திருமறைக்காடு


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

பொழிப்புரை :

இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில் வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே! உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்ல வண்ணம் விடை அருள்வாயாக.

குறிப்புரை :

சதுரம் மறை - நால்வேதம். (மகரவொற்று விரித்தல்) மதுரம் - தேனினிமை. இறை - விடை. மறை துதிசெய்து வணங்கும் காரணத்தால் மறைக்காடு என்றான உண்மையை உணர்த்தியருளியவாறறிக. பின்வருவன வினாக்களாதலின், அவற்றிற்குச் `செவ்வனிறையோ இறைபயத்தலோ செய்க` என்பார், `இறைவைத்தருள் செய்க` என்றருளினார். `எனக்கு அருள்செய்க` என்று இவ்வாறு வேண்டுவது ஆசிரியர் திருவாக்கில் வேறு எங்கும் காண்டல் அரிதாகும். இதற்குப் பிறர் உரைத்தது பொருந்துமோ?

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே.

பொழிப்புரை :

சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால் கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச் சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?

குறிப்புரை :

சங்கம் - சங்குகள். தரளம் - முத்துக்கள். எற்றும் -(அலைகள்) எறியும். வங்கம் - மரக்கலம். உமையோடு கூடியிருந்தும் கங்கையைச் சடைமேல் அடையச் செய்ததன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

குரவங் குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே.

பொழிப்புரை :

குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே! தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

குரவம் - குராமரம். குருக்கத்தி - மாதவி. ஞாழல் - புலிநகக்கொன்றை, கோங்குமாம். சிரம் - தலை, தலைமாலை. `தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந்தலைவன்` இது பாம்பைப் பிறையொடு சூடிய அழகை வினாவியது. வினாச்சொல்லை வருவித்துரைக்க. திங்களை விழுங்கும் பகைமை கருதி `அழகு` என்று குறித்தருளினார்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங் கமதாகியு மென்கொல்
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே.

பொழிப்புரை :

படர்ந்த செம்பவளக் கொடிகள், பல்வகையான மலர்கள், முத்துக்கள், மடல்கள் அவிழ்ந்த மலர்ப் பொழில்கள் ஆகியன சூழ்ந்து விளங்கும் மறைக்காட்டில் உறையும் மைந்தனே! உன் திருமேனியில் ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டவனாயிருந்தும் கடலில் எழுந்த நஞ்சினை அமுதம்போல உண்டதன் கருத்து யாதோ?

குறிப்புரை :

மடல் - மரத்தில் உள்ள மடல்கள். பூவிதழுமாம். பங்க மது - பாகத்தையுடையது. பாற்கடலினின்று எழுந்த நஞ்சினை உண்ட கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத் தவிருந் தநீயென்கொல்
கானார் கடுவே டுவனா னகருத்தே.

பொழிப்புரை :

தேவர்கள், வேதங்களை உணர்ந்த பெரிய தவத்தினர் ஆகியோர் வழிபட்ட தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருமறைக் காட்டில் உறையும் செல்வனே! தன்னையல்லாத ஏனையோர் அனைவராலும் தொழுது போற்றப்பெறும் பெருமையோடு இருந்த நீ காட்டுள் வாழும் வேடுவனாய் உருக்கொண்ட காரணம் யாதோ?

குறிப்புரை :

வானோர் - தேவர்கள். மறை மா தவத்தோர் - வேதியரும் பெருந்தவத்தருமாகிய பெரியோர். ஏனோர் - தானல்லாத பிறர். தன்னையேதான் பூசித்தவுண்மையும் அறிக. கான் - காடு. ஆர் - பொருந்துகின்ற. கடு வேடுவன் - கொடிய வேடன்.(தி .2 ப .3 பா.1)`குழலியொடு வேடுவனாய் .... விசயன் போரில் மிகு பொறையளந்து பாசுபதம் அளித்த` கருத்தை வினாவியது. (தி .1 ப .131 பா .2)

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள்போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.

