திருவிராமேச்சுரம்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 

பொழிப்புரை :

கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.

குறிப்புரை :

அலை - கங்கையை. குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே அடக்கி - தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன். கிளை- கொம்பு, மிளார் முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல தாழை மரங்களுக்கின்மையால் இது வளர்தாழை யெனப்பட்டது. தழைகளை யுடையது - தாழை - நீளல். முதல்உயிர் நீண்டசொல்.
விம்மு - தழைத்த. கானல் - கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான் இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை - சினையாகு பெயர். ஆட்சிசெய்யுமிடத்தை ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. 

பொழிப்புரை :

சீதாப்பிராட்டியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான தசமாமுகனின் பூச்சூடிய முடியையுடைய தலைகளை அறுத்துக் கொன்ற பழி நீங்குமாறு அம்பினைச் செலுத்தும் வில்லை யுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினை அழியும்.

குறிப்புரை :

தேவி - சீதை. வவ்விய - கவர்ந்த, தசமாமுகன், தென் இலங்கை தன்னோடியைபின்மை மாத்திரை விலக்கிய விசேடணம். பூ இயலும் முடி - வெற்றிமாலை அசையும் முடியையுடைய தலையை. பொன்றுவித்த - தொலையச்செய்த. பழிபோய் நீங்குமாறு செய்த; நிருமாணித்த. இராமேச்சுரம் என்னும் பெயரையுடைய திருக்கோயில். மேவிய சிந்தையினார்கள் தம் - இடைவிடாது பொருந்திய சிந்தையை யுடையவர்களின். மேல் வினை வீடும் - முன்னை வினைகளாகிய சஞ்சிதமும், இப்பிறப்பில் ஈட்டப்படுகின்ற; இனியீட்டப்படுவதாகிய ஆகாமிய வினையும் ஒருங்கேமாயும் என்பதாம்.
மேல்வினை யென்பது - நுகர்ந்து கொண்டிருக்கும் பிராரத்த வினையையும் குறிக்குமாதலின் அதுவும் அழியும் என்பதாம். வீடு மாறு துய்க்கவரும் இன்ப துன்பங்கள் சிவனருளெனக் கொண்டு விருப்பு வெறுப்பின்றி யிருத்தலாம்.
தலத்தின் பெயர் - சேது. (சேதுபுராணம், சேதுமான்மியம் முதலியவற்றால் அறிக.) இராமேச்சுரம்:- ஈச்சுரம் அத்தலமேவிய கோயிலின் பெயர். `திருப்பனந்தாள், திருத்தாடகையீச்சரம்`, \\\"பட்டினத் துறை பல்லவனீச்சரம்\\\" என்பனவற்றால் அறிக. \\\"தேடிமால் செய்த கோயில் திருவிராமேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்னெறி யாகுமன்றே\\\" என்பது திருநேரிசை.
\\\"ஒயாதே உள்குவாருள்ளிருக்கும் உள்ளானை\\\" திருவாசகம். சிவஞானசித்தியார் \\\"தனதாகக் கொள்வன்\\\". பூ - ஆகுபெயர். கோயில் மேவிய சிந்தையினார் வினைவீடும் \\\"ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே\\\" என்ற சிவஞான போதத்தால் அறிக. ஏஇயலும் சிலை அண்ணல் - அம்பைச் செலுத்தும் வில்லையுடைய இராமன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால்
கானதில் வவ்விய காரரக் கன்உயிர் செற்றவன்
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.

பொழிப்புரை :

மான் போன்ற மருண்ட பார்வையையுடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழுடைய அண்ணலாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுர மானது மன்னுயிர்கட்கு நன்மைதரும் சிவஞானத்தையும், அதன் பயனான முத்தி இன்பத்தையும் தரும்.

