திருத்தோணிபுரம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

கரும்பமர் வில்லியைக் காய்ந்து காதற் காரிகை மாட்டருளி
அரும்பமர் கொங்கை யோர்பான் மகிழ்ந்த வற்புதஞ் செப்பரிதால்
பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு பேர்த்தவர் சேர்ந்தவிடஞ்
சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரந்தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் கரும்பினை வில்லாகக் கொண்ட மன்மதனைக் கோபித்து நெருப்புக் கண்ணால் எரித்து, பின்னர் அவனது அன்பிற்குரிய மனையாளாகிய இரதி வேண்ட அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு செய்து, கோங்கின் அரும்பு போன்ற கொங்கைகளையுடைய உமாதேவியை ஒரு பகுதியாகக் கொண்டு மகிழ்ந்த அற்புதம் செப்புதற்கரியதாகும். நண்பகலிலே வந்து எனது பெண்மை நலத்தைக் கவர்ந்து கொண்டு திரும்பவும் அவர் சென்று சேர்ந்த இடம் வண்டுகள் விரும்பி உறைகின்ற சோலைகள் சூழப்பெற்ற நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் ஆகும்.

குறிப்புரை :

கரும்பு அமர்வில்லி - மன்மதன். காய்ந்து - கோபித்து, உருவத்தை அழித்து. காதற்காரிகை மாட்டு - அவனது காதலுக்குரிய மனைவியாகிய இரதி தேவிக்கு. அருளி - (அவள் கண்ணுக்கு மட்டும் உருவம் தோன்றுமாறு) அருள் புரிந்து. அரும்பு - தாமரையரும்பு. கோங்கு அரும்புமாம். அமர் - போன்ற உவமவாசகம். கொங்கை - சினையாகு பெயராய் அம்பிகையை யுணர்த்திற்று. இங்கு அற்புதமாவது - மன்மதனால் தாம் அம்பிகையை மணந்ததாகப் பிறர் கருதுமாறு செய்வித்தமையன்றி \\\\\\\"முதலுருப்பாதி மாதராவது முணரார்\\\\\\\" \\\\\\\"ஒன்றோடொன்றொவ்வாவேடம் ஒருவனே தரித்துக் கொண்டு நின்றலாலுலகு நீங்கி நின்றனனென்று மோரார்` என்ற சாத்திரக் கருத்துமாம். (சிவஞானசித்தியார் சுபக்கம் சூத். 1.49,51) கள்வர் கொள்வது இராக்காலமும் பெயர்பொருளுமாயிருக்க, இவர் கொண்டது பெரும்பகலில், பெயராப்பொருளை. இது வியப்பு என்னும் குறிப்புத் தோன்றப் பெரும்பகலே வந்தென் பெண்மை கொண்டு என்றார். பேர்த்துக்கொண்டார் என்றார். கொண்டு பேர்த்தார் விகுதி பிரித்து மாறிக் கூட்டுக; கொண்டார் - கைக் கொண்டார். இது தலைவி கூற்று. செம்மை - அறம்மிக்க (தோணிபுரம்), சிறிது புண்ணியம் செய்யினும் பெரும்பயம் தரும் தல விசேடம். \\\\\\\"எண்மைத் தாய தொழில்சற் றியற்றினும் வண்மைத்தாக வரும்பய னுய்ப்பது\\\\\\\" (பேரூர்ப்புராணம் - மருதவரைப்படலம். 6.) செம்மை - செம்பொருள் ஆகுபெயர். இது இப்பொருள்தரலைச் \\\\\\\"செம்பொருள் கண்டார்` (குறள். 91) என்ற பரிமேலழகர் உரைத்த உரையாலறிக.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கொங்கியல் பூங்குழற் கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள்
பங்கிய லுந்திரு மேனி யெங்கும் பால்வெள்ளை நீறணிந்து
சங்கியல் வெள்வளை சோர வந்தென் சாயல்கொண் டார்தமதூர்
துங்கியன் மாளிகை சூழ்ந்த செம்மைத் தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

இயற்கைமணம் பொருந்திய அழகிய கூந்தலையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுமுடைய அழகிய உமா தேவியைத் தன் ஒரு பாகமாகப் பொருந்திய, திருமேனி முழுவதும் பால்போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்துள்ள சிவபெருமான் எனது உள்ளத்தில் புகுந்து என் வளையல் கழன்று விழுமாறு செய்து, எனது தோற்றப் பொலிவினைக் கெடுத்து வீற்றிருந்தருளும் ஊர் உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கொங்கு இயல் - (இயற்கையாகவே) வாசனை பொருந்திய. பூகுழல் - பொலிவுபெற்ற கூந்தலையும். கொவ்வைச் செவ்வாய் - கொவ்வைக் கனிபோன்ற சிவந்த வாயையுமுடைய. கோமளம் மாது - மென்மைத் தன்மை பொருந்திய உமையாள். பங்கு இயலும் - ஒரு பாகம் பொருந்திய திருமேனி முழுவதும். பால்போன்ற வெள்ளிய திருநீற்றைப்பூசி. சாயல் - தோற்றப் பொலிவு. துங்கு - (துங்கம்) உயர்வு. ஞானம் - ஞான் என்று வந்ததுபோல (சித்தியார்) துங்கு எனக்கடைக்குறைந்து வந்தது.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மத்தக் களிற்றுரி போர்க்கக் கண்டு மாதுமை பேதுறலுஞ்
சித்தந் தெளியநின் றாடி யேறூர் தீவண்ணர் சில்பலிக்கென்
றொத்தபடி வந்தென் னுள்ளங் கொண்ட வொருவர்க் கிடம்போலுந்
துத்தநல் லின்னிசை வண்டு பாடுந் தோணி புரந்தானே.