பொழிப்புரை :

பலகாலங்கள் வேதங்கள் பாதங்களைப் போற்றி மலரால் வழிபாடு செய்யும் மறைக்காட்டுள் எழுந்தருளி விளங்கும் இறைவனே! ஏழுலகங்களையும் தன் உடைமையாகக் கொண்டுள்ள வனே! நீ பலர் வீடுகளுக்கும் சென்று தலையோட்டில் பலியேற்று அதில் உண்டருளியதற்குக் காரணம் யாதோ! சொல்வாயாக.

குறிப்புரை :

இத்தலத்தில் நான்கு வேதங்களும் பலகாலம் பூசித்த உண்மையை முதல் இரண்டடியிலும் உணர்த்தியருளினார். உலகு ஏழ் உடையாய் - ஏழுலகுக்கும் சுவாமியே. ஜகதீசா! முன் கடைதோறும் தலைசேர் பலிகொண்டு அதில் உண்டதுதான் ஏன்? என்று இறைவன் பலியேற்ற வரலாற்றின் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயனிந் திரனஞ் சமுனென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே.

பொழிப்புரை :

விளங்கும் சேல்மீன்களைக் கொண்டுள்ள கடலின் அயலே உள்ள திருமாமறைக்காட்டில் உறையும் செல்வனே! முற்காலத்தில் திருமால், பிரமன், இந்திரன் ஆகியோர் அஞ்சுமாறு காலில் வைத்து மிதித்துக் கணை பூட்டும் வில்லை ஏந்திய காமனை எரித்ததன் கருத்து யாதோ?

குறிப்புரை :

வேலாவலயத்து அயல் - கடலின் பக்கத்தில். மிளிர்வு - விளங்குதல். சேல் - மீன். முன் மாலும் அயனும் இந்திரனும் அஞ்சும்படி மன்மதனை எரித்ததன் கருத்து என்னை என்று வினாவியது. கால் ஆர் சிலை - வலக்காலால் மிதித்தல் பொருந்திய வில். `அறனிலாதான் வெஞ்சினக்கோலின் நோன்றாள் மிதித்து மெய்குழைய வாங்கிச் செஞ்சிலை நெடுநாண்பூட்டித் திருவிரல் தெறித்துத்தாக்கி` (திருவிளையாடல் - கூடற் - யானை எய்த. 29) சிலை எனப்படும் மரத்தாற் செய்யப்படுதலின், `சிலை` (கலி . 15-1. உரை) எனப்பட்டது. `சிலைவிற்கானவன்` (குறுந் .385)

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

கலங்கொள் கடலோ தமுலாவு கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே.

பொழிப்புரை :

மரக்கலங்களைக் கொண்டுள்ள கடலின் ஓதம் உலாவுகின்ற கரைமீது வலம்வருபவர் வாழ்த்தி இசைத்துப் போற்றுமாறு விளங்கும் மறைக்காட்டில் விளங்கும் பெருமானே! இலங்கை மன்னன் இராவணன் அடர்க்கப்பட்டு இடர் எய்துமாறு அசையும் உன் திருவடி விரலால் ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்த காரணம் யாதோ?

குறிப்புரை :

கலம் - மரக்கலம். ஓதம் - நீர். கரைமேல் வலங்கொள்பவர் - திருமறைக்காட்டில் வலம்வரும் முறைமை ஏனைய சிவதலங்களில் வலம் வருதலினும் விசேடம் உடையது. திருக்கோயில் வலம்மட்டும் பிறதலங்களில் நிகழும். இங்குத் திருமறைக்காட்டையே வலம் வருதல் வேண்டும். இதனை ஆளுடைய அரசரும் `மண்ணினார் வலம்செய் மறைக்காடார்` என்று குறித்தருளியது உணர்க. உடையான் - இராவணன். அடர் - முதல் நிலைத் தொழிற்பெயர். அலங்கல் - அசைதல். அன்பர்கள் திருவடிக்கண் சார்த்திய மாலையுமாம். `ஆர் மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில், தாள் தளையிடு மின்` (திருவாசகம் திருவண்டப்பகுதி. 142-143) இராவணன் கயிலையை எடுத்தபோது அடர்த்து அருள்செய்ததன் கருத்தை வினாவியது. வினாச் சொல் வருவித்துரைக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன் னைமுனென்கொல்
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே.

