திருவிற்கோலம்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத் திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திருவிற் கோலமே.

பொழிப்புரை :

அழகே உருவான உமாதேவியோடு ஒன்றிநின்ற, செல்வரான சிவபெருமான் தம் சடைமுடியில் திங்களும், கங்கையும் சூடியவர். வானவர்கள் அஞ்சித் தொழுது போற்றுமாறு, வெகுண்டெழுந்து போர்க்கோலம் பூண்டு வில்லேந்தி, அப்பெருமான் வீற்றிருந்தருளுகிற இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

உரு - அழகு. உருவின் ஆர் - அழகினால் நிரம்பிய. உமையொடும் ஒன்றி நின்றது. ஓர் திருவினான் - வேறறக் கலந்து நின்ற செல்வத்தன். \\\"அவளால்வந்த வாக்கம் இவ் வாழ்க்கை யெல்லாம்\\\" (சிவஞான சித்தியார். சூ 1.69.) திங்கள் கங்கையான் - திங்களோடு அணிந்த கங்கையையுடையவன்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

சிற்றிடை யுமையொரு பங்க னங்கையில்
உற்றதோர் எரியினன் ஒரு சரத்தினால்
வெற்றிகொள் அவுணர்கள் புரங்கள் வெந்தறச்
செற்றவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

சிறிய இடையையுடைய உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு, அழகிய கையில் நெருப்பு ஏந்தி விளங்கும் சிவபெருமான், ஓர் அம்பால் அசுரர்களின் மூன்று புரங்களும் வெந்தழியுமாறு போர்செய்து வெற்றி கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்னும் கோயிலாகும்.

குறிப்புரை :

சரம் - அம்பு. ஒரு சரத்தினால் செற்றவன் (அழித்தவன்) என்றமையானே புரங்கள் மூன்றென்பதும் பெற்றாம். \\\\\\\"ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற\\\\\\\" என்னும் திருவாசகமும் (தி.8 பா.296) காண்க.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

ஐயன்நல் லதிசயன் அயன்விண் ணோர்தொழும்
மையணி கண்டனார் வண்ண வண்ணம்வான்
பையர வல்குலாள் பாகம் ஆகவும்
செய்யவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவர் யாவற்றுக்கும் தலைவர். பல பல வேடம் கொள்ளும் அதிசயர். பிரமனும், மற்றுமுள்ள விண்ணோர்களும் தொழுகின்ற மை போன்ற இருண்ட கண்டத்தர். நல்ல வண்ணமுடைய, பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு செம்மேனியராய் அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

ஐயன் - தலைவன். அதிசயன் - \\\"பல பல வேடமாகும் பரன்\\\" என்னும் மேம்பாட்டையுடையவன். அயன் விண்ணோர் - பிரமனும் தேவரும். மை:- நஞ்சுண்ட கறுப்புக்கு ஒப்பு. கண்டனார் - திருக்கழுத்துடையவர். வண்ணம் செய்யவன்; வண்ணவான் பையரவு அல்குலாள் (அம்பிகை) பாகம் ஆகவும் செய்யவன். `செந்தீ வண்ணன்` `பவளம் போல் மேனியன், அம்பிகையின் நிறம் கலந்தும் வேறுபடாத செம்மையன். அவன் உறைவிடம் திருவிற்கோலம். இவ்விற்கோலம் நீங்கிப், பண்டைய தற்கோலம் உடைமை விளங்கிய தலத்தின் பெயரே, தற்கோலம் என மருவிற்று. (தி.12. திருஞான. 1005.)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப்
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையும்
சிதைத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் சனகாதி முனிவர்கட்கு அறக்கருத்துக்களை நன்கு பதியும்படி உபதேசித்தவன். மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உருண்டு விழும்படி செய்தவன். திரிபுரங்கள் மூன்றையும் எரித்துச் சாம்பலாகுமாறு சிதைத்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் திருவிற்கோலம் என்பதாம்.

குறிப்புரை :

முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு. அறம் முன் விதைத்தவன் - சரியையாதி நாற்பதப் பொருள்களையும் மனத்தில் பதிய உபதேசித்தவன். அறம் என்பது சரியை கிரியை இரண்டினையும் குறிக்கும். அதனை \\\"நல்ல சிவதன்மத்தால்\\\" எனவரும் திருக்களிற்றுப் படியாரால் அறிக. ஈண்டு `அறம்` முடிவான ஞானத்தின் மேலது. விதைத்தவன் என்றதனால் சிவானந்தப் பெரும்போகம் விளைந்தமையும் காண்க.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே.

