திருவாடானை


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

மாதொர் கூறுகந் தேற தேறிய
ஆதி யானுறை யாடானை
போதி னாற்புனைந் தேத்து வார்தமை
வாதியா வினை மாயுமே.

பொழிப்புரை :

அம்பிகையை ஒருபாகமாக உகந்து கொண்டு விடைமேல் ஏறியருளும் முதல்வன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனை மலர்களால் அலங்கரித்தும் அர்ச்சித்தும் வழிபடுபவர்களின் வினைகள் அவர்களை வருத்தமாட்டாதனவாய் மாய்ந்துவிடும் .

குறிப்புரை :

அம்பிகைபாகனாகி விடைமேலேறியருளும் முதல்வன் திருவாடானையைப் போது ( அரும்பு, பூக் ) களால் அலங்காரமும் அருச்சனையும் புரிந்து பூசிப்பவரை வினைகள் வருத்த மாட்டாதனவாய் மாய்ந்துவிடும். இப்பதிகமுழுதும் அருச்சனையின் பயன் உணர்த்தப்பட்டமை அறிக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வாடல்வெண்டலை யங்கையேந்திநின்
றாடலானுறை யாடானை
தோடுலாமலர் தூவிக்கைதொழ
வீடுநுங்கள் வினைகளே.

பொழிப்புரை :

உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி நின்று ஆடுதலை உடைய சிவபிரானது திருவாடானையை அடைந்து அவ் விறைவனை மலர்தூவித் தொழுதால் உங்கள் வினைகள் யாவும் அழியும் .

குறிப்புரை :

வற்றிய பிரமகபாலத்தையேந்தி நின்று ஆடுதலை யுடைய சிவபிரான் ஆடானையை மலர்தூவித் தொழுதால் வினைகள் அழியும் . தோடு - பூவிதழ் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மங்கைகூறினன் மான்மறியுடை
அங்கையானுறை யாடானை
தங்கையாற்றொழு தேத்தவல்லவர்
மங்குநோய்பிணி மாயுமே.

பொழிப்புரை :

மங்கை பங்கனும் மான் கன்றைக் கையில் ஏந்தியவனுமாகிய சிவபிரான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவனைத் தம் கைகளைக் கூப்பிப் போற்றவல்லவர்களின் நோய்கள் கெடும் . பிணிகள் ( வினைகள் ) மாயும் .

குறிப்புரை :

மங்கைபங்கன் , மான்கன்றேந்திய திருக்கரத்தன் . ஆடானையைத் தம்கைகளால் தொழுது ஏத்தவல்லவர் நோயும் பிணியும் மாயும் . மங்குதல் - கெடுதல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

சுண்ணநீறணி மார்பிற்றோல்புனை
அண்ணலானுறை யாடானை
வண்ணமாமலர் தூவிக்கைதொழ
எண்ணுவாரிட ரேகுமே.

பொழிப்புரை :

சந்தனச் சுண்ணமும் திருநீறும் அணிந்த மார்பில் பூணநூலின்கண் மான்தோலைப் புனைந்துள்ள தலைமைக் கடவு ளாகிய சிவபிரானுறையும் திருவாடானையை அடைந்து , அவ் விறைவனை அழகும் மணமும் கூடிய மலர்களைத்தூவிக் கைதொழ எண்ணுபவர்களின் இடர் ஏகும் .

குறிப்புரை :

தோல் - மான்றோல் பூணுநூலொடு சேர்த்துத் தரித்துக் கொள்வது . ( தி .1 ப .28 பா .2; தி .1 ப .133 பா .4; தி .1 ப .80 பா .9; தி . 1 ப .6 பா .3.) வண்ணம் - அழகு . எண்ணுவார் - தியானம்புரிவார் . ( பா .8.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கொய்யணிம்மலர்க் கொன்றைசூடிய
ஐயன்மேவிய வாடானை
கையணிம்மல ரால்வணங்கிட
வெய்யவல்வினை வீடுமே.

பொழிப்புரை :

கொய்யப் பெற்றதும் அழகியதுமாகிய கொன்றை மலர்மாலையைச் சூடிய தலைவன் எழுந்தருளிய திருவாடானையை அடைந்து அவ்விறைவனைக் கைகளால் மலர்தூவித்தொழுது வணங்குபவர்களின் கொடிய வல்வினைகள் அவர்களை விட்டொழியும் .

குறிப்புரை :

கொய் - கொய்த , ஐயன் - தலைவன் , பிதா . தலந் தொறும் கைநிறையப் பூக்களைக்கொண்டு தூவிவழிபடுவது சைவர்க் குரிய நன்னெறியாதலைப் பெரியபுராணத்துட்காண்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

வானிளம்மதி மல்குவார்சடை
ஆனஞ்சாடல னாடானை
தேனணிம்மலர் சேர்த்தமுன்செய்த
ஊனமுள்ள வொழியுமே.

