திருப்பாதிரிப்புலியூர்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.

பொழிப்புரை :

முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து , நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறை வனை வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள் .

குறிப்புரை :

முடக்கால் முயற்கு அருள்செய்து :- இத்தலத்தில் முற் காலத்தில் முடங்கிய காலொடு முயலாகும் சாபம்பெற்ற மங்கண முனிவர் அச்சாபம் நீங்கப்பெற்ற வரலாற்றைக் குறிப்பது . சிவபிரானை வழிபடும் தவம் வாய்க்கப்பெறாதவர்கள் பிணி யுடைய உடம்பொடு வருந்துவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்இடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல் வினையாயின ஒழியுங்களே.

பொழிப்புரை :

நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடு காட்டில் உறையும் இறைவன் இடமாகிய , அன்னம் , மயில் முதலிய பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய வினைகளை ஒழியுங்கள் .

குறிப்புரை :

முதல்வனது திருப்பாதிரிப்புலியூரை நினைத்து வழி பட்டு வினைகளை ஒழியுங்கள் . ( நுணுகுங்கள் பா .8)

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில் பாதிரிப் புலியூருளான்
வெருளின்மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத் திடைவைத் ததுவும் மழகாகவே.

பொழிப்புரை :

மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற ஞானி யரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிரிப்புலியூரில் வாழும் மழுவாளரைக்கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி , அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து , தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப் பெருமான் செயல் மிக்க அழகானதாகும் .

குறிப்புரை :

மருள் இல் நல்லார் - மயக்கமற்றஞானிகள் . மேல் பொருள் இல்நல்லார் - தனக்குமேல் ஒரு பொருள் இல்லாத சிவனார் . அம்மையப்பரான உண்மை குறித்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம் மிலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.

பொழிப்புரை :

மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர் .

குறிப்புரை :

போது - புஷ்பம் . போதினால் - விதித்த காலங்களில் . நாலும் - நான்கும் . தொங்கும் , பிச்சைக்குச் செல்லும்போதும் வேதம் ஓதிய உண்மையுணர்க . உண்டு உணப்பாலது என்பதை ஆராய்தல் வேண்டும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப் புலியூர் தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.

பொழிப்புரை :

நுகர்ச்சிக்குரிய இளமகளிர் பயிலும் பாதிரிப்புலி யூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை உண்டவன் . நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில் கட்டியவன் .

குறிப்புரை :

உமாதேவியார் அமுதாக்கிக் கொடுக்க நஞ்சை யுண்டான் . நல்லோர் பரவ நச்சு வெப்பத்தையுடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையிற்கட்டியவன் . போகமாதர் பயிலும் புலியூர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ் பாதிரிப் புலியூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.

பொழிப்புரை :

பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர் .

குறிப்புரை :

மணல்நிலாப்போல் ஒளிர்கின்றது . பழந்தொண்டர்கள் அழகாக ஆனந்தக்கூத்தும் ஆகமவிதியும் செய்வர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்கரவம் அரையில் அசைத்தானை அடைமினே.

பொழிப்புரை :

பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி , பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள் .

குறிப்புரை :

பூந்தாதுகளில் ஒலிசெய்யும் வண்டுகள் , சங்கொலி , பறையின் ஒலி , பாம்பரையார்த்த பரமனை அடையுங்கள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

வீக்கமெழும் மிலங்கைக் கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற் பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.

பொழிப்புரை :

பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இரா வணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும் .

குறிப்புரை :

வீக்கம் - பெருமை . விலங்கல் - கயிலை , இறை - சிறிது . நோக்க - நோக்குதலால் - வினைமெலிந்து . அணுகா . நுணுகுங்கள் ( ஒழியுங்கள் பா .2)

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

அன்னந்தாவும் மணியார் பொழின்மணியார் புன்னை
பொன்னந் தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.

பொழிப்புரை :

அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும் திருப்பாதிரிப்புலியூரில் , முற்காலத்தே எல்லா உலகங் களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும் , நான்முகனும் , சிறி தேனும் திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியதவராய்த் தவத் தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகிறார் .

குறிப்புரை :

புன்னை பொன்போலும் தாதுக்களைச் சொரியும் உண்மை - திருமுறையில் முதற்பாட்டில் உணர்த்தப்பட்டது . முன்னம் ... அளந்தவன் - திருவிக்கிரமன் . தன்னம் - அற்பம் . திருவடியாக் கொள்ளின் இனம்பற்றித் திருமுடியும் கொள்ளப்படும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே.

பொழிப்புரை :

ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக் கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .

குறிப்புரை :

உரிந்த ... நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர் . எரிந்து சொன்ன உரை :- எரிவினாற்சொன்னார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.

பொழிப்புரை :

அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன் , நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இததிருப்பதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா . அவர்தம் வினைகள் மாயும் .

குறிப்புரை :

அம்தண்நல்லார் - அந்தணர் . நல்லார் - பெண்டிர் . சந்தம் - பண்ணிசை . தீமை உடையவை சேராமையால் வினைகள் ஒழியும் .
சிற்பி