண்டானது நகர் போலுமென்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும்
குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.

குறிப்புரை :

நிறைவு இல் புறங்காடு - `எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதைக்கெல்லாம் தானாய்த் தன்புறங்காண்போர்க் காண்பறியாது`(புறம் -356) என்று கூறப்பட்ட புறங்காடு `இனிவரும் பிணத்திற்கு இங்கு இடமில்லை` என்று நிறைதல் என்றும் இல்லாதது. இறைவு - இறைதல் (அழிதல்). இல் - இல்லாத. எரியான் - தீயுடையவன். சிவபிரான் ஏந்திய தீக்கு என்றும் அழிவில்லை. ஆடி - பெயர்ச் சொல். தானவர் - அசுரர். குறைவு இல்லான் - குறைவிலா நிறைவினன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விழிக்குந் நுதன்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன் பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.

குறிப்புரை :

விழிக்கும் நுதல் மேல் - தீக்கண் திறக்கும் திருநுதலின் மேலிடத்தில் (சென்னியின் முற்பக்கத்தில் என்றபடி) `பிறை நுதல் வண்ணம் ஆகின்று` (புறம் - கடவுள்) சூடி, ஆடித்தேர்ந்தவன் ஊர் குரங்காடுதுறை என்க. தெழிக்கும் - ஒலிக்கும். பழிக்கும் பரிசே - பலியேற்கின்றானென்று பழிக்குந்தன்மையிலே. பொன் கொழிக்கும் புனல் - பொன்னியாகிய காவிரிநீர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

நீறு பூசிய மேனியன். நெற்றிக்கண்ணன். விடைக் கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

நீறு ஆர்தரு மேனியன் - திருவெண்ணீற்றினை நிறையப் பூசிய திருமேனியன்; ஏறு ஆர் கொடி - (பா .9) விடைக் கொடி. (ஆர்தல் - பொருந்துதல்) ஈண்டு எரி - வினைத்தொகை; திரண்ட தீ. ஆறு - கங்கை. ஆயிழையாள் ஓர் கூறான் - மங்கை பங்கன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.

குறிப்புரை :

நளிரும் - குளிரும். கரந்தைத்துளிர் - கரந்தை என்னும் மரத்தின் தளிர். சுலவி - சுற்றி. மிளிரும் - விளங்கும், கீழ் மேலாகும் எனலுமாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.

பொழிப்புரை :

பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதிதேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

பழகும் வினை - பிறவிதொறும் உயிரை இடைவிடாது தொடர்ந்து பழகும் பழவினை. பார்ப்பதி - பார்வதிதேவியார். முழவம், குழல், மொந்தை என்னும் இசைக்கருவிகள் முழங்க எரியில் ஆடும் அழகன் என்க. முழங்கு எரி - வினைத் தொகையுமாம். அயில் - கூர்மை. மூவிலைவேல் - திரிசூலம். வலன் - வலக்கையில். குழகன் - இளைஞன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.

பொழிப்புரை :

கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடு துறையாகும்.

குறிப்புரை :

ஒல்க - தளர, சுருங்க. கோலம் - அழகு. நெரித்திட்டவன் - நெரியச் செய்தவன். குரை - ஒலி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடுபவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.

குறிப்புரை :

படி - தன்மை, உருவம். பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடுபவன். `பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே` (தி.6 பதி.37 பா.63) செடியார்தலை - பிரமகபாலம். செங்கண் வெள்ளேற்றின் கொடியான் - சினக்குறிப்பை உணர்த்தும் சிவந்த கண்ணை உடைய வெள்ளை விடையை எழுதிய கொடியை உடையவன் (பா .5).

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.

பொழிப்புரை :

துவராடை அணிந்த புத்தர்களும், வேடமல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐயஉரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.

குறிப்புரை :

கையர் - கீழ்மக்கள். கவர்வாய்மொழி - கவர்த்த (ஐயத்தை விளைக்கும்) வாய்ப்பேச்சு. நவை - சிதைவு என்னும் பொருட்டாய் நின்றது. குவை - குவியல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.

பொழிப்புரை :

நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.

குறிப்புரை :

நல்லார் - ஞானியர். `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள்ளீசன்றன் கழல் மேல் நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை`(129-11). வானவர் - வீட்டுலகடைந்தோர். உறைவார் - வாழ்வார்.
சிற்பி