திருவிரும்பைமாகாளம்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
கொண்டகையாற் புரமூன் றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் கரந்து , பிறைமதியைச் சூடி , மான் ஏந்திய கையால் கணைதொடுத்து முப்புரங்களை எரித்த குழகனது இடம் , எண்திசையும் புகழ்பெற்று விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் வண்டுகள் இசைபாடி முரலும் பொழில் சூழ்ந்து விளங்குவதுமாகிய திருமாகாளமாகும் .

குறிப்புரை :

கங்கைச்சடையன் , பிறைசூடி , மானேந்தி , முப்புர மெரித்த முதல்வன் . திசையெலாம் பரவிய புகழுடைய தலம் . ` மான் ` உமாதேவியுமாம் . ` விற்றாங்கி யகரம் வேல்நெடுங்கண்ணி வியன் கரமே ` ( அப்பர் ) ` இசையால் திசைபோயது `, சுலாய் - சுற்றி . ஊர் இரும்பை ; கோயில் மாகாளம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வேதவித்தாய் வெள்ளைநீறு பூசி வினையாயின
கோதுவித்தாய் நீறெழக் கொடிமா மதிலாயின
ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் இரும்பைதனுள்
மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே.

பொழிப்புரை :

வேதவித்தாய் , வெண்ணீறுபூசி , வினைகள் யாவற்றையும் அழித்து , கொடிய திரிபுரங்களை நீறெழச் செய்து , குற்றங்களுக்கு விதையானவற்றைத் தீர்த்து , அருள்புரியும் சிவ பிரானது இடம் , திருஇரும்பை நகரில் உள்ளதும் , மாதவத் தோரும் மறையோரும் தொழ நின்றதுமான திருமாகாளமாகும் .

குறிப்புரை :

மாதவத்தோரும் மறையோரும் தொழ நின்ற சிறப்புடையது மாகாளம் . சிவபிரான் வேதவித்து , வெண்ணீறாடி , வினை யெலாம் நீறுபட அழித்தவன் . ஏதவித்து - குற்றத்திற்கு விதை.

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வெந்தநீறும் எலும்பும் அணிந்த விடையூர்தியான்
எந்தைபெம்மா னிடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே.

பொழிப்புரை :

திருவெண்ணீற்றையும் எலும்பையும் அணிந் தவனும் , விடைஊர்தியனும் , எந்தையும் , தலைவனுமாகிய இறைவனது இடம் , அழகிய சோலைகள் சூழ்ந்ததும் மணம் கமழும் பலாக் கனிகளை மந்திகள் ஏறிப் பறித்து உண்டு திரியும் பொழில்கள் சூழ்ந்தது மாகிய திருஇரும்பை நகரில் உள்ள திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

பலவின்கனிகள் - பலாப்பழங்கள் . பல இனிய கனிகள் எனலும் பொருந்தும் . மந்திகள் கொண்டுவந்து உண்டு திரியும் மாகாளம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.

பொழிப்புரை :

நஞ்சைக் கண்டத்தில் அடக்கியவரும் , மலைமகள் அஞ்சி நடுங்க யானையை உரித்தவருமான பெருமான் அமரும் இடம் , குன்றாத புகழ் விளங்கும் திருஇரும்பை நகரில் உள்ளதும் மேகங்கள் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய அழகிய திருமாகாளமாகும் .

குறிப்புரை :

மலையான் - இமாசலராசன் . வேழம் - யானை . எஞ்சல் - குறைதல் . மஞ்சு - மேகம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூசவானை யுரித்தபெரு மான்குறை வெண்மதி
ஈசனெங்கள் இறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

குற்றமற்ற திருநீற்றுப் பொடியைப் பூசியவனும் , விடையூர்தியனும் , மலைமகள் கூசுமாறு யானையை உரித்த பெருமானும் , பிறைமதி சூடிய ஈசனும் ஆகிய எங்கள் இறைவனது இடம் , திரு இரும்பையில் உள்ளதும் , அடியவர் மலர் கொண்டு அணிவித்து மகிழ்வதுமாகிய திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

பூசும்பொடி , மாசு இல்பொடி , பொருப்பான் - இமாசல ராசன் , தேவியார் கூசுமாறு ஆனையை உரித்தான் . மாசு இலோர்கள் - மும்மலமாகிய குற்றம் இல்லாத சைவமறையோர் அடியார் முதலியோர்கள் , (தி. 2 ப. 6 பா. 10 பார்க்க) .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

கலைகள் குறைந்த பிறைமதியைச் சூடிக் கூத்தாடிய வரும் , வினைகளை அழிக்கும் பரமரும் , தூய்தான ஆறு குணங்களை உடையவரும் , பரவலான சடைகளை உடைய இறைவ ரும் , எங்கள் பெருமானுமாகிய இறைவரது இடம் திருஇரும்பை நகரில் வேத வித்துக்கள் வழிபடும் திருமாகாளமாகும் .

