திருவேட்டக்குடி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவம்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளம்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வண்டுகள் ஆரவாரிக்கும் கொன்றை மாலையை விரிந்த சடையின்மேல் அணிந்து , வரிகளையுடைய பாம்பைக் கண்டு பயத்தால் ஆரவாரிக்கும் சந்திரனைச் சடையில் சூடியுள்ள சிவ பெருமானின் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொண்டர்கள் ஆரவாரித்துப் போற்றி வணங்க , விளங்குகின்ற ஒளியையுடைய கடலிலுள்ள சுடர்போல் செந்நிறமான பவளத்தை அலைகள் கொணர்ந்து எறியும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அவர் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

( வண்டு ) இரைக்கும் - ஆரவாரிக்கும் . ( மலர்க் கொன்றை விரிசடைமேல் .) வரி அரவம் - கொடிய பாம்பை , கண்டு இரைக்கும் - ( பயத்தால் ) ஆரவாரிக்கும் ; பிறையையணிந்த சென்னி - தலையையுடைய . காபாலி - சிவபெருமான் . கனைகழல்கள் - ( தனது ) ஒலிக்கின்ற வீரத்தண்டையை யணிந்த திருவடிகளை . தொண்டு - தொண்டர்கள் . இரைத்து - ஆரவாரித்து . இறைஞ்சித் தொழுது - வணங்கிக் கும்பிட ; திருவேட்டக்குடியிலுள்ளார் . தெள்திரைகள் - தெள்ளிய அலைகள் . துளங்கு - விளங்குகின்ற . ஒளி - ஒளியையுடைய . நீர் - கடலிலுள்ள , சுடர்ப்பவளம் - சுடரையுடைய பவளத்தை ; அணியும் காபாலி யாண்டையாரெனின் திருவேட்டக்குடியார் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்கும்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வலைஞர்கள் பாய்ந்து செல்லும் படகுகளில் , வலையுடன் கடலில் எப்பக்கமும் திரிந்து வலைவீசி மீன்களைப் பிடித்து வாரி தரைக்குக் கொண்டு வந்து குவிக்கும் தாழை சூழ்ந்த கழியுடைய சோலை விளங்க , நள்ளிரவில் பேய்க் கூட்டங்களோடு சுடுகாட்டில் கையில் நெருப்பேந்தி நடனம் ஆடும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்கின்றான் .

குறிப்புரை :

பாய் - ( நீரிற் ) பாய்கின்ற . திமிலர் - வலைஞர் . எங்கும் பயின்று - கடலின் எப்பக்கங்களிலும் திரிந்து . காசினியில் கொணர்ந்து - நீரிலிருந்து தரைக்குக் கொணர்ந்து . அட்டும் - குவிக்கும் . கைதல் - தாழை . கழிக்கானல் - கழியருகேயுள்ள கடற்கரைச் சோலையையுடைய . திருவேட்டக்குடியார் . இரவில் புறங்காட்டில் போய்ப் பேயொடும் . புரிந்து - நடனமாடிய . அழகு ஆர் - அழகையுடைய . தீ - தீக்கும் ( கறுக்கும் ). எரி - நெருப்பை . கை மகிழ்ந்தார் - கையின்கண் விரும்பியேற்றவர் . புரிந்து என்ற பொதுவினை சிறப்பு வினையைக் குறித்தது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியவா னிரையிற்பால்
பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வழிபாடு செய்வதற்காக மணலில் இலிங்கத்தை அமைத்து , தாம் மேய்க்கும் பசுக்கூட்டங்களின் பாலைப் பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , அபிடேகம் செய்து வழிபட்ட சண்டேசுரர்க்கு மேலான சோதிவடிவை அருள்புரிந்தவன் சிவபெருமான் , தனக்கு அன்பர் என்று வேதங்களில் வல்ல சனகாதி முனிவர் நால்வர்க்கும் அன்று அறம் உரைத்தவன் சிவபெருமான் . அப்பெருமான் புனித தீர்த்தமாகிய கங்கையைச் சடையிலே தாங்கித் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

மணல் - மணலில் . இலிங்கம் - சிவலிங்கவடிவை , தொடங்கி - நிறுவி , ஆன் நிரையில் - கூட்டமாகிய பசுக்களில் ( கறந்த ) பால் , பாத்திரம் ( ஆ ) பாத்திரத்தில் பொருந்தக் கொண்டு , ஆட்டுதலும் - ( சண்டேசுர நாயனார் ) அபிடேகித்தலும் , பரிந்து - விரும்பி . பரஞ்சோதி - மேலான சோதிவடிவை அருளி - அவர்க்கு அருள் புரிந்து , ஆத்தம் என - ( நமக்கு ) அன்பர் என்று , மறை - வேதங்களில் வல்ல , நால்வர்க்கு - சனகர் முதலிய முனிவர்களுக்கு , அறம் - சிவதருமம் . நூல் - நூற்பொருளை , உரைத்த - சொல்லாமற் சொல்லிய , தீர்த்தம் . கங்காதீர்த்தம் . ஆட்டுதலும் - என்ற வினைக்கு எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது . ஆத்தம் - நட்பு ` ஆத்தம் என்றெனையாள் உகந்தானை ` என்பதும் ( தி .7. ப .62. பா .4) அறிக . சண்டேசுவர நாயனார்க்கு ஒளிவடிவாயதை ` சிறுவனார் .... சூழ்ந்த ஒளியில் தோன்றினார் ` என்ற பெரிய புராணத்தும் அறிக . ( தி .12 சண்டீசர் 55).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சே ரணைவாரிக் கொணர்ந்தெறியு மகன்றுறைவாய்
நிலவஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடும்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

