கீழ்வேளூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மின்னு லாவிய சடையினர் விடையினர் மிளிர்தரு மரவோடும்
பன்னு லாவிய மறையொலி நாவினர் கறையணி கண்டத்தர்
பொன்னு லாவிய கொன்றையந் தாரினர் புகழ்மிகு கீழ்வேளூர்
உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை யோடிட வீடாமே.

பொழிப்புரை :

மின்னலைப்போல ஒளிவிடும் சடையினரும் , விடைஊர்தியரும் , அரவாபரணரும் இசையமைப்புடைய வேதங்களை ஓதிய நாவினரும் , நீலகண்டரும் பொன்போன்ற கொன்றைத் தாரினரும் ஆகிய புகழ்மிக்க கீழ்வேளூர் இறைவரை நினைக்கும் நெஞ்சினர்க்கு வினைகள் நீங்க வீடு கிட்டும் .

குறிப்புரை :

உன் - உன்னுதல் . திருக்கீழ்வேளூரை நினைப்பவர்க்கு வினையில்லை , வீடுண்டு என்று அருளியது , இவ்வூர்ப்பெருமான் திருப்பெயர் கேடிலியப்பர் என்பதன் உண்மைப் பொருளை உலகோர்க்கு உணர்த்துவதாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

நீரு லாவிய சடையிடை யரவொடு மதிசிர நிரைமாலை
வாரு லாவிய வனமுலை யவளொடு மணிசிலம் பவையார்க்க
ஏரு லாவிய விறைவன துறைவிட மெழில்திகழ் கீழ்வேளூர்
சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர் பிணியொடு வினைபோமே.

பொழிப்புரை :

கங்கை சூடிய சடையின்கண் , அரவு , மதி , தலைமாலை ஆகியவற்றை அணிந்து , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடி அழகிய சிலம்புகள் ஆர்க்க விளங்கும் இறைவனது உறைவிடம் கீழ்வேளூராகும் . இத்தலத்தைச் சிந்திப்பவர் கட்குப் பிணிகளும் வினைகளும் போகும் .

குறிப்புரை :

திருக்கீழ்வேளூரைச் சிந்திப்பவர்கட்குப் பிணிகளும் வினைகளும் போம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு வெள்ளெருக் கலர்மத்தம்
பண்ணி லாவிய பாடலோ டாடலர் பயில்வுறு கீழ்வேளூர்ப்
பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையா ருலகினி லுள்ளாரே.

பொழிப்புரை :

வெள்ளிய நிலவைத்தரும் பிறையை அணிந்த விரி சடையில் அரவு , வெள்ளெருக்க மலர் ஊமத்தை ஆகியவற்றை அணிந்து , இசைப்பாடல்களைப் பாடியும் ஆடியும் மகிழ்வுறும் மக்கள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்கும் பெண் ணொருபாகனை உள்கும் பயிற்சி உடையார் உலகில் நிலை பெற்றிருப்பர் .

குறிப்புரை :

கீழ்வேளூரில் பெருந்திருக்கோவிலில் எழுந்தருளிய அம்மையப்பரை உள்கும் பயிற்சி உடையார் எவ்வுலகில் இருப்பினும் சிவலோகத்தில் இருப்பவரேயாவர் . ` நரகம்புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின் இறைவா ! உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே ` திருவாசகம் . 6-2.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சேடு லாவிய கங்கையைச் சடையிடைத் தொங்கவைத் தழகாக
நாடு லாவிய பலிகொளு நாதனார் நலமிகு கீழ்வேளூர்ப்
பீடு லாவிய பெருமையர் பெருந்திருக் கோயிலுட் பிரியாது
நீடு லாவிய நிமலனைப் பணிபவர் நிலைமிகப் பெறுவாரே.

பொழிப்புரை :

பெருமைமிக்க கங்கையை முடியில் சூடி , மிக அழகாக நாடு முழுதும் சென்று பலியேற்கும் நாதரும் நன்மைகள் நிறைந்த கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் வலிமைமிக்க பெருமை யோடு திகழ்பவருமாகிய சிவபிரானை இடைவிடாது வழிபடுவோர் நிலையான பேரின்ப வாழ்வு பெறுவர் .

