திருந்து தேவன்குடி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , தேவர்கட் கெல்லாம் தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு மருந்தாகவும் , மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும் , சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் .

குறிப்புரை :

திருந்து தேவன்குடியில் உள்ள தேவனும் அருந்தவத்தோர்கள் வணங்கும் அடிகளும் ஆகிய சிவபெருமானது வேடங்களாகிய திருநீறு உருத்திராக்கம் சடைமுடி ஆகிய இவற்றைக் கண்ணாற் கண்டாலும் , இவ்வேடத்தை மனத்தால் நினைத்தாலும் அவை மருந்து வேண்டினார்க்கு மருந்தாகவும் , மந்திரம் விரும்பினார்க்கு மந்திரமாகவும் , சிவ புண்ணியச் சரிதை கேட்க விரும்பினார்க்கு அப்புண்ணியப் பலனாகவும் பயன்தரும் என்பது இதன் கருத்து . இங்கு ` அடிகள் ` என்றது சிவபெருமானை , ` எம் அடிகள் நின்றவாறே ` என்ற அப்பர் திருவாக்காலும் அறிக . இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இச்சொல் பயின்று வருகிறது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

வீதிபோக் காவன வினையைவீட் டுவ்வன
ஓதியோர்க் கப்படாப் பொருளையோர் விப்பன
தீதில்தே வன்குடித் தேவர்தே வெய்திய
ஆதிஅந் தம்மிலா அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

தேவர்கட்கெல்லாம் தேவனாக , தீமையில்லாத திருந்து தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள் கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன .

குறிப்புரை :

வீதிபோக்கு ஆவன - திருவீதி வலம் வருங்கால் அணிவதற்குரிய அணிகலன்களாக அணிசெய்வன . போக்கு - போதல் . இங்கு ஆகுபெயர்ப் பொருளை உணர்த்திற்று . ஒரு நூலைப் படித்துப் பொருள் விளங்காதிருக்கும் பொழுது இவ்வேடத்தை நினைத்தால் அப்பொருள் தெள்ளிதில் விளங்கும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மானம்ஆக் குவ்வன மாசுநீக் குவ்வன
வானையுள் கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி
ஆனஞ்சா டும்முடி அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும் திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச் செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக் காட்டுவன .

குறிப்புரை :

மாசு நீக்குவன - மனத்துக்கண் மாசை நீக்குவன . வான் - வெளி - இன்பவெளி . உள்க - நினைக்க . ஆன் அஞ்சு - பஞ்ச கவ்வியம் ; அபிஷேகத்திரவியங்களில் ஒன்று . ` ஆனைந்தும் ஆடினான்காண் ` என்பது அப்பர் திருவாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

இப்பூமியைச் செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து , வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச் செவிகட்கு இன்பம் தருவன . நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன . கவிபாடும் ஆற்றலைத் தருவன . சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன .

குறிப்புரை :

திருவேடத்தின் புகழைக் கேட்டாலும் மகிழ்வு உண்டாம் . அவி - வேள்வித்தீயில் இடும் அவிசு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

விண்ணுலா வும்நெறி வீடுகாட் டும்நெறி
மண்ணுலா வும்நெறி மயக்கந்தீர்க் கும்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணலா னேறுடை அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

ஒளிரும் சந்திர மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவ பெருமானின் திருவேடம் , இப்பூவுலகில் வாழும் நன்னெறியைக் காட்டி , தத்துவங்களே தான் என மயங்குவதைத் தீர்க்கும் . சிவலோகம் செல்லும் நெறிகாட்டும் . முக்தி நெறி காட்டும் .

குறிப்புரை :

விண் - சுவர்க்கலோகம் :- போகபூமி . மதி தீண்டும் - சந்திர மண்டலத்தை யளாவிய , தேவன்குடி .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படும்
திங்கள்தோ யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ றும்சொன்ன அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

சந்திரனைத் தொடுமளவு ஒங்கி வளர்ந்துள்ள , நந்தனவனச் சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக .

குறிப்புரை :

தற்போது இவ்வேடம் அணிந்திருப்போர் முன் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . உயர்வு என்று வாயினும் சொல்ல முடியாத அவ்வளவு புகழைத் தருவதாகக் கருதுக என்பது முதல் இரண்டடியின் கருத்து . ` எவரேனும் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி உவந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி ... ஈசன் திறமேபேணித் தொழு மடியார் ` என்னும் அப்பர் அருண் மொழிகளால் இதனை உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கரைதல்ஒன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையில்ஊ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள்பொங் கப்புனல் பாயுந்தே வன்குடி
அரையில்வெண் கோவணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

அலைகள் வீசுகின்ற ஆறுபாயும் திருந்து தேவன் குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின் திருவேடங்கள் முழுதும் குணமேயாகும் . குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை . அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும் . அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் .