குறிப்புரை :

மான் அ(ன்)ன நோக்கு இயைதேவிதன்னை - மான் போன்ற பார்வை பொருந்திய தன் அரசியாகிய சீதையை. கான் (அது) இல் - தண்டகவனத்தில், அது பகுதிப்பொருள் விகுதி. கார் அரக்கன் - கரிய இராவணன். ஓர் மான்தனால் வவ்வியது - வஞ்சமானால் கணவனைப் பிரித்துக் கவர்ந்தது. செற்றவன் - அழித்தவன், செற்றவ னாகிய அண்ணல்; கடைசி அடிக்கு இராமேச்சுரம் சிவஞானமும் அதன் பயனாகிய முத்தியின்பமும் பயப்பதாகிய, புண்ணிய ஸ்தானமாம் என்க. நன்பொருளும் என்று விரிக்க. எண்ணும்மை விகாரத்தாற்றொக்கது. முத்தியின்பம் நன்பொருள் எனப்பட்டது, உடனெண்ணப்படும் ஞானம் முதலியவற்றிற் சிறத்தலின் நன்மை பண்பாகுபெயர். வைதேகி என்ற பாடம் சிறக்கும்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

உரையுண ராதவன் காமமென் னும்முறு வேட்கையான்
வரைபொரு தோளிறச் செற்றவில் லிமகிழ்ந் தேத்திய
விரைமரு வுங்கடலோதமல் குமிரா மேச்சுரத்
தரையர வாடநின் றாடல்பே ணுமம்மா னல்லனே. 

பொழிப்புரை :

மிகுந்த காமவேட்கையால் பிறன்மனைவியைக் கவர்தல் தவறு என்ற அறவுரையை உணராத, இராவணனின் மலை போன்ற தோள்களைத் தொலைத்த இராமன் மகிழ்ந்து போற்றிய, புலவு நாறும் கடற்கரையையுடைய இராமேச்சுரத்தில் வீற்றிருக்கும் இறைவன் அரையில் பாம்பை கச்சாகக் கட்டித் திருநடனம் புரியும் தலைவனான சிவபெருமான் அல்லனோ?

குறிப்புரை :

உரை - சாபம். சாபம் தனக்கு நேர்ந்ததை உணராதவன், மிக்க காம வேட்கையான். உறு - மிக்க. மலையைப் பொருவும் தோள். பொருதோள் வினைத்தொகை. இற - சிதைய. செற்ற - அழித்த. வில்லி- இராமன். இகரம் ஆண்பாலில் வந்தது. விரை மருவும் கடல் - புலவு நாறுங்கடலை இங்ஙனம் கூறியது. இறைவனைத் தொழ உவந்து நீராடிய அரம்பை மாதர் முதலியோரது மெய்ப்பூசல் என்க. ஒதம் - அலை. அரை - இடுப்பின் கண்ணே. அரை - ஆகுபெயர். நல்லன் - நல்லவன், சிவபிரானுக்கு உரிய பெயர். \\\"நல்லானை நான் மறையோ டாறங்கம் வல்லானை\\\".

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

ஊறுடை வெண்டலை கையிலேந் திப்பல வூர்தொறும்
வீறுடை மங்கைய ரையம்பெய்யவிற லார்ந்ததோர்
ஏறுடை வெல்கொடி யெந்தைமே யவிரா மேச்சுரம்
பேறுடை யான்பெயர் ஏத்துமாந் தர்பிணி பேருமே. 

பொழிப்புரை :

கையினால் பறித்த பிரமனது தலையை ஏந்தி ஊர்கள் தோறும் சென்று அழகிய மங்கையர்கள் இட்ட பிச்சையை ஏற்றவனாய், வீரமுடைய இடபம் பொறிக்கப்பட்ட வெற்றிக் கொடி யுடைய எந்தையாகிய சிவபெருமான் இராமேச்சுரத்தில் வீற்றிருந் தருளுகின்றான். வீடுபேற்றை நல்கும் அவன் திருப்பெயரை ஏத்தும் மாந்தர்களின் பிறவிப்பிணி நீங்கும்.

