திருப்பைஞ்ஞீலி


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்
ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர் . வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர் . அணிவது கோவண ஆடை . சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர் . இடபவாகனத்தில் ஏறியவர் . தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஆரிடம் - இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை . பாடிலர் - பாடலாகவுடையவர் . காடு அலால் - புறங்காடு அல்லாமல் . ஓர் இடம் இலர் - ஓர் இடம் குறை இலர் . அதனால் ஒரு குறைவும் இல்லாதவர் . நீர் இடம் சடை - தண்ணீர் இருக்கும் இடம் சடை ; பாரிடம் - பூதம் ; பாடுவது . வேதம் , தங்குவதும் புறங்காடு . வேலை செய்வது பூதம் . அத்தகையார் வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது . பயிலல் , முதல் நிலைத் தொழிற்பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மருவிலார் திரிபுர மெரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று வரையறை செய்து உணர்த்த இயலாத அப் பெருமானுடைய பெருமையை உணராதவர் அவனருளைப் பெறாதவர் . அவர்களின் அறிவைத் தெளிவித்தல் இயலுமா ?

குறிப்புரை :

மருவிலார் - பகைவர் . பரு வில் ஆ - பருத்த வில்லாதலின் . குனிதல் - வளைதல் . பைஞ்ஞீலிமேவலான் - திருப்பைஞ்ஞீலியில் மேவுதலையுடையவன் . உருஇலான் - வடிவமில்லாதவன் . அவன் பெருமையையுணர்பவர் திருவுடையவர் . உணர்கிலாதவர் ; திருவிலாதவர் . அவர்களை அறிவுரை கூறித்தெளிவிக்க இயலாது என்பது பாசுரத்தின் இறுதிப் பகுதியின் பொருள் . உருவிலான் - சிவனுக்கு ஒரு பெயர் . உளங்கொளல் - உணர்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.

பொழிப்புரை :

அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப் பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் , வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் .

குறிப்புரை :

அம் சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி - அழகிய சுரும்பு என்னும் சாதி வண்டினம் மலரை அடைந்து தேனைக்குடித்துத் தேன் என்னும் சாதிவண்டினங்களுக்குப் பஞ்சுரம் என்னும் பண்ணைப்பாடிப் பழக்கும் திருப்பைஞ்ஞீலி . வெம்சுரம் - வெப்பமாகிய காடு . மேவலான் . மேவல் ஆன் - தங்குதலையுடையவன் . கொள்கையே ; இங்கு என்னே என்னும் பயனிலை அவாய்நிலையாற் கூடி முடிந்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே.

பொழிப்புரை :

காந்தள் மலர்களிலும் , முல்லை நிலத்திலுள்ள காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள் செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க , திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர் . ஆணுமல்லர் . பெண்ணுமல்லர் . திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார் எங்கள் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

கோடல் - காந்தள் புறவணிகொல்லை முல்லைமேல் பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலி - முல்லை நிலத்தைச் சார்ந்த காடுகளில் முல்லை மலரின் மேல் பாடுதலையுடைய வண்டினம் இசைமுரலுதல் பொருந்திய திருப்பைஞ்ஞீலி . முரலுதல் மூக்கினால் - ஒலித்தல் . முரலுதல் என்ற சொல் பகுதியளவாய் முரல் என்று நின்றமை முதனிலைத் தொழிற் பெயர் . பயில் பைஞ்ஞீலி - வினைத்தொகை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே.

பொழிப்புரை :

விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி , இளம்பிறையையும் , கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன் சிவபெருமான் . பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை வணங்குபவர்களின் செல்வமில்லாத வறுமைநிலையைப் போக்குவான் .

குறிப்புரை :

நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச் சுற்றிய சடையிடத்தே தரித்தவன் . சுழியில் ஆர் - சுழியோடு பொருந்திய , வேற்றுமை மயக்கம் . பைஞ்ஞீலி பாடலான் - திருப்பைஞ்ஞீலியின் கண் பாடுதலையுடையவனாகி வீற்றிருப்பவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுர னல்லனே.

பொழிப்புரை :

இடபம் பொறித்த கொடியை வலக்கையில் ஏந்தி , வெண்மழுப்படையையுடைய கடவுள் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளான் . உடுக்கை போன்ற குறுகிய இடையில் மேகலை என்னும் ஆபரணம் அணிந்து , சீலையால் மறைத்த அல்குலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு , சடையிலே கங்கையைத் தரித்த சதுரன் ஆவான் .

குறிப்புரை :

வெண்மழு - இரும்பால் ஆகிய ஓர் ஆயுதம் . தீட்டப்பெற்று வெண்மையாயிருப்பதால் வெண்மழு எனப்பட்டது . ` விரவார் வெருவத்திருப்பு சூலத்தினன் . ஆதலால் இரத்தக்கறை முதலியன படியாத வெண்மழு என்றார் . ஒருத்தி தன்னுடம்பில் ஒருபாகத்திலிருக்கவும் சடையில் மற்றொருத்தியை நீர்வடிவமாகத் தோன்றுமாறு வைத்த சாமர்த்தியவான் அல்லரோ ?

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

தூயவன் தூயவெண் ணீறு மேனிமேல்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவ னெனைச்செயுந் தன்மை யென்கொலோ.

