திருக்கானப்பேர்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்
அடியலால் அடைசரண் உடையரோ வடியரே.

பொழிப்புரை :

பெண் யானைகள் பின்தொடர , பெரிய தும்பிக்கை யுடைய ஆண்யானையானது , விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி , மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி , அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது ?

குறிப்புரை :

பெரும் கை ( ம் ) மா - தலைவனாகிய துதிக்கையை யுடைய யானை . மலர்தழீஇ - மலர்களை ஏந்திக்கொண்டு . கடி - வாசனை . உலாம் - உலாவும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப்
பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

பொழிப்புரை :

நுண்ணிய இடையையும் , பெரிய அல்குலையும் , சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும் .

குறிப்புரை :

நுண்இடை - சிறிய இடுப்பு . நூபுரம் - சிலம்பு . விண் - ஞான ஆகாயம் . இடை - ஏழன் உருபு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளு ஞானநீர்
தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே.

பொழிப்புரை :

பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம் , இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , கஸ்தூரி என்னும் மான் , புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள் , சந்தனம் , புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி , மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுவர் .

குறிப்புரை :

குளத்தில் தாமரையில் தங்கிய வண்டின் கூட்டங்கள் மாலைக் காலத்தில் அது குவிவதால் அப்போது மலர்வதாகிய நீலோற்பலத்தை அடைந்து அங்கே தேனுண்ட மகிழ்ச்சியினால் பாடும் கானப்பேர் . நீலோற்பலம் இரவின் மலர்வதென்பதை அறிக . நாவி வாய் .... தொண்டர் புழுகு பூனையின் இடத்து உண்டாகும் புழுகிலும் மலர்களிலும் . ஞானநீர்தூவி - திரவிய சுத்தியின் பொருட்டு அஸ்திரமந்திரத்தால் நீர் தெளித்து , வாய்ப்பெய்து - அத்திரவியங்களை அபிடேக கலயத்தில் வார்த்துக்கொண்டு நின்று ( ஆட்டுவார் ) வாய் - இங்குப் பாத்திரத்தின் இடத்தைக் குறித்தது . கிரியையெல்லாம் அறிவோடு கூடிய வழியே பெரும்பயன் விளைப்பதால் அவ் வொப்புமைபற்றிக் கிரியையை ஞானமெனக் கூறினார் . ஞானம் கிடைத்தற்கு நிமித்தம் , கிரியை ஆதலின் ஞானம் என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலாற் களைகிலார் குற்றமே.

பொழிப்புரை :

திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவ பெருமானை , மனத்தைப் பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன் , பூவும் நீரும் கொண்டு , முழவு முழங்க , இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார் களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ !

குறிப்புரை :

நிறை - மனம் பொறி வழி போகாமல் அறிவின் வழி நிறுத்துதல் . இறைவனுக்கு வழிபாடு ஆற்றுவோர்க்கு முதற்கண் வேண்டப்படுவது நிறை உடை நெஞ்சு . பூசனைத் திரவியங்களாகிய நீரும் , பூவும் , நைவேத்தியமும் , தோத்திரமும் , வாத்திய வகைகளும் இங்குக் கூறப்படுகின்றன . இவற்றுள் எல்லாம் இறைவன் தங்கியிருத்தலையறிந்து பூசிப்பதையே தமக்குக் கருமமாகக்கொண்டு திருக்கானப் பேரைப் பூசிக்கும் மெய்யடியார் , தமது குறைகள் நீங்கப் பெறுவார்களேயன்றி ஏனையோர் அவற்றைக் களையமாட்டாதவராவர் என்பது பாடலின் கருத்து . ` பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி ` என்பது தாயுமானவர் வாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
ஞானப்பே ராயிரம் பேரினா னண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.

பொழிப்புரை :

பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல் , எலும்புமாலையும் அணிந்து , அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர் . தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றியின் கொம்பாகிய . பூண் - அணிகலத்தை யுடைய , மார்பினில் , என்பு பூண்டு - எலும்பு மாலைகளையணிந்து . ஞானம் - சிவபோதம்தருவன ஆகிய . பேர் ஆயிரம் - சிறந்த ஆயிரம் பெயர்களும் . பெயரன் - பெயராக உடையவன் . ` பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான் ` ( அப்பர் ) ` ஆயிரம் பேருகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே ` ( சுந்தரமூர்த்திகள் ) ` ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` ( தி .8 திருவாசகம் ) எனவருவனவும் அறிக . ஆயிரம் என்பது மிகப் பல என்னும் பொருட்டு ` பழுதெண்ணு ... எழுபது கோடியுறும் ` என்ற திருக்குறளிற்போல . (639)

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.