மயில்கள் தோகை விரித்து ஆடும் கடற்கரைச் சோலைகளை உடைய , கடல் நண்டுகள் சேர்ந்த குவியல்களை வாரிக்கொணர்ந்து சேர்க்கின்ற காவிரியின் அகன்ற கரையில் , ஒளி பொருந்திய குறுகிய இடையை உடைய அழகான அணிகலன்களை அணிந்த உமாதேவியோடு , திலகம் போன்று சுடர்தரும் நெற்றியுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கழிக்கானல் எங்கும் என்க . அலவன் சேர் - கடல் நண்டுகள் சேர்ந்த . அணை - குவியலை . நிலவம்சேர் - ஒளி பொருந்திய . இடைய - இடையையுடையவளாகிய , குறிப்புப் பெயரெச்சம் . நேர் இழையாள் - அழகான அணிகலனை யணிந்தவள் . நிலவு என்னும் சொல் அம்சாரியை பெற்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
செங்ண்மால் கடையவெழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கநான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

சேறாகும் வண்ணம் கடல்நீர் அலைப்புற , மேருமலையை மத்தாகவும் , வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு , சிவந்த கண்களையுடைய திருமால் முன்னின்று கடைய எழுந்த நஞ்சையருந்தியவர் சிவமூர்த்தி . நால் வேதங்களையும் , அவற்றின் ஆறங்கங்களையும் உணர்ந்த சனகாதிமுனிவர்கள் நால்வர்க்கும் அறநூற் பொருளின் பயனாகிய அனுபவத்தை உணர்த்தியருளிய பிறை சூடிய சடையையுடைய சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பங்கம் - சேறு . பருவரையோடு - பருத்த ( மந்தர ) மலையுடனே . அரவு உழல - வாசுகி என்னும் பாம்பு சுழல . மால் - திருமால் . கடைய - ( முன்னின்று ) கடைய . எழு - உண்டான . நான்மறை - அங்கத்தோடு கூடிய நான்கு வேதங்களையுமுணர்ந்த . நால்வருக்கு அறம் பொருளின் பயன் - அறநூற் பொருளின் பயனாகிய அநுபவத்தை , அளித்த - உணர்த்தியருளிய . திங்கள்சேர் சடையார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையா லெயின்மூன்று மெரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் தோணிபோன்ற வடிவுடைய பிறைச்சந்திரனைச் சடையிலே தரித்தவர் . அழகாய் விளங்கும் சங்குப்பூச்சிகளையும் , கோத்தற்குரிய துளையில்லாத நல்முத்துக்களையும் கடலலைகள் கொணர்ந்து சேர்க்கின்ற குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடைய திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் அக்கினியாகிய கணையினால் மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்த தேவாதி தேவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நாவாய - தோணியின் வடிவையுடைய ( பிறை ) என்றது சடையில் கங்கையுண்மையால் பிறை அங்குத் தோணி போன்றது என்று ஒரு குறிப்பு . நலம் திகழும் - அழகால் விளங்குகின்ற . தேவாதி தேவனார் என்க . இலங்கு இப்பி - விளங்குகின்ற சங்குப் பூச்சிகளையும் . கோவாத - கோத்தற்குரிய துளையில்லாத . நித்திலங்கள் - முத்துக்களையும் , ( கடல் திரைகள் ) கொணர்ந்து எறியும் - வீசுகின்ற குளிர் கானல் - குளிர்ந்த கடற்கரைச் சோலையையுடைய திருவேட்டக்குடியாரென்க . ஏ ஆரும் - அம்பு பொருந்திய . வெஞ்சிலையால் - கொடிய வில்லால் . எயில் - மதில் . நாவாய் - கப்பல் , இங்குத் தோணி என்ற பொருளில் நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

பால்போல் விளங்குகின்ற வெண்தாமரையானது ஒளிர , பசுமை வாய்ந்த கடற்கரைச் சோலைகளில் வெண்ணிறப் பறவைகள் விளங்க , மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும் , தாழைகள் சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும் , தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும் விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , மான் போன்ற மருண்ட பார்வையுடைய மலைமகளான உமா தேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான் .

