திருநெல்வாயிலரத்துறை


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய மலர்களை உந்திக்கொண்டு பெருகிவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , எம் தந்தை , ஈசன் , பெரியோன் , ஆனேற்றை ஏறிவருவோன் என்று அவன் பெயர்களைப் பலமுறை சொல்லி ஏத்தி மனம் பொருந்தி வழிபடவல்லவர்கட்கு அல்லால் , ஏனையோர்க்குக் கைகூடாதது .

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முத்துச் சிவிகையில் ஏறுவதன் முன்னர் , திருவருட் சிறப்புணர்த்தப் பாடியருளியது . அப்பொழுது ஆங்கு இருந்த அன்பர் அனைவர்க்கும் ஆண்டவன் திருவருளைப் பெறுவதற்கு வேண்டும் வழிபாட்டை வற்புறுத்துவதை ஒவ்வொரு பாடலிலும் உணரலாம் . எட்டாவது திருப்பாட்டில் அருளைச் செயப் படுபொருளாகக் கொள்ளல்வேண்டும் . ஏனைய ஒன்பது பாக்களிலும் அருள் எழுவாயாக நிற்றலறிக . ஈற்றுப்பாட்டில் , அருளைச்சொன்ன பாடல் என்றதுணர்க . எந்தை , ஈசன் , எம் பெருமான் , ஏறமர்கடவுள் ( தி .2 ப .92 பா .5) என்று எடுத்து வாக்கால் ஓதி மனத்தால் சிந்தித்து , ( காயத்தால் வழிபாடு ) செய்பவர்க்கே அடிகள் திருவருள் கைகூடுவது , சென்று - மலவழி மலநடை கொள்ளாது நீக்கி அருள் வழியில் அருணடை கொண்டு . நிவா :- ஆற்றின்பெயர் . அரத்துறை :- அறத்துறை என்பதன் மரூஉ . அரன் துறை என்பது சிறவாது . றகரம் ரகரமாக ஒலித்தல் பல சொற்களிற் காணலாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்தவெம் பெருமான்
சீருஞ் செல்வமு மேத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

சிறந்த மலர்களை வாரிக்கொண்டு உந்திவரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் பொருந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , குளிர்ந்த நீண்ட சடைமேல் இளம்பிறை அணிந்த எம்பெருமானே என்று கூறி அவன் சீரையும் செல்வத்தையும் ஏத்தாத பேதையர்கள் தொழுது பெறுதற்கு இயலாதது .

குறிப்புரை :

ஈரம் - குளிர்ச்சி . ` குளிருஞ்சடை ` ( தி .2 ப .62 பா .6.) ` குளிர்ந்தார் சடையன் `( தி .1. ப .134 பா .3) சிதடர் - குருடர் , பேதையர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பிணி கலந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணி கலந்துசெய் யாத பாவிகள் தொழச்செல்வ தன்றால்
மணி கலந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணி கலந்தநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணிகளையும் பொன்னையும் உந்திக் கொண்டு வரும் நீரை உடைய நிவாநதிக் கரைமேல் அழகுற அமைந்த நெல் வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் பிணிப்போடு அமைந்த மென்மையான சடைமீது பிறையணிந்துள்ள சிவனே எனப் பக்தி செய்து அவன் திருத்தொண்டுகளை அன்போடு செய்யாத பாவிகள் தொழுது பெறுதற்கு இயலாதது .

குறிப்புரை :

பிணி - பிணிப்பு . சடையாதற்குப் பிணிப்பு இன்றியமையாதது . கலந்து - திரிகரணங்களும் ஒற்றுமையுற்று . பணி செய்யாத பாவிகள் . மணிகளையும் பொன்னையும் உந்தி (த் தள்ளி)க் கொண்டு வரும் நீர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

துன்னவாடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லா ல் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி யுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே

பொழிப்புரை :

பொன்னையும் சிறந்த மணிகளையும் உந்திக் கொண்டு வரும் நீரைஉடைய நிவா நதிக்கரைமேல் அன்னங்கள் தங்கி மகிழும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , தைத்த கோவண ஆடை ஒன்றைக் கட்டிக் கொண்டு தூய வெண்ணீறணிந்து திகழும் அவன் பெருமைகளை எண்ணி நைந்துருகுபவர்கட்கு அல்லால் ஏனையோருக்குக் கைகூடுவதன்று .

