திருவிரும்பூளை


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே.
 

பொழிப்புரை :

சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக.

குறிப்புரை :

சீர் ஆர் கழலே - எல்லா உலகங்களையும் அளித்த சீர் நிறைந்த திருவருளையே. தொழுவீர் - தொழுகின்றவரே! கருத்தாகிய இது செப்பீர் என்க. மேலும் இவ்வாறே இயைத்துப் பொருள்கொள்க. ஏர் - அழகு. கார் - கருமை. மேகமுமாம். கடல் - பாற்கடல். நஞ்சு அமுது - நஞ்சமாகிய அமுதம், நஞ்சத்தை அமுதாக என்று ஆக்கச் சொல்வருவித்தும் முடிக்கலாம்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன்
கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே.
 

பொழிப்புரை :

வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

தொழல் ஆர்கழலே - தொழுதற்குப் பொருந்திய திருவடி. தலைவைத்தது திருவடியை வணங்கற்கேயாதலின், அத்தலை தாழ்த்துதல் முதலிய தொழலுக்குப் பொருந்தியதும் திருவடி அல்லாது வேறில்லை. தொழு தொண்டர்கள் - வினைத் தொகை. குழல் ஆர் - மொழி நமக்கு வேய்ங் குழலிசையின்பம் போல இறைவனது செவிக்கு இன்பஞ்செய்யும் மொழி. `குழல் வாய்மொழியம்மை` என்பது அம்பிகையின் திருப்பெயர்களுள் ஒன்று. கோல் - திரட்சி. வளை - வளையல். மொழியும் வளையும் உடையாள் என்க. எழில் - அழகு. கழல் - திருவடிக்கு ஆகு பெயர். தொண்டர்கள் (விளி) கருத்து சொல்லீர் என்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.
 

பொழிப்புரை :

அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!

குறிப்புரை :

அன்பு - பத்தி. அடி - திருவடி. தொழுவீர் - விளி. அறியீரே - அறிவீர்களோ? அறிவீர் என்று முன்பின் உள்ளவாறுங் கொள்ளலாம். மின்போல் மருங்குல் - மின்னிடை. புனல் - கங்கைநீர்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

நச்சித் தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி
இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
 

பொழிப்புரை :

சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சிமாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக.

குறிப்புரை :

நச்சி - விரும்பி. தொழுவீர்கள் (விளி). கச்சி - காஞ்சிபுரம். திருக்கச்சி. பொலி - திருக்கோயில்கொண்டு விளங்குகின்ற. காமக்கொடி - காமாட்சி தேவியாராகிய வல்லி, இச்சித்து - விரும்பி, ஊண்பொருட்டுப் பலிகொண்டு உழல்வது ஏன் சொல்லீர் என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி
எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
புற்றா டரவோ டென்புபூண் டபொருளே.
 

பொழிப்புரை :

சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

சுற்று ஆர்ந்து - சூழ்ந்து நிறைந்து. அடியார் சுற்றம் நிறைந்து என்றுமாம். நல்தாழ்குழல் - அழகிய தொங்குகின்ற கூந்தலையுடைய. நங்கை - தேவியார்க்கெல்லாந்தலைவி. புற்று - ஆடு அரவு - புற்றிலுறைவதும் ஆடுவதும் ஆகிய பாம்பு என்றவாறு. முறையே இடமும் தொழிலும்பற்றிய அடைமொழிகள். என்பு - எலும்புமாலை. பொருள் - பயன். பொருள் என்றே சொல்லீர் என்று இயைத்துரைக்க. எற்றே - எத்தன்மையதோ? எல் (இகழ்ச்சி) தேய - தேய்ந்த, இல்லாத எனலும் ஆம். எல்து - ஒளியுடையது. ஏய் - பொருந்திய எனலும் அமையும்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

தோடார் மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே.
 

பொழிப்புரை :

இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

தோடு - இதழ், தொகுதியுமாம். தூய் - தூவி. சேடு - திரட்சி. சேயிழை - செய்ய பூண்களையுடைய அம்பிகை. (அன் மொழித்தொகை) ஈடு - பெருமை, சமமுமாம். காடு ஆர் - காட்டில் பொருந்திய. வேடுவன் - (அருச்சுனனோடு போர்செய்த) வேடன். `ஏவார்சிலை எயினன் உருவாகி எழில்விசயற்கு ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவன்` (தி. 1 பதி. 12 பா. 6)

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவே ழமுரித் துமையோடும்
இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே.
 

பொழிப்புரை :

ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :

ஒருக்கும் மனத்து - இறைவன் திருவடியே, ஒன்றியிருந்து உணர்ந்து உணர்ந்து, மற்றெல்லாப் பற்றுக்களும் ஒருங்கச் செய்த மனத்தினையுடைய. அன்பர் உள்ளீர் - அன்பர் கூட்டத்தைச் சார்ந்தவரே! பருக்கை - பரியதாகிய துதிக்கையையுடைய. உமையோடும் இருக்கையை உடைய என்க. உரம் - வலிமை. அருள் - நாளும் வாளும் பிறவும் நல்கிய கருணை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்
கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி
இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
 

பொழிப்புரை :

துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக.

குறிப்புரை :

ஆயின - வினையாலணையும் பெயர். துயர் - பிறவி, மறதி முதலியவை. கயல் - மீன்விசேடம். `அங்கயற்கண்ணியார்` இருவர் - அரி அயன். மொய்ம்பு - வன்மை, ஆற்றல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
 

பொழிப்புரை :

திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதிதேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமண பௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக.

குறிப்புரை :

துணை - ஒப்பு. பணை - பருமை. இணை - ஈடு, ஒப்பு. அணைவு இல் - அணை(ந்து வழிபடு)தல் இல்லாத. சமண் சாக்கியம்- சமணரும் சாக்கியரும் (ஆகிய புறப்புறச் சமயம்) உம்மைத்தொகை.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன்
செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
 

பொழிப்புரை :

எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வேதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர்.

குறிப்புரை :

சந்தம் பயில் - வேதம் ஓதாது ஓதியுணர்ந்த. சந்தக்கவி பாடிப்பயின்ற எனலும் ஆம். பந்தம் - (மும்மலக்) கட்டு. ஈசனது சண்பையை உள்குகின்ற ஞானசம்பந்தன். செப்பிய - பாடிய. பான்மை-தன்மை.
சிற்பி