பொழிப்புரை :

வானில் விளங்கும் இளம்பிறையைத் தமது திருமுடியில் சூடியவரும் நீண்ட சடைமுடியை உடையவரும் , பஞ்ச கௌவியத்தை விரும்பி ஆடுபவருமாகிய சிவபெருமான் எழுந் தருளிய திருஆடானையை அடைந்து அவ்விறைவர் திருவடிகளில் தேன் பொருந்திய அழகிய மலர்களைச் சேர்ப்பவர்களின் முன் வினைகளாக உள்ளனயாவும் ஒழியும் .

குறிப்புரை :

பிறைமல்கு நீள்சடை , பஞ்சகௌவியம் , அஞ்சு - ஐந்து . போலி , அணிமலர் சேர்த்தலால் பழவினை பற்றறும் . ` உள்ளத்தே புகுந்தளிப்பவன் ஊனம் எலாம் ஓட `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

துலங்குவெண்மழு வேந்திச்சூழ்சடை
அலங்கலானுறை யாடானை
நலங்கொண்மாமலர் தூவிநாடொறும்
வலங்கொள்வார்வினை மாயுமே.

பொழிப்புரை :

விளங்குகின்ற வெண்மழுவைக் கையில் ஏந்தி , சுற்றிய சடைமுடிமீது கொன்றை வில்வமாலைகளை அணிந்துள்ள சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ் விறைவனை அழகும் மணமும் கொண்ட மலர்களைத் தூவித் தொழுது நாள்தோறும் அவன் திருக்கோயிலை வலம்வருவார் வினைகள் மாயும் .

குறிப்புரை :

சடையசைதலையும் ஒளிர்தலையும் மாலையையும் கூறலாம் . நலம் - அழகு . வலங்கொள்ளல் வழிபாட்டின் உறுப்புக்களுள் ஒன்று .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வெந்தநீறணி மார்பிற்றோல்புனை
அந்தமில்லவ னாடானை
கந்தமாமலர் தூவிக்கைதொழும்
சிந்தையார்வினை தேயுமே.

பொழிப்புரை :

தீயிடைவெந்த திருநீற்றை அணிந்தவரும் மார்பின் கண் மான்தோலை அணிந்தவரும் , தோற்றக் கேடு இல்லாத வருமான சிவபெருமான் உறையும் திருவாடானையை அடைந்து அவ்விறைவரை மணமலர்களைத்தூவி வழிபடும் சிந்தனையை உடையவர் களின் வினைகள் தேயும் .

குறிப்புரை :

பா .4, பார்க்க . ` ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி ` சிந்தையார் வினை - சிந்தனை உடையவரது வினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

மறைவலாரொடு வானவர்தொழு
தறையுந்தண்புன லாடானை
உறையும்ஈசனை யேத்தத்தீவினை
பறையுநல்வினை பற்றுமே.

பொழிப்புரை :

வேதங்களில் வல்ல அந்தணர்களோடு விண்ணில் உறையும் தேவர்களும் வந்து வணங்கும் நீர்வளம்சான்ற திரு வாடானையில் உறையும் ஈசனை ஏத்தத் தீவினைகள் அழியும் . நல்வினைகள் வந்துசேரும் .

குறிப்புரை :

வலார் - வல்லவர் ; பூசுரர் . வானவர் - சுரர் . ஆடானை யில் எழுந்தருளும் உடையவனை , பறையும் - அழியும் . பறைவது தீவினை . பற்றுவது நல்வினை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

மாயனும்மல ரானுங்கைதொழ
ஆயவந்தண னாடானை
தூயமாமலர் தூவிக்கைதொழத்
தீயவல்வினை தீருமே.

பொழிப்புரை :

மாயவனாகிய திருமாலும் , தாமரைமலர் மேலுறையும் நான்முகனும் கைகளால் தொழுது வழிபடுதற்குரிய வனாகிய அந்தணன் உறையும் திருவாடானையை அடைந்து அவ் விறைவனைத் தூய மலர்களைத் தூவிக்கைகளால் தொழுபவர்களின் தீய வல் வினைகள் தீரும் .

குறிப்புரை :

ஆய - ஆகிய . தீயவினை ; வல்வினை . அந்தணன் :- சிவபிரான் . மலர்தூவிக் கையால் தொழ வினை தீரும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வீடினார்மலி வெங்கடத்துநின்
றாடலானுறை யாடானை
நாடிஞானசம் பந்தன்செந்தமிழ்
பாடநோய்பிணி பாறுமே.

பொழிப்புரை :

ஊழிக்காலத்து இறந்தவர்களின் உடல்கள் நிறைந்து எரிந்து வேகும் சுடுகாட்டுள்நின்று உருத்திரதாண்டவமாடும் இறைவன் உறையும் திருவாடானையை அடைந்து ஞானசம்பந்தன் அருளிய இச்செந் தமிழ் மாலையைப் பாடி வழிபடுபவர்களின் நோய்களும் பிணிகளும் நீங்கும் .

குறிப்புரை :

வீடினார் - இறந்தவர் . வெங்கடம் - வெப்பமுடைய காடு . ` கள்ளிமுதுகாட்டிலாடி `. பாடலால் நோயும் பிணியும் அழியும் .
சிற்பி