குறிப்புரை :

ஊறு - திருக்கையால் தொட்டுப் பறிக்கப் பெறும் பொறி, ஐந்தனுள் அத்தலைக்குமட்டும் வாய்த்ததால் `ஊறுடை வெள்தலை` எனப் பட்டது. `சுவை ஒளி ஊறு` என்பவற்றில் வரும் ஊறு எனில் பொருட் சிறப்பில்லை. (உறுவது - ஊறு. பெறுவது - பேறு) வீறு - வேறு ஒன்றிற்கு இல்லாத அழகு. ஐயம் - பிச்சை. விறல் - வலி, வெற்றி. ஏறு - விடை. சிவனது கொடியில் எருதுருவம் உண்டு. பெயர் - பவாதி சிவநாமங்கள். பிணி - பிறவிப்பிணியும் அதுபற்றி வருவனவும். பேரும் - பெயரும். வந்தவழி மீண்டொழியும். (முத்து.சு.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

அணையலை சூழ்கட லன்றடைத் துவழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத் தபழி போக்கிய
இணையிலி யென்றுமி ருந்தகோ யிலிரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே.

பொழிப்புரை :

அலைகளையுடைய கடலில் அன்று அணைகட்டிக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இணையற்ற இறைவன், என்றும் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம். தனக்கு ஒப்பு ஒருவருமில்லாத அப்பெருமானின் தூய மலர் போன்ற திருவடிகளைப் போற்றித் துதிப்பவர்களின் துன்பம் நீங்கும்.

குறிப்புரை :

அலையையுடைய வளைந்த கடலை அணையால் அடைத்து அன்று வழி செய்தவன் என்பது முதலடிக்குப் பொருள். பொருப்பணை முரசம் தலைக்கு உவமை. இனி பணை இலங்கும் முடி எனப் பருத்து விளங்கும் முடியென்னலுமாம். அதற்கு \\\"அறு வேறுவகையின் அஞ்சுவரமண்டி\\\" என்ற திருமுருகாற்றுப் படையைப் போலப் பகுதியே வினையெச்சப் பொருள்தந்தது என்க. \\\"இணை இலி\\\" சிவனுக்கு ஒரு பெயர் \\\"இணையிலி தொல்லைத்தில்லோன்\\\" என்றது திருக்கோவையார். இணை - ஒப்பு. இலி - இல்லாதவன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சனிபுதன் ஞாயிறு வெள்ளிதிங் கட்பல தீயன
முனிவது செய்துகந் தானைவென் றவ்வினை மூடிட
இனியருள் நல்கிடென் றண்ணல்செய் தவிரா மேச்சுரம்
பனிமதி சூடிநின் றாடவல் லபர மேட்டியே. 

பொழிப்புரை :

சனி, புதன், சூரியன், வெள்ளி, சந்திரன் மற்றும் அங்காரகன், குரு, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களால் தீமை வரும் எனச் சோதிடன் கூறியதைக் கேட்டுக் கோபம் கொண்டு அவர்களைச் சிறையில் வைத்த தன் ஆற்றலுக்கு மகிழ்ந்த இராவணனை அழித்து வெற்றி கொண்ட பழி தீர, அருளை வேண்டி அண்ணல் இராமபிரான் வழிபட்ட தலம் இராமேச்சுரம். அங்கு எழுந்தருளியிருப்பவர் குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் முழுமுதற் பொருளான சிவபெருமானே ஆவார்.

குறிப்புரை :

பல தீமை விளைவிப்பனவாகிய சனி முதலிய நவக் கிரகங்களை என்பது முதலடிக்குப் பொருள். முனிவுசெய்து - கோபித்துச் சிறையிலிட்டு. உகந்தான் - தன்னாற்றலை மெச்சியவன். இந்திரசித்துப் பிறக்கும் பொழுது சோதிடம் இன்றுள்ள கிரக நிலையில் குழந்தை பிறந்தால் தீமையே தரும் என்றுகூற இராவணன் தான்பெற்ற வரத்தின் வலியால் - அக்கிரகங்களை யொருசேரச் சிறையில் இட்டுக் குழந்தை பிறந்த பின்னர் அக்கிரகங்களை விடுதலை செய்தான் இராவணன் என்பது இராமாயணம்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

பெருவரை யன்றெடுத் தேந்தினான் றன்பெயர் சாய்கெட
அருவரை யாலடர்த் தன்றுநல் கியயன் மாலெனும்
இருவரு நாடிநின் றேத்துகோ யிலிரா மேச்சுரத்
தொருவனு மேபல வாகிநின் றதொரு வண்ணமே. 