குறிப்புரை :

சேடு - பெருமை . பீடு - வலிமை . நீடு - அழியாமை . கீழ்வேளூர்ப் பெருமானார் பெருந்திருக்கோயிலை வழிபடுவோர் நிலைத்த பேரின்பவாழ்வு மிகப் பெறுவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை வடமணி சிரமாலை
மன்று லாவிய மாதவ ரினிதியன் மணமிகு கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக் கோயிலின் நிமலனை நினைவோடும்
சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.

பொழிப்புரை :

நெருக்கமாக நீண்டு வளர்ந்த சடையில் திங்கள் , பிரம கபாலம் , கயிறு , மணிகள் , தலைமாலை முதலியவற்றை அணிந்து , மன்றத்தில் மாதவத்தோர் உலாவும் சிறப்புமிக்க கீழ் வேளூர்ப் பெருந்திருக்கோயிலுள் விளங்கும் நிமலனை நினைவோடு சென்று ஏத்த வல்லவரின் வினைகள் தேய்வது திண்ணம் .

குறிப்புரை :

நகுதலை - பிரமகபாலம் . வடம் - கயிறு . சிரம் - தலைகள் . திருக்கோயில் மன்றத்துள் மாதவத்தோர் உலாவிய சிறப்பு உணர்த்திற்று . சிரமாலையையுடையவரும் மன்றுள் நடமாடியவரும் ஆகிய மாதவர் எனச் சிவபெருமானைச் குறித்ததாயின் நிமலன் என்னும் ஒருமைக்கு ஏலாது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக் கூத்தனை மகிழ்ந்துள்கித்
தொத்து லாவிய நூலணி மார்பினர் தொழுதெழு கீழ்வேளூர்ப்
பித்து லாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக் கோயின்மன்னு
முத்து லாவிய வித்தினை யேத்துமின் முடுகிய விடர்போமே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் அணிந்துள்ள சடைமுடியனும் , கூத்தனும் , நூலணிந்த அந்தணர் பக்தர்கள் ஆகியோர் நினைந்துருகி வழிபடும் கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் விளங்குபவனும் , முத்துப் போல்பவனும் எல்லாவற்றுக்கும் வித்தாகத் திகழ்பவனும் ஆகிய பெருமானை ஏத்துமின் . வலிந்துவரும் இடர்போகும் .

குறிப்புரை :

கொத்து - பூங்கொத்துக்கள் . தொத்து - கூடுதல் . பித்து - திருவடிப்பற்று . முத்து ...... வித்து - ` முத்தினைப் பவளத்தை ` ` வித்தாம் முளையாகும் வேரேதானாம் `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும் வன்னியுந் துன்னாரும்
கறைநி லாவிய கண்டரெண் டோளினர் காதல்செய் கீழ்வேளூர்
மறைநி லாவிய வந்தணர்மலிதரு பெருந்திருக் கோயின்மன்னு
நிறைநி லாவிய வீசனை நேசத்தால் நினைபவர் வினைபோமே.

பொழிப்புரை :

பிறையணிந்த சடைமுடியில் கங்கை , வன்னி ஆகியவற்றை அணிந்தவனும் , கறைக் கண்டனும் , எண்தோளினனும் ஆகிய இறைவன் விரும்புவதும் மறைவல்ல அந்தணர் நிறைந்ததும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந்திருக்கோயிலில் குறைவிலா நிறைவின னாய் விளங்கும் ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும் .

குறிப்புரை :

` மறைநிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக் கோயில் ` என்றதால் , அக்காலத்து வேதியர் சிறப்பும் அவர்க்குள்ள கோயில் வாழ்வும் புலப்படும் . நிறை - ` குறைவிலா நிறைவு `. அவ்வத் தேவரை அவ்வப்புவனத்தில் அவரவர்க்கு உரிய தொழிலில் நிறுத்து வதுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மலைநி லாவிய மைந்தன்அம் மலையினை யெடுத்தலு மரக்கன்றன்
தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான் உறைதரு கீழ்வேளூர்க்
கலைநி லாவிய நாவினர்கா தல்செய் பெருந்திருக் கோயிலுள்
நிலைநி லாவிய வீசனை நேசத்தா னினையவல் வினைபோமே.