குறிப்புரை :

பால் நிலவும் - பால்போல் விளங்குகின்ற . பங்கயத்து - தாமரை மலரில் . நல் - நல்ல . வெண்குருகு - வெண்மையான அன்னப் பறவை ( தங்கும் ) கான்நிலவும் - வாசனைவீசும் . மலர்ப்பொய்கை - மலர்களையுடைய குளங்களையும் . கைதல் - தாழைகள் . சூழ் - சூழ்ந்த கழிக்கானல் - கழியருகேயுள்ளே கடற்கரைச் சோலையையும் உடைய திருவேட்டக்குடி என்க . பிரிவு அரியார் - பிரிவு இல்லாதவர் . அரிது ` இன்மைப் பொருளில் வந்தது . ` உறற்பால தீண்டாவிடுதல் அரிது ` - என்புழிப்போல .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன் றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை வீச , தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும் இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர் .

குறிப்புரை :

துறை - துறையில் . உலவு - உலாவுகின்ற . கடல் ஓதம் - கடல் அலைகள் . சுரிசங்கம் - சுரிந்த சங்குகளை . இடறி - வீச ; போய் - ( அவை ) சென்று . நறையுலவும் - நறுமணம் வீசும் . பொழில் - சோலையிலுள்ள , புன்னை , ( நல் நீழல்கீழ் .) அமரும் - தங்கும் . இறைபயிலும் - ( இலங்கைக்கு , அரசனாகப் பொருந்திய இராவணன் . திறல் - வலிமை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

அருமறைநான் முகத்தானு மகலிடநீ ரேற்றானும்
இருவருமா யளப்பரிய வெரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

அரிய நால்வேதங்களையும் கற்ற பிரமனும் , மாவலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் வேண்டி நீர் ஏற்ற திருமாலும் ஆகிய இருவரும் அளந்தறிய முடியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . பெருக்கெடுத்துவரும் காவிரியாற்றின் , வீசுகின்ற அலைகள் மணிகளை உந்தித் தள்ளிச் சேர்க்கும் வளமிகுந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் , சுடர்விடும் பவளம் போன்ற தம் திருமேனியில் திருவெண்ணீறு பூசப் பெற்றவராய் , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அரு மறை - அரிய வேதங்களை வல்ல . நான் முகத்தானும் - பிரமனும் . அகல் இடம் - அகன்ற இடத்தையுடைய இப்பூமியை . நீரால் - நீரினால் , ஏற்றானும் - ( மாவலியினிடம் ) யாசித்தவனும் . அளப்பு அரிய - அளவிடற்கு அரிய . நான்கு முகத்தானும் வேதங்களை வல்லவன் . தன் கலையறிவினாலும் , உலகம் அளந்தவன் தன் உடல் வலியினாலும் இருவருமாய்க் காணமுடியாத எனஒரு நயம் . எரி உருவாய் - அழல் வடிவாய் ( நீண்ட .) நீர் ஏற்றல் - தத்தம் பண்ண வாங்குதல் . மறி - மடக்கி . வீசுகின்ற . திரை - அலைகள் . புனலின் - நீரினால் மணி முத்துக்களை . உந்தி - தள்ளி . ஆர் - நிறைந்த . சுடர்ப்பவளம் - ஒளியையுடைய பவளம் போலும் . திரு உருவில் - அழகிய உடம்பில் . வெண்நீற்றார் - வெள்ளிய திருநீற்றைப் பூசியவர் . இது சிவபெருமானது கோலம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு மிடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலி ணிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.

பொழிப்புரை :

வேதவேள்வியை நிந்தனை செய்யும் சமணர்களும் , பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள் . ஆதலால் அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமானைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

நிகழ்ந்து - துறையிற் பொருந்தி . இலங்கும் - விளங்குகின்ற . வெண்மணலின் - மணலின் வெண்மையைப்போல . நிறை - வெள் ஒளியால் நிறைந்த . துண்டப் பிறை - பிறைத்துண்டம் அணிந்த , ( கற்றையாகத் திகழ்ந்து இலங்கும் , செஞ்சடையார் திருவேட்டக் குடியார் ).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.

பொழிப்புரை :

தெளிந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி , சோலைகள் சூழ்ந்த , திருவிழாக்களின் ஓசை மிகுந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் ஒண்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை நன்கு பொருளுணர்ந்து ஏத்தியும் , ஓதியும் வழிபடுபவர்கள் மானிடர்களைப் போல் உண்டலும் , உடுத்தலும் இல்லாது வேறுபட்ட தன்மையுடைய தேவர்களை ஒத்து உயர் வானுலகில் இருப்பர் .

குறிப்புரை :

தண்டலை - சோலை . கலி - ஓசை . உண்டு - அமுத உண்டியை உண்டு . உடுப்பில் ` தோயாப் பூந்துகிலையுடுத்தலால் ` ஐந்தாம் வேற்றுமை உருபு இல் - மூன்றன்பொருளில் வந்தது . இல் என்பதற்கு இல்லாத எனப்பொருள் கூறி மானிடரைப்போல் உண்டலும் , உடுத்தலும் இல்லாத எனினும் ஆம் . வானவரோடு வானத்திருப்பார் .
சிற்பி