பொழிப்புரை :

பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனது புகழ் குறைந்து அழியும்படி அவனை அம்மலைக்கீழ் அடர்த்தலும், தன் தவறுணர்ந்து சாமகானம் அவன் பாடியபோது அவனுக்கு அருளுதலும் செய்தவர் சிவபெருமான். பிரமனும், திருமாலும் முழுமுதற்பொருள் சிவன் என்பதை உணர்ந்து வந்து ஏத்தியபோது விளங்கித் தோன்றி, இராமேச்சுரத்திலுள்ள கோயிலில் எழுந்தருளி யுள்ள சிவபெருமான் ஒருவனே எல்லாப் பொருள்களிலும் விளங்கித் தோன்றுகின்றான்.

குறிப்புரை :

பெயர் - புகழ். சாய்கெட - சாய்ந்து ஒழிய. \\\\\\\"சாய்தல் - (குறைதல்) ஓய்தல்\\\\\\\" என்பன. தொல் \\\\\\\"உரியியல்\\\\\\\" உலகேழெனத் திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. என்னும் திருவாசகத்தோடு ஒப்பிடுக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

* * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * *

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சாக்கியர் வன்சமண் கையர்மெய் யிற்றடு மாற்றத்தார்
வாக்கிய லும்முரை பற்றுவிட்டுமதி யொண்மையால்
ஏக்கிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
ஆக்கிய செல்வனை யேத்திவாழ் மின்னரு ளாகவே. 

பொழிப்புரை :

புத்தர்களும், சமணர்களும் கூறுகின்ற உண்மை யல்லாததும், தடுமாற்றம் கொண்டதுமாகிய உரைகளைப்பற்றி நிற்காது, ஒளிமிகுந்த அம்பினைச் செலுத்தும் வில்லையுடைய அண்ண லாகிய இராமபிரான் வழிபட்ட இராமேச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை ஞானத்தால் ஏத்தி வாழுங்கள். அவனருளால் எல்லா நலன்களும் உண்டாகும்.

குறிப்புரை :

ஏ(வு)க்கு - அம்புக்கு. \\\\\\\"கோளிலி எம் பெருமாற்கு\\\\\\\" என்புழிப் போல இராமேச்சுரம் ஆக்கித் தனது தலமாகச் செய்து கொண்ட செல்வன் சிவபெருமான். அருள் ஆக - திருவருள் கிடைக் கும்படி. ஏத்தி வாழ்மின்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பகலவன் மீதியங் காமைக்காத் தபதி யோன்றனை
இகலழி வித்தவ னேத்துகோ யிலிரா மேச்சுரம்
புகலியுள் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் புந்தியால்
அகலிட மெங்குநின் றேத்தவல் லார்க்கில்லை [யல்லலே. 

பொழிப்புரை :

தான் பெற்ற வரத்தின் வலிமையால் சூரியன் தன் நகருக்கு மேலே செல்லக் கூடாது என்று ஆணையிட்ட இலங்கைக் கோனாகிய இராவணனைப் போரில் அழித்த இராமபிரான் வழிபட்ட கோயிலாகிய இராமேச்சுரத்தினை, திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் சொன்ன இத்தமிழ்ப் பதிகத்தால் மனம் ஒன்றி இப்பூமியில் எங்கும் ஓதவல்லவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.

குறிப்புரை :

தான் பெற்ற வரத்தின் ஆற்றலால், சூரியன் தன் நகருக்கு மேலே நேரே செல்லக்கூடாது என ஆணைசெய்த இராவணன் என்பது முதலடியில் குறித்த பொருள். இராமேச்சுரத்தை ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை மனத்தோடு துதிக்க வல்லவர்களுக்கு அல்லல் இல்லை என்பது திருக்கடைக்காப்புச் செய்யுளின் கருத்து.
சிற்பி