திருக்குறும்பலா


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்தசெல்வர்
இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

பிறைமதியை அழகுறப் புனைந்து, கங்கையைச் சடையில் கரந்து உமாதேவியை இடப்பாகமாக கொண்டு, பொருந்தாத வேடத்தோடு இடுகாட்டில் உறைதலை விரும்பிய செல்வர் எழுந்தருளியுள்ள இடம் யாதெனவினவில், ஏல மணம் கமழ்வதும், சோலைகளில் வண்டுகள் யாழிசை போல ஒலிக்கக் குருந்தமரம் மணம் வீசும், குன்றுகள் அருகே சூழ்ந்துள்ளதுமான குளிர்ந்த சாரலை உடைய குறும் பலாவாகும்.

குறிப்புரை :

திருந்தச் சூடிக்கரந்து பொருந்திப் பொருந்தாத வேடத்தால் உறைதல்புரிந்த செல்வர் என்று இயைக்க. மதி - பிறை. தெள்நீர் - தெளிந்த கங்கைநீர். சடைக்கரந்து - சடையில் மறைத்து. தேவிபாகம் பொருந்தி - தேவியினது பாகத்தைத் தான் பொருந்தி. பொருந்தாத வேடத்தால் - காட்டில் உறைவதற்கு ஒவ்வாத கோலத்தால். புரிந்த - விரும்பிய. ஏலம் - வாசனைப் பொருள்களுள் ஒன்று. `தக்கோலம் தீம் பூத் தகைசால் இலவங்கம் .... கப்பூரம் சாதியோடு ஐந்து`. யாழ்செய் - யாழோசைபோலும் இன்னோசை செய்கின்ற. குருந்தம் - குருந்தமரம். குறும்பலா என்பது பலா வகைகளுள் ஒன்று. குற்றாலம், குறும்பலா இரண்டும் திருக்குற்றால மலையிலுள்ள தலவிருட்சம். `வம்பார் குன்றம் .... குற்றாலம்` என்றும் `குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலா` என்றும் இருவேறு திருப்பதிகம் அருளியவாறு உணர்தற்பாலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பானம்மை
ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும் அந்தண்சாரல்
கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட
கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பதினாறுகலைகளும் வளர்தற்குரிய பிறைமதியை முடியில் சூடித் திருநீற்றுப் பொடியணிந்த நம்மேல் விருப்புடைய இறைவன், நம்பால் வந்து நம்மை அடிமையாகக் கொண்டருளும் அம்மான். அவனது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலில் கீளத்தக்க பல வின்கனிகளை மந்திகள் கீறித்தம் கிளைகள் பலவற்றோடு உண்டு வீழ்த்திய சுவையான பலவின் இனிய சுளைகளை ஆண்குரங்குகள் உண்டு மகிழும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

நாள்பலவும் சேர்மதியம் - பூரண சந்திரன், `பிள்ளை மதியும் புனலும்சூடி` எனப் (பா .7) பின்வருதலறிக. நம்பான் - சிவபெருமான். `நம்பான் மேய நன்னகர்`(தி .1 ப .99 பா .1). `நடம் பயிலும் நம்பானே`, `நல்லூர்ப் பெருமணம்மேய நம்பானே`. (தி .3 ப .125 பா .1). ஆட்பலவும் - ஆலாகும் பலவகையும். கீள்பல - பிளத்தற்குரிய பலா. கீண்டு - பிளந்து, (கிழி - கீழ் - கீள், கிழிந்து - கீழ்ந்து - கீண்டு). கிளை கிளையல் - கிளை கிளையாக. கிளையின் என்றிருந்ததோ? மந்தி - பெண்குரங்கு. விண்ட - (நீங்கிய) பிளந்த. கோள் - குலை. கடுவன் - ஆண்குரங்கு. உகளும் - துள்ளும். இது பலாவிற்கேற்ற வருணனை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி
ஆட லரவசைத்த வம்மா னிடம்போலும் அந்தண்சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும்பொனுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

ஊன் வாடிய தலைமாலையைச் சூடிப் புலித்தோலை உடுத்து ஆடும் பாம்பை அறையில் கட்டிய அம்மானது இடம், அழகிய குளிர்ந்த சாரலில் பாடும் பெண்வண்டுகள் அரும்புகளைப் போதாக அலர்த்த மகரந்தப் பொடிகள் பசும்பொன் போல உதிரக்காந்தள் மலர்ந்து மணம் பரப்பும் குன்றுகள் சூழ்ந்த குறும்பலாவாகும்.

