திருநணா


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே.

பொழிப்புரை :

பந்தாடும் விரலைஉடைய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, பாம்பை அணிகலனாகப் பூண்டு, எருதேறி, அழகிய மாலையாக அரவத்தைப் பூண்டுள்ள சிவபிரானது இடம், அழகிய குளிர்ந்த மலைச்சாரலின் அருகே மந்திகள் நடனமாடவும் பூம் பொழிலில் வண்டுகள் பாடவும் செந்தேனின் தெளிவில் தோய்ந்த மாங்கனிகள் உதிரும் வளமுடைய திருநணாவாகும்.

குறிப்புரை :

பந்து ஆர் விரல் மடவாள் - `பந்தார் விரலி` `பந்தமரும் விரல் மங்கைநல்லாள்` `பந்தார் விரலுமையாள்` `பந்துலாவிரற் பவள வாய்த் தேன்மொழிப் பாவை` `பந்துசேர் விரலாள்` எனப்பிற இடத்திலும் அருளியிருத்தலறிக. பாகம் - இடப்பக்கம். நாகம் - பாம்பு. ஏறது - இடபவாகனம். அம்தார் அரவு அணிந்த - அழகிய பாம்புகளை மாலைபோல் அணிந்த. அம்மான் - அருமகன் என்பதன்மரூஉ. அம் மஹாந் என்பதன் திரிபெனல் பிழை. பெம்மான் என்பது பெருமகாந் என்பதன் திரிபெனல் இல்லை. `எம்மான்`, `தம்மான்`, `கோமான்` என்பவற்றில் மகன் என்பதே திரிந்தது. வந்து - காற்று. மந்தி - குரங்கு. தெளி - தெளிவு. தேமா - தித்திக்கும் மா:- எழுவாய். கனி :- செயப்படு பொருள். உதிர்க்கும் :- பயனிலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணையேந்தி
ஈட்டுந் துயரறுக்கு மெம்மா னிடம்போலும் இலைசூழ்கானில்
ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூழோசைச்
சேட்டார் மணிக ளணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.

பொழிப்புரை :

அழகியதொரு கண் பொலிந்து விளங்கும் நெற்றியினரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், பழவினைத் தொகுப்பினைத் தீர்த்தருள்பவரும் ஆகிய எம் இறைவனது இடம், இலைகள் அடர்ந்த காட்டில் மலை அருவி இசைகாட்ட, மூங்கில்கள் உராய்ந்து ஓசை எடுப்ப உயர்ந்த மணிகளைவாரி அலைகள் கரைகளில் சேர்க்கும் திருநணாவாகும்.

குறிப்புரை :

நாட்டம் - கண், தீவிழி. வீணையேந்தி :- `மிக நல்ல வீணைதடவி` (பதி .221:- 1). ஈட்டும் துயர் - ஆகாமியகன்மம் (சஞ்சிதமாய்ப் பிராரப்தம்) ஆகுந்துயரம். கான் - காடு. விசை - வேகம். முந்தூழ் - மூங்கில். சேடு ஆர் - (மலையின்) உயரத்தில் பொருந்திய. திரை - அருவியின் அலைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்த
மின்றாங்கு செஞ்சடையெம் விகிர்தர்க் கிடம்போலும் விரைசூழ்வெற்பில்
குன்றோங்கி வன்றிரைகண் மோத மயிலாலுஞ் சாரற்செவ்வி
சென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.

பொழிப்புரை :

திருத்தமான இசையுடன் வேதங்களை அருளி, உமையொரு பாகராய் மின்னல் போன்ற செஞ்சடையினராய் விளங்கும் சிவபிரான் உலகம் ஏத்த விளங்கும் இடம், மணம் கமழும் மலையகத்தே குன்றுகள் போல அருவியின் திரைகள் எழுந்து மோத மயில்கள் ஆட வானவர்கள் சாரலை அடைந்து ஏத்தி வணங்கும் சிறப்பினதாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

நன்று ஆங்கு இசைமொழிந்து - நன்றாக இசையுடைய சாமவேதத்தைப் பாடியருளி. வேதங்களைத் தோற்றுவித்தருளி எனலும், இசையைத் தோற்றியருளி எனலும் ஆம். மொழிந்து ஆய் ஏத்தத் தாங்கு செஞ்சடை விகிர்தர் என்று இயைக்க. நன்னுதலாள் - உமாதேவியார். ஞாலம் - பூமியிலுள்ளோர். உலகோர் எனலுமாம். மின் - ஒளி. விரை - மணம். வெற்பு - மலை. குன்று ஓங்கி வல்திரை (அலை) கள் மோத மயில் ஆலும் சாரல். செவ்வி - அழகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கையின் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல்கொண்டு
மெய்யின் முழுதணிந்த விகிர்தர்க்கிடம்போலு மிடைந்துவானோர்
ஐய வரனே பெருமா னருளென்றென் றாதரிக்கச்
செய்ய கமலம் பொழிதே னளித்தியலுந் திருநணாவே.

