திருவீழிமிழலை


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா
வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே.

பொழிப்புரை :

கேள்வி ஞானம் உடையவர்களும் , நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்களும் , கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற , எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களுமான அந்த ணர்கள் , போற்றுகின்ற வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந் தருளும் சிவபெருமானேயாவார் . அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும் , இறப்பும் செய்வார் . கடலாழம் கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை பிறரால் அறிதற்கு அரியது . தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும் அன்பர்கட்கு நெருக்கமானவர் .

குறிப்புரை :

கேள்வியர் - பலநூல்களைக் கேட்டறிந்தவர்கள் . நாள் தொறும் ஓதும் நல்வேதத்தர் - நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்கள் . கேடு இலா வேள்விசெய் அந்தணர் - கெடுதல் இல்லாத யாகத்தைச் செய்கின்ற அழகிய கருணையையுடையவர்களாகிய வேதியர் . மறையோர் வாழும் வீழிமிழலையார் - திருவீழிமிழலையுள் எழுந்தருளியவராகிய சிவபெருமான் . உயிர்கட்கு எல்லாம் தோற்றமும் கேடும் வைப்பார் - உயிர்களுக்கு உடம்போடு கூடிப் பிறத்தலையும் , அழித்தலையும் வைத்தவர் உலகத்திற்குச் சிருட்டி கர்த்தரும் சங்கார கர்த்தரும் ஆவர் எனவே - இரட்ச கர்த்தரும் - சிவபெருமான் ஒருவரே யென்க . ` படைப்போற் படைக்கும் பழை யோன் படைத்தவை , காப்போற்காக்கும் கடவுள் காத்தவை , கரப் போன் ` எனவரும் சுருதி வாக்கியங்களால் அறிக . ( திருவாசகம் ) கேள்வியர் முதல் வேதியர் ஈறாக உள்ளவை திருவீழிமிழலை அந்தணர்களையம் வீழிமிழலையார் என்பது முதல் வருவன சிவபெருமானையும் குறிப்பனவாம் . ஆழியர் - ( ஆழங்காண முடியாத ) கடல் போன்றவராயிருந்தாலும் தம் அடிபோற்றி என்பார்க்கு - தமது திருவடியைப் போற்றியென்று சரண்புகும் அன்பர்களுக்கு . அணியர் - மிக அணியராகிக் காட்சி கொடுப்பர் . கேள்வியர் எனவே , சிந்தித்து , தெளிந்து , நிட்டை உடையவர் என உபலக்கணத்தாற் கொள்ளலும் ஆம் . முதலீரடிகளில் திருவீழிமிலை அந்தணர்களைப்பற்றிக் கூறப்படுகிறது . தில்லை மூவாயிரம் திருவீழிமிழலை ஆயிரம் என்பது பழமொழியாகலின் நாள்தோறும் ஓதுநல் வேதத்தர் என எடுத்துக் கூறுகின்றார் . இச் சிறப்பை ` பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே `. எனத் திருஞானசம்பந்தப் பெருமான் கூறுதலும் காண்க . அந்தணர் என்ற சொல்லுக்கே திருவள்ளுவர் ` எவ்வுயிர்க்கும் செந்தண்மை ( சீவகாருணியம் ) பூண்டு ஒழுகுபவர் ` என்று பொருள் காண்கின்றார் . வேத அந்தத்தை யணவுவார் என நச்சினார்க்கினியர் கூறுவர் . இங்கு இச்சொல் காரண இடுகுறியாகாது காரணக்குறியாய் நின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கல்லினற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழி மிழலையார்
நல்லினத் தார்செய்த வேள்வி செகுத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.

பொழிப்புரை :

இறைவர் மலைமகளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர் . பக்தியோடு துதிக்கும் மென்மையான இனத்தாராகிய அந்தணர்கள் விரும்பிப் போற்றுகின்ற வீழிமிழலை யில் விளங்குபவர் . சிவனை நினையாது செய்த தக்கனது யாகத்தை அழித்தவர் . அந்த யாகத்தில் பங்கேற்ற சூரியனின் பற்களைத் தகர்த் தவர் . தம்மைத் தொழும் அடியவர்களின் பாவத்தைப் போக்குபவர் .