குறிப்புரை :

குனித்தான் - கூத்தாடிய பிரான் . பறைவது - அழிவது . பரமன் முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருள் . பகவன் - சாட்குண்யன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

பொங்குசெங்கண் அரவும் மதியும் புரிபுன்சடைத்
தங்கவைத்த பெருமானென நின்றவர் தாழ்விடம்
எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே.

பொழிப்புரை :

சடையில் பாம்பையும் பிறையும் பகை நீக்கித் தங்க வைத்த பெருமானும் , எவ்விடத்தும் விருப்போடு எழுந்தருளி விளங்குபவனுமாகிய இறைவனது இடம் திருஇரும்பையூரில் வானளாவிய பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருமாகாளம் ஆகும் .

குறிப்புரை :

சடையில் பாம்பும் பிறையும் பகையின்றி வாழவைத்த பெருமான் . ` பொங்குசெங்கண்ணரவு ` என்றதால் , விளங்கும் பெருங் கோபம் சடையின்கண் தணிந்தது . தாழ்வு - எழுந்தருளுதல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான்
அட்டமூர்த்தி யழல்போ லுருவன் அழகாகவே
இட்டமாக இருக்கும் இடம்போல் இரும்பைதனுள்
வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே.

பொழிப்புரை :

நரிகள் விளையாடும் இடுகாட்டில் எரியேந்தி நடனம் புரிபவரும் , அட்டமூர்த்தி வடிவினரும் , அழல் உருவினரும் ஆகிய இறைவர் விருப்போடு எழுந்தருளிய இடம் திருஇரும்பை நகரில் உள்ளதும் வலம் வந்து தொழுவார் பிணிகளைத் தீர்ப்பதுமாகிய திருமாகாளமாகும் ,

குறிப்புரை :

நட்டம் - திருக்கூத்து . அட்டமூர்த்தி - எட்டுருவத்தன் . மண் , நீர் , அனல் , வளி , விண் , இருசுடர் , வேள்வித்தலைவன் , இட்டம் - விருப்பம் , வட்டம் சூழ்தல் - வலம் வரல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரோடு போராடிய காலனுயிரைக் கவர்ந்தவரும் , இராவணன் பத்துத்தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவரும் , ஆகிய சிவபிரான் இட்டமாக இருக்குமிடம் திருஇரும்பை நகரில் விளங்குவதும் தேனார்ந்த பொழில் சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும் .

குறிப்புரை :

அட்ட - மார்க்கண்டேய முனிவரொடு போராடிய , எட்டும் இருபத்திரண்டும் - பத்துத்தலையும் இருபது கையுமாகிய முப்பதும் . மட்டு - தேன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
பிரமன்மாலும் அறியாமை நின்ற பெரியோனிடம்
குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் இரும்பைதனுள்
மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.

பொழிப்புரை :

பாம்பைத் தம் இடையில் கட்டிக்கொண்டு , அனலை அங்கையில் ஏந்தி , பிரமன் , மால் ஆகியோர் அடிமுடி அறியாதவாறு ஓங்கிநின்ற பெரியோன் இடம் , குயில்கள் வாழும் குரா மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த திரு இரும்பை நகரில் உள்ள வானோரும் மறையோரும் தொழும் திருமாகாளமாகும் .

குறிப்புரை :

ஆர்த்து - கட்டி , அனல் - தீ . குரவம் - குராமரம் . வானோரும் மறையோரும் தொழுகின்ற தலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

எந்தையெம்மான் இடம்எழில் கொள்சோலை யிரும்பைதனுள்
மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
அந்தமில்லா அனலாடு வானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார்பழி போகுமே.

பொழிப்புரை :

எந்தையும் எங்கள் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவதும் திருஇரும்பையில் விளங்கும் தென்றல் வந்துலவும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாகாளத்தில் முடிவற்ற நிலையில் அனலாடும் இறைவன் மீது ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதுபவர்களின் பழிகள் போகும் .

குறிப்புரை :

எழில்கொள்சோலை இரும்பை எனத் திருத்தலத்தை யும் பொழில்சூழ்ந்து அழகு ஆரும் மாகாளம் எனத் திருக்கோயிலை யும் குறித்ததால் அவ்விரண்டையும் சுற்றிக்கிடக்கும் சோலைவளம் குறிக்கப்பட்டது . ` மந்தமாய பொழில் ` ` ( தி .2. ப .117. பா . 11.)
சிற்பி