பொழிப்புரை :

கையின் மழுவை ஏந்தி, காலில் சிலம்பை அணிந்து, யானையின் தோலைப் போர்த்து விளங்கும் விகிர்தனுக்குரிய இடம், தேவர்கள் கூடிநின்று `ஐயனே! அரனே! பெருமானே! அருள்புரிக` என்று விரும்பிப் போற்றுவதும், செந்தாமரை மலர்கள் தேனைத் தருவதுமாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

கரி - கரத்தையுடையது, யானை. யானைத்தோலை உடம்பு முழுதும் மறையப் போர்த்தார் என்றவாறு. கைம் மழு, காற் சிலம்பு, மெய்ப்போர்வை. மிடைந்து - நெருங்கி. `ஐயனே`. அரனே! பெருமானே! அருள் என்று வானோர் விரும்பிப் போற்ற. செய்ய கமலம் - செந்தாமரை. பொழி -வெளிப்படுத்தும் தேன்தரும் என்றபடி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டு
தொத்தேர் மலர்சடையில் வைத்தா ரிடம்போலுஞ் சோலைசூழ்ந்த
அத்தே னளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பி
தெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.

பொழிப்புரை :

முத்துப் போன்ற பற்களை உடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கத் தம் மார்பில் வெண்ணூல் பூண்டு பூங்கொத்துக்களைச் சடைமிசைச்சூடியுள்ள சிவபிரானது இடம், சோலைகளில் சூழ்ந்த வண்டுகள் தேனுண்ணும் விருப்பினால் இசைபாடி ஆட, தும்பிகள் `தெத்தே` என்ற ஒலிக்குறிப்போடு முரல விளங்கும் அழகுடையதும் பெயர் சொல்லக் கேட்டார் வினைகளைக் கெடுப்பதும் ஆகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

முத்து ஏர் நகையாள் - முத்தினைப்போலும் பற்களையுடைய உமாதேவியார். திருமார்பிற் பூணுநூல் பூண்டிருப்பது முன்னும் பின்னும் சிற்சில பதிகங்களிற் கூறப்படுகின்றது. தொத்து - (பூங்) கொத்து. ஏர் - அழகு. மலர் - கொன்றை (யும் பிறவும்). `சடையமர் கொன்றையினார்` (தி .2 ப .205. பா .3). `கடிபடு கூவிளமத்தங் கமழ்சடை மேலுடையார்` (? .6). அளி - வண்டுகள். களி - கள்ளுண்ட (மயக்கம்) களிப்பு. ஆல - ஒலிக்க. `தெத்தே` என்பது அநுகரணம். கேட்டார் வினைகெடுக்கும் - செவிமடுத்த நல்வினையாளரது தீவினையைப் போக்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

வில்லார் வரையாக மாநாக நாணாக வேடங்கொண்டு
புல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்
அல்லாத சாதிகளு மங்கழன்மேற் கைகூப்ப அடியார்கூடிச்
செல்லா வருநெறிக்கே செல்ல வருள்புரியுந் திருநணாவே.

பொழிப்புரை :

மேருமலை வில்லாகப் பொருந்த, வாசுகி என்னும் பெரிய பாம்பு நாணாக அமைய, தான் பெருவீரனாக வேடம்புனைந்து அவுணர்தம் முப்புரங்களையும் எரித்தவனது இடம், புலி மான் இவையும் அல்லாத பிறவிலங்கினங்கள் யாவும் திருவடிகளைக் கைகூப்பி வணங்க, அடியவர்கூடி வழிபடுவதும், யாரும் செல்ல இயலாத வீட்டு நெறிக்குக் செல்ல இறைவன் அருள் புரிவதும் ஆகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

