திருக்கோடிகா


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

இன்றையநாள் நல்லது . நாளைய நாள் நல்லது என்று இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந் தொழியும் வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள் . மின்னல் போன்ற ஒளியினனும் , வெண்மதி , கங்கை , கொன்றை ஆகியவற்றை முடியில் சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சென்றடைவீர்களாக .

குறிப்புரை :

இத்திருப்பதிகம் முழுதும் உள்ள உபதேசத்தை உணர்ந்தொழுகுக . பொய் வாழ்க்கையைப் போக்கி , மெய் வாழ்க்கையைப் பெறும் அன்புற்று வம்மின் உலகீர் , சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோடிகாவைச் சேர்மின் . ( தி .5 ப .78 பா .2,6.) ( ஐயடிகள் க்ஷேத்திரவெண்பா . 6.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அல்லன்மிக்க வாழ்க்கையை யாதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை நாடுதுந் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர் நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக . வில் போன்ற ஒளி பொருந்திய நுதலை உடையவளும் , வெண்மையான வளையல்களை அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாக மாகக் கொண்டு , முல்லை நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

துன்பம் மிக்க வாழ்க்கையை விரும்பியிராமல் , நல்ல தொருகதியை நாடுவோம் . வம்மின் , வெள்ளேற்றண்ணலது திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே

பொழிப்புரை :

துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை நீக்கி , நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள் . அரை மிசை என்பு மாலையை அணிந்தவனாய் , கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள் .

குறிப்புரை :

துக்கம் மிக்க வாழ்க்கையினால் வரும் இளைப்பை ஒழித்து . தக்கதொருகதியை அடையத் திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பனா னொல்லை நீ ரெழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும் அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு . அதனை உங்கட்குக் கூறுகிறேன் . விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக . செஞ்சடையில் கங்கையைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

முற்பிறவியில் செய்த வினை பசையறக் கெடும்படி திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின் மூழ்கிறீ ரெழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட வாடலான்
கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

முற்பிறவியில் நீர் , செய்த பாவத்தால் சிவமூர்த்தி யின் திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித் துயருறுகின்றீர்களே , புறப்படுவீர்களாக . பொன்னையும் வென்ற அழகிய கொன்றை சூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பின னும் , கொல்லும் தன்மை வாய்ந்த வேலினை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

முற்பிறவியில் செய்த பாவத்தால் , சிவமூர்த்தியின் திருவடியைச் சிந்தை செய்யாமல் துன்பத்தில் முழுகுகின்றீர் , எழுமின் , சிவபிரானது திருக்கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர் செய்தொரு பயனிலைக்
காவன்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப் பூண்டு , பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண் பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

ஏவம் - இகழ்ச்சி . குற்றம் . காவல் மிக்க மாநகர் :- திரிபுரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

ஏணழிந்த வாழ்க்கையை யின்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான் பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு முன்னரே வருவீர்களாக . வெண்மையான என்புமாலையை அணி கலனாகப் பூண்டு , பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச் சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

மூப்படைந்து . அதனால் தளர்ச்சி எய்தி வருந்துவதன் முன்னரே , வம்மின் ; திருக்கோடிகாவைச் சேர்மின் . ஏண் - பெருமை . பொன்போலும் சடையில் வெண் பிறையைச் சூடியவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட விருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக . வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

இது மெய்வாழ்க்கை அன்று என்று நீக்கித் திருக் கோடிகாவைச் சேர்மின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மங்குநோ யுறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் : கேளுங்கள் . செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற் கியலாத பெருமையனும் , வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய விடையூர்தியை உடைய வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன் நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு , உடலையும் அதைச் சார்ந்து உயிரையும் பிணித்தலால் பிணி எனப்பட்டது . பிறவிப் பிணி அழியும் வகை சொல்வேன் . திருமாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணமாட்டாத பெருமையன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான் கோடிகாவு சேர்மினே.

பொழிப்புரை :

தட்டோடு , தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும் , பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும் . தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவ பிரானின் கோடிகாவை அடைவீர்களாக .

குறிப்புரை :

சொல்லுஞ் சொல் பயனில்லை . தொங்கவிட்ட பொன்னார் செஞ்சடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை , சிறப்புமிக்க திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும் .

குறிப்புரை :

திருக்கோடிகாவை மேவிய அந்தணர் வாழும் , திருப் புகலியுள் ஆய்ந்த மறையாகிய வேள்வியையுடைய திருஞானசம்பந் தருடைய இத்தமிழ் மாலை பாட வல்லவர் பாவம் போக்குவர் . கொந்து - பூங்கொத்து . கேள்வி - சுருதி . அந்தணர் புகலி என்றதால் அங்கு அக்காலத்தில் சிவபத்தியிற் சிறந்த அந்தணர் பலர் இருந்தமை யும் , அதிற் சிறவாதாரைக் கூறார் என்பதும் , கூறியது கொண்டு அவரை நாமும் இப்பொழுது நினைந்து பணிந்து நலம் பெறலாயிற்று என்பதும் உணர்க .
சிற்பி