திருத்திலதைப்பதி


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர் மணங்கமழும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

வைகறைப்போதில் தொண்டர்கள் பலரும் கூடி நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவோடு திருவடிகளை மன மாரத் தொழுதேத்தநின்ற அழகனது இடம் , கொடிகள் ஓங்கி அசைந் தாடுவதும் திருவிழாக்கள் இடையறாமல் நிகழ்வதுமாகிய திருத் திலதைப்பதியிலுள்ள அழகிய சோலைகளின் மலர்கள் மணம் கமழ்ந்து விளங்கும் மதிமுத்தம் கோயிலாகும் .

குறிப்புரை :

தலம் :- திலதைப்பதி , கோயில் :- மதிமுத்தம் . அடியார் கள் பலர் வைகறையிலே நியமங்களை முடித்துத் திருநீற்றுப் பொலிவு டன் திருக்கோயில் வழிபாடு செய்த பண்டைய உண்மை நிகழ்ச்சி குறிக்கப்பட்டது . ஆரத்தொழுதல் :- ` தலையாரக் கும்பிட்டு ` ` வாயாரப் பாடுந் தொண்டரினத்தகத்தான் ` ` நாவார நம்பனையே பாடப் பெற் றோம் `. ` கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் ` என்பவை முதலியவற்றால் செய்வனதிருந்தவும் நிறையவும் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தல் காண்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

தெளிந்த நீரையுடைய அரிசிலாற்றங்கரை யிலமைந்த திலதைப்பதியில் விளங்குவதும் , வண்டுகள் கெண்டி இசை பயிலும் மலர்களை உடைய சோலைகளால் சூழப்பெற்றதுமாகிய மதி முத்தம் , நெருங்கிவந்து நறுமணப் புகையும் சாந்தமும் மாலைகளும் கொண்டு வழிபடும் அடியார்களின் கருத்தறிந்து . அவர்கட்கு அருள் புரியும் குழகன் இடமாகும் .

குறிப்புரை :

மிண்டி - நெருங்கி . முத்தம் - முற்றம் ; மரூஉ . ` நிலா முற்றம் ` ` சத்திமுற்றம் `. கண்டார் - தரிசனம் புரிந்த அடியவர் . குறிப்பு - கருத்து . அரிசில் ஆற்றங்கரையில் உள்ளது இத்தலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

அடலுளேறுய்த் துகந்தான் அடியார் அமரர்தொழக்
கடலுள்நஞ்ச அமுதாக வுண்ட கடவுள்ளிடம்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

திடல்களைச்சுற்றி வயல்கள் சூழ்ந்து விளங்கு வதும் , மடல்வழியாக வாழைக்கனிசாறு ஒழுகுவதும் ஆகிய வளங் களை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , வலிய விடையை ஏறிச் செலுத்தி மகிழ்பவரும் , அடியார்களும் அமரர்களும் தொழுமாறு கடலுள் எழுந்த நஞ்சை அமுதாக உண்டருளியவருமாகிய கடவுள் விரும்பி உறையுமிடமாகும் .

குறிப்புரை :

அடல் உள் ஏறு - வெற்றியை உள்ளு ( கருது ) கின்ற விடை , வலிமைக்கு ஒப்புறுத்த உள்ளுகின்ற விடையையும் ஆம் . ` ஏறு போற்பீடுநடை `. பிலிற்றும் - கொப்புளிக்கும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

கங்கைதிங்கள் வன்னிதுன் எருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்த விகிர்தன்னிடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.

பொழிப்புரை :

கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீரை உடைய அரிசிலாறு சூழ்ந்ததும் , மேகம் தோயும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திலதைப்பதியில் விளங்கும் அழகிய மதிமுத்தம் , கங்கை , பிறை , வன்னி , எருக்கு , கூவிளம் , நாகம் ஆகியவற்றைத் தம் விரிசடையில் வைத்த விகிர்தனின் இடமாகும் .

குறிப்புரை :

திருச்சடையில் உள்ளன என்று கங்கை முதலிய ஆறு கூறப்பட்டன . மங்குல் , மேகம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவமவ்வல் மலருந் திலதைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

ஞாழல் , கோங்கு , வேங்கை , சுரபுன்னை , கடம்பு , முல்லை ஆகியன மலரும் பூங்காவை உடைய திலதைப்பதியிலுள்ள மதிமுத்தம் , மணிகள் கட்டிய ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட கொடித் தேரைச் செலுத்தும் சூரியன் நின்று வழிபாடு செய்யும் இறைவனது ஊராகும் .