குறிப்புரை :

வாடல் - வற்றுதல். வலித்து வீக்கி - உறுதியாகக் கட்டி. அசைத்த - கட்டிய, ஆட்டிய எனலுமாம். போது - மலரும் பருவத்தது. அலர்த்த - அலரச்செய்ய. கோடல் - வெண்காந்தள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும் நெடுந்தண்சாரல்
கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பால் போன்ற வெண்மையான மதியை முடியிற் சூடி, ஒருபாகத்தே உமையம்மையைக் கூடிநின்று ஆடிப்பாடி, மார்க்கண்டேயர் பொருட்டுக் காலனின் உடல் கிழியும்படி அவனைச் சினந்த பெருமானது இடம், கற்கள் சூழ்ந்த வெற்பிலுள்ள சுனைகளில் கருங்குவளைகள் கண் போல மலரவும், வண்டுகள் இசைபாடவும் நெடிய குளிர்ந்த சாரலில் அழகிய மயில்கள் பெண் மயில்களோடு ஆடி மகிழும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

பிறை சூடியும், உமைமங்கையை இடப்பால் கொண்டும் பாடியும் ஆடியும் எமனை உதைத்தும் நின்ற சிவபெருமான் இடம். கல் ஆம் வெற்பு - கற்கள் சூழ்ந்த மலை. குவளைகள் கண்போல் திறக்க. அரற்றும் - ஒலிக்கும். கோலம் - அழகு. மடம் - அழகு; மென்மை, மஞ்ஞை - மயில். பேடை - பெண்மயில். ஆட்டு - ஆட்டம். அயரும் - செய்யும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித்தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய்சூழ்ந்த
மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்குசாரல்
குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

தலையில் ஒளிவிரியும் வெண்மையான பிறையையும் கங்கையையும் தாங்கி, உமாதேவியைக் காதலித்து ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவமூர்த்தியின் இடம், முதிய மூங்கில் சூழ்ந்துள்ள மலையிடத்து நீர்க்கசிவுகள் பேரருவியாகப் பொன் கொழித்து ஒழுகுவதும் பொருந்திய சாரலகத்தே வாழைக்குலையும் மாங்கனிகளும் தேன் பிலிற்றுவதுமான குறும்பலா என்னும் கோயிலாகும்.

குறிப்புரை :

தலைமதியம், வான்மதியம். வான் - ஒளி. தலையில் மதியம் கதிர்விரிய புனலைத்தாங்கி, பாகங்காதலித்த மூர்த்தி என்க. முதுவேய் - முதிய மூங்கில். அசும்பு - பொசியுநீர். பிலிற்றும் - துளிக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக்கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ்வெற்பில்
ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி யிழிபூஞ்சாரற்
கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்பலாவே.

பொழிப்புரை :

திருநீற்றைப் பொருந்தி விளங்கும் முப்புரிநூலை அணிந்தவரும் தண்மதியரும் நெற்றிக்கண்ணரும் காலனைக் கடிந்தவரும் ஆகிய சிவபிரானது இடம், குளிர்ந்த மலையின்கண் ஆண் பன்றி, பெண்பன்றியோடு கலந்து கீழிறங்கும் சாரலின்கண் கொம்புத்தேன் சேகரிக்கும் வண்டுகள் இசைபாட அதனைக் கேட்டுக் குயில் கூவும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

நீற்றே - திருநீற்றிலே. வெள்நூல் - வெளிய முப்புரிநூல். கூற்று - எமன். ஏர் - எழுச்சி. சிதைய - கெட, ஏர் சிதைய - அழகு கெட எனலுமாம். ஏறு + ஏனம். ஏற்றேனம் - ஆண்பன்றி. ஏனம் - (பெண்) பன்றி, இவையோடு அவை விரவி - இவ்விலங்கு முதலியவற்றினினத்தொடு அவ்விலங்கு முதலியவற்றினினம் கலந்து. இழி - கீழிறங்குகின்ற. கோல்தேன் - கொம்புத்தேன். கேளா - கேட்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ்சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந்தாங்கி
மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து வயிரமுந்திக்
குன்றத் தருவி யயலே புனறதும்புங் குறும்பலாவே.

