பொது


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கல்லானீழல் , அல்லாத்தேவை
நல்லார்பேணார் , அல்லோநாமே.

பொழிப்புரை :

கல்லால மரத்தின் நிழலில் சனகாதி முனிவர்கட்கு அறநெறி உரைத்தருளிய சிவபெருமானை அன்றிப் பிறிதொரு தெய்வத்தை மெய்யுணர்ந்த ஞானிகள் பொருளாகக் கொள்ளார் . நாமும் அவ்வாறே சிவனையன்றி வேறு தெய்வத்தை வழிபடோம் .

குறிப்புரை :

கல்லால் நீழல் அல்லாத்தேவை - கல்லாலின் நிழலின் இருக்கும் தெய்வமாகிய சிவம் அல்லாத பிறிதொரு தெய்வத்தை . நல்லார் - மெய்யுணர்ந்த ஞானிகள் . பேணார் - பொருளாகக் கொள்ளார் . ( ஆகையால் ) நாமும் அல்லோம் - நாங்களும் அவற்றைப் பொருட்படுத்தோம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொன்றைசூடி , நின்றதேவை
அன்றியொன்று , நன்றிலோமே.

பொழிப்புரை :

கொன்றை மலரைச் சூடிவிளங்கும் சிவபெருமானை அன்றி , பிறிதொரு தெய்வம் முக்திச் செல்வம் தருவதாக நாம் கருதோம் .

குறிப்புரை :

நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல் இலோம் . இல்லோம் - கொள்ளோம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கல்லாநெஞ்சின் , நில்லானீசன்
சொல்லாதாரோ , டல்லோநாமே.

பொழிப்புரை :

இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில் அவன் நில்லான் . ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப் போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம் .

குறிப்புரை :

கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத உள்ளத்தில் . நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும் செப்புதல் , அவர் திறம் ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும் சேரோம் என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . ` இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப ` என்ற சிந்தாமணியின் உரையால் இப்பொருள் கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கூற்றுதைத்த , நீற்றினானைப்
போற்றுவார்கள் , தோற்றினாரே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத் தன் திருப்பாதத்தால் உதைத்த , தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர் .

குறிப்புரை :

தோற்றினார் - பிறந்த பயன் எய்துவர் . ` தோன்றிற் புகழொடு தோன்றுக ` - ( திருக்குறள் ) என்பதனோடு ஒப்பிடுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

காட்டுளாடும் , பாட்டுளானை
நாட்டுளாரும் , தேட்டுளாரே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தம் உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள் .

குறிப்புரை :

பாட்டு உள்ளானை - அடியாரேத்தும் பாமாலையை உடையவன் . நாட்டு - அவனே முதற்பொருளென்று நாட்டிய . உள் - ( தம் ) உள்ளத்தில் . ஆரும் - திளைக்கின்ற . தேட்டு - செல்வம் . உளாரே - உள்ளவர்களே ; செல்வர் எனத் தக்கவர் என்பது அவாய் நிலையான் வந்தது . ` செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே ` என்ற கருத்து . ஆடும் என்ற பெயரெச்சம் உள்ளான் என்ற பெயர் கொண்டது . ஆர்தல் - திளைத்தல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

தக்கன்வேள்விப் , பொக்கந்தீர்த்த
மிக்கதேவர் , பக்கத்தோமே.

பொழிப்புரை :

முழுமுதற்பொருளான சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியின் குற்றத்தைத் தீர்த்த வல்லமையும் , அருளுமுடைய சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராய் யாம் உள்ளோம் .

குறிப்புரை :

பொக்கம் - பொய் . வேள்விப் பொக்கம் - போலி வேள்வி , தீர்த்த - பற்றற ஒழித்த . மிக்கதேவர் . பக்கத்தோம் - அணுக்கத் தொண்டராயுள்ளோம் . தீர்த்த - இப்பொருட்டாதலைப் பின்வரும் 8 ஆம் பாசுரத்தினும் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பெண்ணாணாய , விண்ணோர்கோவை
நண்ணாதாரை , எண்ணோநாமே.

பொழிப்புரை :

பெண்ணாகவும் , ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை .

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

தூர்த்தன்வீரம் , தீர்த்தகோவை
ஆத்தமாக , ஏத்தினோமே.

பொழிப்புரை :

துன்மதியால் கயிலையைப் பெயர்த்த இராவணனது வலிமையை அழித்து , பின் அவன் தன் தவறுணர்ந்து சாமகானம்பாடி இறைஞ்ச அவனுக்கு ஒளி பொருந்திய வாளும் , நீண்ட வாழ்நாளும் அருளிய இறைவனை நாம் விரும்பிப் போற்றி வணங்கினோம் .

குறிப்புரை :

தூர்த்தன் - இராவணன் . ஆத்தம் - நண்பன் . பண்பாகு பெயர் . ` ஆத்தமென்றெனை ஆளவல்லானை ` - ஆளுடைய நம்பிகள் வாக்கு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பூவினானும் , தாவினானும்
நாவினாலும் , நோவினாரே.

பொழிப்புரை :

தாமரைப்பூவின்மேல் வீற்றிருந்தருளும் பிரமனும் உலகத்தைத் தாவிஅளந்த திருமாலும் , இறைவனின் திருமுடியையும் , திருவடியையும் உடல்வருந்தித் தேடியும் காணாதவர்களாய்ப் பின்னர் நாவால் அவனைப் போற்றி உருகிநின்றனர் .

குறிப்புரை :

தாவினான் - உலகம் அளந்தவன் .- ` திருமால் அடியளந்தான் தாஅயதெல்லாம் ` என்ற திருக்குறளில் இப்பொருள் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மொட்டமணர் , கட்டர்தேரர்
பிட்டர்சொல்லை , விட்டுளோமே.

பொழிப்புரை :

தலைமயிரைப் பறித்து மொட்டைத் தலையுடன் விளங்கும் சமணர்களும் , கட்டான உடலமைப்புடைய புத்தர்களும் , சைவசமய நெறிக்குப் புறம்பாகக் கூறுவனவற்றை நாம் பொருளாகக் கொள்ளாது விட்டோம் .

குறிப்புரை :

மொட்டு - பூ . அரும்பு - அதுபோன்ற தலையுடைமையின் மொட்டமணர் என்றார் . கட்டர் - துன்புறுத்துவோர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அந்தண்காழிப் , பந்தன்சொல்லைச்
சிந்தைசெய்வோர் , உய்ந்துளோரே.

பொழிப்புரை :

அழகிய குளிர்ச்சி பொருந்திய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தர் அருளிய இத்திருப்பதிகத்தைச் சிந்தனை செய்து பாடுபவர்கள் உய்தி பெற்றவர்களாவர் .

குறிப்புரை :

அந்தண்காழி - அழகிய குளிர்ந்த காழி . பந்தன் - ஞானசம்பந்தன் ஒருபுடைப்பெயர் கொளல் எனும் வடமொழி யிலக்கணம் பற்றி .
சிற்பி