திருவாரூர்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அந்த மாயுல காதியு மாயினான்
வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்
சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணன் . திருவெண்ணீறு பூசிய வேத நாயகன் . என் சிந்தையில் புகுந்து விளங்குபவன் . திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ !

குறிப்புரை :

உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது உலகின் தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன் . எம் எந்தை - எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை . எம் என்றது பலதிறத்தின ராகிய அடியவரை . அது ` உருத்திர பல் கணத்தார் ` ` பல்லடியார் ` என்பனவற்றால் அறிக .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

கருத்த னேகரு தார்புர மூன்றெய்த
ஒருத்த னேயுமை யாளொரு கூறனே
திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே..

பொழிப்புரை :

இறைவர் என் கருத்திலிருப்பவர் . தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . ஒப்பற்றவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . தூயவர் . திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர் . எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள் . அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ ?

குறிப்புரை :

கருத்தனே - கருத்திலிருப்பவனே . ` வாயானை மனத் தானை மனத்துள் நின்ற கருத்தானை ` ( தி .6. ப .19. பா .8) என்றதுங் காண்க . திருத்தம் - தீர்த்தம் ; தூய்மை . ` திருத்தமாம் பொய்கை ` என்புழியுங் காண்க . திருத்தன் - தூயவன் . இனித்திருத்த சொரூபமானவன் என்றலும் ஒன்று . என் - எதனால் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மறையன் மாமுனி வன்மரு வார்புரம்
இறையின் மாத்திரை யில்லெரி யூட்டினான்
சிறைவண் டார்பொழில் சூழ்திரு வாரூரெம்
இறைவன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

இறைவன் , வேதங்களை அருளிச் செய்து வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பெரிய தவத்தன் . பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன் . சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ !

குறிப்புரை :

இறையில் - சிறு தீப்பொறியால் . மாத்திரையில் - ஒரு நொடிப் போதில் . இறை - சிறியது , தீப்பொறிக்கு அளவையாகுபெயர் . இறையில் ; இல் - வேற்றுமை உருபுமயக்கம் . முனிவன் , மருவார் புரம் - பகைவரது புரங்கள் ( எரி ஊட்டினான் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந்
தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வ மல்கிய தென்றிரு வாரூரான்
அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர் . இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர் . செல்வச் செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ !

குறிப்புரை :

பல் இல் ஓடு - பல் இல்லாத மண்டையோடு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

குருந்த மேறிக் கொடிவிடு மாதவி
விரிந்த லர்ந்த விரைகமழ் தேன்கொன்றை
திருந்து மாடங்கள் சூழ்திரு வாரூரான்
வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும் , விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ , மாடமாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும்போது , என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ !

குறிப்புரை :

வாடல் - வாடாதே , வாடற்க , ` மகனெனல் ` என்ற திருக்குறளிற் போல , அல் ஈறு , எதிர்மறை வியங்கோள் குறித்தது . இப் பாசுரத்தின் முதலீரடிகளால் மாடங்களின் அருகே பூந்தோட்டங்கள் இருந்தமை புலப்படுகிறது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

வார்கொண் மென்முலை யாளொரு பாகமா
ஊர்க ளாரிடு பிச்சைகொ ளுத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ்திரு வாரூரான்
ஆர்க ணாவெனை யஞ்சலெ னாததே.

பொழிப்புரை :

கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய் , செல்வவளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான் ?

குறிப்புரை :

ஊர்களார் - ஊர்களிலுள்ளவர் . சீர் - செல்வவளம் ( இலட்சுமி கரம் ). ஆர்கண்ஆக - யாரை யான் பற்றுக்கோடாக உடையேன் எனக்கருதி , கண் - ( சரண்புகும் ) இடம் . ஊர்களார் என்பதை ஊரார்கள் என்று வழங்குவதோடு ஒத்திட்டுணர்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வளைக்கை மங்கைநல் லாளையோர் பாகமாத்
துளைக்கை யானை துயர்படப் போர்த்தவன்
திளைக்குந் தண்புனல் சூழ்திரு வாரூரான்
இளைக்கும் போதெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன் , தன்னை எதிர்த்து வந்த யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன் . குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் , இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ !

குறிப்புரை :

யானைதுயர்படப் போர்த்தவன் - யானை துயர்பட உரித்து என ஒரு சொல் வருவித்துரைக்க . திளைக்கும் - நீராடுதற்குரிய .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்ன னிருபது தோளிறக்
கலங்கக் கால்விர லாற்கடைக் கண்டவன்
வலங்கொள் மாமதில் சூழ்திரு வாரூரான்
அலங்கல் தந்தெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர் இறைவர் . வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை தந்து அருளி , நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ !

குறிப்புரை :

தோளிறவும் . அவன் கலங்கவும் . கடை - அவனது ( வலிமையின் ) முடிவை . அலங்கல் - மாலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படிய வன்பனி மாமதிச் சென்னியான்
செடிக ணீக்கிய தென்றிரு வாரூரெம்
அடிக டானெனை யஞ்சலெ னுங்கொலோ.

பொழிப்புரை :

நீண்டு உயர்ந்த திருமாலும் , பிரமனும் காணமுடியாத தன்மையராய்க் குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் தாங்கிய இறைவர் , மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார் . அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ !

குறிப்புரை :

நேர்கிலா - சிந்திக்க மாட்டாத . கில் - ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல் . படியவன் - தன்மையன் , வடிவினன் எனலும் ஆம் . செடிகள் - தீமைகள் , பாவங்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

மாசு மெய்யினர் வண்டுவ ராடைகொள்
காசை போர்க்குங் கலதிகள் சொற்கொளேல்
தேச மல்கிய தென்றிரு வாரூரெம்
ஈசன் றானெனை யேன்றுகொ ளுங்கொலோ.

பொழிப்புரை :

அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் , துவராடை அணிந்த புத்தர்களும் , கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர் , அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந் தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ !

குறிப்புரை :

துவர் ஆடை மேற்கொள்ளும் - செந்நிறப் போர்வையைப் போர்க்கும் . காசை - காஷாய உடை . திவ்வியப்பிரபந்தம் 1658. காசை மலர் போல்மிடற்றார். தேசம் - ஒளி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

வன்னி , கொன்றை , சந்திரன் , வில்வம் , ஆகியவற்றைச் சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை , நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

ஓடு எண்ணுப் பொருளது . சென்னி - தலைமீது . வாய் - திருவாயினால் . பன்னு - சொல்லிய , வல்லார்க்குப் பாவம் இல்லை .
சிற்பி