பொழிப்புரை :

பொன் போன்ற கொன்றை மலர்க் கொத்துக்களையும் இளமதியையும் கங்கையையும் சூடி, பின்னே கொத்தாக அமைந்த நீண்ட சடையை உடைய எம்பெருமானது இடம், பிரளய வெள்ளம் போலப் பெருகி மன்றத்தே அடிக்கப்படும் முழவம் போல ஒலித்து, மணி, வயிரம் முதலியவற்றுடன் சொரியும் அருவியின் புனல்ததும்பும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

பொன் தொத்த - பொன்போலும் பூங்கொத்துக்களையுடைய. பிள்ளைமதி - இளம்பிறை. புனல் - கங்கை. பின்தொத்த - பின் கூடிய. பிலயம் - பிரளயம். `கற்பமுறுபிரளயம் வந்து உலக மூன்றையும் அழிக்குங்காலமேனும் தற்பரரின் திரிகூடம்போல் எனக்கும் அழியாமை தருதல்வேண்டும்` (திருக்குற்றாலத் தலபுராணம், குறும்பலாச்சருக்கம் .17). திருக்குற்றாலத்தின் வீழும் அருவிகள் பிரளய வெள்ளம் போல்கின்ற பெருக்கைத் தாங்குவன. மன்றத்தில் (மண் -) மார்ச்சனையை உடைய முழவம்போல்கின்ற ஓசை மிக்கன. மணிகளைக் கொழிப்பன. வயிரமணிகளை உந்தி (- செலுத்தித் தள்ளி) வருவன. அவ்வருவிநீர், அயலிலுள்ள குறும் பலாவின்பால் ததும்பும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

ஏந்து திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ் சாரற்சாரல்
பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்பலாவே.

பொழிப்புரை :

உயர்ந்த திண்ணிய தோள்களை உடைய இராவணனைக் கயிலைமலையின் கீழ் அடர்த்தவரும், சாந்தமெனத் திருநீற்றை விரவப்பூசியவருமாகிய சைவரது இடம், மழைச்சாரலை உடைய மலைச்சாரலில் வேங்கைப்பூங்கொத்துக்களை ஒடித்து மத்தகத்தே அழகுற ஏந்திப் பெண்யானையோடு ஆண் யானைகள் சேர்ந்து வணங்கும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

திணி - நெருங்கிய. திண் - திண்ணிய, உறுதியுடைய, மால்வரை - பெரிய கயிலைமலை. சாந்தம் என நீறு அணிந்த :- `சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த நீறு` (தி .1 ப .52 பா .7). சாரல் சாரல் - மழைச்சாரலையுடைய மலைச்சாரலில். சாரல் தோறும் எனல் சிறவாது. வேங்கைப் பூக்கள் தண்மை (குளிர்ச்சி) யும் நறுமை (நன்மை) யும் உடையன.(நறுநாற்றம் - நன்னாற்றம்). இறுத்து - முறித்து. பிடி - பெண்யானைக்குக் கூந்தல் உண்டென்பது மரபு. `கூந்தல் மாலைக் குமரிக் பிடிக்குழாம்` - (சிந்தா. 858). `கூந்தற்பிடிக்குழாம்` (பா .11). `நறைக்கூந்தற்பிடி` எனக் குமரகுருபர முனிவர் (பா .45, 464) காலத்திலும் இவ்வழக்கம் இருந்தது. களிறு (ஆண்யானையு) ம், பிடியும் வேங்கைப் பூக்களைப் பறித்து, சிவபூஜைக்குரிய நெறியில் மத்தகத்தில் ஏந்திக்குறும்பலா நாதரை வழிபடுகின்றன. அவ்விலங்குகட்குள்ள சிவபத்தி மக்கட் பிறப்பெய்தியும் அடியேற்கு இல்லை. எப்பிறப்பில் உறுமோ?

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

அரவி னணையானு நான்முகனுங் காண்பரிய அண்ணல்சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.