பொழிப்புரை :

மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டதைக் கண்ட உமாதேவி அஞ்சவும், அவள் பயம் நீங்கி மனம் தெளியச் சிவபெருமான் திருநடனம் செய்தார். அவர் இடபத்தை வாகனமாக உடையவர். நெருப்புப் போன்ற சிவந்த மேனியர். சிறுபிச்சை ஏற்க அதற்கேற்ற பிட்சாடனர் கோலத்தில் வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட ஒப்பற்றவராகிய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் துத்தம் என்னும் நல்ல இன்னிசையை, வண்டுகள் பாடுகின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மத்தம் - மதத்தால் எய்திய மயக்கம். மாதுமை பேதுறலும் - அஞ்சின அளவில். சித்தம் தெளிய - அவரது மனம் தெளிய (பயம்நீங்கித்) தெளியும்படி. நின்று ஆடி - நின்று திரு விளையாடல் செய்தவர். சில் பலி - சிறிது அளவினதாக இடும் பிச்சை. `ஐயம் புகூஉம் தவசி கடிஞை போற், பைய நிறைத்து விடும்` (நாலடியார். 99) என்றதும் காண்க. ஒத்தபடி வந்து - பிச்சைக்கு வருவோர் கோலத்துக்கேற்ற விதமாக வந்து. துத்தம் - சப்த சுரத்தில் ஒன்று. உபலட்சணத்தால் ஏழிசைகளையும் கொள்க.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வள்ள லிருந்த மலையத னைவலஞ் செய்தல் வாய்மையென
உள்ளங் கொள்ளாது கொதித்தெ ழுந்தன் றெடுத்தோ னுரநெரிய
மெள்ள விரல்வைத்தெ னுள்ளங் கொண்டார் மேவு மிடம்போலுந்
துள்ளொலி வெள்ளத்தின்மேன்மி தந்த தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

வேண்டுவோர் வேண்டுவதே வரையாது வழங்கும் வள்ளலான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற கயிலைமலையை வலஞ்செய்து செல்லலே உண்மைநெறி என்பதை உள்ளத்தில் கொள்ளாது, தனது திக்விஜயத்திற்கு இடையூறாக உள்ளது என்று கோபம் கொண்டு அன்று திருக்கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற இராவணனின் நெஞ்சு நெரியும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய, என்னுடைய உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம், பிரளய காலத்தில் அலைகள் துள்ளி வருவதால் உண்டாகிய ஒலியுடன் கூடிய வெள்ளத்தின்மேல் மிதந்து நிலைபெற்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

வள்ளல் - \\\\\\\"வேண்டுவார் வேண்டுவதே யீவான்` (தி.6 ப.23. பா.1.) \\\\\\\"ஆசைதீரக்கொடுப்பார்\\\\\\\" என்ற சுருதி வசனத்தாலும் அபுத்தி பூர்வமாக வில்வம் உதிர்த்தல், அவியும் விளக்கைத் தூண்டல் செய்த பிராணிகளுக்கும் வாயினூலாற் சித்திரப் பந்தரியற்றிய சிலந்திக்கும் பேரரசுரிமையளித்தல் ஆகிய புராண வரலாற்றாலும் சிவபெருமானொருவனுக்கே வள்ளல் என்னும் பெயர் அமையும் என்க. உரம் - நெஞ்சு. மெள்ள - மெல்ல லகர ளகர ஒற்றுமை. துள்ஒலி - அலைகள் துள்ளி வீசுவதால் உண்டாகிய ஓசை. மெள்ள விரல் வைத்தமையால் உரம் நெரிந்தது. சற்றே அழுத்தியிருப்பின் உடலும் உயிருமே நெரிந்திருக்கும் என்றபடி.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வெல்பற வைக்கொடி மாலு மற்றை விரைமலர் மேலயனும்
பல்பற வைப்படி யாயுயர்ந்தும் பன்றிய தாய்ப்ப ணிந்துஞ்
செல்வறநீண்டெஞ் சிந்தை கொண்ட செல்வ ரிடம்போலுந்
தொல்பற வைசுமந் தோங்கு செம்மைத் தோணி புரந்தானே.

