திருப்பிரமபுரம்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

இறையவ னீசனெந்தை யிமை யோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்டோ டணி காதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான் மலையா ளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் , ஈசன் , எம் தந்தை என்று வானவர்கள் தொழுது போற்ற நின்று , நஞ்சுண்ட கறுத்த கண்டத்தினன் . சங்கினாலாகிய குழையணிந்த காதினையுடையவன் . அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன் . மலைமகளான உமாதேவியோடு தலையில் பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

வெண்தோடு - சங்கக்குழை . காலத்து அன்று மறைமொழி வாய்மையினான் - அக்காலத்தில் வேதத்தின் பொருளை உபதேசித்தருளியவன் . வாய்மை - உபதேச மொழி , வாய்மை என்க . என்றது வேதத்துக்குப் பொருளைச் செய்த திருவிளையாடற் புராணசரிதையை . சென்னி - சென்னியின்கண் , சடையான் . பிரமாபுரம் , பிரமபுரம் இரு விதமும் வழக்குண்மை அறிக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

சடையினன் சாமவேதன் சரி கோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை பல்கலைநூல்
உடையவ னூனமில்லி யுட னாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் சடைமுடியுடையவன் . சாமவேதத்தில் விருப்பமுடையவன் . சரிந்த கோவண ஆடையை அணிந்தவன் . மழுவாகிய படை உடையவன் . பாயும் புலியின் தோலை உடையவன் . வேதம் முதலான பல கலைநூல்களில் கூறப்படும் தலைவன் . எத்தகைய குறைபாடும் இல்லாத அவன் , உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளுமிடமான திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

சாமவேதன் - சிவனுக்கொரு பெயர் . ` சங்கரன் சாமவேதி என்ற ` அப்பர் திருவாக்கானும் அறிக . ( திருநேரிசை ) மறைபல்கலை நூல் உடையவன் - வேதம் முதலிய பலகலை நூல்களுக்கும் தலைவன் . பெடை - பெண்பறவை , அன்னம் - மயில் - குயில் இவற்றைக் குறிக்கும் - உருவகம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மாணியை நாடுகால னுயிர் மாய்தரச் செற்றுக்காளி
காணிய வாடல்கொண்டான் கலந் தூர்வழி சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங் குட னேயுமை நங்கையொடும்
பேணிய கோயின்மன்னும் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் பிரமசாரியான மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனின் உயிரை மாய்த்தவன் . காளிதேவி காணுமாறு திருநடனம் புரிந்தவன் . பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக் கொண்டவன் . அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி வீற்றிருந்தருளும் கோயிலாக நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மாணி - பிரமசாரி , மார்க்கண்டர் . செற்று - கொன்று . காணிய - காணும்படி . ஊர்வழி கலந்து என்க . ஊன் - உண்ணுதல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது காவெனலும்
ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

நிலவுலகிலும் , விண்ணுலகிலும் எங்கும் பயின்ற விடமானது பரவிப் பெருக , அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட தேவர்கள் அனைவரும் , ` பெருமானே ! காப்பாற்றுவீர்களாக ` என்று பிரார்த்திக்க , அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மிண்ட - அதிகரிக்க . இதுகா - இதனின்றும் காத்தருள்க . ஐந்தனுருபுத்தொகை . ஓரிடத்தே - கண்டமாகிய ஓரிடத்தே , கரந்தான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

நச்சர வச்சடைமே னளிர் திங்களு மொன்றவைத்தங்
கச்ச மெழவிடைமே லழ கார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக விடு மின்பலி யென்றுநாளும்
பிச்சைகொ ளண்ணனண்ணும் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் விடம் பொருந்திய பாம்பைச் சடை முடியில் தரித்து , குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் அதனுடன் ஒன்றி இருக்குமாறு செய்தவன் . அழகிய இடபவாகனத்தின் மீது அமர்ந்து அச்சம் தரும் மழுப்படையை ஏந்தியவன் . இன்மொழிகள் பேசி ` மிக இடுங்கள் ` என்று நாள்தோறும் பிச்சை ஏற்கும் தலைவனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

நச்சரவம் - நச்சு + அரவம் . நளிர் - குளிர்ந்த . அங்கு - அசை . ` போர்த்தாய் அங்கு ஓர் ஆனையின்தோல் ` என்புழிப்போல் ( தி .4. ப .1. பா .10.) அச்சம் எழ மழு ஏந்தி என்க , மிக இச்சை பகர்ந்து எனவும் , பலிஇடுமின் எனவும் மாற்றுக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை தனைத்தரித்திட்
டொற்றை விடையினனா யுமை நங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால் அழித்தவன் . சிவந்த சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன் . ஒற்றை இடபவாகனம் ஏறினவன் . உமாதேவியோடு அவன் வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன் . ` பெற்றொன்றேறி ` என வருதலும் காண்க . ( தி .2. ப .80. பா .8.) பெற்றிமையால் - தன்மையோடும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