பொழிப்புரை :

பாம்பணையானாகிய திருமாலும், நான்முகனும் காணுதற்கு அரியவராக விளங்கிய தலைவரும், முடியில் பொருந்த இளம் பிறையைச் சூடியவரும் ஆகிய விகிர்தருக்கு உரிய இடம், விரிந்த பூக்களை உடைய மலைச்சாரலில் மரவம், மல்லிகை, சண்பகம் ஆகியன மலர்ந்து நிற்க அவற்றின் தேனை உண்ணக் குரவமலர்ப் பாவை முறுவல் செய்வது போல மலரும் குன்றினை அடுத்துள்ள குறும் பலாவாகும்.

குறிப்புரை :

அரவின் அணையான் - பாம்பின் படுக்கையையுடைய திருமால். காண்பு அரிய - காண்டற்கு அருமையாயுடைய. அண்ணல் - சிவபெருமான். சென்னி - தலை. விரவி - கலந்து. மரவம் - குங்கும மரம். மாந்த - உண்ண, குடிக்க. குரவம் - குராமரம். முறுவல் செய்ய - பற்களைப்போலப் பூக்க. (சிரிக்க என்ற பொருளும் தொனித்தல் அறிக).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.

பொழிப்புரை :

உடலைமூடிய சீவரம் என்னும் ஆடையை அணிந்தவர்களும் முன்னால் அறுசுவை உணவுண்டு பின்னால் காடியைக் கூறாக்கி உண்போரும் ஆகிய சமணர்களை வெறுத்த சைவராகிய சிவபிரானது இடம் கற்கள் நிறைந்த மலையகத்தே நீண்ட மூங்கில்கள் வளைந்து நிற்க, அவற்றில் குரங்குகள் நின்றுஆட, வேடர்கள் குய் என்ற ஒலிக்குறிப்போடு கூவிக் கை கவிக்கும் குறும்பலாவாகும்.

குறிப்புரை :

சீவரத்தார் - துவர் ஊட்டின சீலையை உடுத்தவர். உண்டு - உட்கொண்டு. முன்கூறி பின்கூறி :- `அறுசுவையுண்டி, அமர்ந்து இல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி உண்டார்` என்றது சைனர் கூற்று. காடி - காடிநீர். சமண் - சமணர். வேய் - மூங்கில். குனிய - வளைய. கடுவன் - ஆண்குரங்கு. கழை - மூங்கிலின் கழை. நிருத்தம் - கூத்து. கூவி - அழைத்து. `குய்விளியாக்` `கூய் விளியாக்` என்று பாடாந்தரம் உண்டு. (சுவாமிநாத பண்டிதர் தலமுறைப் பதிப்பு. பக்கம் .911 பார்க்க). வேடர்கள் `குய்` என விளித்தல் உண்டு. கை மறிக்கும் :- கைகவிக்கும் `தக்கார் போற் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே` (சிந்தா .1227).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல்
நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார்
தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள் தளராவன்றே.

பொழிப்புரை :

பூங்கொம்புகளைக் கொண்ட மலர்ச்சோலைகளைக் கொண்ட குறும்பலாவில் மேவிய கொல்லேற்றுத் தலைவனும், நம்மால் விரும்பப்படுபவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் பரவும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இன்பம் தரும் இப்பதிகப் பாடல்களை ஒதவல்லவரும் விரும்பிக்கேட்பவரும் தம்பால் உள்ள தீவினைகள் நீங்கப் பெற்று நல்வினைப் பயன்களைத் தளராது பெறுவர்.

குறிப்புரை :

`கொம்பார் சோலை` (திருக்குற்றாலப் பதிகம் . 1. பார்க்க). ஏற்றண்ணல் - எருதூரும் பெருமான். நம்பான்:- (பா.2. பார்க்க). நம்பன் - உயிர்களின் நசைக்கு உரியவன். `நம்பும் மேவும் நசையாகும்மே` (தொல். சொல்.உரிச் . 33). இன்பு ஆய பாடல் - பேரின்பமயமான திருப்பாக்கள். தம்பால - தம் இடத்திலுள்ள. தளரா - தளராமல் வளரும்.
சிற்பி