குறிப்புரை :

சூரியன் கதிரில் உள்ள ஏழுநிறமும் ஏழு குதிரைகளாக உருவகிக்கப்பட்டன . மரவம் - குங்குமமரம் . சூரியன் பூசித்த தலம் என்பது முற்பகுதியால் விளங்கும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

விண்ணர்வேதம் விரித்தோத வல்லார் ஒருபாகமும்
பெண்ணர்எண்ணார் எயில் செற்றுகந்த பெருமானிடம்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார்வந் தருள்பேண நின்றம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

விண்ணுலகிலுள்ளவரும் , வேதங்களை அருளிய வரும் , ஒரு பாகமாக உமையம்மையை உடையவரும் , தம்மை எண் ணாத திரிபுரத்தசுரர்களின் கோட்டைகளை அழித்துப் பின் அவர் கட்கு அருள்செய்தவரும் ஆகிய பெருமான் உறையும் இடம் , தெளிந்த நிலா வொளி வீசும் சோலைகள் சூழ்ந்ததும் மண்ணுலகில் உள்ளவர் அருள் பெற வழிபடுவதுமாகிய திலதைப்பதியிலுள்ள மதி முத்தமாகும் .

குறிப்புரை :

விண்ணரும் வல்லாரும் பெண்ணரும் ஆகிய பெருமான் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் முருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில் சூழ்ந்தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்தம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

கங்கையைத் தலையில் சூடியவர் . திரிபுரப் பகை வருடைய கோட்டைகளை அழித்தவர் . மாதொரு கூறர் . அவ் விறைவர்க் குரிய இடம் , தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் , அழகியதும் , நீர்வற்றாத அரிசிலாற்றினால் சூழப்பெற்றதுமாகிய திலதைப்பதியி லுள்ள மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

சூடி :- பெயர் . அடையார் - பகைவர் . செற்றவர் - அழித் தவர் . பொற்றொடி ` வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன் மொழித் தொகை . தேறல் - தேன் . பொற்றொடி நாயகி என்னுந் தேவி யார் திருப்பெயரில் தொடி என்பது கொடி என்றாயிற்றோ ?

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும் மதுப்பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதைம் மதிமுத்தமே.

பொழிப்புரை :

சினத்தோடுவந்த கார்மேகம் போலும் நிறத்தை உடைய இராவணன் வலிய கயிலைமலையை எடுக்க , அவனுடைய முடிதோள் ஆகியவற்றை அடர்த்த இறைவனது இடம் , தழைத்து வளர்ந்த பாக்குமரத்தின் இளம்பாளைவழியாய்ப் பாயும் தேனை உண்டு மந்திகள் விளையாடும் திலதைப்பதியிலுள்ள மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

கனல் - தீ . பூகம் - பாக்கு மரம் . மது - கள் . மடுத்து - உண்டு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

படங்கொணாகத் தணையானும் பைந்தா மரையின்மிசை
இடங்கொணால்வே தனுமேத்த நின்ற இறைவன்னிடம்
திடங்கொள்நாவின் இசைதொண்டர் பாடுந் திலதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனைத் தன் படுக்கையாகக்கொண்ட திருமாலும் , புதியதாமரைமலரில் விளங்கி வேதங்களை ஓதும் நான்முகனும் வழிபட எழுந்தருளிய இறைவன் இடம் , தொண்டர்கள் திண்மையான நாவினால் இசை பாடித் தொழும் திலதைப்பதியுள் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

மடங்கல் :- இயமன் , இடி , சிங்கம் என்பவற்றுள் ஒன்று பூசித்த தலமாயிருந்தால்தான் சிங்கம் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தம் என்றிருக்கலாம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட்கி லாத பெருமானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

பொழிப்புரை :

புத்தர் , தேரர் , அறிவற்றசமணர் , பெருமை யில்லாத பித்தர் ஆகிய புறச்சமயத்தார் கூறும் மொழிகளைக் கேளாத பெருமானது இடம் , அன்பர்களும் அறிஞர்களும் பணிந்து வழிபடும் திலதைப்பதியில் மதயானைவந்து வழிபட்ட சிறப்புடைய மதிமுத்தமாகும் .

குறிப்புரை :

பொறி - அறிவு . வீறு இல்லாத பித்தர் . பத்தர் - அன்பர் . சித்தர் - அறிஞர் . யானை வழிபட்டதலம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மந்தமாரும் பொழில் சூழ்திலதைம் மதிமுத்தர்மேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான் தமிழ்ஞானசம்
பந்தன்மாலை பழிதீர நின்றேத்த வல்லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன்சேவடி சேர்வது திண்ணமே.

பொழிப்புரை :

தென்றற்காற்று வீசும் சோலை சூழ்ந்த திலதைப் பதியுள் விளங்கும் மதிமுத்தத்தில் எழுந்தருளிய இறைவன் மீது நறு மணம் கமழும் கடற்கரையில் விளங்கும் காழி ஞான சம்பந்தன் பாடிய பாமாலையைப் பழிதீர ஓதி வழிபடுபவர் சிவன் சேவடிகளைச் சிந்தை செய்பவராய் அவ்வடிகளை அடைவது உறுதி .

குறிப்புரை :

மந்தம் - `மந்தமாய பொழில்` (தி.2 பதி.117 பா.11). கந்தம் - மணம், புலால் நாற்றம். `பழிதீர நின்று மாலை ஏத்த`.
சிற்பி