திருக்கழுமலம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம் . தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம் . இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கதிக்கியாதும் - கதிக்கு + யாதும் . ஓர் குறை இ ( ல் ) லை . கண்ணின் நல்லது உறும் - கண்ணுக்கினிய நல்லவளத்தையுடைய . கழுமலவளநகர் கண்ணின் நல்லஃது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

போதையார் பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை யாண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு ஊட்ட , பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து ` யார் தந்த அடிசிலை உண்டனை ?` என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியினை நல்கி என்னை ஆட்கொண்டார் . அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

போது - மலர் . போதை ஆர் - மலரை யொத்த ; பொற் கிண்ணம் . அடிசில் - சோறு . போனகம் ; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும் , அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது . ` ஞானபோனகர் ` என்று சேக்கிழார் சுவாமிகள் வழங்குவதாலும் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும் , நெற்றியில் ஒரு கண் கொண்டும் , கழுமலம் என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

தொண்டு அணைசெய் தொழில் துயர் - தொன்று தொட்டே ஆன்மாவைப்பற்றி வருத்தும் தொழிலையுடைய வினைகள் . ` தொல்லை வல்வினை தொந்தம் ` என்ற அப்பர் திருக்குறுந்தொகை காண்க . பெண்துணையாக ஓர் பெருந்தகையிருந்தது என்றது - எவ்வுயிர்க்கும் ` அருந்துணையாயும் , பெருந்துணையாயும் உற்றார் இலாதார்க்கு உறுதுணையாயும் உள்ள ஒரு பெருந்தகை ` ஓர் பெண் துணையாக வீற்றிருக்கிறார் என்பது ஒரு நயம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அயர்வுளோம் என்றுநீ அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கயல்வயல் குதிகொளுங் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! வினையால் இத்துன்பம் வந்தது என்று எண்ணித் தளர்ச்சியுற்றுச் சோம்பியிருத்தலை ஒழிப்பாயாக . ( இறைவனை வழிபட்டு இத்துன்பத்திலிருந்து விடுபடவேண்டும் என்பது குறிப்பு ). ஒளிமிக்க வளையல்கள் முன்கைகளில் விளங்க , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , கயல்மீன்கள் அருகிலுள்ள வயல்களில் குதிக்குமாறு நீர்வளமும் , நிலவளமுமிக்க திருக்கழுமலம் என்னும் வளநகரில் பல பெயர்கள் கூறிப் போற்றும்படி பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நியர் - நிகர் . நிகர் என்பது எதுகை நோக்கித் திரிந்தது . அசைவு - சோம்பல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடையுயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! நமக்குப் புகலிடம் இல்லையே என்று தளர்ச்சி அடைவதை ஒழிப்பாயாக ! இடபக் கொடியினைக் கொண்டு விண்ணவர்களும் தொழுது போற்றும்படி , கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய கழுமலம் என்னும் வளநகரில் பெண்அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

அடைவு - பற்றுக்கோடு . சேருமிடம் - புகலிடம் . அயர்வு - தளர்ச்சி . கடை உயர் மாடம் ஆர் - கடைவாயில்கள் உயர்ந்த மாளிகைகளையுடைய . ( கழுமலவளநகர் ). இனி , கடைஉயர் ( மாடம் ஆர் ) கழுமலம் என்றுகொண்டு , ஊழிக்காலத்தில் உயர்கின்ற கழுமல வளநகர் எனினும் ஆம் . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் 4 ஆம் செய்யுட் கருத்து என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

மற்றொரு பற்றிலை நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல் திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! இறைவனைத் தவிர மற்றோர் பற்று எதுவுமில்லை . நான்கு வேதங்களையும் நன்கு கற்று , கற்றதன்படி ஒழுகுகின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருக்கழுமலம் என்னும் வளநகரில் சிற்றிடையும் , பெரிய அல்குலும் உடைய , அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு , என்னை ஆட்கொண்ட பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பெற்று எனை ஆளுடைப் பெருந்தகை . ` யாவருக்குந் தந்தைதாய் எனுமிவரிப்படியளித்தார் ஆவதனால் ஆளுடைய பிள்ளையார் ஆய் அகில தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும் தாவில் தனித்திரு ஞானசம்பந்த ராயினார் ` என்னும் பெரிய புராணம் நோக்குக .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

