திருவேடகம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே. 

பொழிப்புரை :

வன்னியும், ஊமத்த மலரும், சந்திரனும் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானின் பொன்போன்ற திருவடிகளைப் புதுமலர்களைக் கொண்டு பெருமையுடைய அந்தணர்கள் போற்றி வழிபடவும், அடியவர்கள் இன்னிசையுடன் பாடிப் போற்றவும் ஒப்பற்ற இறைவனான சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளுகின்றான்.

குறிப்புரை :

மத்தம் - பொன்னூமத்தை. மதிபொதி - மதியை மறைக்கும். பொன் இயல் - பொன்போன்ற. திருவடி - (பொன்னார்) திருவடி.
அடியவர் இன் இசைப்பாடல் அர் - அடியவர்களின் இனிய இசைப் பாடல்களையுடைய (ஏடகத்து ஒருவன்).

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே. 

பொழிப்புரை :

கொடிகளையுடைய நீண்டு உயர்ந்த மாளிகையின் கோபுரம் குளிர்ந்த சந்திரனைத் தழுவுதலால் மதிபோல் ஒளிரும் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் திருவடிகளைக் கீழே விழுந்து வணங்கி இறைவனுடைய புகழைக்கூறி அன்பினால் வழிபடுங்கள். நம்மைத் துன்புறுத்தும் தீவினைகள் யாவும் அழிந்து விடும்.

குறிப்புரை :

மாளிகை மதிவடிவு உற, கோபுரம் மதி அமைதர மருவிய ஏடகமென நிரல்நிறையாகக்கொண்டு, மாளிகைகள் நிறத்தினால் மதியின் வடிவை நிகர்க்கவும், கோபுரம் உயர்வால் மதியை அளாவவும் பொருந்திய திருவேடகம் எனப் பொருள்கூறுக. இடிபடும் - இடியை ஒத்த, (வினைகள்).

பண் :கொல்லி

பாடல் எண் : 3

குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. 

பொழிப்புரை :

காதில் இரு கந்தருவர்களைக் குண்டலமாகக் கொண்டு விளங்கும் அழகராய், வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரையும், வானில் விளங்கும் சந்திரனையும் சடைமுடியில் அணிந்து, மணியோசை ஒலிக்க வீரநடை போடும் இடபவாகனத்தின் மீது வீற்றிருந்தருளும் மேன்மையுடையவரான சிவபெருமானின் ஊர் திரு வேடகமாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்துக் கைகூப்பி வணங்கிப் போற்ற, மனக்கவலையால் வரும் நோய் நீங்கும்.

குறிப்புரை :

செண்டு - வட்டமாகச் சுற்றிவரும் சாரிநடை. அலம்பும் விடை - அணிந்த மணியோசை முதலியவற்றால் ஒலிக்கும் விடை. சேடன் - மேன்மையுடையவன். கவலை - நோய்; பலவழியால் வருந்துன்பம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே. 

பொழிப்புரை :

மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய உமாதேவியோடு, அழகிய இடபவாகனத்தில் ஏறும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமான ஆல், மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன மிகுந்து விளங்கும் சிறப்புடைய திருவேடகம் சென்று அவனை வழிபட்டால் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

ஏலம் - மயிர்ச்சாந்து. எழில் பெறும் - அழகு உடைய. கோலம் - தோற்றம். சாலம் - ஆலமரம், சேர்தலாம் செல்வம் - சேர்தல் செல்வம் ஆம், என மாறிக்கூட்டுக.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 

பொழிப்புரை :

செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல மலை மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த, விடம் அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான், பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி உருவினர். அவர் வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக் கோயிலாகும்.

குறிப்புரை :

செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை மகள் கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது முதலிரண்டடியின் பொருள். கறை - விடக்கறை. எரியவன் - நெருப்பு உருவினன்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 

பொழிப்புரை :

குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்ந்த புது மலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின் வடகரையிலுள்ள திருவேடகத்தில் வீற்றிருக்கும் தலைவனான சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து அவனைப் போற்றிப் பாடுங்கள். அது இம்மையில் துன்பம்தரும் கொடிய நோய்களைத் தீர்த்து, மறுமையில் முத்திப்பேற்றினை எளிதாகக் கிடைக்கச் செய்யும்.

குறிப்புரை :

குளங்களிலும், சோலைகளிலுமுள்ள புதுமலர்களில் தென்றல் தவழ்ந்து வருகின்ற வைகை, என்பது முதலடிகளின் கருத்து. அரற்றுமின் - கதறுங்கள். வெய்யவன் பிணி - கொடிய, கடிய பிணி; துன்புறுத்தலால் வெய்யபிணி எனவும் எளிதில் நீங்கப் பெறாமையால், வன்பிணி எனவும் கூறப்பட்டது.

பண் : கொல்லி

பாடல் எண் : 7

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே. 

பொழிப்புரை :

பெரிய கயிலைமலையை எடுத்த இராவணனின் செருக்கைக் கெடுத்துத் தோள்கள் நொருங்கும்படி காற்பெருவிரலை ஊன்றிப், பின்னர் தவறுணர்ந்து இராவணன் இசைத்து வழிபட அவனுக்குப் பரிவுடன் அருள்செய்த இறைவனாய், இளைய எருக்கு, வன்னி, ஊமத்தம் மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவ பெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் ஆவான்.

குறிப்புரை :

தருக்கு - கர்வம். இற - கெட. தோள் அடர்ப்பட - தோள்கள் அடர்க்கப்பட. பரிந்து - இரங்கி. மடவரல் - இளமை பொருந்திய.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே. 

பொழிப்புரை :

பொன்னும், மணிவகைகளும், சந்தனம், அகில் ஆகிய மரங்களும் வீசுகின்ற அலைகள் வாயிலாகக் கொண்டுவந்து சேர்க்கப்படும் வைகையின் கரையில், அன்னப் பறவையாகப் பிரமன் திருமுடியையும், பன்றி வடிவாகத் திருமால் திருவடியையும் தேடியும் இன்னவெனக் காணொணாது விளங்கிய சிவபெருமான் திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற இறைவன் ஆவான்.

குறிப்புரை :

பொருதிரை - கரையை மோதும் அலைகளாற் கொணர்ந்த பொன்னும், மணிகளும், சந்தனம் அகில் மரங்களும் கொண்ட வைகை.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே. 

பொழிப்புரை :

கையில் குண்டிகையேந்திய சமணர்களும், இறை உண்மையை உணராத புத்தர்களும், உண்டு வயிற்றைப் பெருக்கச் செய்யும் பாவிகள். அவர்கள் இறைவனை வணங்காதவர்கள். அவர்களின் உரைகளைப் பொருளாகக் கொள்ளவேண்டா. வண்டுகள் மொய்க்கின்ற கொன்றை மலரையும், வன்னியையும் மாலையாக அணிந்த சடைமுடியுடைய, திருவேடகத்தில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானை ஏத்தி வழிபடுங்கள்.

குறிப்புரை :

பண்டி - வயிறு. பளகு - பாவம். \\\\\\\"பளகு அறுத்து உடை யான் கழல் பணிந்திலை\\\\\\\" (தி.8 திருச்சதகம் - 35) இண்டை - தலைக்கு அணியும் மாலை.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன
பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 

பொழிப்புரை :

யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டுவரும் வைகைநீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடு தங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத் திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினை களிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

குறிப்புரை :

கோடு - யானைத்தந்தம். ஏடுசென்று அணைதரும் ஏடகம். இப்பாடல் அகச்சான்று குறிக்கும் பாடல்களில் ஒன்று. (தி.12 திருஞா. புரா. 850.)
சிற்பி