வில் ஆர் வரை ஆக - மேருமலை வில்லாகப் பொருந்த. மாநாகம் நாண் ஆக - பெரிய பாம்பு விற்கயிறாக. புல்லார் - தழுவாத (பகை)வர். புலி, மான் இரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல, அவை அல்லாத விலங்கினங்களும் திருவடியைக் கைகுவித்து வழிபடுகின்றன. அதுவே அன்றி, அடியார்கட்கு அச்சம் முதலியன உளவாகா வண்ணம், அவர்கள் போகாத வழியிலே போகின்றன. சிவபக்தியும் உடைய விலங்கினங்கட்குள்ள நல்வினை அடியேனுக்கில்லையே; இவ்வுயரிய மக்கட் பிறப்பை எய்தியும், அவனருளாலே அவன் தாள் வணங்க அவனருள் செய்தல் வேண்டும். அதற்கு நாம் பெருந்தவம் புரிதல் வேண்டும். கழல் - திருவடிக்கு ஆகுபெயர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கானார் களிற்றுரிவை மேன்மூடி யாடரவொன் றரைமேற்சாத்தி
ஊனார் தலையோட்டி லூணுகந்தான் றானுகந்த கோயிலெங்கும்
நானா விதத்தால் விரதிகணன் னாமமே யேத்திவாழ்த்தத்
தேனார் மலர்கொண்டடியா ரடிவணங்குந் திருநணாவே.

பொழிப்புரை :

காட்டில் வாழும் யானையின் தோலால் உடலை மூடி, ஆடும்பாம்பினை அரைமேல் கட்டி, ஊன் பொருந்திய தலையோட்டில் பலி ஏற்று உகப்பவராகிய சிவபிரான் உவப்புடன் மேவும் கோயில் தவவிரதிகள் எங்கும் பல்வேறு வகைகளில் திருப்பெயர்களைச் சொல்லி வாழ்த்த அடியவர் தேன்சிறந்த மலர்களைக் கொண்டு மகிழ்ந்து அடி வணங்குவதாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

கான் - காடு. ஆர் - பொருந்திய, நிறைந்த. களிறு உரிவை - யானைத்தோல். மேல்மூடி - உடம்பின்மேல் போர்த்து மறைத்து ஆடு அரவு - ஆடும் பாம்பு. சாத்தி - சார்த்தி (கட்டி). ஊன் ஆர் தலை ஓட்டில் - மாமிசத்தொடு கூடிய பிரமகபாலத்தில். ஊண் - உண்ணுதலை. உகந்தான் - விரும்பினவன். உகந்த - விரும்பி எழுந்தருளியுள்ள. நானா விதத்தால் - பலவகையால் . விரதிகள் - தவத்தோர்கள் , யாகத்தோர்கள். நல்நாமமே - பிறவிப்பிணிக்கு மருந்தாகிய திருவைந்தெழுத்தையே, அடியார் அடி:- எழுவாய்த் தொடரும் ஆறன்றொகை நிலைத்தொடரும் ஆம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றி
முந்நீர்க் கடனஞ்சை யுண்டார்க் கிடம்போலு முனைசேர்சீயம்
அன்னீர் மைகுன்றி யழலால் விழிகுறைய வழியுமுன்றிற்
செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.

பொழிப்புரை :

பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அழல் பொழியும் தன் விழி குறைய அதனோடு போரிட்டு முன்றிலில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.

குறிப்புரை :

மன்நீர் - மிக்க நீர். நிலைபெற்ற நீர் (கடல்). முனை - பகை. சீயம் - சிங்கம். அல் - இரவு. நீர்மை - தன்மை. குன்றி - குறைந்து. அழல் - நெருப்பு. முன்றில் - முற்றம். செந்நீர் - இரத்தம். கரி - யானை, சிங்கத்தின் தொலைவும் யானையின் வெற்றியும் குறிக்கப்பட்டன.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்
கையார் பலியேற்ற கள்வ னிடம்போலுங் கழல்கணேடிப்
பொய்யா மறையானும் பூமிய ளந்தானும் போற்றமன்னிச்
செய்யா ரெரியா முருவ முறவணங்குந் திருநணாவே.

பொழிப்புரை :

கரிய நீலமணிபோன்ற மிடற்றினனும், உமைபாகனும் வீடுகள் தோறும் பலியேற்றுப் பலியிடுவார் உள்ளங்களைக் கவரும் கள்வனும் ஆகிய சிவபெருமானது இடம் திருமுடி திருவடிகளைத் தேடி வேதங்களை ஓதும் நான்முகனும் நிலம் அளந்த திருமாலும் போற்ற நிலைபேறுடைய செந்தீயுருவாய் உருவம் பெற அவர்கள் இருவரும் அப்பெருமானது அடிமுடி காணல் ஆற்றாது வந்து வழிபடும் திருநணாவாகும்.

