திருத்தண்டலைநீணெறி


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே
சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடை யார்க்கிடம்
கரும்புஞ் செந்நெலுங் காய்கமு கின்வளம்
நெருங்குந் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

விரும்பப்படுகின்ற சந்திரனையும், கங்கையையும் தாங்கி, சுரும்பு, தும்பி ரீங்காரம் செய்யும் மலர்களைச் சூடியுள்ள சடை முடியையுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது கரும்பும், செந்நெலும், பாக்கு மரங்களும் நிறைந்து வளம் கொழிக்கும் திருத் தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

விரும்பும் - விரும்பப்படுவதாகிய. திங்களும் - சந்திரனும். (கங்கையும்). விம்ம - பொலிவு அடைய. வெறுக்கப்படும் தன்மைவாய்ந்தது, பின்கடவுள் அணிதலால் விரும்பப்படுவதாயிற்று. சுரும்பு, தும்பி, இவை வண்டின் சாதி விசேடம். மலரின் நறு மணத்துக்காகச் சூழ்கின்றன.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

இகழுங் கால னிதயத்து மென்னுளும்
திகழுஞ் சேவடி யான்றிருந் தும்மிடம்
புகழும் பூமக ளும்புணர் பூசுரர்
நிகழுந் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சிவபக்தரான மார்க்கண்டேயரை மதியாது இகழ்ந்த காலனின் இதயத்துள்ளும், என்னுள்ளும் திகழும், சிவந்த திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், புகழுடைய திருமகளும், அந்தணர்களும் விளங்கும் திருத்தண்டலை நீள்நெறியாகும். அத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

காலன் இதயத்துத் திகழுதல் அச்சத்தால்; என் உள் (உள்ளம்) திகழுதல் அன்பினால்; இக்கருத்தை \\\"அஞ்சியாகிலும், அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ\\\" என்னும் அப்பர் வாக்கால் அறிக. \\\"காலனறிந்தான் அறிதற்கரியான் கழலடியே\\\" என அவர் பாராட்டுவதாலும் அறிக. புகழ் - உபலட்சணத்தால் புண்ணியத்தையும் தழுவும். பூமகள் - இலக்குமி. செல்வமிகுதியால் (பழிபாவங்கள் ஈட்டுதலின்றிப்) புகழ் புண்ணியங்களையீட்டுந் தன்மையை உடைய பூசுரர் என்பது மூன்றாம் அடியின் குறிப்பு. நிகழும் - வசிக்கின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

பரந்த நீலப் படரெரி வல்விடம்
கரந்த கண்டத்தி னான்கரு தும்மிடம்
சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
நிரந்த தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி வழிபடுங்கள்.

குறிப்புரை :

பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய நஞ்சு. சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள். மேதி - பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை முதல் மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த - பரவித் தோன்றும், தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த என்ற எச்சத்திற்குச் (சொரிந்த) பால் என்னும் வினைமுதல் வருவித்து உரைக்கப்பட்டது. `காலுண்ட சேற்று மேதிக் கன்றுள்ளி கனைப்பச் சோர்ந்த பால்\\\' (கம்பராமாயணம் - நாட்டுப்படலம். 13) என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு பற்றிய கால வழுவமைதி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

தவந்த வென்புந் தவளப் பொடியுமே
உவந்த மேனியி னானுறை யும்மிடம்
சிவந்த பொன்னுஞ் செழுந்தர ளங்களும்
நிவந்த தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

வெந்த எலும்பும், திருவெண்ணீறும் உவந்து திருமேனியில் தரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, சிவந்த பொன்னும், செழுமையான முத்துக்களும் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். இத்திருத்தலத்தைத் தரிசித்து இறைவனை வணங்கிப் போற்றுங்கள்.

குறிப்புரை :

தவந்த - வெந்த, என்பும் - எலும்பும், தவளப்பொடி - வெண்திருநீறு, தவந்த என்ற அடையை அடுத்தும் ஒட்டுக. வெந்த வெண்ணீறணிந்து என்ற வாக்குங் காண்க. நிவந்த - மிகுந்த, ஓங்கிய.

பண் : கௌசிகம்

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் : கௌசிகம்

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் : கௌசிகம்

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை வேந்த னிருபது தோளிற
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடம்
சலங்கொ ளிப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும், முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச் செல்வவளம் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

விலங்கல் - கைலைமலை, ஆறு தனதாகக் கொண்ட சிப்பி முத்து சங்கு, ஆகிய பொருள்களை, நிலம் தனதாகக் கொள்ளும் வளம் பொருந்திய தண்டலை நீணெறி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென்
றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம்
செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண்
நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சிருட்டி செய்யும் பிரமன் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றினான். அவனும், திருமாலும் தெரிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது போரில் முயன்ற கோச்செங்கட் சோழ மன்னன் கட்டிய கோயிலாகிய திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

கருவரு உந்தியினான் - சிருட்டி எல்லாம் தன்னிடத் தினின்று உண்டாக்கத்தத்க உந்தியினான், உந்தியில் நான்முகன் தோன்றினான். செரு - போரில். வருந்திய - பகைவரை வருந்துவித்த. கோச்செங்கட்சோழ நாயனார்நாட்டிய தண்டலை நீணெறிநாயனார் ஆகையினால் நிருபன் என்னாது நிருபர் என்றார்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

கலவு சீவரத் தார்கையி லுண்பவர்
குலவ மாட்டாக் குழக னுறைவிடம்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே. 

பொழிப்புரை :

சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும் சமணர்களும் அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும் அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, வளைந்த மாமதில்களும், சுண்ணச்சாந்தினாலாகிய மாடங்களும் விளங்குகின்ற திருத்தண்டலை நீள்நெறி ஆகும். அங்கு வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.

குறிப்புரை :

கலவு - சுற்றிய, சீவரத்தார் - சீவரமென்னும் ஆடையையுடையவர்; புத்தர். இவர்கள் கொண்டாடுதற் கெட்டாத. குழகன் - அழகன். சுலவும் - வளைந்த. நிலவு - விளங்குகின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத்
தோற்று மேன்மையர் தோணி புரத்திறை
சாற்று ஞானசம் பந்தன் றமிழ்வலார்
மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே. 

பொழிப்புரை :

திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப் பெற்றவராவர்.

குறிப்புரை :

நீற்றர் - திருநீறணிந்த அடியார்கள் வாழும் தண்டலை நீணெறி. தோற்றம் - (விளங்கித்) தோன்றுகின்ற. (மேன்மையர்) தோணிபுரம் என்பதற்கும் இவ்வாறே உரைக்க. மாற்றில் - மாறுதல் இல்லாத (செல்வர்) - வந்து அழிந்து மாறும் பிற செல்வங்கள் அல்ல. மாற்று - முதனிலை திரிந்த தொழிற்பெயர். மறப்பர் பிறப்பை - இனிப் பிறவார் என்பது கருத்து.
சிற்பி