திருக்கருகாவூர்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும் உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர். அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

முத்து இலங்கும் - முத்தைப்போல் விளங்குகின்ற. அழலும் அழல் - கடு நெருப்பு. வண்ணம் - நிறம். தன்மையுமாம்; செழுநீர் புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீ வண்ணனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் அடியவர்களே. நும் பணி ஆனது அமுதம் போல இன்பம் விளைவிக்கும் திருவடி நீழலை விட்டு அகலாத செல்வமாகும். வெண்ணிற முல்லை மணம் கமழ்கின்ற திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் இறைவன் அமுதம் போன்று இனிமை தருபவன். அவனுடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

விமுதம் - விஸ்மிதம் என்னும் வடசொல்லின் திரிபு. கங்கையை அடக்கிய ஆச்சரியம். விமுதவல்ல சடையான் வினை - சிவபெருமானுக்கு அடியவர் செய்யும் திருத்தொண்டுகள். உள்குவார்க்கு - நினைக்கின்ற தொண்டர்களுக்கு. அமுதநீழல் - அமிர்தம் போல இன்பம் விளைக்கும் திருவடிநீழல். அகலாததோர் செல்வம் -அழியாத செல்வம்; \\\"சென்றடையாத திரு\\\". கம் - மணம். வெண்மை, முதம் - உவகை. கமுதமுல்லை:- வெண்மையும், மணமும், உவகை செய்வதும் முல்லைக்கும் உள்ளன.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவரும்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

பழகுவதற்குரிய சிறப்புடைய சிறுத்தொண்டர்கள் இன்னிசையோடு பாடி அழகனான சிவபெருமானைக் குழைந்து, அழைத்து, கழலணிந்த திருவடிகளையே பொருளாகக் கொண்ட பாக்களைப் பாட, திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் அழகரான சிவ பெருமானின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

இதிலுள்ளதொரு வரலாறு விளங்கவில்லை. குழையா - குழைந்து. அழையா - அழைத்து. உள்ளம் குழைந்து அழைத்து வரும். கழல் கொள் பாடல் - கழலணிந்த திருவடியையே பொருளாகக் கொண்ட பாக்கள்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

திருவெண்ணீற்றைத் திருமேனியில் பூசி, மலர் கொண்டு தூவிப் போற்றி வழிபடும் அடியவர்கட்குக் குற்றமில்லாச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகளையுடைய திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் அடிகளாவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

உள்ளம் நல்கிய செல்வத்தர் - திருநீற்றுப்பூச்சும் மலர் பறித்து வழிபடும் பூசையும் புரிதற்குத்தக்க உள்ளம் அருளிய திருவருட்செல்வம் உடையவர்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே . 

பொழிப்புரை :

மயக்கமில்லாமல் மலர்கொய்து போற்றி வணங்கும் அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும் செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

செய்ய - செவ்விதாகிய. கைதல் - தாழை.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

பொழிப்புரை :

மாசில்லாத தொண்டர்கள் மலர்தூவி வணங்கிட அவர்கள் விருப்பம் நிறைவேற அருள்நல்கும் செல்வரான சிவபெருமான், சினம் கொள்ளும் இடபத்தை வாகனமாகக் கொண்டு திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் இறைவர் ஆவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

ஆசை ஆர - ஆசை நிரம்ப. அருள் நல்கிய செல்வத்தர், ஆசை தீரக் கொடுப்பர், என்பதும் காண்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

பொழிப்புரை :

திருநீறு பூசிய வேதியராய், அடியவர்தம் சிந்தையுள் நின்று அருள்புரியும் செல்வரான சிவபெருமான், நறுமணம் கமழும் முல்லைகள் மலரும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையாவார். அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

கந்தம் - மணம். மௌவல் - முல்லை. எம் எந்தை - முன் உரைத்தமை கொள்க.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்
கண்ண னேடவரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

பண்போன்று இனிய மொழிபேசும் உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், அலங்கரிக்கப்பட்ட கோலமுடைய அழகிய மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவராய்த் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார். அவனது வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.

குறிப்புரை :

மண்ணு - அலங்கரிக்கப்பட்ட, கோலம். கண்ணன் - திருமால்; கரிய நிறமுடையவன். கண்ணனாக அவதரித்தவன் எனலும் ஒன்று. நேட - தேட.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

பொழிப்புரை :

மஞ்சட் காவி ஆடையால் போர்த்த உடம்பினர் களும், பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ, குளிர்ந்த முல்லை மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணம்.

குறிப்புரை :

போர்த்த மெய்யினர் - சீவரவுடையால் மறைத்த உடம்பினர். போது உழல்வார்கள் - பொழுதெல்லாம் அலைபவர்கள். கார்த்தண் முல்லை - கார்காலத்தில் மலரும் தண்ணிய முல்லைப்பூ. ஆத்தர் - ஆப்தர்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர்
நிலவு பாட லுடையான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 

பொழிப்புரை :

மயில், தோகை விரித்து ஆடுகின்ற திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் புகழ்ப்பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர். அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின் தொல்வினை தீரும்.

குறிப்புரை :

கலவம் - கலாபம்; தோகை. நிலவு - விளங்குகின்ற; கழல் குலவும் - திருவடிகளில் குலாவும்.
சிற்பி