குறிப்புரை :

அடியார் பாவநாசர் - அடியார் செய்த பாவத்தைத் தொலைப்பவர் . கல்லின் நற்பாவை ஓர் பாகத்தர் - இமயமலை மகளாகிய உமாதேவியாரை யொருபாகத்தில் வைத்தவர் . மெல்லி னத்து நல் இனத்தார் செய்த வேள்வி - நல்லினத்தாரென்றது இகழ்ச்சிக்குறிப்பு . எழும் - ஓடுவதற்கு எழுந்த . ஞாயிற்றின் பல்லனைத்தும் - சூரியன் பல் முழுவதையும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.

பொழிப்புரை :

இறைவர் நஞ்சுண்டதால் இருள் போன்ற கறுத்த கண்டத்தையுடையவர் . கடுங்கோபம் கொண்டு அந்தகாசுரன் என்ற அரக்கனைக் கொன்ற மூவிலைச் சூலப்படையையுடையவர் . திருவீழி மிழலையில் வீற்றிருந்தருளுபவர் . மைதீட்டிய கண்களையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர் . கங்கையால் அபிடேகம் செய்யப்பட்ட சிவந்த சடைமுடியையுடையவர் . அத்தகைய சிவபெருமானைத் தொழும் அடியவர்களின் கொடு வினை யாவும் அழியும் .

குறிப்புரை :

நஞ்சினை உண்டு இருள் கண்டத்தர் - செய்து என்னும் வினையெச்சம் பிறவினை கொண்டது . ` வினையெஞ்சுகிளவியும் வேறுபல் குறிய ` என்னும் தொல்காப்பிய விதிப்படி ( சொல் ) அமைந்தது . கங்கை மஞ்சனம் ஆடிய செஞ்சடையார் எனக்கூட்டுக . கங்கையால் அபிடேகம்கொண்ட செந்நிறமான சடையை யுடையவர் . அங்கு - அசை . வல்வினைமாயும் - கொடிய பாவங்கள் நீங்கும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கலையிலங் கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழி மிழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.

பொழிப்புரை :

மான் , மழுப்படை , யோகதண்டம் , உருத்திராக்கம் , குண்டலம் முதலியன கொண்டு , விலைமதிப்புடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர் வீற்றிருந்தருளுகின்றார் . தலையிலே பிறைச் சந்திரன் திகழ , கழுத்திலே எலும்புமாலை விளங்க , கையில் சூலம் , உடுக்கை கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு விளங்கு பவர் . யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும் தம்மைப் போன்ற உருவம் ( சாரூப பதவி ) பெறச் செய்வார் . ( ஒத்த தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல ).

குறிப்புரை :

கலை - மான் , இலங்கும் மழு - ஒளிரும் மழு ஆயுதம் . கட்டங்கம் - யோகதண்டம் . கண்டிகை - உருத்திராட்சக் கண்டிகை ; தலை தாழ்வடம் . தமருகம் - உடுக்கை . அலை இலங்குபுனல் - அலையினால் விளங்குகின்ற கங்கை . ஏற்றவர் - இடபக்கொடி யுடையவர் . இத் திருப்பாசுரத்தில் சிவபெருமான் தன் அடியவர்களில் ஒருசார் பக்குவமுடையோர்க்கும் சாரூப்பியபதவி அளிக்குந்திறன் கூறப்படுகிறது . மேற்கூறியவை சிவபிராற்கு உரிய அடையாளங்கள் . கட்டு அங்கம் - எலும்புமாலை . விலை யேறப்பெற்ற இரத்தினங்கள் பதித்த மாடங்களால் நிறைந்த திருவீழிமிழலையிலெழுந்தருளியிருப்பவரும் இடபக் கொடியையுடையவருமாகிய சிவபிரானுக்கு உரிய மான் , மழு யோக தண்டம் , உருத்திராக்கக்கண்டிகை , குண்டலம் , தலைமாலை , எலும் பாலாகிய தாழ்வடம் , ஆலம் , உடுக்கை , கங்கை ஆகிய இவை அவன் அடியார்க்கும் உண்டு . சிவசின்னங்களாகிய இவைகள் சாரூப் பியருக்கும் உண்டு . தலையிலங்கும் பிறை என்பதற்குத் தலையில் விளங்கும் பிறை எனக்கொள்க . அதனால் அனையவற்றிற்கும் கையிலிலங்கும் மான் , மழு , கட்டங்கம் , சூலம் , தமருகம் , கழுத்திலி லங்கும் கண்டிகை , தாழ்வடம் , காதிலிலங்கும் குண்டலம் , தலையிலி லங்கும் புனல் எனக்கூறலுமாம் . இனி , நகுவெண்டலை என்பதற்குக் கையிலேந்திய கபாலம் எனவும் கொள்ளலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழி மிழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் றொண்டர்கள்
இறையுறை வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் பிறைச் சந்திரனைச் சூடிய சிவந்த சடைமுடியையுடையவர் . இடபத்தை வாகன மாக உடையவர் . பிச்சையெடுத்தலை விரும்பும் நாள்களில் பலி யேற்றுத் திரிவார் . தொண்டர்கள் பண்முறைப்படி இசைபாடி அதற் கேற்ப ஆட முற்பட அவர்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பார் . அவரையல்லாது எனது உள்ளம் வேறெதையும் நினையாது .