குறிப்புரை :

துன்ன ஆடை - தைத்தலையுடைய ஆடை . அன்னம் - பறவை . திருஞானசம்பந்தர் காலத்தில் அன்னப்புள் இருந்த உண்மை இதனாலும் புலனாயிற்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

வெருகு ரிஞ்சுவெங் காட்டில் ஆடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் தவழும் பூஞ்சோலைகளில் பூத்த மணம் மொய்க்கும் மலர்களைச் சுமந்து ஓடிவரும் நிவா நதி அருகில் வந்து பொருந்திச் செல்லும் நெல்வாயில் அரத்துறையில் விளங்கும் அடிகளின் திருவருள் , காட்டுப்பூனைகள்வாழும் கொடிய சுடுகாட்டில் ஆடும் விமலனே ! என்று அழைத்து அவன் பெருமைகளை எண்ணி மனம் உருகுபவர்கட்கு அல்லால் ஏனையோர்க்கு ஒரு சிறிதும் கைகூடாதது .

குறிப்புரை :

வெருகு - காட்டுப்பூனை . உரிஞ்சு - தேய்க்கின்ற . உருகி நைபவர் - உள்ளம் உருகி இதுகாறும் இறைவனை வழிபட மறந்தமைக்கு வருந்துவோர் . இழி - இறங்குகின்ற .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

குராமரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவா நதிக்கரைமேல் விளங்கும் நீர்ப்பாம்புகள் இளைப்பாறி மகிழ்வதான நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருள் , வலிமை பொருந்திய கங்கை வெள்ளத்தைத் தன் சடைமிசை ஒளித்த ஒப்பற்றவனே என்று மனம் குளிர்ந்து ஏத்தி வணங்கி மனம் உருகுபவர்க்கு அல்லால் ஏனையோரிடத்து அவன் அன்புகாட்டுவ தில்லை ஆதலின் கை கூடாதது .

குறிப்புரை :

உரவுநீர் - பரந்தகங்கை . ` ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் ` ( நாலடி .175) என்பதில் பரந்த கடல்நீரைக் குறித்தல் அறிக . பரவி - வணங்கி வாழ்த்தி . ` பரவு வார் பிணிகளைவாய் ` என்பதில் வணக்கமும் , ` வாழ்த்துவதும் ... ... யானும் உன்னைப் பரவுவனே ` ( திருவாசகம் 20). என்பதில் வாழ்த்தும் உணர்த்துவது உணர்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணும்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

அழகிய மலர்களை உந்திக் கொண்டு ஓடிவரும் குளிர்ந்த நீரை உடைய நிவாநதிக் கரைமேல் ஆரவாரிக்கும் சோலை கள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திரு அருள் , நீல மணி போன்ற கண்டத்தினன் , நீறணிந்த சிவன் , என விரும்பி வழிபடும் சிவஞானியர்க்கு அல்லால் ஏனையோர்க்குக் கைகூடுவது அரிது .

குறிப்புரை :

சீலமாந்தர் - ஞானியர் . அவரே சிவனெனப்பேணும் உண்மைநிலை உணர்ந்தவர் . ` திருநீலகண்டா! நீறணிமுதல்வா! சிவபெருமானே! எனப் போற்றும் மனிதரும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி யிராவண னலற
அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புன னிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

கொழுமையான கனிகளைச் சுமந்து உந்திவரும் குளிர்ந்த நீரைஉடைய நிவாநதிக்கரைமேல் அழுந்திய சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் திருவருளை , செழுமையான குளிர்ந்த பெரிய கயிலைமலையைப் பெயர்த்த போர் வலிமிக்க இராவணன் அலறுமாறு அழுந்த ஊன்றிய விரலை உடையவர் என்று போற்ற வல்லார்க்கு அல்லாமல் ஏனையோர்க்குத் தாரார் .

