திருமுதுகுன்றம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே. 

பொழிப்புரை :

பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை எழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்.

குறிப்புரை :

பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை எழுப்பும் முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம் பெயரொட்டு. அமர் - பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர். இடைப் பிறவரல். பல நாடுகளுக்கு அரசர் ஆவதால் பன்மையாற் கூறினர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறு நலமே. 

பொழிப்புரை :

அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே! பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ள உம்மைப் பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.

குறிப்புரை :

மொய்குழலாள் - அடர்ந்த கூந்தலையுடைய அம்பிகையோடு முதுகுன்றில் மேவிய அசைத்தருளினீர் என்க. அசைத்தல் - கட்டுதல். பை - பாம்பு. உம்மைப்பாடுவார் நாடோறும் நன்மைகள் குறைவின்றி மிகப்பெறுவர். நைவு - குறைதல்.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 

பொழிப்புரை :

முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும் கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.

குறிப்புரை :

முழவு அமர் முதுகுன்றம். பொழில் அணி முதுகுன்றம் என இயைக்க. மழவிடை - இளங்காளை. பகை - இங்குப் பாவம் என்னும் பொருளில் வந்தது. பழிக்கு இனம் ஆகலின். \\\\\\\"எண்ணுங் காலும் அதுவதன் மரபே\\\\\\\" (தொல். சொல். கிளவியாக்கம். 47.)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினை யுடையவரே! அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும், புகழும் உடையவர்.

குறிப்புரை :

முருகு - வாசனை. உரு அமர் - அழகு பொருந்திய. திரு - ஐசுவரியம். தேசு - தேஜஸ், புகழ்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே. 

பொழிப்புரை :

முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.

குறிப்புரை :

முடிபத்தும் என்க. சித்தம் நல் - நல்ல சித்தமுடைய அடியவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

முயன்றவ ரருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 

பொழிப்புரை :

தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.

குறிப்புரை :

முயன்றவர் - தவம் புரிந்தோர் \\\\\\\"தவம் முயல்வார்` என வந்தமை (திருமுறைப் பதிகம்) அறிக. இயன்றவர் - தம் செருக்காற் காணத்தொடங்கிய பிரம விட்டுணுக்களால் அறிவரியீர். பயன்தலை நிற்பவர் - பயன்பெறுபவர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் டேரைக்காய்ந் தீரே
கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 

பொழிப்புரை :

மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப் பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப் பேற்றினைப் பெறுவர்.

குறிப்புரை :

கட்டு அமண் - கட்டுப்பாட்டையுடைய அமணரோடு. தேர் - தேரரை. கடைக்குறை. காய்ந்தீர் - கோபித்தருளினீர். உம்மைக் கருதுவோரே அன்பர்கள் பெறும் சிறப்பைப் பெறுதற்குரியராவர். \\\"செம்பொற் பாத மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்\\\" என்பதன் எதிர்மறை.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே. 

பொழிப்புரை :

அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.

குறிப்புரை :

மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்த சோலை. பாடிய அவர் பழியிலர் ஆவர் என்க.
சிற்பி