குறைவளை வதுமொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள் நேரிழை யவளொடும்
கறைவளர் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! மனக்குறை கொண்டு மொழியும் சொற்களை விடுவாயாக . நிறைந்த வளையல்களை முன்கையில் அணிந்து , சிறந்த ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு , இருண்ட சோலைகளையுடைய அழகிய திருக்கழுமலம் என்னும் வளநகரில் , பிறைச்சந்திரனைச் சடைமுடியில் சூடிப் பெருந்தகையாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

குறைவளைவது மொழிகுறைவு ஒழி - ( பல ) குறைபாடுகள் ( நம்மை ) வளைந்து கொண்டிருப்பதைப் ( பிறரிடம் ) சொல்லித் தவிர்க்க வேண்டுகின்ற குறைவை இனி ஒழிவாயாக ( நெஞ்சமே ).

பண் :கொல்லி

பாடல் எண் : 8

அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர் அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார் . பின் அவன் தன் தவறுணர்ந்து நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட , கூர்மையான வாளை அருளினார் . திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள் செய்யும் உமாதேவியோடு பெருந்தகை யாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அரக்கனார் அருவரை எடுத்தவன் - முதலில் உயர்த்திப்பின் எடுத்தவன் எனத் தாழ்த்திக்கூறிய நயத்தை ` எனைத் துணையர் ஆயினும் என் ஆம் ` என்னுந் திருக்குறளோடு ஒப்பிட்டுக் காண்க . நீடியாழ் - நீடு + யாழ் - நெடியவீணை , வீணையாற்பாட . கருக்கு - முனை ; கூர்மை . பெருக்கும் நீர் அவள் - அன்பர்க்குத் திருவருளைப் பெருக அளிக்கும் தன்மையுடையவள் ; என்பது ` அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள் ` என்ற திருவெம்பாவைப் ( தி .8) பாடற்கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும் , பிரமனும் அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன் . நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில் பெண்யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நினைந்துருகும் தன்மையில்லாதவர்களாகிய பிரம விட்டுணுக்களால் அறியமுடியாத அழல் உருவாய் நின்றவன் . அரிது - இன்மைமேல் நின்றது . ` மனக்கவலை மாற்றலரிது ` என்புழிப்போல . ( திருக்குறள் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 10

தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.

பொழிப்புரை :

மாலை போன்று , பாயை விரும்பி ஆடையாக அணிந்துள்ள சமணர்களும் , புத்தர்களும் , இறையுண்மையை எடுத்துரைக்காது , தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால் , அவற்றை விடுத்து , இறைவனின் திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக . பசுமைவாய்ந்த அழகிய சோலைகள் வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

தார் உறுதட்டு உடைச்சமணர் - மாலையைப்போல விரும்பி உடுத்திய பாயை உடைய சமணர் . தட்டு - பாய் . ` தட்டை யிடுக்கி ` என்பதனாற்கொள்க ` தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவார் ` என்பது இங்குக் காண்க . பேர் அறத்தாள் - முப்பத்திரண்டறமும் வளர்த்தவள் . அறத்தாள் - தரும சொரூபி : அம்பிகை எனக் கொண்டு பெரிய நாயகி எனலும் ஒன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.

பொழிப்புரை :

நீர்வளமும் , தேன்வளமும் பெருகிய திருக்கழுமல வளநகரில் , மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவ பெருமானை , அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

கரும் தடம் - கரிய சேற்றையுடைய குளங்கள் . பெருந்தடங்கொங்கை - அம்பிகை ; அன்மொழித் தொகை , பன்மொழித் தொடர் . சம்பந்தன செந்தமிழ் ; அகரம் , ஆறனுருபு . ஆகையால் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் ( ப்பாசுரங் ) கள் என்க . ஒவ்வொரு பாசுரத்திலும் ` பெருந்தகை எம் பெருமாட்டியுடன் இருந்ததே என்று .... அண்ணலார் தமை வினவித் திருப்பதிகம் அருள் செய்தார் ` என்ற பெரியபுராணப் ( தி .12) பாடலின்படி எம் பெருமாட்டியுடன் பெருந்தகை ( நன்கு ) இருக்கிறாரா ? என்று வினவினதாக இருத்தலால் ஈற்றேகாரம் வினாப்பொருளில் வந்தது . இதனை ஈற்றசை என்று உரைத்தாருமுளர் .
சிற்பி