குறிப்புரை :

விரலான் :- அண்மை விளி . அருளான் - அருள் செய்யான் . அருள் அருளான் என்று இயைக்க . அடிகள் தம் அருளை , போற்றி என்பார்க்கு அல்லது அருளான் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுன னிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மணம் கமழ்ந்து பொன்னுந்தி வரும் நீரை உடைய நிவாநதிக்கரைமேல் அழகு செய்யும் சோலைகள் சூழ்ந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் திருவருள் , நுட்பமான நூல்களை அறிந் துணர்ந்த பிரமன் மால் ஆகிய இருவராலும் காணுதற்கு அரிய பொருளாய் இருப்பவனை வணங்கி நைந்து வழிபடுவார்க்கு வாய்க்குமே யன்றி ஏனையோர்க்குக் கைகூடாதது .

குறிப்புரை :

நுணங்கும் நூல் :- நூற்பொருளின் நுண்மை நூலின் மேல் ஏற்றிக்கூறப்பட்டது . ` நுணங்கிய கேள்வியர் ` ( குறள் 419.) என்பதற்கு , ` கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்வி மேலேற்றப்பட்டது ` என்ற பரிமேலழகர் உரையை நோக்குக . அவன் வேதம் நுணங்கிய நூல் , நோக்க அரியான் - நோக்கரியான் . நான்கன் றொகையாக்கலும் ஆம் . கமழ்ந்து - தோற்றி . கமழ்ந்து உந்தி வருபுனல் என்றியைத்துக்கொள்க . அணங்கும் - அழகு செய்யும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுன னிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

பொழிப்புரை :

மலர்களின் மணம் கமழ்ந்து பொன்னுந்திக் கரையை பொருது வரும் நீரை உடைய நிவா நதிக் கரைமேல் ஒலிக் கின்ற சோலைகளால் சூழப்பெற்று விளங்கும் நெல் வாயில் அரத்துறை அடிகள்தம் , திருவருள் சாக்கிய மதத்தில் விழுபவர்களும் சமண சமயத்தைச் சார்பவரும் மற்றும் புறப்புறச் சமயங்களைத் தழுவுவார் களும் ஆகிய , சைவ நெறி சாரும் பாக்கியம் இல்லாத பாவிகளால் , தொழுது பெறுவதற்கு இயலாதது .

குறிப்புரை :

சாக்கியப்படுவார் - சாக்கியமதத்தில் விழுபவர் . சமண் படுவார் - சமண மதத்தில் விழுபவர் . மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் - சாக்கியரும் சமணரும் அல்லாத வேறு மதங்களில் விழுந்து , சைவசமயம் புகும் பாக்கியத்தை அடையமாட்டாத தீயவினையின் பயனை நுகர்பவர்கள் . ஆர்க்கும் - ஒலிக்கும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையு மையுற வில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.

பொழிப்புரை :

கருமை நிறம் அமைந்த பொழில்கள் சூழ்ந்துள்ள சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் , ஒலிக்கின்ற அழகிய புனல் பரவிய நெல்வாயில் அரத்துறை அடிகளின் திருவருளைப் பெறுதற்குரிய நெறிகளை முறையோடு தெரிவித்துள்ள இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கட்கு ஐயுறவின்றி வினைகள் நீங்கும் . இஃது உறுதி .

குறிப்புரை :

பொழில் ( சோலை ), மரச்செறிவால் கதிரொளி புகப்பெறாது , இருண்டு கிடக்கும் நிலைபற்றிக் கறுப்பு நிறம் உரித்தாயிற்று. நிழல் என்பதற்கு ஒளி என்பது பொருளாதலின், பொழிலின் நிழல் காரொளியுடையதாதல் வேண்டும். அவ்வாறின்றி, உட்புக இயலாமல், தாவரச்செறிவு கறுத்த நிழலைச் செய்திருக்கின்றது என்றவாறு. மாந்தராகிய வல்லார்க்கு அவர் தம் வினைபோய்ப் பறையும். அதற்கு ஐயம் இல்லை. பறைதல் - அழிதல். வினை பறை வதில் வல்லார்க்கு ஐயம் இல்லை எனலுமாம். மொழிவதும் வன்மையுறுவதும் ஒன்றாகா. இத்திருப்பதிகத்துள், திருவருளைக் கூட வேண்டின் சிவநாமங்களை எடுத்தோதியும் அவன் சீரும் செல்வமும் சொல்லிப் போற்றியும், உருகிப்பரவி நைந்தும், பேணிப் பணிகள் செய்தும் வழிபடுவது இன்றியமையாதது என்பது உணர்த்தப்பட்டது.
சிற்பி