பொழிப்புரை :

கருடக்கொடியுடைய திருமாலும், நறுமணமிக்க தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் முறையே பன்றியாய் உருக்கொண்டு கீழே அகழ்ந்து சென்றும், அன்னப் பறவையாய் உருவெடுத்தும், காணற்கரியராய் நெருப்புருவாய் நீண்டு எம் உள்ளத்தைக் கவர்ந்த செல்வரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொன்மையான பறவைகள் சுமந்து ஓங்கியுள்ள நன்னெறி மிக்க திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

பறவைக்கொடி - கருடக்கொடி. பறவை - பொதுப் பெயர், சிறப்புப்பெயர்ப் பொருளில் வந்தது. பல்பறவைப்படியாய் - பலபறவைகளும் ஓருருவுகொண்டு பறந்தாற்போல. உயர்ந்தும் - உயரப் பறந்து சென்றும், உயர்ந்து பொதுவினை. சிறப்புவினைப் பொருளில் வந்தது. `உயர்ந்தும் பணிந்தும் உணரான்` என இத் தொடர் திருக்கோவை யாரினும் வருவது; இத்தொடர் இங்கு எதிர் நிரனிறைப் பொருளில் வந்தது. செல்வு - செல்லுதல். வு தொழிற்பெயர் விகுதி, துணிவு, பணிவு என்பவற்றிற்போல, \\\\\\\"தொல் பறவை சுமந்து ஓங்கு தோணிபுரம்\\\\\\\" \\\\\\\"நின்பாதம் எல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின வென்ப\\\\\\\" - அரசர் அருள்மொழி.

பண் :சாதாரி

பாடல் எண் : 10

குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரங் கொள்ளியரும்
மண்டைகை யேந்தி மனங்கொள் கஞ்சி யூணரும் வாய்மடிய
இண்டை புனைந்தெரு தேறிவந்தெ னெழில்கவர்ந் தாரிடமாம்
தொண்டிசை பாட லறாத தொன்மைத் தோணி புரந்தானே. 

பொழிப்புரை :

கமண்டலம், மயில்தோகை, தடுக்கு ஆகியவற்றுடன் மலைகளில் வசிக்கின்ற சமணர்களும், மண்டை என்னும் உண்கலத்தில் கஞ்சிபெற்றுப் பருகும் புத்தர்களும் பேசுகின்ற வார்த்தைகள் அடங்க, இண்டை மாலை புனைந்து, இடப வாகனத்திலேறி எனது அழகைக் கவர்ந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தொண்டர்களின் இசைப்பாடல்கள் நீங்காத பழமைவாய்ந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

குண்டிகை; நினைத்த இடத்தில் நீர் பருகற்கு. பீலி; வழியில் சிற்றுயிர்க்கும் தீங்கு நேராவாறு கூட்டிக்கொண்டு நடப்பதற்கு. தட்டு - தடுக்கு. உட்காருவதற்கு உபயோகிப்பர். நின்று கோசரங் கொள்ளியர் சமணர். கோசரம் - கோ என்னும் பல பொருளொரு சொல். நீரைக் குறித்தது. சரம் - அந்நீரில் வாழ்வனவாகிய மீன்களைக் குறித்தது. மண்டை - ஒருவகை உண்கலம். மனம் கொள் - விருப்பமான கஞ்சி ஊணர் புத்தர். வாய்மடிய - பேச்சு அடங்க. வாய் - கருவியாகுபெயர். தொண்டு - தொண்டர்; சொல்லால் அஃறிணை. பொருளால் உயர்திணை. வாக்கு மனங்கட்கு அகோசரத்தை அறியார் என்பதே கருத்து.

பண் :சாதாரி

பாடல் எண் : 11

தூமரு மாளிகை மாட நீடு தோணி புரத்திறையை
மாமறை நான்கினொ டங்க மாறும் வல்லவன் வாய்மையினால்
நாமரு கேள்வி நலந்திகழும் ஞான சம்பந் தன்சொன்ன
பாமரு பாடல்கள் பத்தும் வல்லார் பார்முழு தாள்பவரே. 

பொழிப்புரை :

தூய்மையான வெண்ணிற மாளிகைகள், மாடங்கள் நிறைந்த திருத்தோணிபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நான்கு வேதங்களும், அவற்றின் ஆறு அங்கங்களும் வல்லவனும், தானுண்ட ஞானப்பாலை நாவால் மறித்து உண்மையான உபதேச மொழிகளாக நமக்குக் கேள்வி ஞானத்தைப் புகட்டி நன்மையைச் செய்கின்றவனுமான திருஞானசம்பந்தன் அருளிய பாட்டிலக்கணங்கள் பொருந்திய இப்பாடல்கள் பத்தினையும் பத்தியுடன் ஓத வல்லவர்கள் இப்பூவுலகம் முழுவதையும் ஆளும் பேறு பெறுவர்.

குறிப்புரை :

தூமருவு - சுதை தீற்றியதால் வெண்மை நிறம் பொருந்திய, மாளிகை. நாமரு (வு) கேள்வி - நாவிற்பொருந்திய உபதேசங்களால் கேள்வி ஞானத்தைப் புகட்டவல்ல ஞானசம்பந்தன். நா என்பது உபதேசத்தை யுணர்த்தலால் ஆகுபெயர். பா (மருவு) - பாட்டின் இலக்கணம் அமைந்த. பா - காரிய ஆகுபெயர்.
சிற்பி