பொழிப்புரை :

பலகோடி உருத்திரர்கள் தலைவன் என்று போற்றும், தேன் பொருந்திய அழகிய பொழில்கள் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் செல்வனே! பன்றியும் கழுகும் ஆன திருமால், பிரமர் உன்னை முற்காலத்தே நிலத்தை அகழ்ந்து சென்றும், வானத்தில் பறந்து சென்றும் கண்டிலர். அதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

பல்கோடி உருத்திரர்கோன் என்று போற்றும் செல்வா என்று இயைக்க. `நீலத்தார் கரியமிடற்றார் நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணினார் பற்று, சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார், சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்` (தி .3 பதி .1 பா .3) எனத்தில்லையிற்கண்ட உருத்திரகண தரிசனத்தை உணர்த்தியவாறறிக. ஏனம் - பன்றி. கழுகானவர் - பிரமனார்.(தி .2 ,168. பா .9) வானத்தில் கழுகும் தலத்தில் ஏனமும் என இயைக்க, எதிர்நிரல்நிறை. அரியும் அயனும் அடிமுடி தேடியதன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.

பொழிப்புரை :

வேதங்கள் பலவும் வேள்விகள் செய்து வியந்து உன் திருவடிகளைப் போற்ற, கடல்நீர் உலவும் மறைக்காட்டில் உறைகின்ற பெருமானே! வைதிக நெறியினர்க்கு அயலவராகிய சமணர் சாக்கியர்களாகிய அறிவற்றவர்கள் உரைகளால் உம்மை அலர் தூற்றுதற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

ஓமம் - யாகம். மறைக்காடு என்றதன் பெயர்க்காரணம் ஈண்டும் விளக்கியருளினார். ஓதம் - கடல். ஏதில் - அயல். `ஏதிலார் குற்றம்` `ஏதிலார் ஆர`(திருக்குறள்) ஈண்டுச் சமயத்தால் அயலவராயினார். ஆதர் - அறிவின்மையுடையவர். அலர் - பழிச்சொல். அவைதிக மதத்தினர் அழியாத வைதிக சைவ சமயத்தைப் பழித்துரைத்ததன் கருத்தை வினாவியது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே.

பொழிப்புரை :

காழி நகரில் தோன்றிய கலைகளில் வல்ல ஞானசம்பந்தன் வாழ்த்துதற்குரிய மறைக்காட்டில் உறையும் ஈசனைத் தரிசிக்கும் பேறு வாய்த்து அறிவித்த ஏழிசை பொருந்திய இப்பதிகப் பாமாலையை ஓதி வழிபட வல்லவர், வாழும் இவ்வுலகோர்தொழ வான்அடைவர்.

குறிப்புரை :

காழிந்நகரான் - விரித்தல் விகாரம். கலை - சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக்கலை ஞானம். ஞானம் - பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானம். சம்பந்தன் - அவ்விரண்டு ஞானங்களின் சம்பந்தத்தை உடையவன். வாழி - வாழ்ச்சியை உடைய. வாய்ந்து:- திறக்கப்படாத கதவு திறக்கப்பெற்றுத் தரிசிக்க வாய்ந்து என்றவாறு. அறிவித்த இது நன்கு இறைவைத்தருள் செய்க (பா .1) என்று பல வினாக்களை அறிவித்த. இம்மாலை வல்லார் உலகோர்தொழ வான்அடைவார் என்க.
சிற்பி