குறிப்புரை :

பிச்சையை விரும்பி வெறியுறுநாள் . பலியேற்றுத்திரி முறை திருவீழிமிழலையார் , ( அவருக்கு ) முறை முறையாலிசை பாடுவார் ஆடி - முறையால் இசைபாடுவாராய் முறையாகவே ஆடி . முன் - முற்பட . இறை - தங்கும் இடம் . உறை - உறைதல் - தங்குதல் , முதல் நிலைத் தொழிற் பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வசையறு மாதவங் கண்டு வரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழி மிழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்ல வடமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் அருச்சுனன் செய்த குற்றமற்ற பெருந்தவம் கண்டு இரங்கி , அழகிய வில்லேந்திய வேட்டுவ வடிவில் வந்து அவனுக்கு அருள்புரிந்தவர் . தம்மை இசைத்தமிழால் பாடி , தம் திருப்புகழைப் போற்றி உரைத்துப் பிறரைக் கேட்கும்படி செய்து , முரசொலிக்கத் திசைநோக்கித் தொழுது ஆடிப்பாடுவார் சிந்தனையில் வீற்றிருப்பர் .

குறிப்புரை :

இசை வரவிட்டு - இசை பொருந்தும்படியாகப் பாடி , இயல் கேட்பித்து - இயற்றமிழ்ப் பொருள்களை விண்ணப்பித்து . திசை நோக்கித்தொழுது ஆடிப்பாடுவார் ஆகிய அடியாரது சித்தத்தின் கண் சேர்வர் . கல்லவடம் - ஒருவகைப் பறை . முரசு , பேரி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழி மிழலையார்
காடரங் காவுமை காணவண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.

பொழிப்புரை :

திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் விண்ணோர்கட்குத் தூரமானவர் . மேன்மை வாய்ந்த வேதாங்க நூல்கள் ஆறினையும் கற்று வல்லவர்களாய் , மூவகை அழலை ஓம்பி , நால் வேதங்களையும் பயின்ற அந்தணர்கட்கு அணியராகி வீட்டின்பம் நல்குபவர் . சுடுகாட்டை அரங்காகக் கொண்டு , உமாதேவியார் கண்டு மகிழ , எல்லா அண்டங்களிலுமுள்ள தேவர்கள் தொழத் திருநடனம் செய்பவராகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுபவர்களின் வினையாவும் அழியும் .

குறிப்புரை :

சேடர் விண்ணோர்கட்கு - தேவர்களுக்குத் தூரமான வர் . தேவர்கள் பூசுரர்களாய் ஆறு சாத்திரங்களும் கற்றவர்களாய் முத்தியில் இச்சையவர்களாய் மூவகை அழலை ஒம்பி , நால் வேதங்களையும் பயின்றவர்களாகிய அந்தணர்கட்கு அணியராய்த் திருவீழிமிழலையுள் எழுந்தருளியுள்ள , நாடகம் ஆடியை - நடனம் செய்பவராகிய சிவபெருமானைத் துதிக்க வினை நசிக்கும் . விண்ணாடர்கட்குச் சேடர் எனவே திருவீழிமிழலையுடையார்க்கு அணியர் என்பது சொல்லாற்றலாற் பெறவைத்தார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எடுத்தவன் மாமலைக் கீழ வி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழி மிழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தன ரின்பங் கொடுப்பர் தொழக்குறை [ வில்லையே.

பொழிப்புரை :

பெரியகயிலை மலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை அம்மலையின் கீழேயே கிடந்து அலறுமாறு அடர்த்து , பின் அவன் சாமகானம் பாடிய இசை கேட்டு அருள்புரிந்தார் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் . அவர் கொடிய காலனை உதைத்து , தம்மருகில் நின்று வழிபாடு செய்த பாலனான மார்க்கண்டேயனுக்குப் பேரின்பம் கொடுத்தார் . அச் சிவபெருமான் தம்மைத் தொழுது போற்றும் அடியவர்கட்கு எவ்விதக் குறைவு மில்லாமல் எல்லா நலன்களையும் கொடுப்பார் .