பொழிப்புரை :

இறைவன் தூயஉடம்பினன் . தூய்மையான திருநீற்றைத் தன் திருமேனி முழுவதும் பரவப் பூசியவன் . திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுபவன் . மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் சீவனான என்னைச் சிவனாகச் செய்யும் பண்புதான் என்னே !

குறிப்புரை :

பாய்தல் - பரவுதல் . வெண்ணீறுமேனி மேல்பாயவன் - வெண்ணீற்றை உடம்பின்மேல் பரவப்பூசினவன் . பாய - இடமகன்ற ( விஸ்தாரமான ) பைஞ்ஞீலி . கோயில் - மரூஉ . மேயவன் - விரும்பியவன் . மே - விருப்பம் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ( தொல் , சொல் , உரி .) வேய்புரை தோளி - மூங்கில் போன்ற தோளை யுடையவள் . பாகமா ஏயவன் - பாகமாகப் பொருந்தியவன் . சிவனாகிய என்னைச் சீவனாகச் செய்யும் பண்பு என்னே ? எனக் கடைசியடிக்குப் பொருள் கொள்க . கொல் - அசைநிலை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளொர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே.

பொழிப்புரை :

கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான் . அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றான் . முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியை ஒருபாகமாக அணைத்துக் கொண்டவன் . அப் பெருமானின் திருவடிகளைப் பொருந்தி வாழ்வீர்களாக .

குறிப்புரை :

தொத்தின - கொத்தாகிய . தோள் - தோள் இருபதையும் . முடியுடையவன் தலை , பத்தினை - பத்தையும் . முத்தினை முறுவல் செய்தாள் - முத்தைப் பல்லாகச் செய்து கொண்ட உமா தேவியார் என்றது , முத்துப் போன்ற பல்லையுடையவள் என்றபடி , பொத்தினன் - அணைத்துக் கொண்டவன் . முத்தை இகழ்ந்தவள் என்றும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

நீருடைப் போதுறை வானு மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே.

பொழிப்புரை :

நீர்நிலைகளில் விளங்குகின்ற தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , சிறப்புடைய கழலணிந்த திருவடிகளையும் தேடியும் காணாது நிற்க , இவ்வுலகை உடைமைப் பொருளாகக் கொண்ட இறைவன் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் கொன்றைமாலை அணிந்த தலைவனாய் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நீருடைப்போது - தண்ணீரைப் பிறப்பிடமாகவுடைய தாமரைப்பூ . பிரமனும் மாலுமாய் இருவரும் கூடித்தேடியும் அடி சென்னி காண்கிலார் என்பது எதிர்நிரல் நிறையாகலின் , முறையே சென்னி , அடிகாண்கிலார் எனக்கூட்டுக . பார் உடைக் கடவுள் - உலகம் உடைமைப் பொருளாகத் தான் உடையோனாகிய ( உலகத்துப் பதியாகிய ) கடவுள் . பார் - பூமி . இங்கே உலகம் என்ற பொருளில் வந்தது . போதுறைவானும் மாலும் காண்கிலர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

மயிற்பீலி யேந்திப் பெருமை கொள்ளும் சமணர்களும் , திரிபிடகம் என்னும் சமயநூலுடைய புத்தர்களும் , தங்கள் நூற்பொருளோடு பொருந்தாதவர்களை வாதிட்டு வெல்லும் வல்லமையில்லாதவர்கள் . எனவே , அவர்களின் உரைகளைக் கேளாது , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்து அம்பினைத் தொடுத்து எய்து முப்புரங்களை எரித்தவனும் , திருப் பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவனுமான சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளை நினைந்து வணங்கி வாழ்வீர்களாக !

குறிப்புரை :

பீலியார் - மயிற்பீலியை யேந்திவரும் சமணர் . எறும்பு முதலிய உயிர்களுக்கும் துன்பம் நேராதவாறு மெல்லிய பொருளாகிய மயில் தோகையால் வழியைச் சீத்துச் செல்வது சமணமுனிவர் செயல் . பிடகர் - புத்தர் ; புத்த தருமம் உரைக்கும் நூல் பிடகம் எனப்படும் . வகைநோக்கித் திரிபிடகம் எனவும் படும் . நூன்மை - நூலின் பொருள் . சாலியாதவர் - சாதியாதவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புண ரருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே.

பொழிப்புரை :

தண்ணீர் பாய்கின்ற வயல்வளமுடைய சீகாழியில் , கற்பகமரம் போன்று அன்பினால் அனைத்துயிர்கட்கும் நலம் சேர்க்கும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் , நற்பண்புடையவர் வணங்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனைப் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் , வினைப்பயன்களை நுகர்வதற் காகப் பிறந்துள்ள இப்பூவுலகில் ஓங்கி வாழ்வர் .

குறிப்புரை :

கண் - இடமெல்லாம் . புனல் - நீர் நிலையையும் விளைவயல் - விளையும் வயல்களையும் , உடைய . காழி - சீகாழியுள் . கற்பகம் - கற்பகத்தருவாகிய . உண்பின உலகினில் - முற்பிறப்பில் செய்த வினைகளை நுகர்தற்குரியபுவனமாகிய இவ்வுலகத்தில் . உண்பின - குறிப்புப் பெயரெச்சம் .
சிற்பி