பொழிப்புரை :

திருக்கயிலாய மலையில் விளங்கும் பெருவீரனும் , அம்மலையை எடுத்த இராவணன் தலை நெரிந்து அலறக் கால் விரலை ஊன்றியவனும் ஆகிய சிவபெருமான் உறைவதும் , கலைகள் அனைத்தையும் ஓதிய நாவினர் அன்பு செய்வதும் ஆகிய கீழ்வேளூர்ப் பெருந் திருக்கோயிலில் நிலைபெற்று விளங்கும் ஈசனை நினைய வல்வினை போகும் .

குறிப்புரை :

மைந்தன் - வீரன் , அழகன் , வலியன் , மலைநிலாவிய மைந்தன் - மலைபோலுந் தோற்றமுடைய ( ஞான ) வீரன் . பத்துத் தலை களும் என்னத் ` தலையெலாம் ` என்று குறித்தருளினார் . தலை நிலாவிய நாவினர் - வேதாகமாங்க பிராணேதிகாசாதி சகல கலைகளு முணர்ந்த நாவினர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மஞ்சு லாவிய கடற்கிடந் தவனொடு மலரவன் காண்பொண்ணாப்
பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி பாகனைப் பரிவொடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின் நடலைகள் நணுகாவே.

பொழிப்புரை :

மேகங்கள் உலாவும் கடலில் துயில்கொள்ளும் திருமாலும் , தாமரைமலரில் உறையும் நான்முகனும் காண இயலாதவனும் , பஞ்சு போன்ற மென்மையான அடிகளை உடைய பார்வதி பாகனும் , செஞ்சொற் புலவோர் பரவும் புகழ்மிக்க கீழ் வேளூரில் விளங்கும் நஞ்சணிந்த கண்டனும் ஆகிய பெருமானைச் சென்றடையுங்கள் . துன்பங்கள் நம்மை அடையா .

குறிப்புரை :

கடல் - பாற்கடல் . காண்பு - பார்வை . ` காண்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் ` ` கண்கள் காண்பு ஒழிந்து `. 2.97-5.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

சீறு லாவிய தலையினர் நிலையிலா வமணர்கள் சீவரார்
வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின் சுரும்பமர் கீழ்வேளூர்
ஏறு லாவிய கொடியனை யேதமில் பெருந்திருக் கோயின்மன்னு
பேறு லாவிய பெருமையன் றிருவடி பேணுமின் தவமாமே.

பொழிப்புரை :

மழித்த தலையினரும் , நிலையற்ற சொல் செயல் உடையவரும் துவரூட்டிய ஆடையரும் ஆகிய சமண புத்தர்களின் பெருமையற்ற சொற்களை விரும்பாதீர் ; வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விடைக்கொடி யனாய் விளங்குபவனும் அந்தமில்லாத ஆனந்தத்தை அருளும் பெரியவனுமாகிய சிவபெருமான் திருவடிகளை வழிபடுங்கள் . அதுவே சிறந்த தவமாகும் .

குறிப்புரை :

சீறு - முதனிலைத் தொழிலாகுபெயர் . சீவரார் - துவரூட்டிய சீலையர் ( தேரர் ). வீறு - பெருமை , வெற்றியுமாம் . பேறு - ஆன்மாக்களுக்குரிய பேறு ( சிவானந்தம் ). பேறு உலாவிய பெருமையன் . ஆனந்தம் நிகழும் பெருமையையுடைய பரமசிவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை யழகமர் கீழ்வேளூர்த்
திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக் கோயிலெம் பெருமானை
இருண்ட மேதியி னினமிகு வயன்மல்கு புகலிமன் சம்பந்தன்
தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி பெறுவது திடமாமே.

பொழிப்புரை :

கடைசுருண்ட சடையினனும் , இளைஞனும் அழகிய கீழ்வேளூர்ப் பெருங்கோயிலில் விளங்குபவனும் ஆகிய பெருமான் மீது கரிய எருமைகள் மிக்கதும் , வயல்கள் நிறைந்தது மாகிய புகலியின்மன்னன் ஞானசம்பந்தன் அருளிய தெளிந்த பாடல் களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி .

குறிப்புரை :

` குருண்டவார் குழற்சடைக் குழகன் ` - ` குருள்குஞ்சி ` ( தி .2 ப . 116 பா .4.) குழகன் - இளையன் ; அழகன் . புகலி - சீகாழி . மன் - இறைவன் . தெருண்ட - தெளிந்த .
சிற்பி