குறிப்புரை :

பெரியமலையை யெடுத்தவனாகிய ( இராவணன் ) மாமலைக்கீழ் அ + இராவணன் . வீழ்தரவிடுத்து - விழுந்தலறவிடுத்து , அருள் செய்து இசை கேட்டவன் என்ற விடத்து இசைகேட்டு அருள் செய்தவன் என மாறிக் கூட்டுக . வெம் காலனைப்படுத்து - கொடிய யமனைத் தொலைத்து . பால் - பக்கத்தில் நின்று வழிபாடுசெய்த பாலனுக்கு . இன்பம் கொடுத்தனர் . தொழ - வணங்க ` தந்த துன் றன்னை ` ` உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே ` என்பதும் காண்க . ( திருவாசகம் )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.

பொழிப்புரை :

நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களை யுடைய பிரமனும் , திருமாலும் மேலுள்ள அண்டங்கள் அனைத்திலும் , கீழுள்ள அண்டங்களிலும் முடி , அடி தேட , காணமுடியாவண்ணம் , மிகுந்து எழும் தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் . அவர் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும் , பாடியும் பூதகணங்கள் சூழ விளங்கும் நக்கர் . அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவராவர் .

குறிப்புரை :

திக்கு அமர் நான்முகன் - திக்கைப் போல் பொருந்திய நான்கு முகங்களையுடைய பிரமனும் . மாலும் முறையே அண்டம் மண்தலம் தேடத் திரளாய் மிக்கவர் . சொக்கம் - ஒரு கூத்து . நக்கர் - ஆடையில்லாதவர் . அவர் நாமமாகிய திருவைந்தெழுத்தை உச்சரிப் போர் நல்லவர் - சிவபுண்ணியச் செல்வராவர் . நான்முகன் மால் . அண்டம் மண்தலம் தேட - நிரனிறை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற [ சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.

பொழிப்புரை :

பொருந்திய காவியாடை அணிந்த புத்தர்களும் , ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில் விளங்குபவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர் . சொல்லை யும் , பொருளையும் கடந்து அருள் ஒளியாக விளங்கும் இறைவர் , தம்மைத் தவிர வேறெதையும் அறியாத அடியார்களின் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார் .

குறிப்புரை :

துற்று - பொருந்திய . துவர் ஆடையார் - மருதம் தோய்க்கப்பட்ட ஆடையையுடையவர் . துப்புரவொன்றில்லார் - ஒரு பயனும் அறியாதவருமாகிய சமணர் . ` துப்புரவில்லார் துணிவு ` ( பெரிய 1973.) வெறு அரையார் - ஆடையில்லாதவர் ; திகம்பரர் . வெற்றுச்சொல் . தெரியா - சொல்லால் அறியப்படாத சொல்லுக்கு அப்பாற்பட்ட பொருளாகிய ஒளிக்கு அப்பால் நின்ற . ` சொல்லும் பொருளும் இறந்த சுடர் ` என்றபடி ( திருவாசகம் ) சோதிதான் - பேரொளிப்பிழம்பானது . மற்று அறியா - பரமே கண்டு , பதார்த்தங்கள் பாராத . அடியார்கள் தம் சிந்தையுள் மன்னும் திருவீழிமிழலை யாராகிய சோதி , சொல்லையும் பொருளையும் கடந்து நின்றதாயினும் அடியார் சிந்தையுள் மன்னும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

வேதியர் கைதொழு வீழி மிழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்ஆய்ந்
தோதிய வொண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.

பொழிப்புரை :

அந்தணர்கள் கைகூப்பித் தொழுது போற்றும் திருவீழிமிழலையை விரும்பி வீற்றிருக்கும் இறைவனை , சோலைகள் விளங்கும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் ஆராய்ந்து ஓதிய ஒண்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் கூறிப்போற்றி வழிபடுபவர்கள் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகளைச் சேர்ந்து முக்திப் பேற்றினைப் பெறுவர் .

குறிப்புரை :

வேதியர் கைதொழும் திருவீழிமிழலையாரை ஞானசம்பந்தன் ஆய்ந்து பாடிய ஒண்தமிழ் பத்தும் வல்லவர் அம் மாது பொருந்திய பாகனது மலர்போன்ற அடியைச் சேரவும் வல்லராவார் .
சிற்பி