குறிப்புரை :

கரைதல் - குற்றமாகச் சொல்லுதல் , ஒன்றும் இல்லை . ( ஒரு பொருளென்றால் குணம் குற்றம் இரண்டும் கலந்திருக்கும் . இவ்வேடத்தில் முழுதும் குணமேயன்றி , குற்றமென்று சொல்லுவதற்கு ஒன்றுமில்லை ) என்பதாம் . உரையில் ஊனம் இலை - இதன் பெருமையைச் சொன்னால் நமக்குள்ள குறைகள் நீங்கும் ( உரை + கு + இல் ) = உரைக்கில் என்பதின் ` கு ` ச்சாரியை யின்றி வந்த செயின் என்னும் வினையெச்சம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

உலகமுட் குந்திறல் உடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும்வே டத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங் கும்முடி அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

சிறந்த நந்தனவனச்சோலை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம் , உலகத்தைத் தனக்குக்கீழ் அடக்கும் ஆற்றலுடைய இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது . எனவே அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது .

குறிப்புரை :

இராவணனது வலியையும் பின்வாங்கத் தக்க வலியையுடைய பூத கணங்கள் , ( அவ்வேடம் உடைமையால் ) பிற அஞ்சத்தக்க எப் பொருள்களையும் அடியார்மாட்டு எய்தவொட்டாது வெருட்ட வல்ல திருவேடத்தையுடையன என்பது முன்னிரண்டடிகளின் கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

துளக்கம்இல் லாதன தூயதோற் றத்தன
விளக்கம்ஆக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்குந்தே வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண் ணாவண்ணத் தடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கின்ற மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தனவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில் , பிரமனும் திருமாலும் காணவொண்ணாச் சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன . கண்டவர் மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன . அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன .

குறிப்புரை :

துளக்கம் இல்லாதன :- ` மண்பாதலம்புக்கு மால் கடல் மூடி மற்று ஏழுலகும் விண்பால் திசைகெட்டு இருசுடர் வீழினும் ` - இவ் வேடம் புனைந்தவர்க்கு நடுக்கம் இல்லை . தூய தோற்றத்தன - கண்டவர் மனத்தையும் தூய்மை செய்யும் தோற்றத்தையுடையவை . விளக்கம் ஆக்குவன - மனத்தில் விளங்காமலிருக்கும் பொருள்கள் இவ்வேடத்தைக் கண்டால் விளங்கும் . ஆக்குவன - வகரம் விரித்தல் விகாரம் . வெறி - வாசனை . அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் - ` இன்ன தன்மையனென்று அறிவொண்ணா இறைவன் ` என்றது சுந்தரமூர்த்திகள் தேவாரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே.

பொழிப்புரை :

நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும் , சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள் . அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா . இலக்குமி வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம் , உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும் .

குறிப்புரை :

செருமருதண்துவர் - நெருங்கிய மருதமரத்தின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணியும் . மரு - மருது : கடைக்குறை . தேர் அமண் ஆதர்கள் - புத்தரோடுகூடிய சமணர்களாகிய தீயோர் , உருமருவப் படாத் தொழும்பர் - நெருங்க முடியாத அருவருப்பான தோற்றம் . அருமருந்து - கிடைத்தற்கரிய தேவாமிர்தம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

சேடர்தே வன்குடித் தேவர்தே வன்றனை
மாடம்ஓங் கும்பொழின் மல்குதண் காழியான்
நாடவல் லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத் தும்வல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழும் திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவ பெருமானைப் பற்றி , ஓங்கிய மாடமாளிகைகளும் , சோலைகளும் நிறைந்த , குளிர்ச்சிபொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

சேடர் தேவன்குடி - தேவர் வணங்கும் தேவன்குடி . திருநீறு அணிதல் உருத்திராக்கம் பூணுதல் சடை தரித்தல் இவை சிவவேடம் எனப்படும் . இவ்வேடம் புனைந்தாரைக் குணம் குற்றம் பாராது வேடத்தையே கருதி வழிபடல்வேண்டும் . இவர்கள் அஞ்சுவது யாதொன்றுமில்லை . இவரைப் பூசிப்போருக்கு எய்தாதன இல்லை என்பன இப்பதிகத்தால் தெளிவுறுத்தப்படும் பொருள் . இவற்றில் திருநீறு ஒன்றையே பொருளெனக்கொண்டு முத்தி யடைந்தவர் ஏனாதிநாதநாயனார் ` கடையவன்றன் நெற்றியின்மேல் வெண்ணீறு தாம் கண்டார் ` ` கண்ட பொழுதே கெட்டேன் . முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு கண்டேன் . வேறு இனி என் ? அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினார் ` என்று மனம்கொண்டு இவர்தம் கொள்கைக் குறிவழி நிற்பேனென்று ` நேர் நின்றார் `. மின் நின்ற செஞ்சடையார் தாமே வெளி நின்றார் ` ( தி .12 ஏனாதி நாயனார் புராணம் . 40.) சடைமுடி யொன்றே காரணமாக , எரியிற்புகுந்து உயிர்நீத்து முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார் . திருநீறு முதலிய அனைத்தும் கூடிய வேடத்தைப் பொருளென்றுகொண்டு முத்தி பெற்றவர் மெய்ப்பொருள் நாயனார் .
சிற்பி