குறிப்புரை :

மை ஆர் மணிமிடறன் - கருமை நிறைந்த நீலமணி போலும் திருக்கழுத்துடைய சிவபிரான். மேகத்தைப்போலும் அழகிய கண்டன் எனலுமாம். நேடி - தேடி. பொய்யாமறை - வேதம். மன்னி - நிலைத்து. செய் - செம்மை. எரியாம் உருவம் - தீப்பிழம்பு வடிவம். விடமுண்ட ஆற்றலுடையவன் பலியேற்று உண்ணல் வேண்டா. மங்கைபங்கன், தன்பால் இரப்பவர்க்கு ஈதல் வேண்டும். அவன், மனைகள் தோறும் சென்று இரப்பது, மங்கையுடைமைக்கு ஏலாது. தன் கோலத்திற்கு ஒவ்வாத செயலை மேற்கொண்டதால் அதற்கு ஓர் ஏது வெளிப்படாதிருத்தலைக் குறிக்கக் கள்வன் என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசி
மூடும் உருவ முகந்தா ருரையகற்று மூர்த்திகோயில்
ஓடு நதிசேரு நித்திலமு மொய்த்தகிலுங் கரையிற்சாரச்
சேடர் சிறந்தேத்தத் தோன்றி யொளிபெருகுந் திருநணாவே.

பொழிப்புரை :

ஆடையின்றி அம்மணமாகத் திரிந்து இரந்து உண்பவரும் துன்பமான செய்திகளைப் பேசி உடலைப் போர்த்தித் திரிபவரும் ஆகிய அமணர், பத்தர்களின் உரைகளைச் செவிமடுக்காத சிவமூர்த்தியின் கோயில், பெருகி ஓடும் நதி, முத்து, அகில் முதலியவற்றைக் கரையில் சேர்ப்பதும், பெரியோர் சிறப்புடன் வந்து வழிபடுவதும், கட்புலனாய் ஒளிபெருகி விளங்குவதுமாகிய திருநணாவாகும்.

குறிப்புரை :

`ஆடை ... உண்பார் என்பது திகம்பர சைனரையும் மூடும் உருவம் உகந்தார்` என்பது சுவேதாம்பர சைனரையும் தேரரையும் குறித்தன. நித்திலம் - முத்து. அகில் - அகில் மரம். சேடர் - பெரியோர். தோன்றி - செங்காந்தள். `கொய்ம்மலர தோன்றி போற்சூட்டுடைய சேவலும்` (சீவகசிந்தாமணி .73).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கல்வித் தகத்தாற் றிரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தா லினிதுணரு ஞானசம் பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தா லிறைவன் றிருநணா வேத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின்மேலே.

பொழிப்புரை :

கரையை அகழும் வித்தகத்தோடு அலைகள் சூழும் கடலைஅடுத்துள்ள காழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றி நல்ல ஞானத்தால் எல்லாவற்றையும் இனிதுணரும் ஞானசம்பந்தன் கருதிச் சொல் வித்தகத்துடன் இறைவனது திருநணாவை ஏத்திய இப்பதிகப்பாடல்களை மேம்பட்ட இசைத் திறமையால் பாடிப் போற்றுவார் இவ்வுலகில் பழியிலராவர்.

குறிப்புரை :

கல் வித்தகத்தால் - `கல்லயங்குதிரை சூழநீள்கலிக் காழி` (தி .2 ப .211 பா .4). கற்சாதுரியத்தால் என்பது பொருளாயினும் ஈண்டுப் பொருந்தாது. வித்தகம் - பெருமை; சிற்பம் முதலிய சிறந்த தொழில், அதிசயம் என்னும் பொருள்களுள் ஏதேனும் பொருந்தும், காழிச்சிறப்பாகும். `திரைசூழ்கடல்` என்பது காழிக்கு அடையாதல் கடலில் மிதந்ததும் கடலருகிலிருந்ததும் பற்றி. நல்வித்தகத்தால் - நல்ல ஞானத்தால். எண்ணும் சொல்வித்தகத்தால் - கருதிய சொற்சாதுரியத்தால். வல்வித்தகத்தால் - இசையில், பொருளில், அன்பில் வலிய சாதுரியத்தால். இம்மண்மேல் பழி இல்லாதவர் ஆவர்.
சிற்பி