பொழிப்புரை :

இறைவன் எல்லாப் பொருள்கட்கும் முற்பட்டவன். மும்மூர்த்திகளுக்குள் தலைவனாவன். கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருப்பவன். மாலையில் வானில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடியவன். அடியவர்களைப் பற்றியுள்ள வினைகள் நீங்கும்படிச் செய்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

கூகம் - ஊர் (கூவம் என வழங்குகிறது) திருவிற் கோலம் - திருக்கோயில். \\\"முந்தைகாண் மூவர்க்கும் முதலானான் காண்\\\" என்னும் திருத்தாண்டகத்தோடு முதலடியை ஒப்பிடுக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்
வகுத்தவன் வளர்பொழிற் கூக மேவினான்
மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்தறச்
செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் அரிய நான்கு வேதங்களையும் அவற்றின் ஆறங்கங்களையும் தொகுத்தவன். சிவாகமங்களை அருளிச் செய்தவன். வளமையான சோலைகளையுடைய கூகம் என்னும் ஊரில் வீற்றிருக்கும் அவன், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். செருக்குற்று மிகுந்த கொடுமைகளைச் செய்த அசுரர்களின் முப்புரங்களை வெந்தழியும்படி செய்தவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

தொகுத்தல் - பலவாய்க் கிடப்பனவற்றை ஒருமுறைப் படுத்திச் சேர்த்தல். மறைகளையும் அங்கங்களையும் தொகுத்தவன். ஆகம நூற் பொருளை நந்தியெம்பெருமானுக்கு வகுத்து உபதேசித்தவன் என்றது \\\"முந்தொரு காலத்தின் மூவுலகந்தன்னில், அந்தமில் மறையெல்லாம் அடிதலை தடுமாறி\\\" என்பது கந்தபுராணம்; பாயிரப் படலம் 1 முதல் 39 வரையுள்ள பாடல்களால் அறிக.
மிகுத்தவன் - தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். மிகுத்தவர் - செருக்கு உற்றவர்களாகிய அசுரர்களின், புரங்கள். செகுத்தவன் அழித்தவன். மிகுத்தல்; இப்பொருட்டாதலை \\\"மிகுதியான் மிக்கவை செய்தாரை\\\" என்ற திருக்குறளால் (158) அறிக.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

விரித்தவன் அருமறை விரிச டைவெள்ளம்
தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசற
எரித்தவன் இலங்கையர் கோன்இ டர்படச்
சிரித்தவன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

அரும்பொருளுரைக்கும் வேதங்களை இறைவன் விரித்து அருளியவன். விரிந்து சென்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவன். பகையசுரர்களின் முப்புரங்கள் அற்றொழியும்படி எரித்தவன். இலங்கை மன்னனான இராவணன் கயிலையின் கீழ்த் துன்புறும்படி செய்து, பின் அருள் புரிந்த விளையாடல் செய்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

ஆசுஅற - பற்றற (முற்றிலும்). சிரித்தல் - திரு விளையாட்டு. அவனைக் கதறச் செய்தல் தமக்கொரு திருவிளையாட்டாய் இருந்தது.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன்
அரியொடு பிரமன தாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறைவன் வானத்திலே பறந்து திரிந்து தேவர்கட்குத் தீங்குகள் செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவன். வரிகளையுடைய பாம்பையும், சந்திரனையும் சடையிலே அணிந்தவன். திருமாலும், பிரமனும் தமது ஆற்றலைப் பெரிதாகக் கொண்டு முனைந்ததால் காண்பதற்கு அரியவனானவன். அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

திரிதரு - வானத்திலே பறந்து திரிந்து கொண்டிருந்த; புரம். சிவபிரான் காட்டிய எட்டு வீரங்களில் ஒன்றாகையால் சேவகன் என்றார். ஆற்றலால் உருத்தெரியலன் - அவனைத் தெரிய வேண்டியவன் அதற்குரிய வழிகள் பல இருக்கவும் அவற்றிலொன்றையேனும் பற்றாமல் தம் ஆற்றலைக் கருதின அவர்தம் பேதைமைக் கிரங்கி நம் திருநாவுக்கரசர் பாடியுள்ள இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை (5ஆம் திருமுறை) இங்கே கருதத்தக்கது \\\"மரங்களேறி மலர் பறித்திட்டிலர், நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைந்திலர் உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே\\\" என்பது அதில் ஒருபாடல்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சீர்மையில் சமணொடு சீவ ரக்கையர்
நீர்மைஇல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப்
பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும்
சீர்மையி னான்இடம் திருவிற் கோலமே. 

பொழிப்புரை :

இறையுண்மையை உணரும் தன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ளாது, இறை நம்பிக்கையுடன் அவன்மீது பக்தி செலுத்துபவர்கட்கு உலகில் பெருஞ்செல்வத்தைப் பரிவுடன் இறைவன் தருவான். அத்தகைய மேன்மையுடைய பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

குறிப்புரை :

சீர்மை - ஒழுங்கு. நான்காமடியிற் சீர்மை - மேன்மை. \\\"சீர்மை சிறப்பொடு நீங்கும்\\\" (குறள் - 195) என்பதிற்போல, சமணர் என்ற சொல் சமண் என விகுதி குன்றி வந்தது; தூது, அரசு அமைச்சு என்றாற்போல். சீவரம் - புத்தமதத் துறவி யுடுத்தும் காவி ஆடை. கையர் வெறுக்கத் தக்கவர். கைத்தல் - வெறுத்தல்.

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கோடல்வெண் பிறையனைக் கூக மேவிய
சேடன செழுமதில் திருவிற் கோலத்தை
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்வல் லார்களுக் கில்லை பாவமே. 

பொழிப்புரை :

வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி, கூகம் என்னும் ஊரில், அழகிய, வளமையான மதில்களை யுடைய திருவிற்கோலம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நினைத்துத் தமிழ் ஞானசம்பந்தன் பாடல்களைப் பாட வல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

கோடல் - கோடுதல்; வளைதல். சேடன - சிவ பெருமானுடைய (திருவிற்கோலத்தை).
சிற்பி