வேத மலிந்தவொலி விழ வின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே கிள ரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முக டேறவொண் மால்வரையான்
பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம் பேணுமினே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதுகின்ற ஒலி , வீணையின் இன்னொலி , கீதஒலி இவை ஒருசேர எழுந்த கடல்ஒசையை அடக்குமாறு , வானத்தின் உச்சியை அடைவதாய் உள்ள , ஒளி பொருந்திய பெரிய கயிலைமலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

வேதஒலி முதலிய ஒலிகள் மிக , அவை . பௌவம் - கடல் ஒலியையும் . மறை - மறைக்கவல்ல , ஓதம் மலிந்து - ஓசையாகப் பெருகி . வான்முகடு ஏற - ஆகாயத்தின் உச்சியை அடைய , ஒள் பிரமாபுரம் - அழகாகிய பிரமாபுரம் . மால்வரையான்பேதை - மலைமகள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை யன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர முன்னுமினே.

பொழிப்புரை :

தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர் யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக் காலத்தில் கயிலையைப் பெயர்த்து எடுக்க , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம் செய்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க , அவனுக்கு வெற்றிதரும் வாளொடு , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள்செய்து , உமாதேவியாரோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

அடர்த்து - மோதி , குமை ( அது ) செய்து - குழைத்தல் செய்து , குழைத்து , அது - பகுதிப்பொருள் விகுதி . பாட - பாடினதினால் , உன்னுமின் - நினையுங்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஞால மளித்தவனும் மரி யும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர மேத்துமினே.

பொழிப்புரை :

இப்பூவுலகைப் படைத்த பிரமனும் , திருமாலும் , பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

ஞாலம் - பூமி , அளித்தவன் - படைத்தவன் , ஏல - பொருத்தமாக , ஏத்து மின் - துதியுங்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

துவருறு மாடையினார் தொக்க பீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண் டணு கேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக் கழி காலமெல் லாம்படைத்த
இவரவ ரென்றிறைஞ்சிப் பிர மாபுர மேத்துமினே.

பொழிப்புரை :

மஞ்சட்காவி ஊட்டப்பட்ட ஆடையணிந்த புத்தர்களும் , தொகுத்துக் கட்டிய மயிற்பீலியைக் கையிலேந்தியவராய் , ஆடையில்லாத இடையையுடைய சமணர்களும் , இறையுண்மையை அறியாதவர்களாதலால் அவர்களை அணுகாதீர் . திருவருள் பெற விரும்பும் அடியார்களே ! ஐயம் பல நிறைந்த மனத்தை ஒருமுகப்படுத்தி , சென்ற காலம் முதலிய எல்லாக் காலத்தையும் படைத்த முழுமுதற்கடவுள் சிவபெருமான் என்று வணங்கி , அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

தொக்க - தொகுத்துக்கட்டிய , நக்கரையர் - நக்க - அரையர் என்பதன் மரூஉ . நக்கம் - நக்நம் ஆடையின்மை , அரையர் - இடுப்பையுடையவர் , அணுகேன்மின் அருள் பெறுவீர் - அருள்பெற விரும்புவீர் அணுகாதீர்கள் . கழிகாலம் - சென்ற காலம் முதலிய , எலாம் - எல்லாத் தத்துவங்களையும் படைத்த , இவரவர் என்பதனை அவர் இவர் என மாற்றி - அந்தப்பரம்பொருள் பிரமாபுரத்தில் எழுந்தருளிய இறைவனென்று பொருள் கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

உரைதரு நான்மறையோர் புகழ்ந் தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான் மலி கின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல வணி சம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம் மெதிர் கொள்ள விரும்புவரே.

பொழிப்புரை :

சிவபெருமானது பெருமையை உரைக்கும் நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் அப்பெருமானைப் புகழ்ந்து போற்ற , அழகிய உமாதேவியோடு மலைபோன்று உறுதிப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற பிரமாபுரத்தில் அருளாட்சியைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்களை நறுமணம் கமழும் விண்ணுலகத்துத் தேவர்கள் எதிர்கொண்டழைத்துச் செல்ல விரும்புவர் .

குறிப்புரை :

பத்தும் - பத்துப்பாசுரங்களும் . ( ஆகுபெயர் ) விரை தரு - கற்பகப்பூமணம் வீசுகின்ற , ( விண்ணுலகம் ) விரும்புவர் - விரும்பியடைவர் .
சிற்பி