பொழிப்புரை :

பள்ளம் போன்ற படர்ந்த சடையில் , வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான் . கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற , திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குவதால் , அவ்வடியவர்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும் .

குறிப்புரை :

பள்ளம் - பள்ளம்போல் . மே - மேவிய - பொருந்திய . படர்ந்த சடையில் . பாய்ந்தநீர் வெள்ளம் தாங்கினான் . நீர் பாய்வது பள்ளத்தில் ஆதலால் கங்கை நீருக்குச் சடை பள்ளம் போல் இருந்தது என்பது . பள்ளம் மே ( வு ) படர்சடை . மே + சடை - வினைத்தொகை . கள்ளம் நினைத்தலையும் செய்தறியாதவர்களாகிய மெய்யன்பர் கருதிய கானப்பேர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.

பொழிப்புரை :

பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை , குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம் , வாக்கு , காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும .

குறிப்புரை :

தலவரலாறு இப்பாட்டிலும் முதற்பாட்டிலும் காண்க . ஞான மாமலர் :- ஞானம் அட்டபுட்பங்களில் ஒன்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
நாளுநாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

பொழிப்புரை :

வாட்போர் வலியாலும் , வேற்படைப் பயிற்சியாலும் , பெரிய கயிலைமலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு , பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள் .

குறிப்புரை :

வாளினால் - வாட்போர் வலியாலும் . வேலினால் - வேற்படைப் பயிற்சியாலும் , வரை எடுத்த தோளினான் . நாளும் நாளும் உயர்வதோர் நன்மை அவனை வணங்குவார்க்கன்றிப் பிறர்க்குச் செய்தலாகாமையறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

சிலையினான் முப்புரந் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமைகண்டு ஓங்கினான்
கலையினார் புறவிற்றேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான் , நிலையிலா பிரமன் , திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான் . அழகிய குறிஞ்சியும் , முல்லையும் சார்ந்த நிலமான , தேன் மணம் கமழத் திகழும் திருக் கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர் .

குறிப்புரை :

செற்றவன் - அழித்தவன் . நிலைமைகண்டு ஓங்கினான் - செருக்கு ஒழியாத நிமையைக்கண்டு , அழலாய் ஓங்கினவன் ; இறைவன் அவ்வாறு ஓங்காவிடின் , அவர்களின்றும் செருக்கு ஒழிந்திரார் . ` தாளை வணங்காத்தலை ` ( திருக்குறள் ) ` வணங்கத் தலைவைத்து ` ( தி .8 திருவாசகம் ) ` தலையே நீ வணங்காய் ` ( அப்பர் ) என்பதனால் தலையினால் வணங்குவார் என்றார் . இருவரை நிலைமையை ; இரண்டு செயப்படுபொருள் வருவதால் இருவரை என்பதற்கு , இருவரது என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர்இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

பொழிப்புரை :

உறியினிடத்துச் சுரைக்குடுக்கை , கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும் , இறைவனை உணராத பாவிகளாகிய சமணர் , புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும் , காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை . மடமையுடைய பெண்யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைகூப்பித் தொழுவது நம் கடமையாகும் .

குறிப்புரை :

உறித்தலை - உறியினிடத்து . சுரை - சுரைக்குடுக்கை . ஓர் பாத்திரமும் ஆம் . குண்டிகை பிடித்து - கமண்டலத்தையும் தாங்கி , உச்சி - தலையில் . மயிர் பறித்தலும் . போர்த்துதலும் , மயிரை வளர்த்தலும் ஆகிய இவற்றால் பயனில்லை . கறித்து - கடித்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத் திளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தன
பாட்டகத் திவைவலார்க்கு இல்லையாம் பாவமே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை , இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை . ( அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .)

குறிப்புரை :

கோட்டகம் - நீர்நிலை . குதி - துள்ளல் . முதனிலைத் தொழிற் பெயர் .
சிற்பி